in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 8) – கவிஞர் இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7

தீபக், வசாய் ரோட்டில் ஸ்டேசன் அருகே ஒரு கோழிக்கடையும் ஒரு சிறிய பான்மசாலா கடையும் வத்திருப்பவன். தமிழரசுவிற்கு சிறு வயதிலிருந்தே பழக்கமானவன். அவனுடைய பான்கடையும் அவனுடன் மராத்தி பேசுவதற்கும் தமிழரசுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வளவு அழகாக இலக்கணம் கலந்து மராத்தி பேசும் தீபக் சிவ்டே, அரசு சொல்லும் தமிழின் மகத்துவத்தைக் கேட்டு மிகுந்த நல்ல சொற்கள் உள்ள பைந்தமிழ் என்று தமிழைப் பாராட்டக் கூடியவன்.

அரசு முதலில் ’தீபக்கிடம் சொல்லலாமா?’ என்று யோசித்தான். கண்டிப்பாக இவனும் போய் உன் தந்தையின் வியாபாரத்தைக் கவனி, இப்படி இளமையையும் நேரத்தையும் வீணாக்காதே என்றுதான் அறிவுரை சொல்ல போகிறான்.

இவனிடம் என்ன சொல்வது என்று நினைத்தப் போது “என்ன? எப்போதும் வெளிநாட்டு பிராண்ட் சிகரெட் வைத்திருப்பாய், ஒரு சிகரெட் தரக் கூடாதா?” என்று தீபக் கேட்டபோது தான் தான் இன்று முழுவதும் சிகரெட் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

சுதாரித்துக் கொண்டு, “ஸாரி தீபக் சிகரெட்டை விட்டு விட்டேன்” என்றவன் “உன் வியாபாரம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.

“அது ஓடிக்கொண்டிருக்கிறது. வா சாயா குடிக்கலாம்.” என்றான்.

‘இவனுக்கு நான் சாயா வாங்கித் தர முடியாத நிலையில் எப்படி இவனோடு நான் டீ குடிக்க போவது… மறுத்து விடலாமா? ‘ என்று யோசித்தபோது, “என்ன முழிக்கிறாய், என்ன பர்சை எடுத்து கொண்டு வர மறந்து விட்டாயா? சரி, பராவாயில்லை நான் வாங்கித் தருகிறேன்” என்று அரசுவை இழுத்துக் கொண்டு சென்றான்.

சூடாக தேநீர் உள்ளே சென்றதும் கொஞ்சம் தெம்பு வந்தது. “ம்…தீபக்… உன்னிடம் கேட்பது” என்று இழுத்தான் அரசு.

“என்ன சொல்லு?”

“எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும். திருப்பித் தந்து விடுவேன். ஆனால் திரும்பத் தர கொஞ்ச நாளாகும்”

‘’க்யா… அரசு…விளையாடுகிறாயா? உன் வீட்டில் இல்லாத பணமா?” சிரித்தான் தீபக்.

“வீட்டில் பணம் இருக்கட்டும். நீ எனக்கு கொஞ்ச நாளைக்கு கைமாற்றாக தரமுடியுமா? நான் சம்பாதித்தவுடன் திருப்பித் தந்து விடுகிறேன்.”

“என்னது நீ சம்பாதித்து தரப் போகிறாயா? என்னாச்சு அரசு. ஏதாவது பிரச்சினையா?”

தீபக் பையிலிருந்து எடுத்து “அறுநூறு ரூபாய் இருக்கிறது போதுமா?” என்று கேட்டான்.

வாங்கிக் கொண்டு “மிக்க நன்றி தீபக்” என்று எழுந்தான்.

“என்ன அரசு எனக்கு நன்றி சொல்கிறாய். என்னிடம் கடன் வாங்குகிறாய். என்ன விஷயம்?”

”அப்புறமாகச் சொல்கிறேனே?”

“இரு, வீட்டிலே ஏதாவது சண்டைப் போட்டுக்கொண்டு வந்தாயா அரசு?”

“சண்டை ஏதுமில்லை. நான் அடிக்கடி நமக்குள் பேசிக்கொள்ளும் போது சொல்வேனே, என் காலில் நிற்க முயற்சி செய்து வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.”

“உனக்கு சரியாகத் தெரிகிறதா?”

“ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

“உன் தந்தைக்கு நீ ஒரே மகன். அவர் உழைத்து சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் இந்த பிஸினஸ் உலகமே உனக்காகத்தான். அதை பகிர்ந்து கொள்ளக்கூட உன் வீட்டில் அண்ணன், தங்கைகள் யாரும் கிடையாது. இந்த நிலையில் அவர்களை நீ தனியாக விட்டு விட்டு வெளியேறியது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.”

“அதற்காக நான்…. தனியாக நின்று என் சுய சம்பாத்தியத்தில் முன்னேற நினைப்பது தவறா? என் அப்பாவிற்கு யாராவது சேர்த்து வைத்தார்களா? அவர் இந்த அளவிற்கு இந்த மும்பையின் அசைவில் பங்கு கொள்ளவில்லையா? அவரால் முடியும் போது ஏன் என்னால் முடியாதென்று நினைக்கிறாய்?”

“அரசு பேசுவது எளிது. உன் தந்தையின் வளர்ப்பு முறை.. நீ பிறந்து வளர்ந்த முறை…இடையே எத்தனை வித்தியாசங்கள்?. அவர் மனதில் தீப்பிழம்போடு பணம்…பணம்.. என சம்பாதிக்க ஆரம்பித்தவர். அவருக்கு அன்று கண் முன்னால் வியாபாரக் குதிரையின் கடிவாளம் தவிர எதுவும் தெரியவில்லை. ஆனால் உன் நிலை… உன் கொள்கையை நான் மறுக்க வில்லை, நீ விரும்பினால் கார், எந்தப் பக்கம் தொட்டாலும் பணம். … என்ற நிலையில் வளர்ந்தவன். உன்னால்… சரி..விடு, உன்னை நான் நோகடிக்க விரும்ப வில்லை. நீ வீடு போக விரும்ப வில்லை என்றால் என்னோடு தங்கலாம். எனது சொப்டா(குடிசை)யில் உனக்கு எப்போதும் இடமுண்டு. நான் சாப்பிடும் சப்பாத்தியும் சப்ஜியும் உனக்குத் தருகிறேன்.”

“ஸாரி… தீபக். வசாயிலிருந்து கொண்டு நான் வீடு போகவில்லை என்றால் என் அப்பாவின் பெயர் கெட்டுப் போவிடும். நான் தாராவிக்குப் போய் நண்பர்கள் மூலம் அல்லது சுன்னாபட்டியிலிருக்கும் கஸின் பிரதர் மூலம் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.”

“உன் விருப்பம்.”

“வரட்டுமா?”

“இரு  அரசு, இந்த முகவரியை வைத்துக் கொள். என் அண்ணாவின் மாமனார் பையன் ஒருவன் நம்ம காந்திவிலி பொய்சரில் பி.இ.எஸ்.டி.(பெஸ்ட்) பஸ் ஸ்டாப்புக்கு அடுத்தாற் போல ஒரு சின்ன தொழிற்சாலை வைத்திருக்கிறான். பெயர் திலக். கோழி தீவனம் தயாரித்து எக்ஸ்போர்ட் பண்ணுகிறான். போய்ப் பார்த்து பேசிப் பார்.” என்று ஒரு விசிட்டிங் கார்டைநீட்டினான்.

“சரி, இருக்கட்டும்.” எனக் கிளம்பியவனை மராத்தியில் திரும்பவும் அழைத்து “அரசு தீர்மானித்து விட்டாயா? “ கேட்டான் என்று தீபக் சிவ்டே.

“மாற்றமில்லை தீபக்.”

“பெஸ்ட் ஆஃப் லக்.” கையைக் குலுக்கி அனுப்பி வைத்தான்.

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 7) – தி.வள்ளி, திருநெல்வேலி

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 20) – முகில் தினகரன்