in ,

ம்ம்ம்ம்…என்ன கதை எழுதலாம்? (சிறுகதை) – தமயந்தி. A

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

வாழ்க்கையில நடந்த அனுபவத்தை கதையா எழுதி பரிசு வாங்கி விடலாமா..எந்த அனுபவத்தை எழுதலாம்… ம்ம்ம்ம்…

ஒன்னாவது படிக்கும்போது முதல் மார்க் வாங்கினதற்காக, அப்பா சைக்கிள்ல உட்கார வச்சுட்டு எல்லாரையும் கூப்பிட்டு- கூப்பிட்டு என் மக முதல் மார்க் வாங்கி இருக்கா என்று ஏதோ எம்பிபிஎஸ்-ல தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி சொல்லிட்டு இருந்தாரே அதை எழுதலாமா… முதல் மார்க் வாங்குனத பந்தாவா எழுதுதுன்னு நினைச்சுக்குவாங்க வேண்டாம்…

என்ன கதை எழுதலாம்….

 ஆறாவது படிக்கும் போது வீட்டில் செஞ்ச மாங்கா ஊறுகாய யாருக்கும் தெரியாம நிறைய சாப்பிட்டு ஆறுமுறை பேதியாகியும், எங்க கண்டுபிடிச்சிடுவாங்களோன்னு யார்கிட்டயும் சொல்லாமலே சமாளிச்சோமே அதை எழுதுவோமா… பேதி எல்லாம் கதையா எழுதினா நல்லாவா இருக்கும் வேண்டாம்…

என்ன கதை எழுதலாம்….

எட்டாவது படிக்கும்போது அம்மா வயசுக்கு வர்ரதுன்னா என்னம்மான்னு கேட்க போய், அம்மா விளக்கமாத்த எடுத்து அடி அடின்னு அடிச்சாங்களே…. ஏண்டி என்கிட்டயே இவ்வளவு கேள்வி கேட்கிற அளவுக்கு வளர்ந்துட்டியா.. வயசுக்கு மீறுன பேச்சு பேசுவியான்னு… நல்லா அடிச்சாங்களே.. அடி வாங்குன அடுத்த வாரமே நம்ம வயசுக்கு வந்துட்டோமே அதை பத்தி எழுதலாமா….

அச்சச்சோ இந்த பொம்பளைங்களுக்கு வெவஸ்தையே இல்லாம போயிடுச்சு, வயசுக்கு வந்ததக் கூட கதையா எழுதுறாங்கன்னு எல்லாரும் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்களோ… வாங்குன அடியால இதை பத்தி இப்ப பேசக்கூட பயமா இருக்கே… சரி விமர்சனத்தில் இருந்து தப்பிக்கணும்னா இதையெல்லாம் பேசாம இருக்கறது தான் நல்லது… இதுவும் வேண்டாம்..

ம்ம்ம்ம்…. என்ன கதை எழுதலாம்….

 சரி… 18 வயசுல காதல், காமம், கல்யாணம்னு பல கனவுகள் வந்துச்சே அதப்பத்தியெல்லாம் நம்ம எழுதலாமா… பெண் சுதந்திரம்ன்ற பெயரில் இந்த பொம்பளைங்களோட தொல்லை தாங்க முடியல, எதை எழுதறதுன்னே வெவஸ்தையே இல்லாம போயிடுச்சு, சினிமா பாத்து எல்லாரும் கெட்டு போய்ட்டாங்கன்னு வரிஞ்சு கட்டிட்டு திட்ட நிறைய பேர் வந்துருவாங்களோ…

 சினிமாவே பார்க்காட்டியும் இந்த கனவுகள் எல்லாம் வருங்க… அதுக்கு காரணம் ஆக்சிடோஸின்,ஈஸ்ட்ரோஜன்,ஆண்ட்ரோஜன் இந்த மாதிரி நிறைய ஹார்மோன்ஸ்தான்னு நம்ம விளக்கம் கொடுத்தா,.. இதுங்கள படிக்க வச்சதே ரொம்ப தப்புன்னு சொல்லி பஞ்சாங்கம் பாட ஆரம்பிச்சிடுவாங்களோ… சரி இத நம்ம பேசவே வேண்டாம்பா சாமி…

 என்ன கதை எழுதலாம்….

 சரி… நமக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் சினிமால வர மாதிரி நம்ம தலைகோதி, நெற்றியில் முத்தமிட்டு நம்ம மேல எல்லாரும் அன்ப-பொலிவாங்கன்னு காத்திருந்தோமே,. ஆனால் ஒருத்தர் கூட நம்மள எட்டிகூட பாக்காம நம்ம குழந்தையை மட்டுமே சுத்தி சுத்தி பாத்தாங்களே… மொத்த நாளும் வெறுமையா மாறி, ஏன் அழுகுறோம்னு தெரியாம அழுதுட்டே இருந்தோமே அதை பத்தி எழுதுவோமா…

 இதுங்களுக்கு வேற வேலையே இல்ல, எப்ப பாரு ஏமாற்றம், எதிர்பார்ப்பு, ஏக்கம்,அன்பு, மாதவிடாய் மனநிலை, பிரசவ மனநிலைனு… இதுங்களுக்கு மட்டுமே மனசு இருக்கிற மாதிரி நமக்கெல்லாம் கல் இருக்கிற மாதிரி ரொம்ப சீன் போடுங்கன்னு மூச்சு விடாம திட்றதுக்கு ஆண்கள் முன்னேற்ற சங்கத்திலிருந்து ஆள் வந்துருவாங்களோ… சரி எதுக்கு வம்பு இதுவும் வேண்டாம்…

சரி…என்ன கதை எழுதலாம்?…

 சஹானா இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் திருமதி.தமயந்தி அவர்கள் ”என்ன கதை எழுதலாம்” என்ற சிறுகதைக்காக பரிசு கோப்பையை தட்டி செல்கிறார்… இந்த அறிவிப்பை கேட்டதுமே ஒரே சந்தோஷமாயிடுச்சு. ஆஹா நம்ம என்ன கதை எழுதலாம்னு யோசிச்சதை எழுதனா அதுக்கே பரிசு கொடுக்கிறாங்களா? சரி ஜாலினு பரிசு கோப்பைய ஆசையா தொடப்போகும் போது…. அம்மா நீ இன்னுமா தூங்கிட்ருக்க.. நீ சாப்பாடு ஆக்கி வைச்சிருப்பேன்னு நினைச்சேனே.. ஏம்மா எனக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு, நான் தூங்குறேன்னா நீயும் என்னோடு சேர்ந்து தூங்கிட்டு இருக்கியா என்னம்மா நீ… என்று எட்டு கட்டையில் பொண்ணு கத்த,.. அச்சச்சோ என்று அலறிக்கொண்டு எழுந்திருக்க மணி எட்டாகி விட்டது.

 பாப்பா… பாப்பா…. இட்லி வாங்கித்தரேன் அப்படியே சாப்பிட்டுட்டு கிளம்பு பாப்பா நாளைக்கு பாத்துக்கலாம், என்று ஐஸ் வைத்து பிள்ளையை அனுப்பிவிட்டு சரி இதையே நம்ம கதையா எழுதலாமான்னு யோசிச்சேன்… இந்த பொம்பளைங்க எட்டு மணிக்கு எந்திரிக்கிறதே தப்பு இத வேற பெருமையா கதை எழுத வந்துருச்சுங்க… பொறுப்பில்லாத பொம்பளைங்கன்னு வரிஞ்சு கட்டிட்டு எல்லாரும் திட்டுவாங்க, சரி இதையெல்லாம் யாருக்கும் தெரியாம அப்படியே கோழி அமுத்துற மாதிரி அமுத்திர வேண்டியது தான்…

ம்ம்ம்ம்……என்ன கதை எழுதலாம்?…

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தன்வினை தன்னைச் சுடும் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    வைதேகி காத்திருக்கிறாள் (சிறுகதை) – வைஷ்ணவி