in ,

அன்பென்ற மழையிலே (பேரிளம் பெண்) (சிறுகதை) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“கீதா! கீதா! என்னோட நீலக்கலர்  சட்டையை பார்த்தியா?”

“சே! இந்த வீட்டுல வெச்சது வெச்ச இடத்துல இருக்கிறதில்லை”

ஹாலில் தன் தோழிகளுடன் வாட்சப் வீடியோ காலில் மும்முரமாக இருந்த கீதா, “அங்க தான் இருக்கும் பாரு மதன்” என மனைவிகளுக்கே உரிய பிரத்யேக பதிலை இருந்த இடத்திலிருந்தே கூறினாள்.

வார்ட்ரோபையே தலைகீழாக கவிழ்த்து பார்த்தும் அந்த நீலக்கலர் சட்டை மட்டும் கண்ணில் படவில்லை.”கீதா! கொஞ்சம் வந்து பாரேன்”

“இவ்ளோ அவசரமா அந்த நீல சட்டையை போட்டுட்டு எங்க போற நீ?”

“ஏய் மறந்துட்டியா? இன்னிக்கு கெளசிக் வீட்டு கிரகபிரவேசம்”

“எந்த கெளசிக்?”

“என் சின்ன வயசு ப்ரெண்டுனு அன்னிக்கு டி – மார்ட் ல அறிமுகப்படுத்தினேனே “

” ஞாபகமில்லை” அலட்சியமாக கூறினாள் கீதா.

“இதே நான் என்னிக்காவது உன் பிரென்ட்ஸ தெரியாதுனு சொல்லிருக்கேனா?” இந்த ஜோக்கை அவள் ரசிக்கவில்லை என்பது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“முன்னாடியே சொல்லிருந்தா நான் சமைச்சிருக்க மாட்டேன்ல, நான் இன்னிக்கு என் ப்ரெண்ட்சோட கேர்ள்ஸ் ட்ரிப் போறேன். உனக்கு மட்டுந்தான் சமைச்சிருக்கேன்” முறைத்தபடி கூறினாள் கீதா.

“எது இந்த நாலு ப்ரெட்ட டோஸ்டர்ல போட்டு சுவிட்ச போட்டு, கடைல வாங்குன ஜாமை டேபிள்ல வெக்கறதுக்கு பேரு சமையலா?” இது வெளியில் சொன்னது.

நாப்பது வயசுல இவளுக ஊர் சுத்தறதுக்கு பேரு கேர்ள்ஸ் ட்ரிப்பாம் என மனதுக்குள் நினைத்தான். எனக்கு நேரமாச்சு. இன்னிக்காவது நான் நல்ல சாப்பாடு சாப்பிட போறேன் என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் மதன்.

சற்று நேரத்தில்  பார்க் அவென்யூ மணமணக்க காரில் கிளம்பினான். சில சம்பவங்கள் சில மனிதர்களை நினைவுபடுத்தும். அந்த வல்லமை நறுமணங்களுக்கும் உண்டு. பார்க் அவென்யூவின் நறுமணம் அவனுக்கு கெளசிக்கை நினைவுபடுத்தியது.

கெளசிக் அவனது பள்ளி தோழன். ஒரே தெருவில் தான் வசித்தனர். அதனால் விளையாட்டு தோழனும் கூட. பள்ளியிலிருந்து இருவரும் ஒன்றாகத் தான் படித்தனர். பின்  கல்லூரி, வேலை, திருமணம் என ஆளுக்கொரு திசையில் பயணம். தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக அறுந்தது.

போன வாரம் கீதாவின் தொல்லை பொறுக்காமல் டி – மார்ட்டுக்கு சென்ற போது அங்கே தான் பல வருடங்களுக்கு பின் கெளசிக்கை சந்தித்தான்.

அதுவும் அவனை சந்தித்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு. நறுமண திரவியங்கள் பகுதியில் தான் அவனை சந்தித்தான். டேய் மச்சான்! என்ற குரலை கேட்டு திரும்பினால், கெளசிக் நிற்கிறான். இன்னுமாடா நீ பார்க் அவென்யூவ விடவில்லை என அவனை கலாய்த்தான்.

பள்ளியிலேயும் அவர்கள் வசிக்கும்  தெருவிலும் கெளசிக்தான் ஹீரோ. மதனின் சிறு வயது நினைவுகளையும் மதனையும் சுமந்த படி  அந்த கார் கெளசிக்கின் புது வீட்டின் முன் நின்றது.

ஊர் விட்டு சற்று தள்ளி வீடு கட்டியிருந்தான். அலங்கார வளைவுகளும் கிரானைட்டால் இழைத்த கட்டிடமும் அவனது நிதிநிலையை கூறாமல் கூறின. ஆளாளுக்கு மொபைலில் மூழ்கி இருந்தனர். வரவேற்க யாருமில்லை. மனித மனங்கள் எவ்வளவு குறுகிவிட்டன? வசதி பெருக பெருக சில அடிப்படை பண்புகள் காணாமல் போய் விடும் போல என்று நினைத்து மதன் படிகளில் ஏறினான்.

ஆனால் அவன் நினைத்தது தவறு என்பது போல், எங்கிருந்தோ மதன் அண்ணா! வாங்க வாங்க! என்று ஒரு  குரல் வரவேற்றது. குரல் வந்த திசையை நோக்கினால், சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

 “நல்லாருக்கீங்களா மதன் அண்ணா?” என விசாரித்தாள். எங்கேயோ பார்த்த முகம் போல் தோன்றியது. ஆனால் நினைவுக்கு வரவில்லை.குத்து மதிப்பாக தலையாட்டினான்.

வாங்க சாப்பிடலாம் என கைப்பிடித்து அழைத்து போகாத குறை. ஆனால் எனக்கு தான் அவளை சுத்தமாக நினைவில் இல்லை. அதுவே எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டியது. என்னை பந்தியில் அமர்த்தி விட்டு கேட்டரர்களிடம் கவனித்து கொள்ள சொல்லி விட்டு என்னிடம் விடை பெற்றாள்.

சாப்பிட்ட பின் கொண்டு வந்த பரிசு பொருளை கெளசிக்கிடம் சேர்த்து விட்டு ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து கைபேசியை  நோண்ட ஆரம்பித்தேன். இப்போது என் மனசாட்சி என்னை கேலி செய்தது.

சிறிது நேரத்தில் என்  அருகில் வந்து கெளசிக் அமர்ந்து கொண்டான். பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். நெடு நேரம் உள்ளே உறுத்தியதை அவனிடமே கேட்டு விட்டேன். கெளசி! யாருடா அந்த பச்சை புடவை? உள்ளே வரும்போதே என்னை வரவேற்று சாப்பிட கூட்டிட்டு போனாங்க. எங்கேயோ பார்த்த முகம். ஆனால் நினைவுக்கு வராததை குறிப்பிட்டான் மதன். ஒரு நிமிட மௌனத்திற்கு பின் வைதேகிடா என்றான் தூரத்திலிருக்கும் அவளையே பார்த்தபடி.

 “யாரு நம்ம D ப்ளாக் வைதேகியா?”

“ஆமா”

வைதேகியும் அவர்கள் வசித்த அதே தெருதான். அவர்கள் நண்பனின் தங்கை. கெளசிக்கை ஒரு தலையாக காதலித்தவள். கெளசிக்கால் பலமுறை அலட்சியப்படுத்தப்பட்டவள்.

“இங்க என்னடா பண்றா?

“இன்னுமாடா அவள் உன்னை தொந்தரவு செய்றா?”

“இல்லைடா. அவள் என்ட்ட பேசறது கூட இல்லைடா. ஆனா என் வாழ்க்கைல எல்லா முக்கியமான தருணங்களிலும் அவள் என்னுடன் இருந்திருக்கிறாள். ஸ்கூல் பைனல்ஸ், காலேஜ், என் நிச்சய தார்த்தம், கல்யாணம், இப்ப கிரகப்பிரவேசம். என் வீட்டுல சுகமோ துக்கமோ உடனே வந்துருவா . நீ என் ப்ரெண்ட்னு அவளுக்கு தெரியும். நாளைக்கு என் அறுபதாம் கல்யாணத்துக்கும் வருவாடா.

 என்ட்ட பேசறது இல்லைனாலும், ஏதாவது ஒரு வகைல அவள் நினைக்கிறத எனக்கு கம்யூனிகேட் பண்ணிடுவா. நல்ல வேலை, நல்ல சம்பளம். ஆபிசுல கண்டிப்பான  உயரதிகாரி, வீட்ல பொறுப்பான மனைவி, அம்மா இதெல்லாம் வெளில .

சின்ன வயசுல என்ட்ட பார்க்கிங் ஏரியால அவளோட லவ்வை சொன்னா. நான் அவளை லட்சியம் செய்யாம போய்ட்டேன். ஆனா  நான் மறுபடியும் வருவேன், அவகிட்ட பேசுவேனு மனசளவுல அதே இடத்துல பதிமூணு வயசு பொண்ணா நிக்கறாடா. திரும்பி வந்து கூட்டிட்டு போற தூரத்துல நானும் இல்லை. அதை எதிர்பார்க்கிற இடத்தில அவளும் இல்லை. ஆனா இதெல்லாம் தெரிஞ்சும் அங்கிருந்து நகர தெரியாம அங்கேயே நிக்கறாடா.

இது ஒரு வகைல கஷ்டம்னா, எல்லாமே  நல்லா தெரிஞ்சிருந்தும் அவகிட்ட எதையும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காமலும்  பேசமுடியாமலும் குற்றவுணர்ச்சியோடு இருக்கிறது அதை விட கஷ்டம்டா. அவ என்னிக்கும் எனக்கு தொந்தரவு இல்லை என கெளசிக் கண் கலங்கினான்.

ஒரு ஸ்டேஜுக்கு மேல நம்ம கிட்ட பழகுனா எதாவது ஆதாயம் இருக்குமானு நினைக்கிறவங்களுக்கு நடுவுல வைதேகி மாதிரி எதையும் எதிர்பார்க்காத  ஆளுங்க எல்லாருக்கும் கிடைக்க மாட்டாங்க. அவளோட வெற்றியையும் சந்தோஷத்தையும் என்னிடம்  பகிரும் தொலைவுல நான் இருந்தா போதும்னு நினைக்கிறா  என கெளசிக் தன் மன பாரத்தை மதனிடம் இறக்கி விட்டான். ஆனால் மதனோ கனத்த இதயத்துடனும் அமைதியுடனும் அவனிடமிருந்து விடை பெற்றான். காரில் ஏறியவுடன் முதல் வேலையாக வாட்சப்பில் பிளாக் செய்திருந்த நம்பரை அன் ப்ளாக் செய்தான்.

(முற்றும்)

பின்குறிப்பு:

சங்க காலத்தில் பெண்ணின் ஏழு வாழ்க்கைப் பருவங்களாக  பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,  பேரிளம் பெண் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பருவத்திற்கு ஒரு சிறுகதை. இவையனைத்தையும் பெண் பாற்கூற்று கைக்கிளை வகையில் எழுத உள்ளேன். 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மதிப்பிற்குரிய ஐயா (சிறுகதை) – ச. சத்தியபானு 

    மதி வதனா (பகுதி 4) – ராஜேஸ்வரி