ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏ
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே நாம்
ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே நாம்
ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்த
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக அடிச்சுப்
பதரை நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா?
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
– இயற்றியவர்: மருதகாசி
“உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்; உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே!” என்று உழவின் பெருமையையும் மேன்மையையும் திருவள்ளுவப் பேராசான் போற்றிக் கூறியிருக்கிறார்.
ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று உலக மக்கள் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கும் உழவுத் தொழிலின் தனிச்சிறப்பை இரு நூல்களின் வாயிலாக எடுத்துக் கூறியுள்ளார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்.
கம்பர் என்று கூறினாலே “கம்பராமாயணம்” ஒன்றுதானே அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர் எழுதிய ஒன்பது நூல்களுள், வேளாளர் மரபைப் போற்றி, பொருளாதாரத்தைப் புகழ்ந்துரைக்கும் அதியற்புதமான இரு நூல்கள்தான்; “ஏர் எழுபது” மற்றும் “திருக்கை வழக்கம்”
கம்பர் பாடியதாகக் கருதப்படும் “ஏர் எழுபது”, வேளாளர் தம் சிறப்பையும், உழவுத் தொழிலின் மாண்பையும் கூறுகிறது.
மற்றது, 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையால் வந்த கலிவெண்பாவால் பாடப்பட்ட “திருக்கை வழக்கம்” என்ற நூல், வேளாண் பெருமக்களின் கொடை குணத்தைச் சிறப்பிக்கிறது. திருக்குறள் வழிநின்று பாராட்டி, ஏர்த்தொழில் பற்றிய நுட்பமான செய்திகளை விரித்துரைக்கிறது. “ஏர் எழுபதை”ப் பாடியதையொட்டி “திருக்கை வழக்கத்தை”யும் கம்பர் பாடியதாகக் கூறுவர்.
இந்நூல்கள் தோன்றியதற்கான சூழல், படித்து இன்புறத்தக்கது. கம்பர், குலோத்துங்கன் அரசவையில் வீற்றிருந்தபோது ஒருநாள், குலோத்துங்கன் சப்தமிட்டுச் சிரித்துவிட்டான். இதைக் கண்ட கம்பர், “அரசே! எதனால் இப்படிச் சிரித்தீர்கள்? காரணத்தைச் சொன்னால் உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறலாமே?” என்றார்.
“கம்பரே, நீரும் எமது பிரஜைகளும் எனக்கு அடிமைகள்தானே என்று நினைத்துச் சிரித்தேன்” என்று குலோத்துங்கன் கூறியவுடன் கம்பருக்கு கடும் சினம் எழுந்தது.
“என்ன சொன்னீர்? நானும் உமது அடிமை என்றா கருதுகிறீர்? இது ஒப்பாது.
அரசே! நீவிர் புவிச்சக்ரவர்த்தி, நானோ கவிச்சக்ரவர்த்தி. உமக்கு நான் அடிமையாகேன்?” என்று கூறி அவையை விட்டு கிளம்ப முயன்றார்.
உடனே குலோத்துங்கன், “கம்பரே! நீவீர் கவிச்சக்ரவர்த்தியாய்த் திகழ்வது எனது சமஸ்தானத்தில்தான். மற்ற தேசத்தில் உமக்கு இத்தகைய பெருமை கிடைக்காது” என்று கூறியதும் கம்பர் மனம் பொறுக்காதவராய்,
“கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா
நீ முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்?”
என்று கூறிக் கொண்டே அணிகலன்களைக் கழற்றிவைத்துவிட்டு வெளியேற நினைத்தார்.
இதைக்கண்ட அரசன், மேலும் பல கடினமான வார்த்தைகளைக் கூறியதைக் கேட்ட கம்பர், “மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?” என்ற பாடலைப் பாடி, அவையைவிட்டு வெளியேறினார்.
அவ்வாறு அவையைவிட்டு வெளியேறிய கம்பர், நீண்ட தூரம் நடந்த களைப்பு. அப்போது அவர் பார்வையில் பட்டது அக்காட்சி. தூரத்தில் பழையது கரைத்த மோரை எடுத்து வந்த மனைவி உழுது கொண்டிருந்த உழவனுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தாள். தாகம், பசி மேலீட்டால் கம்பர் தானும் அங்கு சென்று கையை நீட்டினார். இதைக் கண்ட வேளாளன் வழிப்போக்கனான கம்பருக்கு அந்த மோர்க் குவளையைத் தந்து பசியாறச்செய்தான். மோர் பருகி வயிறு நிரம்பியதும் இந்தக் வேளாளனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று கூறி, தன்னால் இயலக்கூடிய கைம்மாறு ஒன்றுதான் உண்டு. அதுதான் கவி. என நினைத்தவர் உடனே,
“செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்
பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,
முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே
எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்!”
என்ற கவியொன்றை அப்போதைக்குப் பாடிவிட்டுத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
தனது பசியையும், தாகத்தையும் தீர்த்த வகையை நினைத்தும், தான் குடிக்கப்போன மோரைக் குடிக்காமல் கை நீட்டியவுடன் தனக்கு அப்படியே தந்த அன்பான வேளாளனின் கையின் மகத்துவத்தையும் எண்ணி எண்ணி மனமுருகினார் கம்பர்.
உடனே அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி பெருக்கின் வெளிப்பாட்டின் படைப்புதான் “ஏர் எழுபது” என்ற வேளாளர் புகழ்ச்சி நூலாகும். உழவன் மற்றும் உழவுத் தொழிலின் மேன்மையை இதன் மூலம் உலகறியச் செய்து தனது நன்றியைத் தெரிவித்துவிட்டார் கம்பர்.
தவறாமல் மழை பெய்ய நாட்டில் நல்லொழுக்கம் மிக்க வேளாளரது ஏர் நடக்குமாயின் நாட்டில் இயலிசை, நாடகம் நடக்கும். பல்வேறு சிறப்புகள் நடக்கும், படை பலம் குன்றாது, தர்மம் தவறாமல் நடக்கும், உலகில் உயிர்கள் தோன்றும், பசி மக்களை நலிவிக்காது என்று ஏர் நடத்தற் சிறப்பைப் போற்றுவது மட்டுமல்லாமல், காராளர்தம் தொழிற் சிறப்பை மிக அழகாக எடுத்தோதுகிறார். ஏர்த் தொழில் முடி மன்னருக்கும், அருமறை அந்தணருக்கும் மன்னர் பின்னோராம் வணிகருக்கும் உதவவல்ல உயர்வுடையது என்பதே ஏர் எழுபது நூல் முழுவதும் பேசப்படுகிறது.
“கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர் நடக்கும் எனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திறம் நடக்கும் திருவறத்தின் செயல்நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும்; பசி நடக்க மாட்டாதே!” (19)
“காரி(மழை) பொழிந்தால் காராளரின்(உழவரின்) ஏர் நடக்கும். உழவுத் தொழில்
சிறப்பாக நடந்தால் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் தெருவெங்கும்
முழங்கும்.செல்வம் கொழிக்கும். திருவறத்தின் செயல்களும் நடக்கும்.படைச் செயலும் சிறப்பாக நடக்கும். ஆனால், பசி மட்டும் இருக்காது” என்று பாடுகிறார்.
ஏர் உழுவதற்கான உழவுக் கருவிகள் மற்றும் உழவுத்தொழில் பற்றி எழுபது பாடல்கள் இந்நூலில் உள்ளடக்கமாக உள்ளன. இதில் ஏர் கருவியின் உறுப்புகளும், உழவுத் தொழிலும் வரிசைபட கூறப்பட்டுள்ளன. தமிழிலக்கியங்கள் என்றுமே நல்வழியைத்தான் கூறுகின்றன.
எருவிடுவான்,கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்துவான் (சிறுபஞ்சமூலம்.52)உழவனுக்கு எருதுகள் இல்லாமை இன்னா.நிலத்தின் ஈரம் இல்லாமை இன்னா (இன்னாநாற்பது.4).நிலத்தை உழுது விதைத்து நெற்பயிர் விளை (ஆத்திசூடி.82) ஒருவரை வணங்கி வாழ்தலைவிட உழுது விளைத்து வாழ்தல் இனிது.பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.உழவு வழி வரும் செல்வம் குன்றாது (கொன்றை வேந்தன்.77)உழவு பணியே சிறந்தது.பிற பணி எல்லாம் பழுதுடையவை (நல்வழி.12) உழவுர்க்கு அழகு தானே உழைத்து விளைத்த உணவை உண்ணுதல்,உழுதொழிலைச் செய்து உணவு உண்ணாது வறிதே ஏழையாக இருப்போர் பதராவர்.
உழவுத் தொழிலே சிறந்தது.
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலைப் பின்பற்றியே நிற்கும்.அதனால் எவ்வளவு துன்பமானாலும் உழவே சிறந்த தொழிலாகும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்;.இதனை,
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள்.1031)
என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.
உழவர் அச்சாணி போன்றவர்
உழுத்தொழில் செய்யும் வலிமை இல்லாது பிற தொழில் செய்கின்றவரையும் தாங்குவதால்,உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.
அவர் இதனை,
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து (1032)
என்ற குறள் வெளிப்படுத்துகிறது.
உரிமையோடு வாழ்வர்
உழவு செய்து வாழ்வரே உரிமையோடு வாழ்வா.; மற்றவர் பிறரைத் தொழுது அவர் பின் சென்று வாழ்வர்.இதனை,
உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (1033)என்ற குறள் வெளிப்படுத்துகிறது.
உழுது நெல்லை உற்பத்தி செய்யும் உழவர்கள் பல வேந்தரின் நிலங்களையும் தம் வேந்தரின் நிலங்களையும் தம் வேந்தரின் குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பதை,
பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (1034)என்ற குறள் வெளிப்படுத்துகிறது.இதன் மூலம் நான்கு வருணத்தார்களில் (அந்தணர்,அரசர்,வணிகர்,வேளாளர்) இரண்டு வருணத்தாரான அரசரும்,வேளாளரும் இருந்த செய்தியை அறியமுடிகிறது.
உழவர்கள் யாசிக்க மாட்டார்கள்
கையினால் தொழில் செய்து உழைத்து உண்ணும் தொழிலாளர் பிறரிடம் சென்று யாசிக்க மாட்டார்.தம்மை யாசித்தவருக்கு மறைக்காமல் கொடுப்பர்.இதனை,
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்துஊண் மாலை யவர் (1035)என்ற குறளின் வழி வெளிப்படுகிறது.
உழவரின் கைத்தொழில் செய்யாது மடங்கி இருக்குமானால் பற்றற்ற துறவிகளுக்கு வாழ்வு இல்லை என்பதை,
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை (1036)என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.
மண்ணைக் காயவிடல்
நிலத்தை உழுபவன் ஒரு பலம் அளவுள்ள புழுதி கால் பலம் அளவு ஆகும்படி மண்ணைக் காயவிட்டால் அந்நிலப் பயிருக்கு ஒரு பிடி எருவும் இட வேண்டாமல் மிகுதியாக விளையும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளாh.; இதனை
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்ததுஎருவும்
வேண்டாது சாலப் படும் (1037) என்ற குறளின் வழி அறியமுடிகிறது.
எருவிடல்
ஏர் உழுவதைவிடப் பயிருக்கு எரு விடுதல் நல்லது.இத்துடன் களை எடுத்தலும் பயிர் காத்தலும் நீர் விடுதலும் நன்மை தரும் என்கிறார் வள்ளுவர்,
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு (1038) என்ற குறளின் வழி குறிப்பிடுகிறார்.
நிலத்திற்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்
நிலச் சொந்தக்காரன் நாள்தோறும் நிலத்திற்கு செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருப்பானால் ,அந்நிலம் மனைவி போலப் பிணங்கிவிடும் என்பதை,
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் (1039) என்ற குறளின் வழி புலப்படுத்தியுள்ளார்.
பொருள் இல்லை என்று வறுமையால் சோம்பி இருப்பவரைக் கண்டால் அவனுடைய அறியாமையை நினைத்து நிலமகள் தன்னுள்ளே சிரிப்பாள் இதனை,
இலம்என்று அசைஇ இருப்பவரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும் (1040) என்ற குறளின் வழி கூறியிருக்கிறார்.இதன் மூலம் எப்போதும் நிலைத்து நிற்கும் தொழில் நிலத்தொழிலாகிய உழவு தொழில் செய்ய வேண்டும் என்பது புலப்படுகிறது.
உழவனின் இலக்கணம்
ஒரு நல்ல உழவன் தன் நிலத்திலிருந்து கிடைக்கும் வைக்கோலைச் சேர்த்து வைத்திருப்பான் நாள்தோறும் உழுது ஏரைப் போற்றுவான் புன்செய் நிலத்தையும் திருத்துவான்.எருவிடுவான் கலப்பையால் நிலத்தைப் பண்படுத்துவான்.இதனை, நன் புலத்து வை அடக்கி,நாளும் ஏர் போற்றி புன் புலத்தைச் செய்து எருப் போற்றிய பின் நன் புலக்கண் பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே
நுண் கலப்பை நூல் ஓதுவார் (சிறுபஞ்ச.58) என்ற பாடலில் மூலம் உழவரின் இலக்கணத்தை அறியமுடிகிறது.
வேளாளர்க்கு அழகு
சூதாடிப் பொருள் சேர்க்க விரும்பாமை,பார்ப்பனரைத் தீயாகக் கொண்டு மிக அகலாமை,மிக அணுகாமை உழவுத் தொழிலை விரும்பிச் செய்தல் ஆகியன வேளாண் குடிக்கு அழகுகள் ஆகும்.இதனை நல்லாதனார்,
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் – இம் மூன்றும்
அழகு என்ப வேளாண் குடிக்கு (திரிகடுகம்.42) என்ற பாட்லின் வழி அறியலாம்.மேலும் மற்றொரு பாடலில் உழும் போது சால் போகும் வழியை கவனிக்க வேண்டும் என்பதை,
சால் நெறிப் பாரா உழவனும் தன் மனையில்
………………………………………………
………………………………….இம்மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா (திரிகடுகம்.மி.பா.3)
என்ற பாடலின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.உழவுத் தொழிலில் ஏர் பூட்டி உழுவதற்கு முன் அதன் குறைப்பாடுகளை அறிந்து ஏர் பூட்ட வேண்டும் அப்படி பூட்டாமல் இருந்தால் அவன் உயிருடன் இருந்தாலும் இறந்ததிற்கு சமம் என்கிறார் நல்லாதனார்,
ஏர்க் குற்றம் பாரா உழவனும் …………..
……………………………………………
…………………………………இஇம்மூவர்
இருந்திட்டு என்?போய் என்,இவர்? (திரிகடுகம்.மி.பா.4)
என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.
நெற்பயிர் விளை (ஆத்திசூடி.72)
நெற்பயிரை விடாது விளைத்திட வேண்டும்.
பூமி திருத்தி உண் (ஆத்திசூடி.82)
உன் விளைநிலத்தில் நீயே உழைத்து உணவை விளைத்து உண்பாயாக என்று குறிப்பிடுகிறது.
முடிவுரை
இந்தியாவில் இருக்கும் தமிழகத்தில் இன்றளவும் உழவுத் தொழில் சிறந்ததாக காணப்படுகிறது.இத்தகைய உழவுத் தொழிலின் மூலம் விளையும் பொருட்களை இன்றளவும் உட்கொண்டு மக்கள் உயிர் வாழ்கின்றனர்.இத்தகைய உழவின் சிறப்பை அற இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளன என்பதை இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது. உழவு என்பதன் பொருள் பற்றியும், உழவு தொழிலே சிறந்தது என்றும், உழவர்களே உலகத்திற்கு அச்சாணிப் போன்றவர் என்றும் உழவுத் தொழில் செய்பவர்கள் அக்காலத்தில் உரிமை உடையவர்களாக கருதப்பட்டனர் என்பதைப் பற்றியும் இத்தொழில் செய்வதற்கு முன் மண்ணைக் கிளர்ந்து காய விட வேண்டும் என்பதைப் பற்றியும்,எருவிடும் முறைப் பற்றியும்,இவ்வுழவுத் தொழில் செய்யும் உழவரின் இலக்கணம் பற்றியும்,மற்ற நூல்கள் தரும் விளக்கங்கள் பற்றியும் இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது.இதனை இக்காலப் படித்த இளைஞர்கள் உணர்ந்து அறிந்து நாட்டை முன்னேற்றம் அடையும் செய்யும் நோக்கில் இத்தொழில் சார்ந்த படிப்பையும் இத்தொழிலையும் செய்ய முன் வர வேண்டும் என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
துணை நூற்பட்டியல்
1. பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2000
2 இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3 இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4 பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு முதற்பதிப்பு -2014
5 அகராதிகள் செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி கௌரா தமிழ் அகராதி
@@@@@@@@
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings