in ,

வசூல் ராஜா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

       மளிகைக் கடைக்கு தர வேண்டிய பாக்கித் தொகையான இரண்டாயிரத்து நானூறு ரூபாயை எடுத்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டு அவசர அவசரமாய் வெளியேறினேன்.

       “என்னங்க காலங்காத்தாலேயே ரொம்ப வேகமாக் கெளம்பிட்டீங்க போலிருக்கு!..இன்னிக்கு ஆபீசு லீவுன்னு சொன்னிங்க?” என் மனைவி அபிராமி என் பின்னாடியே ஓடி வந்தாள்.

       “மளிகைக் கடை பாக்கி ஒரு இரண்டாயிரத்து நானூறு ரூபாய் ரொம்ப நாளாக் கெடக்கு….அதை செட்டில் பண்ணத்தான் போயிட்டிருக்கேன்”

       “அது சரி…..மாசக்கணக்குல அந்த அமெளண்ட் பாக்கி நிக்குது…. இன்னிக்கென்ன திடீர்ன்னு இவ்வளவு அவசரமா?”

       வாசல் வரை சென்றவன் திரும்பி வீட்டிற்குள் வந்தேன்.

       “அபி…நேத்து சேவிங் ப்ளேடு வாங்க அந்த கடை பக்கம் போயிருந்தேன் அங்க….ஒல்லியா….பரிதாபமா இருந்த ஒரு மனிதரை அந்த கடைக்காரர் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டிருந்ததை பார்த்தேன்….அப்பப்பா எனக்கே வியர்த்துப் போச்சு!”

       “யோவ்….நீயெல்லாம் சோத்துல உப்பு போட்டுத்தான் திங்கறியா?….இல்லையா?….மாசக்கணக்குல கடன் பாக்கி வெச்சுக்கிட்டு கேட்கும் போதெல்லாம் “இதா தந்துடறேன்….அதா தந்துடறேன்னு சொல்லிட்டேயிருக்கே….ஆனா தர மட்டும் மாட்டேங்குறே!…கடன் வாங்கும் போது இருக்கற ஒனத்தி திருப்பிக் குடுக்கறதிலேயும் இருக்கணும்!…நானென்ன கொள்ளை லாபம் வெச்சா சரக்குகளை விற்கறேன்?…ஏதோ….நம்ம ஜனங்களாச்சேன்னு….சொற்ப லாபத்துக்கு குடுக்கறேன்….அதையும் கடன்ல வாங்கிக்கிட்டு….இப்படி மாசக்கணக்குல இழுத்தடிச்சா….எனக்கு எங்கிருந்தைய்யா லாபம் நிக்கும்?”

 

       “என்னங்க நீங்க?…அவரு வேற யாரையோ தானே திட்டினாரு….அதுக்கு நீங்க ஏன் கவலைப்படறீங்க?”

       “பின்னே?…நானும் ஒரு இரண்டாயிரத்து நானூறு ரூபாயை மாசக்கணக்குல பாக்கி வெச்சிருக்கேனே!…அவரு அந்த வேறொரு ஆளைத் திட்டினதெல்லாம் என்னையே திட்டின மாதிரி இருந்திச்சு!”

       “ஓ….அதனால….அவரு உங்களையும்  அப்படித் திட்டுறதுக்கு முன்னாடி  நீங்களாகவே செட்டில் பண்ணிடறீங்க….அப்படித்தானே?”

       “அதேதான்” சொல்லி விட்டுப் பறந்தேன்.

       மளிகைக் கடைக்காரருக்கு பணத்தை செட்டில் பண்ணிய பிறகுதான் மனசே நிம்மதியானது. “அப்பாடா….ஒரு வழியா அவரோட திட்டுக்களிலிருந்து தப்பிச்சாச்சு!”

       ஒரு மாதத்திற்கு பிறகு… ஆபீஸ் செல்லும் வழியில் இந்த மாதத்திற்கான மளிகை லிஸ்டை கடைக்காரரிடம் கொடுத்து விட்டுச் செல்வதற்காக அந்தக் கடைக்குச் சென்றேன்.

       அந்தக் காலை நேரத்திலும் கடையில் நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தனர்.

       இன்றும் கடைக்காரர் தன் வசவுச் சாட்டையைச் சுழற்றிக் கொண்டுதானிருந்தார்.

       “உனக்கெல்லாம் அறிவுன்னு ஓண்ணை வெச்சுப் படைக்கவே மறந்துட்டான்யா அந்த ஆண்டவன்!…வக்கனையா வாங்கித் திங்க மட்டும்தான் தெரியுது..குடுக்கத் தெரியலை!…சும்மா வெள்ளையும்…சொள்ளையுமா ட்ரெஸ் பண்ணிட்டுப் போனா மட்டும் போதுமா?…மளிகைக் கடை மொள்ளையை ஆரு குடுப்பாங்க?…உங்கொப்பனா?…உங்க பாட்டனா?”

       இன்று அவர் வசவுக்கு மாட்டிய முகத்தைக் காணும் ஆவலில் திரும்பிப் பார்த்தேன்.  அதே ஒல்லி மனிதர்.

       “இவனா?…..அடப்பாவி இவன் இன்னுமா தன் பாக்கியக் குடுக்காம இருக்கான்?…அன்னிக்கு என் எதிர்ல திட்டு வாங்கும் போதே மாசக்கணக்குல பாக்கின்னு கடைக்காரர் சொல்லிச் சொல்லிக் கத்தினார்…இப்ப அதுக்கப்புறம் ஒரு மாசத்துக்கும் மேலாச்சு…இன்னுமா அப்படியே இருக்கு?…சொல்லப்போனா இவன் திட்டு வாங்குறதைப் பார்த்ததினால்தான் நானே என்னோட பாக்கிய செட்டில் பண்ணினேன்…”

       “பார்த்திட்டேயிரு….ஒரு நாளைக்கில்லாட்டி ஒரு நாள் உன்னோட பேண்ட்….சட்டையை கழட்டிட்டு விடறேனா இல்லையா பாரு!”

       மளிகைக் கடைக்காரரின் எந்த வார்த்தையும் அந்த ஒல்லி மனிதரை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பது அவரின் முக பாவத்திலேயே தெரிந்தது.

       அன்று மாலை நண்பரொருவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்க அவரைக் காண்பதற்காக சென்றிருந்தேன்.

       அங்கே அந்த ஒல்லி மனிதர் ஒரு வயதான பெண்மணியுடன் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் சினேகமாய்ப் புன்னகைக்க நான் அவரை நெருங்கிச் சென்றேன்.

       “ஏங்க… கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க!…அந்த மளிகைக் கடைக்காரர்தான் அவ்வளவு கேவலமாப் பேசறாரே..அந்தக் கடன் பாக்கியத்தான் தூக்கி எறிஞ்சிடலாமல்ல?”

       மெலிதாய் சிரித்தபடி அந்த பெண்மணியைப் பார்த்தார் ஒல்லி மனிதர்.

       எனக்கு எரிச்சலாயிருந்தது. “ஹலோ..அவர் உங்களைத் திட்டறதைப் பார்க்கற எனக்கே கேவலமாயிருக்கு…உங்களுக்கு கொஞ்சம் கூட சங்கடமாவேயில்லையா?”

       “ம்ஹூம்….கொஞ்சமும் இல்லை!”

       “என்ன?…இல்லையா?…ஏன் காது டமாரமா?”

       “ம்…..நல்லாக் கேட்கும்….ஆனாலும் சங்கடமாயிருக்காது…ஏன்னா..நான் அவன் கிட்டே கடன் வாங்கியிருந்தாத் தானே சங்கடப்படறதுக்கு!”

       நான் குழப்பமாய்ப் பார்க்க, “சார்….யாராச்சும் மாசக்கணக்குல பாக்கி வெச்சிருந்து குடுக்காம இழுத்தடிச்சிட்டேயிருந்தா…அவங்க கடைப்பக்கம் வரும் போது அந்த முதலாளி எனக்கு ஆளனுப்புவார்….நான் வந்து நிப்பேன்!…அப்ப அந்த முதலாளி என்னைத் திட்டுற மாதிரி அவங்களைத் திட்டுவார்!…நானும் பொறுமையாக் கேட்டுக்குவேன்!…அப்புறம் அவங்க போனதும் நான் வாங்குன திட்டுக்கு கூலியா கொஞ்சம் மளிகை சாமான் தருவார்!”

       லேசாய்ப் புரிய ஆரம்பிக்க தலையை மேலும் கீழுமாய் ஆட்டினேன்.

       “இதுவும் ஒரு வகை வசூல் தந்திரம்ங்க!…” சொல்லி விட்டு ஒல்லி மனிதர் அந்தப் பெண்மணியையும் அழைத்துக் கொண்டு நடக்க

       “உண்மைதான்!..இவன் வாங்கிய திட்டுக்கள்தானே என்னை மறுநாளே பணத்தை செட்டில் பண்ண வெச்சுது!…”

       விந்தையான உலகத்தின் விந்தையான மனிதர்களின் விந்தையான செயல்களை எண்ணியபடியே நானும் நடந்தேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இரகசிய உயில் (சிறுகதை) – மரு உடலியங்கியல் பாலா

    குறுந்தகவல் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை