in ,

இன்னும் இருக்கு மனிதாபிமானம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலை நேரப் பரபரப்பில்,  அந்தப் பிரதான சாலை மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.

இப்போதே தன் உக்கிரத்தைத் துவங்கியிருந்த சூரியன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பவர்களின் மவுன சாபத்திற்கு ஆளாகியிருந்தான். கைக்குட்டையால் கழுத்து வியர்வையைத் துடைத்தபடி பேருந்து வரும் திசையை பார்த்தபடி நின்று கொண்டிருந்த ரேணுகாவை, “கி…ரீ…ச்”…சென்ற ஓசை உசுப்ப, சட்டென்று திரும்பினாள்.

வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் இளைஞனை, உரசிச் சென்ற ஒரு பேருந்து அவனைக் கட்டுப்பாடிழக்கச் செய்து விட, பதட்டமாய் பிரேக் அடித்ததில் தெறித்துப் போய் பிளாட்பாரத்தில் விழுந்தான் அவன்.

தலையில் பட்ட அடியால் அவன் நினைவிழந்து கிடக்க, கை கால்களில் ஆங்காங்கே ரத்தத்தீற்றல்கள்.  ‘அவரவர் அவசரம் அவரவர்க்கே’ என்கிற பாணியில் யாருமே அடிபட்டு மயங்கிக் கிடக்கும் அந்த இளைஞனைக் கண்டு கொள்ளாது போக, பதறிப் போய் ஓடினாள் ரேணுகா.

அவளை வேடிக்கைதான் பார்த்தனரே  தவிர யாரும் கூட வரவில்லை.  “சார் யாராவது ஒரு ஆட்டோ புடிங்க சார்… இந்தப் பையனை உடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகணும்”

அவள் கோரிக்கையைச் செவிமடுக்க யாருமே இல்லாது போக, அந்தப் பெரியவரிடம் சென்று கெஞ்சினாள். அவரோ… மயங்கிக் கிடக்கும் அந்த இளைஞனை முகச்சுளிப்புடன் பார்த்து விட்டு, அதே வேகத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

காத்திருந்த கல்லூரி மாணவர்களிடம் ஓடிப் போய் அவள் கை நீட்ட, “அய்யய்யோ…. இன்னிக்கு இன்டர்னல் டெஸ்ட் மேம்!… ஆளை விடுங்க!”. என்றுமில்லாமல் இன்றைக்கு அவர்களுக்கு அதிசயமாய் படிப்பின் மீது அக்கறை வந்திருந்தது.

இனி இவர்களையெல்லாம் நம்பிப் பிரயோஜனம் இல்லை, என்பதையுணர்ந்து சற்று தள்ளியிருந்த  ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி அவளே ஓடினாள்.

மயங்கி கிடந்த இளைஞன் லேசாக முனக ஆரம்பித்திருந்தான். நின்று கொண்டிருந்த ஆட்டோக்களில் டிரைவர்கள் இல்லாதிருக்க தேடினாள்.

சற்றுத் தள்ளி நின்று தம் அடித்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர், அவசரமாய் பீடியை வீசி விட்டு வேகமாய் வந்தான்.   “என்னம்மா?… எங்க போகணும்?” கேட்டான்.

இவள் விஷயத்தைச் சொல்ல, அவன் கீழுதட்டைக் கடித்தபடி யோசித்து விட்டு, “ஆக்சிடென்ட் கேஸா?” கேட்டான்.

“பயப்படாதீங்க… உங்க சவாரிக்கான காசை நான் தரேன்!… வாங்க” என்றாள் ரேணுகா.

“அம்மாடி!… காசுக்காக நான் மறுக்கலை!… போற வழில அந்த ஆள் புட்டுக்கிட்டான்னு வெச்சுக்கங்க… அம்புட்டுதான் என் முதுகுக்கு டின்னு வந்துடும்” என்றான்.

 அப்போது சரேலென்று வந்து, வட்டமடித்து நின்றது இன்னொரு ஆட்டோ. அதை விசாரிக்க ஓடிய ரேணுகா அதிலிருந்து இறங்கிய டிரைவரைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள்.

“இவனிடம் கேட்பதை விட கேட்காமல் இருப்பதே மேல்”. அவனின் ஆறடி உயரமும், அகலமான முகத்தில் மண்டி கிடந்த முரட்டு தாடியும், கோவைப் பழமாய்ச் சிவந்து கிடந்த கண்களும், அவளைத் தடுத்து நிறுத்தி விட, அந்த முரட்டு டிரைவர் அவனாகவே கேட்டான்.  “என்னம்மா ஆட்டோ வேணுமா?” குரலிலும் கர்ணகடூரம்.

மெல்லத் தலையை மேலும் கீழும் ஆற்றியவள் தூரத்தில் கிடந்த அந்த இளைஞனை காட்டினாள்.

“ஓ… ஆக்சிடெண்டா?”  என்று கேட்டபடியே அவசரமாய் வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்து விழுந்து கிடந்த அந்த இளைஞன் பக்கத்தில் ஆட்டோவை கொண்டு போய் நிறுத்தினான் அவன்.

யாரிடமும் எந்த உதவியும் கேளாமல் தனி ஆளாக, அந்த இளைஞனைத் தூக்கி ஆட்டோவில் போட்டுக் கொண்டு,  “என்னம்மா?… நீயும் வர்றியா?” கேட்டான். பதிலேதும் பேசாமல் அனிச்சையாய் ஏறி அமர்ந்து கொண்டாள் ரேணுகா.

பரபரப்பான டிராபிக் நெரிசலில் மிகவும் சாதுர்யமாக வண்டியைச் செலுத்தி, அடுத்த பத்தாவது நிமிடம் அந்த மருத்துவமனையின் வண்டியை நிறுத்தி, அவனே ஓடிச் சென்று மருத்துவமனை சிப்பந்திகளை ஸ்ட்ரக்சருடன் வரவழைத்து, இளைஞனை அதில் ஏற்றி சிகிச்சைக்காக உள்ளே அனுப்பி வைத்தான்.

அடிபட்ட இளைஞனை உள்ளே கொண்டு சென்றதும் ரேணுகா அந்த ஆட்டோ டிரைவரிடம் வந்து,   “எவ்வளவு?” என்று கேட்டாள்.

“அந்தப் பையன் யாரு?… உங்களுக்குத் தெரிஞ்சவரா?” திருப்பிக் கேட்டான் ஆட்டோ டிரைவர்.

“இல்லை… இல்லை… நான் பார்க்கப் பார்க்க அடிபட்டு விழுந்தான்!… அதான் காப்பாற்றிக் கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்!” திரும்பி ஸ்ட்ரக்சரில் போய்க் கொண்டிருக்கும் அந்த இளைஞனைப் பார்த்தபடி அவள் பேச,

“யாரோ மேல உங்களுக்கு என்னங்க அத்தனை அக்கறை?”

“ஒரு மனிதாபிமானம்தான்!… எங்க அப்பா சொல்லிக் கொடுத்தது!… “கஷ்டப்படற ஒருத்தருக்கு உதவி செய்யறது… கடவுளுக்குச் செய்கிற சேவை”ன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு!”.

“உங்க அப்பா யாரு?.. மேடை சொற்பொழிவாளரா…?”

“இல்லை… ரிட்டையர்ட் ஸ்கூல் வாத்தியார்!.. இங்கே… நந்தவனம் பள்ளியில்தான் தமிழாசிரியராய் இருந்தார்…பேரு… சீனிவாசராகவன்” என்றாள் ரேணுகா.

 அதைக் கேட்டதும் அந்த ஆட்டோ டிரைவர் மெல்ல முறுவலித்தபடி ஆட்டோவில் ஏறியமர “சார்… காசு?” ரேணுகா பரபரத்தாள்.

“காசு வேண்டாம்மா!… ஏன்னா… நானும் கொஞ்ச நாள் உங்க அப்பாகிட்டப் படிச்சவன்தான்!… எனக்குள்ளும் கொஞ்சம் மனிதாபிமானத்தை திணிச்சிருக்காரு உங்கப்பா”

சொல்லி விட்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்து அவன் பறந்து விட, இன்னும் மனிதாபிமானம் இச்சமூகத்தில் கொஞ்சமேனும் இருக்கக் காரணமாய் இருக்கும் தன் தந்தையை  எண்ணிப் பெருமிதம் கொண்டாள் ரேணுகா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சாந்தி வீடு (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    பதவிப் பிரமாணம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை