எழுத்தாளர் பாத்திமா ஜெமீனா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்று ஞாயிற்றுக்கிழமை. கருமேகங்கள் சூழ்ந்து மழைவரப் போகும் செய்தி சொல்லியது.
“நேரம் பார்த்து குடைய கூட கொண்டு வரல்ல” என முனங்கியப்படி ஆபீஸிலிருந்து பஸ் ஸ்டேஷனை நோக்கி விரைந்தான் கார்த்திக். மழைத் தொடங்க முன்னமே பஸ்ஸில் ஏறிவிட வேண்மென நினைத்தான்.
“இத்துணை ஜனம் நிக்குது” என்றப்படி தானும் பஸ்ஸிற்காக கார்த்திருந்த கூட்டத்தின் மத்தியில் நின்றுக் கொண்டான் .
தூரத்தில் பஸ் வர ” இதுதான் வட்டாதெனிக்கு போற கடைசி பஸ் . வேறெந்த பஸ்ஸும் வராது ” என்றபடி ஒருவன் ஓடிச்சென்று பஸ்ஸில் ஏறிக் கொண்டான் . அந்த பஸ் ஏற்கனவே ஆட்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது .
கன்டெக்டரின் அவசரப்படுத்தலால் சிலரின் கைகளும் கால்களும் நசுங்கி பக்கத்தில் நின்றவர்களை திட்டவைத்தது .
“இந்த கூட்டத்துக்குள் தவறி விழுந்தா மிதிப்பட்டே சாக வேண்டியது தான் ‘”என்றவாறு கார்த்திக் பாய்ந்து பஸ்ஸுக்குள் ஏறிக்கொள்ள பஸ் புறப்பட்டது .
ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பஸ் நிற்கவும் சிலர் இறங்க பலர்பேர் ஏறிக்கொண்டனர். . அதற்குள் கார்த்திற்கு அமர்ந்துக்கொள்ள ஓரிடம் கிடைத்து விட்டது .
சனநெரிசலுக்குள் ஓரிடம் கிடைத்தது அதிஷ்டமாகவே அவனுக்குத் தோன்றியது. சிலர் பஸ்ஸிற்குள் மூச்சுவிடவே திணறினர் . அங்கே வயோதிபர் ஒருவர் தனது கையில் இரண்டு வயது பையனை தூக்கியிருந்தார் .
அது அவரின் பேரனாக இருக்க வேண்டும் . மற்றைய கையால் தள்ளாடியப்படி பஸ் கம்பிபை பற்றிப்பிடித்திருந்தார் .
பஸ் சென்ற வேகத்தில் அவர் பேரன் வைத்திருந்த இனிப்பு கீழே விழுந்து விட ” தாத்தா … டொபி கீழ விழுந்துருச்சு… “
அந்த வயோதிபரால் அது விழுந்த இடத்தை பார்க்க கூட இயலவில்லை . அவன் அழத்துவங்கி விட்டான் .
” இரு கண்ணா தாத்தா தேடித்தாரன் …” என்றவாறு அங்குமிங்குமாக தன் கண்களால் தேடினார்.
எங்கும் சனநெரிசல் . அவர் மூச்சுத் திணறியது .
” தம்பி யாரவது இடம் கொஞ்சம் தாங்களேன் . குழந்தைய தூக்கிட்டு ஊடு வரைக்கும் நிற்க கால்ல சக்தியில்லப்பா ” என்றப்படி பின் ஸீட்டில் அமர்ந்திருந்த வாலிபர்களிடம் கெஞ்சாத குறையாய் சொன்னார் .
பஸ்ஸிற்குள் இருந்த புழுக்கத்துடன் அவர் பேரனின் அழுக்குரல் பஸ்ஸில் இருந்தவர்களுக்கு இன்னும் எரிச்சலூட்டியது. பஸ்ஸில் அமர்ந்திருந்த யாருடைய இதயமும் அவருக்கு இடம் கொடுக்க முன்வரவில்லை. அந்த வயோதிபர் முன்னால் வந்து கார்த்திக்கின் தோளை மெதுவாக தொட்டார் .
அவன் யன்னல் பக்கம் பார்த்துக் கொண்டான். “மனிதநேயம் எனக்குள்ளுமா இறந்துவிட்டது ? ”
அவன் மனச்சாட்சி உறுத்தியது .
“ஐயா … பெரியவரே எங்க இருக்கிறீங்க , இங்க வாங்க …” பின்னாலிருந்து ஒரு குரல் . அந்த வயதானவர் குரல் வந்த திசை நோக்கி திரும்பினார் .
வெள்ளை பிரம்பை பிடித்தப்படி அமர்ந்திருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்து அவருக்கு இடம் கொடுக்க முயன்றார் .
வேகமாய் பயணத்துக் கொண்டிந்த பஸ்ஸை திடீரென சாரதி பிரேக் அடித்து நிறுத்த அந்த குருடர் கீழே விழப்போனார். கார்த்திக் உடனே எழுந்த அவரை இறுக பிடித்துக் கொண்டான் .
“நீங்க இங்கேயே உட்காருங்க” என்றவிட்டு இடம் கேட்டு நின்ற வயோதிபரை தன்னிடத்தில் அமரச்செய்தான் .
கார்த்திக்கின் ஒரு கை கம்பியை பிடித்திருந்தது. மற்றைய கைநேற்று மளிகைக்கடைக்காரர் இரண்டு ரூபாய்க்கு பதிலாக தன்னிடம் கொடுத்த டொபியை துலாவி எடுத்தது.
“தாத்தா டொபி…” என்றவாறு அந்த வபோதிபரின் மடியிலிருந்த மழலை சிரித்து. அவன் இதழ்களில் புன்னகை தவழ “இன்னும் மனிதநேயம் மரிக்கவில்லையென ” இதயம் சொல்லியது.
எழுத்தாளர் பாத்திமா ஜெமீனா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings