in ,

பணமா பாசமா…? (சிறுகதை – பிற்பகுதி) – பவானி உமாசங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

தான் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் அவள் மனதில்  ஓடியது. மனம் திரும்பவும் அந்த நாளை நினைத்தது.

அன்னத்திற்கு இரண்டாவதாக மகன் பிறந்ததும், “எனக்கு சிங்கக் குட்டிங்க பிறந்துருக்காங்கடி” என அவள் கணவர் பெருமைபட்டுக் கொள்வார். திருமங்கலத்தில் கொஞ்சமாக இருந்த பூர்வீக சொத்தை தன் உழைப்பால் பன்மடங்கு ஆக்கினார் அன்னத்தின் கணவர்.

மூத்தவனுக்கு படிப்பு ஏறாததால் அவனுக்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்துக் கொடுத்தார். இளையவன் தொழிற்கல்வி படித்து துபாயில் வேலை பார்த்தான். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து பேரப்பிள்ளைகளும் பிறந்து தெளிந்த நீரோடை போல் போய்க் கொண்டிருந்த அன்னத்தின் வாழ்க்கை அவள் கணவரின் திடீர் இறப்பால் பாலைவனம் போல் ஆகிவிட்டது.

இறக்கும் போது அவள் கணவர் கூறிய வார்த்தைகள், “உனக்கு ஒரு பிடிமானம் வச்சுக்கிட்டு மிச்சத்தை பிள்ளைங்களுக்கு பகிர்ந்து கொடு”. இன்னும் அவள் காதுகளில் ஒலிக்கிறது.

தந்தை இறந்து இரண்டு மூன்று மாதங்கள் பேசாமல் இருந்த மகன்கள் இருவரும் அன்னத்திடம்  சொத்தைப் பிரிக்கும்படி கோரினர். அன்னமும் “அப்பா சொன்னது போல் சொத்தை மூன்று பங்காக்கி விடலாம்” என்றதும் மகன்கள் மருமகள்களின்  முகமே மாறி விட்டது.

“வயதானவங்களுக்கு எதுக்கு இத்தனை சொத்து கோயில் குளம்ன்னு போவதை விட்டுட்டு சொத்துல பங்கு கேட்கறாங்க” என்று வாய்க்கு வந்ததைப் பேசினர்.

வீடே போர்க்களமானது. ஆனால் அன்னம் தன் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்து விட்டாள். அதுவரை சுதந்திரமாக அந்த வீட்டில் சமையல் கட்டு வரை சென்று சமைத்தவளை அவள் அறைக்கே அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்து உன் எல்லை அவ்வளவு தான் என நிறுத்தினர். துபாயில் இருந்து இங்கு வந்து விட்ட இளைய மகனோ மாமனார் வீட்டிலேயே இருந்தான். பேரன் பேத்திகள் தான் அன்னத்திடம் பாசமாக இருந்தனர்.

அன்று காலை வீட்டில் டிபனுக்கு பன்னீர் கிரேவியும் சப்பாத்தியும் மணந்தது. என்ன இன்னைக்கு ஸ்பெஷலா இருக்குது டிபன் என்று அன்னம் பேத்தியிடம் கேட்க, “சித்தப்பா சித்தியெல்லாம் இன்னைக்கு இங்க வராங்க அப்பத்தா” என்றாள் பேத்தி. எல்லாரும் சேர்ந்தா என்ன வம்பு வருமோ அதற்குள் கோயிலுக்கு போய் விட்டு வந்து விடலாம் என நினைத்த அன்னம் கோவிலுக்கு போய் விட்டாள்.  கோவிலில் இருந்து திரும்பியவளுக்கு நல்ல பசி. வேலைக்காரியைத் தவிர வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருந்தனர்.

“அம்மா நீங்க வந்ததும் இதை உங்களுக்கு சாப்பிட கொடுக்க சொன்னாங்க” என்று வேலைக்காரி நீட்டிய தட்டில் இருந்த உணவைப் பார்த்த அன்னம் விக்கித்துப் போனாள். முதல் நாள் ஃப்ரிட்ஜில் வைத்த சோறு அதன் மேல் கொஞ்சம் மோறும் பக்கத்தில் ஊறுகாயும் இருந்தது. அன்னம் அந்த தட்டை கைகளில் வாங்கவில்லை.  வேகமாக தன் அறைக்குள் நுழைந்து ஒரு பேப்பரில் என்னைத் தேட வேண்டாம் நான் காசிக்குப் போகிறேன் என்று எழுதி மேஜை மேல் வைத்து விட்டு இரண்டு மாற்றுப் புடவைகளை ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கூட பார்க்கவில்லை. வீட்டைவிட்டு கிளம்பியவள் பஸ் ஸ்டாப்புக்கு வந்த ஒரு பஸ்ஸில் ஏறி இங்கு வந்து விட்டாள்.

