in ,

மறக்க முடியுமா ❤ (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

நான் ரகோத்தமன், அதனால என்னன்றீங்களா, ஒண்ணுமில்லை சார்… எங்க இருந்தாவது ஆரம்பிக்கணும் இல்லையா ?

ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா, அவாளுக்கு ஒரு குழந்தைனு ஆரம்பிச்சா அடுத்த வரி படிக்கத் தோணுமா?

இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன், ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள கொட்டாவி விட்டா என்னை இன்சல்ட் பண்ற மாதிரி. ஞாயித்துக்கிழமைதானே அந்த நியூஸ் பேப்பரை தூக்கிப் போட்டுட்டு நம்ம கதையை கேளுங்கோ.

தமிழ்நாட்டுல கோயமுத்தூர் பக்கம் திருப்பூர் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம். திருப்பூர்ல டிகிரி முடிச்ச உடனே என்னோட எல்லா நண்பர்களையும் போல ஒரு ரெண்டு வருஷம் வேலையில்லாம ஊர்சுத்திட்டு தான் இருந்தேன்.

அப்பா தினம் திட்டுவார், தண்டச்சோறு ஒரு வேலை தேடிக்க துப்பில்லை, கண்ட காவாலிப் பசங்களோட ஊர் சுத்தியாகறதுனு. பாவம் அவரோட கையாலாகத்தனம். எனக்கு அப்பறம் ரெண்டு பொண்ணுங்க இருக்காளே, அவங்களுக்கு கல்யாணம் பண்ணி கரை சேக்கணுமே.

சொற்ப பென்ஷன் பணம் வீட்டுச் செலவுக்கே இழுபறி. நான் ஏதோ கலெக்டராகி குடும்பத்தை ஓகோனு கொண்டு வந்துடுவேன்னு நம்பி இருந்திருக்கார். நான் என்ன பண்ண எல்லா என்ட்ரன்ஸ் பரிட்சையும் எழுதறேன், ரிசர்வேஷன் கோட்டால வேலை நழுவிடுது. செல்வம் பனியன் பேக்டரில வேலைக்கு சேந்துட்டான், சில என் நண்பர்கள் பிசினஸ் குடும்பம். கவலை இல்லாம குடும்ப பிசினஸ் கண்ட்டின்யூ பண்றாங்க. வேலையில்லாம சுத்தறது நானு, கோபு, ராபர்ட், சீனு.

எங்கே போனாலும் சேந்தே போவோம், ஆளுக்கொரு சைக்கிள் எடுத்து ஊரெல்லாம் சுத்தி வருவோம்… ஈரோடு, பவானினு. ஏன் கோயமுத்தூர் கூட சைக்கிள்ல போய் சினிமா பாத்துட்டு வருவோம்.

என்னப்பா உன் கதை, வேலை இல்லை சரி, ஒரு பொண்ணு கூட வரலைன்னா கதைல என்ன சுவாரஸ்யம்’ன்றீங்க தானே? தெரியும், அதுவும் வந்தது ஒரு கட்டத்துல.

என்ன சொன்னேன், ரகோத்தமனாகிய நான், இந்தியாவின் தமிழ்நாட்டுல இருந்து லண்டன் வந்து 10 வருஷமாச்சு. இதோ இப்ப ஹீத்ரோ ஏர்போர்ட் டெர்மினல் 2ல செக்-இன், செக்யூரிடி எல்லாம் முடிச்சிட்டு, ஏர்இண்டியா சென்னை ஃபிளைட்டுக்காக கலர் கலரா ஜொலிக்கற கடைகளையும், பெண்களையும் வேடிக்கை பாத்துட்டு உக்காந்திருக்கேன்.

இன்னும் 35 நிமிஷம் பிளைட் ஏறிடுவேன். நாளைக்கு லன்சுக்கு திருப்பூர்ல இருப்பேன். அப்பா இப்ப சந்தோஷமா இருக்கார் ரெண்டு தங்கைகளுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் தடபுடலா பண்ணிக் கொடுத்தாச்சு.

திருப்பூர் எஸ்.வி.காலனி மூணாவது தெருவுல 3 பெட்ரூம் வீடு வாங்கி கொடுத்துட்டேன், அம்மா பாவம் வாயில்லா பூச்சி, என் மேல உயிர். ஏண்டா உன் லைப் செட்டில் பண்ணிக்க வேண்டாமானு ஃபோன் பண்றப்பல்லாம் கேப்பா. எல்லா கடமையும் முதல்ல முடிச்சிட்டு, அப்பா முகத்துல முழு சந்தோஷத்தை பாத்துட்டு என்னைப் பத்தி யோசிக்கறேன்’பேன் எப்பவும்.

இத்தனை வருஷத்துக்கு அப்பறம் திருப்பூர் போகப் போறேன். தங்கைகளோட கல்யாணம் பெங்களூர்ல நடந்ததாலே திருப்பூர் போக நேரம் வரலை. இதோ ஏர்இண்டியா சென்னை ஃபிளைட் அனவ்ன்ஸ் பண்ணிட்டான். பண்ணின அடுத்த நிமிஷம் வரிசை ஃபார்ம் ஆயிடுச்சு. சரி பிளைட்ல சவுரியமா உக்காந்துட்டு அப்பறம் கதையை தொடருவோம்.

நல்ல விண்டோ சீட், சாஞ்சு உக்காந்துண்டேன், இன்னும் ஒரு 10 மணி நேரத்துக்கு இதுதான் இடம். ஏர்இந்தியா ஹோஸ்டஸ் ஸ்நேகமா சிரிச்சா. இவ நம்ம ‘லா’ மாதிரி இருக்காளோ. இது என்ன புது என்ட்ரி ‘லா’ன்றீங்களா?

சொல்றேன். இந்த ‘லா’ தான் என் கனவுக் கன்னி அந்த சும்மா சுத்தின 2 வருஷ காலத்துல.

ஷெர்மின் சாகிப் தெருனு எங்க தெருவுக்கு பக்கத்துல இருந்தது அந்த தெரு, திரும்பற முனைல ஒரு பழைய வீடு. அந்த வீடு ஒரு கம்பி கதவுக்கு பின்னால் சிறைப்பட்ட பழைய வீடு. நானும் ராபர்ட்டும் ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த தெருவுக்கு போனப்ப, அவளைப் பாத்தோம். திண்ணை மாதிரி இருந்த அந்த கம்பி சிறைக்கு பின்னால் ஒரு ரோஸ்வுட் நாற்காலியில் சாய்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

அந்த அழகு சட்டென்று மூளையை பாதித்தது. சுமாரான உயரம் இருக்கும், எலுமிச்சையா, சந்தனமா அப்படி ஒரு பளபள நிறம். அகண்ட கண்கள், கூர் நாசி, பவழநிறத்தில் தேன் இதழ்கள், கச்சிதமான சிலையொத்த உடம்பு. ராபர்ட்டும் நானும் அசந்து போனோம். கோபு, சீனு வுடன் எங்கள் ஆச்சரிய கண்டுபிடிப்பை பகிர்ந்து கொண்டோம். அன்றிலிருந்து ஷெர்மின் சாகிப் தெருவுக்கு அடிக்கடி எங்கள் விசிட், சிலமுறை தரிசனம் கிடைக்கும் பலமுறை கிடைக்காது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை தனிச்சையாய் என் சைக்கிள் ஷெர்மின் சாகிப் தெருவில் நுழைந்தது. சரியாக அந்த கம்பி வீட்டு கதவு முன்னால் சைக்கிள் புஸ் என பெருமூச்சுடன் நின்று போனது, பக்கென்ற எழில்சிரிப்பு. சட்டென திரும்பினேன், அந்த எழில்ராணி புன்னகையும் பச்சாதாபமுமாக என்னை பாத்ததில் மகிழ்ந்து போனேன்.

“ஹி ஹி பஞ்சர்”னு நெளிந்தேன். அதற்குள் உள்ளே இருந்து அவ அம்மாவோ யாரோ கூப்பிடும் கீச்சத்தம் அதில் ‘லா’ என்ற பெயரில் முடியும் ஏதோ பேர் அவளுக்கென்று தெரிந்தது. அவள் ஒரு புன்னகை வீசிவிட்டு உள்ளே ஓடியே போனாள்.

இது என் நண்பர்களிடம் பெருமை பீத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. அன்னிக்கு எங்கள் ரெகுலர் மீட்டிங் பிளேசான வலிப்பாளையம் திருப்பூர் பார்க்ல கூடறப்ப இதுதான் பேச்சு. நான் பெரிய ‘ஐன்ஸ்டீன்’ லெவல்ல “நான் பேர் கண்டுபிடிச்சிட்டேன், அவ என்னைப் பாத்து காதலா சிரிச்சிட்டு போனா”னு கதையளந்தேன். அவர்கள் வற்புறுத்தினதாலே கடைசி எழுத்து ‘லா’ மீதியை நீங்க கண்டுபிடிங்கனு சொன்னேன்.

இப்போது இந்த வசதியான இருக்கையில் அமர்ந்து, பறக்கும் விமானத்தில் அந்த பழைய நாட்களை நினைக்கறப்ப சிரிப்புதான் வந்தது. இப்ப என் நண்பர்கள் எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயிடுச்சாம். நான்தான் இப்போதைக்கு ஒண்டிக்கட்டை. 35 வயசாச்சு, இனிமே யாரு என்னை கட்டிப்பான்ற நினைப்பும் வந்தாச்சு.

ஆனா அம்மா விடுவாளா, பொண்ணு பாத்தாச்சாம், “நீ வந்தா பாரு பிடிச்சா நிச்சயதார்த்தம், கல்யாணம் உடனே”னு. அதான் இப்ப போறேன், என் கல்யாணம்கறது அடுத்தபட்சம், பழைய நண்பர்களை பாக்கற ஆர்வம்தான் ஜாஸ்தி.

பழைய நினைவுகளில் இருந்த என்னை விமானியின் சென்னை அண்ணா இன்டர்நேஷனல் ஏர்போர்டை நெருங்குகிறோம் என்ற அறிவிப்பு இந்த உலகத்துக்கு கொண்டு வந்தது. அடுத்த முப்பது நிமிடங்களில் சூடான சென்னை என்னை வரவேற்றது. பெட்டிகளை கலெக்ட் பண்ணி பிரைவேட் டாக்சியை பிடித்து குளிர்ச்சியில் அமர்ந்தவுடன் இயல்பாக மூச்சு வந்தது.

அடையார் ஆனந்த பவனில் உணவு, பின்னர் நேராக திருப்பூர் வரை அதே டாக்சி. எப்படியோ திருப்பூர் எஸ்.வி.காலனி மூணாவது தெரு வந்து சேந்தேன். வீடு ஒரே அமக்களம், அப்பா, அம்மா, தங்கைகள், மச்சான்கள் ஆளுக்கு ரெண்டு வாண்டுகள்னு வீடே கலகல.

எல்லோருடைய அன்பு உபசரிப்புகள் முடிஞ்சு, அம்மா விவரம் சொன்னாள்.

“பொண்ணு எம்.எஸ்சி, எம்எட் படிச்சிருக்கா. 31 வயசாறது. அவளும் உன்னை மாதிரி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிண்டிருந்தாளாம். இப்பதான் சரின்னு ஒத்துண்டிருக்கா. நாளைக்கே போய் பாப்போம் சரியா அமைஞ்சா கல்யாணம் பண்ணிண்டு லண்டன் கூட்டிண்டே போயிடு”

“பாப்போம்மா அவசரப்படாதே” நான்

மறுநாள் முதல் வேலையா நண்பர்களை பாக்கப் போனேன். காதர்பேட், குமரன் ரோட் அன்னபூர்ணால மீட் பண்ணினோம். கோபு வரலை உடம்பு சரியில்லையாம் கொரோனால இருந்து ரிகவரிங். செல்வம், ராபர்ட், சீனு எல்லோரும் இப்ப குடும்பஸ்தர்கள். பழைய கதைகள் ரெண்டு மணி நேரம் பேசி விட்டு கிளம்பினோம். என் கல்யாண விஷயம் ஹின்ட் கொடுத்தேன்.

வரும் போது ஆட்டோவை கோபு வீட்டு வாசல்ல நிறுத்திட்டு உள்ளே நுழைந்தேன். அதே பழையவீடு இப்போது உள்ள சிறு அத்யாவசிய தேவைகளோட. முன் ரூமிலேயே ஈசிசேரில் சாய்ந்து உக்காந்திருந்தான். என்னைப் பாத்தவுடன் ஒரே மகிழ்ச்சி. “என்னடா உனக்கும் ரெண்டு பசங்களா”

“ஆமாம் இரு கூப்படறேன், விச்சு, கமலி”னு உரக்க குரல் கொடுத்தான் ரெண்டும் பாய்ந்து வந்தது. பின்னாலேயே கோபுவின் மனைவி

“பசங்களா அப்பா பக்கத்துல போய் துவம்சம் பண்ணக்கூடாது”னு சொல்லிண்டே வந்தா. அந்த அழகிய பெண்மணி.

“இது என் பால்ய நண்பன் ரகோத்தமன், லண்டன்.”

“டே ரகு, ஷெர்மின் சாகிப்தெரு ஞாபகம் இருக்கா? பேர் முழுசா கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணிண்டுட்டேன், இது என் மனைவி சுசீலா.”

என் மனைவி மேகலா எம்.எஸ்சி., எம்.எட்., கூட லண்டன் திரும்பறேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காணாமல் போன கறுப்பி (சிறுகதை – பிற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு

    சூலித்தெருவில் ஒரு சிறுவன் – சுசிதா அகர்வால் (தமிழில் பாண்டியன்)