in ,

நீங்களும் வாங்கலாம் நோபல் பரிசு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

நம்மில் சிலர் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்,  நோபல் பரிசு, ஆஸ்கார் விருது, ஒலிம்பிக் கோப்பை, உலகக் கோப்பை, போன்றவைகளெல்லாம் நமக்கானவைகள் அல்ல, அவையெல்லாம் மேலை நாட்டுக்காரர்களுக்கென்றே ஆனவை! என்கிற தவறான கருத்தை மனதிற்குள் கான்கிரீட்டாய் வைத்துக் கொண்டு. 

அவர்களுக்குத் தெரியாது, வாழ்க்கையில் ஒருவன் தோல்வியடையும் போது அவ்வளவு சக்தியை இழக்கிறானே, அதில் பாதி இருந்தால் போதும் அவன் வெற்றியடைந்து விடலாம், என்கிற ரகசியம்.

ஏதோ பிறந்து, எப்படியோ வளர்ந்து, எதையோ படிச்சு, எங்கேயோ வேலைக்குப் போயி, யாரையோ திருமணம் செய்து கொண்டு, எவ்வளவோ குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, முதுமை எய்தி, நோயுற்று, கடைசியில் மரணித்து முடிப்பதற்குப் பெயர் வாழ்க்கையா?

உயிரோடு இருந்து விட்டு இறப்பது வேறு, வாழ்ந்து விட்டு இறப்பது வேறு. 

கனவாகவே இருந்து வந்த ஆஸ்காரை இந்தியன் வென்று வரவில்லையா?, எட்டாது என்று எண்ணிய ஒலிம்பிக் கோப்பைகள் நம் கையில் வந்து விழவில்லையா?, நோபல் பரிசுகள் நம் நாட்டிற்குள் வந்துதான் சேரவில்லையா?  ஆக, ஒவ்வொருவருக்குள்ளும் அவரவர்களை உயர்த்தி நிறுத்தும் செயல் திறன்கள் கட்டாயம் அடங்கி உள்ளன. படைப்பின் ரகசியமே எல்லா உயிரினங்களும், தங்களை மேம்படுத்திக் கொள்ளத் தேவையான அடிப்படைத் திறன்களுடனேயே படைக்கப்பட்டிருப்பதுதான். இதைப் புரிந்து கொண்டால் அது சூட்சுமம்.  புரியாவிட்டால் வாழ்க்கையே சூனியம்.

அடைய விரும்பும் கனவை முதலில் ஆழமாக விரும்ப வேண்டும். மேலே சொன்னது போல்  “நமக்கானவை அல்ல” என்று நாமே தீர்மானித்து விடக்கூடாது. அது நமது திறமையை நாமே குறைத்து மதிப்பீடு செய்து கொள்வதைப் போலாகும். யதார்த்தமாய்ச் சொல்லணும்னா, வெற்றி என்பது வெளியே, எங்கேயோ, இருக்கும் ஒரு சரக்கல்ல, அது நமக்கு அருகிலேயே,  ஏன்? நமக்கு உள்ளேயே உள்ள ஒரு விஷயம்தான்.  நாம்தான் அதை உணர்வதில்லை. 

“எமலிகோ” என்ற வெளிநாட்டு அறிஞர், இதைத்தான் “ஒரு செயலை நம்மால் செய்ய முடியும் என்று நாம் திட்டவட்டமாய் எண்ணுவோமானால், அதை நாம் செய்து முடிப்போம்!… மாறாக, அதையெல்லாம் நம்மால் ஒருக்காலும் செய்ய முடியாது! என்று எண்ணுவோமானால், குப்பை மேடு கூட பெரிய மலை போல்தான் காட்சியளிக்கும்” என்கிறார்.

இதன் மூலம் தெளிவாகும் உண்மை என்னவென்றால், முதலில் நம் எல்லோருக்கும் நம்மைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு கட்டாயம் தேவை என்பதுதான். தனக்குத் தானே விலங்கிட்டுக் கொண்டு, நம் திறமைகளை நாமே சிறையில் பூட்டி விட்டு வாழ்க்கையில் உழன்று கொண்டிருந்தால், மேற்கூறியது போல் “நமக்கானவை அல்ல” என்கிற எண்ணம்தான் மனம் முழுதும் பதியனாகும். அந்த எண்ணம் பதியனாகும் போது, நமக்கே தெரியாமல் நமக்குள் ஏற்படும் சில தடை உணர்ச்சிகள் என்னவென்றால், கோழைத்தனம்,  அதிகபட்ச சுய கவனம், வெறுப்புணர்வு, குற்றவுணர்வு, எளிதில் அமைதி இழக்கும் நிலை,

மொத்தத்தில், நம்பிக்கை என்னும் ஆதார ஸ்ருதி இருந்தால்தான் எந்தவொரு எண்ணமுமே செயலாகும், எந்தவொரு செயலுமே வெற்றியாகும்.

“உங்கள் உள்ளத்தில் உள்ள “எனக்கே என் மீது நம்பிக்கை இல்லை” என்கிற கருத்தை முதலில் தூக்கிப் போடுங்கள். ஏனென்றால், அந்த மாதிரியான ஒரு எதிர் மறைக் கருத்துடன் செய்ல்பட்டால், செயல்களில் முழு மனதுடன் ஈடுபட முடியாது.  பிறகு, உங்களது தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணமாகி விடுவீர்கள்.

சரி, அந்த மாதிரியான வலுவூட்டும் எண்ணங்களை மனதில் நிறுத்தி நம்பிக்கையை எப்படி வளர்ப்பது?

முதலாவது நல்ல பயிர்களை பயிரிட நல்ல நிலம் வேண்டும். நல்ல நிலம் உடனே கிடைப்பதில்லை. ஏதோ ஒரு நிலம் நம்மிடம் இருக்கும். இதை நல்ல நிலமாக மாற்றுவது நம் கையில் தான் உள்ளது.

அதில் உள்ள கற்களை தோண்டி எடுத்து அப்புறப் படுத்த வேண்டும். அதில் உள்ள முட்செடிகளை வேரோடு தோண்டி அப்புறப் படுத்த வேண்டும். சிறிது வேர் இருந்தாலும் அது மீண்டும் முளைக்க ஆரம்பித்து விடும். முழு நிலத்தையும் தேவையான அளவு உழுது பண்படுத்த வேண்டும். பின்பு அதிலே தேவையான அளவு வெவ்வேறு உரங்களை சேர்த்து மண்ணோடு முழுவதுமாக சேர விட கொஞ்ச நாள் விட வேண்டும்.

இப்போது நிலம் தயார். இதிலே நல்ல விதை போட்டால் நல்ல பயிர் முளைத்து வளர ஆரம்பிக்கும். மோசமான விதை போட்டால் எதுவுமே முளைக்காது. எதுவுமே போடாவிட்டால் என்ன ஆகும். கொஞ்ச நாளில் களைச் செடிகள் முளைக்க ஆரம்பித்து வளர ஆரம்பித்து விடும். நிலத்தைப் பண்படுத்தியும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.

நல்ல விதை முளைக்க ஆரம்பித்தவுடன் நிலத்தையும் பயிரையும் தண்ணீர் பாய்ச்சி கவனமுடன் வளர்த்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். நாம் எதிர்பார்த்த யாவும் கிடைக்கும்.

இது இயற்கை. இந்த உதாரணம் நம்முடைய மனம் / ஆன்மாவிற்கு அப்படியே பொருந்தும். மனம் என்பது இங்கு நிலம். கற்கள் மற்றும் பாறைகள் என்பவை இடர்பாடுகள் அல்லது திசை திரும்ப வைக்கும் மற்றவர்களின் முயற்சிகள், மோசமான சூழ்நிலைகள்.

நிலத்திலுள்ள முட்செடிகள் என்பவை தீய எண்ணங்கள், தீய நண்பர்கள், தீய செயல்கள், தீய ஆசைகள்.

நல்ல விதைகள் = நல்ல ஆலோசனைகள், நல்ல எண்ணங்கள், நல்லவர்களின் நட்பு.

உரம் மற்றும் பண்படுத்துதல் = நல்ல செயல்கள் வளர ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல்.

மோசமான விதைகள் = எதற்கும் பிரயோஜனமற்ற செயல்கள், எண்ணங்கள்.

எதையும் விதைக்காமல் அப்படியே விட்டு விடுதல் = சோம்பேறியாக இருந்து பொழுதை கழித்தல்.

களைச்செடிகள் = மீண்டும் நம்மிடம் தோன்றும் தேவையற்ற தீய எண்ணங்கள் , தீய நண்பர்கள் , தீய செயல்கள்.

தண்ணீர் = இறை நம்பிக்கை, இறைவனின் ஆசி.

பலன் = குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் உபயோகமான வாழ்க்கை.

இந்த விளக்கத்தைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டால் நல்ல எண்ணங்களை எப்படி உருவாக்கலாம் என்கிற வழிமுறை புரிந்திருக்கும்.

உங்களை நீங்களே கேள்வி கேட்டுத் திணறடியுங்கள். “இதுவரை நோபல் பரிசு வாங்கியவர்கள், ஆஸ்கார் வாங்கியவர்கள், ஒலிம்பிக் கோப்பைகளை அடுக்கியவர்கள் எல்லாரும் என்ன வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா?…இல்லையே?…அவர்களும் நம்மைப் போலத்தான் பிறந்தார்கள், வளர்ந்தார்கள்? அவர்கள் வாங்கும் போது நாம் ஏன் வாங்க முடியாது?” கேளுங்கள் உங்களை.

“படைப்பில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? நமக்கு மட்டும் இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு ஏழெட்டு கை, கால்க்ளைக் கொடுத்துள்ளதா இயற்கை?” கேளுங்கள் உங்களை.

“ஏதாவது ஒன்றைச் சாதிக்கலாம் என்று ஒரு முறையாவது நினைத்தோமா? அதைச் செயலாக முயற்சித்தோமா? ஏன் செய்யவில்லை? முயன்று பார்த்தால்தானே முடியுமா? இல்லையா? என்பது தெரியும்?” கேளுங்கள் உங்களை.

இப்படிக் கேட்டுக் கேட்டு கேள்விகளால் உங்களை செதுக்குங்கள். செம்மைப்படுங்கள். செயல் திறனைக் கண்டு பிடியுங்கள்.

நிச்சயம், நீங்களும் வாங்கலாம் நோபல் பரிசு, ஆஸ்கார் அவர்டு. உலகக் கோப்பை, ஒலிம்பிக் கோப்பை எல்லாமுமே.

(முற்றும்)       

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஓவர் பில்ட்-அப் வேணாங்க (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    விரக்தி நிலை Vs.விருப்ப நிலை (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்