‘அப்படி ஒரு ஈனவாழ்க்கை வாழறதுக்கு இப்படி உழைச்சு வாழறது எவ்வளவோ மேல். ஐயா சாமி காசு பணமே வேணாம்ப்பா’ என்று தோன்றியது அன்னத்துக்கு. இதே கோவிலில் தான் வெள்ளியங்கிரியின் அறிமுகத்தில் தனக்கு ஒரு நல்ல பாதுகாப்பான இடம் கிடைத்தது, பழைய நினைவுகளின் வலி அவள் முகத்தை சுருங்க வைத்தது. அதன் அழுத்தத்தால் மூச்சு திணறிய அன்னம் கோவிலுக்கு வந்தும் மனம் அடங்காம அலையுதே “ம்… வீட்டுக்குப்  போய் வேலை செய்தா சரியாகிவிடும்” என முணுமுணத்தபடி கிளம்பினாள்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலை வேலை முடிந்ததால் பங்களாவின் முன்புறம் உள்ள தோட்டத்து பெஞ்சில் அன்னம் ஓய்வாக அமர்ந்திருந்தாள். அப்போது பங்களாவிற்குள் கார் ஒன்று வந்து நின்றது. விருந்தாளிகள் வருகிறார்கள் போல, நாம் உள்ளே போகலாம் என எழுந்த அன்னத்தை  “அப்பத்தா” என்று அவள் பேத்தியின் குரல் நிறுத்தியது.

“தங்கம்” என்று கூறி எழுந்த அன்னத்தை அவள் பேத்தி அருகில் வந்து கட்டிக் கொண்டாள். பின்னால் தன் மூத்த மகன் வருவதைப் பார்த்ததும் அன்னம் அவளையும் அறியாமல் சிறு குழந்தையைப் போல் அழுதாள்.

அவளை அணைத்துக் கொண்ட மகன், “அம்மா எங்களை மன்னிச்சுடும்மா. நாங்க சொன்னதை நீ கேட்கலை, அப்ப எங்க மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னு நினைச்சு ஏதோவொரு கோபத்தில என்னன்னமோ செய்துட்டோம்மா” என்று அவனும் அழுதான்.

“நானும் தாண்டா ஒரு கோபத்தில கிளம்பி வந்துட்டேன். நான் இங்கே இருக்கேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சதுப்பா” என்று அன்னம் கேட்ட போது

அங்கு வந்த ரஞ்சனி “அதை நான் சொல்றேன் அன்னம்மா” என்றவள் “நேற்று என் கொழுந்தனாருக்கு உங்க மருமகளோட  தங்கச்சியை பெண் பார்க்க உங்க வீட்டுக்கு தான் போயிருந்தோம். அங்கே உங்க போட்டோவைப் பார்த்து விபரம் கேட்டதில் எல்லாம் தெரிஞ்சது. இவரும் உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்துட்டாரு”  என்றாள் ரஞ்சனி.

மகனை நிமிர்ந்து பார்த்த அன்னத்தை “ஆமாம் மா, நீ வீட்டுக்கு வந்துடுமா நீ சொன்னபடியே சொத்தை மூணு பங்காக்கிடலாம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டான் அவள் மகன்.

“உங்க அப்பா இறக்கும் போது அப்படி சொன்னதால நானும் அதிலயே பிடிவாதமா இருந்துட்டேன். நீங்க ஆசைப்பட்டபடி சொத்தை உங்களுக்கே இரண்டு பங்காக பிரிச்சு கொடுத்துடறேன். எனக்கு பணம் பெரிசு இல்லடா மனுஷங்களோட அன்புதான் வேணும் உன் கூட வர சம்மதம் டா கண்ணா” என்று கூறி அன்னம் தயக்கத்துடன் ரஞ்சனியைப் பார்த்தாள்.

“போயிட்டு வாங்க அன்னம்மா இனியும் நீங்க சிரமப்பட வேண்டாம்” என்றவள் மனதில் முதல் நாள் நிகழ்ச்சி படமானது.

அந்த வீட்டில் அன்னம்மாவின் போட்டைவைப் பார்த்ததும் ரஞ்சனி வீட்டார் சற்று அதிர்ந்து தான் போனார்கள். அன்னம் வீட்டைவிட்டு வெளியேறிய காரணம் அறிந்ததும், “சொத்துக்காக பெத்தவங்களை சரியா கவனிக்காதவங்க வீட்டில் எப்படி நாங்க பெண் எடுக்கிறது” என்ற ரஞ்சனி, “உங்க அம்மா இப்ப எங்க வீட்ல தான் இருக்காங்க அவங்க போலீஸில்  புகார் கொடுத்தாங்கன்னா உங்க பாடு திண்டாட்டம் தான். ஆனா அவங்க தன் பிள்ளைகளைப் பத்தி ஒரு வார்த்தை கூட தவறா சொல்லலை. அவங்களுக்கு உங்க அன்பும் அரவணைப்பும் தான் தேவை” என்று ரஞ்சனி பேச பேச அன்னத்தின் மகன்களின் கண்கள் கலங்கின.

“நீங்க சொல்லுறது உண்மைதான், நாம இப்போ நம்ம பெற்றோரை எப்படி நடத்துறோமோ அதுதான் பின்னாடி நம்ம பிள்ளைங்களால நமக்கு நடக்குங்கறத நாங்க இப்போ புரிஞ்சுக்கிட்டோம், எங்க பிள்ளைகள் கேட்கும் கேள்விகளிலிருந்து. நான் இப்பவே உங்க கூட வந்து எங்க அம்மாவை இங்கு கூட்டிட்டு வந்துடறேன்” என்று கூறினான் அன்னத்தின் மூத்த மகன்.

“கண்ணு நான் என் வீட்டுக்கு போயிட்டு வரேன்” என்ற அன்னத்தின் குரலில் நினைவு திரும்பிய ரஞ்சனி மகிழ்வுடன் அன்னத்தை அவள் மகனுடன் அனுப்பி வைத்தாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    காணாமல் போன கறுப்பி (சிறுகதை – முற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு