in ,

கெத்து (சிறுகதை) – அர்ஜுனன்.S

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கணேசனுக்கு தினசரி வாக்கிங் போகும்போது நிச்சயம் அந்த வீட்டை கவனித்துப் பார்ப்பார்.

அது தெருப்புறத்து வீடு தான் என்றாலும், வீட்டின் நுழைவு வாசலுக்கு முன்பு மிகப் பெரிய காலி இடம். தோட்டம் வைத்தாலாவது பிரயோஜனம் என்று கணேசன் மனதில் நினைத்துக் கொள்வார். வாசலில் ஒரு சேர் போட்டு காக்கி யூனிஃபார்ம் போட்ட செக்யூரிட்டி, விறைப்பாக அமர்ந்திருப்பார். சில சமயம் அந்த காலியிடத்தில் நடந்து கொண்டிருப்பார். கையில் துப்பாக்கி தான் இருக்காது.

“நீ அந்த வீட்டை கவனிச்சிருக்கியா..?”

வாக்கிங் முடிந்து திரும்பி வந்தவுடன்  மனைவியிடம்  ஒரு நாள் கேட்டார்.

“எந்த வீட்டை..?”

“அதான் .. அந்த பிள்ளையார் கோயில் தாண்டி மூணாவது வீடு.. வாசல்ல செக்யூரிட்டி கூட இருப்பாரே..?”

“அந்த நாலாவது வீடு முன்னாள் எம்.பி. வீடு.. புதுசா பெருசா இருக்கும்..”

“அதான் எனக்கும் தெரியுமே..? நான் கேட்கிறது அதுக்கு முந்தைய வீடு..”

“ஆமா.. காலியிடம் எல்லாம் போட்டு உள்ளடங்கி இருக்கும்.. அதுக்கென்ன..?”

சுவாரஸ்யம் இல்லாமல் கேட்டாள் மனைவி.

“வாசல்ல எந்நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கே.. வீட்டு ஓனர் யாருனு தெரிஞ்சுக்கணும் தான் கேட்டேன்..” என்றார் கணேசன்.

“அது போலீஸ் பாதுகாப்பு தான்னு எப்படி சொல்றீங்க?…”

“வெறும் செக்யூரிட்டி தான் காக்கி கலர் யூனிபார்ம் ஏன் போடுறாங்க..? அத்தோட ஹேர் கட் கூட மிலிடரி கட்டிங் தான் பண்ணியிருப்பாரு..”

“ம்க்கும்.. வாக்கிங் போனா.. போனோமா, வந்தோமானா இருக்கிறது கிடையாது.. எந்த வீட்டில யாரு இருந்தா என்ன? நாமளே இங்கே வாடகைக்கு வந்திருக்கோம்.. நமக்கெதுக்கு இந்த வம்பு.?..” என்று சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்கத் தொடங்கினாள் மனைவி.

மறுநாள் கணேசன் போகும்போது, அந்த  வீட்டின் கேட் டை திறந்து கொண்டு செக்யூரிட்டி தற்செயலாக வெளியே வரவும் இது தான் சமயமென்று அவர்முன் போய், ஒரு வணக்கம் போட்டார் கணேசன்.

அவரும் திருப்பி வணக்கம் வைக்க.. “ஸார்.. நான் இந்த ஊருக்கு புதுசு.. ஒரு சந்தேகம்.. தெரிஞ்சுக்கலாமா?..”

திக்கித் திணறி பேச்சை ஆரம்பித்தார் கணேசன்.

“சொல்லுங்க..”

“இல்ல.. எந்நேரமும் இந்த வீட்டில போலீஸ் பாதுகாப்பு இருக்கே..? வீட்டில இருக்கிற வி.ஐ.பி. யாரு..?”

அந்த செக்யூரிட்டி இவரைப் பார்த்து சிரித்தபடி.. “நான் போலீஸ் இல்ல.. காக்கி யூனிஃபார்ம் போட்டிருக்கிற சாதாரண செக்யூரிட்டி தான்.. இந்த வீட்டு ஓனரும், பக்கத்து வீடு ஓனரும் பங்காளிங்க.. அவரு எம்.பி. ஆகி கோடி, கோடியா சம்பாதிச்சு பெரிய வீடு கட்டிட்டாரு.. இவரு பூர்வீகத்து வீட்ல இருக்காரு.. பிசினஸ் தான் பண்றாரு..”

“……”

பள்ளியில் படிக்கும் சிறுவன் போல, பொறுமையாக அடுத்த வார்த்தைக்கு காத்திருந்தார் கணேசன்.

“அவரு எம். பி. ஆகி, மந்திரி ஆனதும் அவரு வீட்ல போலீஸ் செக்யூரிட்டி போட்டாங்க.. உடனே இவரும் தன்னோட செக்யூரிட்டியும் அதே மாதிரி காக்கி டிரஸ் போட்டுட்டு, மிலிட்டரி கட்டிங் வைக்கணும்னு ஆர்டர் போட்டுட்டார்.. எந்த டிரஸ் போட்டா என்ன.. சம்பளம் குடுத்தா போதும்னு நாங்க சம்மதிச்சிட்டோம்.. காக்கி டிரஸ்ல அவ்வளவு சீக்கிரம் அழுக்கும் தெரியாது.. நல்லதாப் போச்சு.. என்ன.. மாசத்துக்கு ஒருக்க முடி வெட்டியே ஆகணும்னுகிறது தான் சிரமமா இருக்கு..” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

“ஆனா?..” என கணேசன் அடுத்த கேள்வியை தொடங்கவும்..

“இப்போ தான் எம்.பி. வீட்ல போலீஸ் செக்யூரிட்டி இல்லையேனு நீங்க கேக்கலாம்.. நானும் இதைத்தான் எங்க முதலாளி கிட்ட கேட்டேன்.. அவரு இப்படியே இருக்கட்டும்.. இது தான் கெத்தா இருக்குனு சொல்லிட்டார்” என்று சொன்னபடியே நடையைக் கட்டினார் செக்யூரிட்டி.

போலி கௌரவம் என்ன பாடுபடுத்துகிறது என வியந்து, தன் நடைப்பயிற்சியை தொடர்ந்தார் கணேசன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இது தான் வாழ்க்கை (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    மகளிர் தினம் (சிறுகதை) – நேத்ரா பாலாஜி