in ,

ஏரி காத்த மாரியம்மா (சிறுகதை) – அர்ஜுனன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.

கொட்டித் தீர்த்த மழையில் ஓட்டு வீடுகளே ஒழுக  ஆரம்பிக்கையில், மாரியம்மாவின் ஓலைக் குடிசை ஒரு பொழுதுக்கு கூட தாங்குமா?

முதல் நாள் மழையின் போதே  உப்பள மேஸ்திரி முருகதாஸ், பக்கத்து தெருவில் இருந்து வந்து சொல்லிவிட்டு போனார்..

“மாரியம்மா.. இன்னும் ரெண்டு நாளைக்கு மழை கடுமையா இருக்குமாம்.. பேசாம எங்க வீட்டிற்கு வந்திடு..”

“வேண்டாம்..யா.. உங்களுக்கு எதுக்கு சிரமம்..? நான் பார்க்காத மழையா..? சமாளிக்க முடியலைன்னா வந்திடுறேன்..”

“கவனமா இரு தாயி..” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

மாரியம்மா தனிக்கட்டை. சிறிய வயதில் திருமணம். இளைய வயதில் விதவை. குழந்தை, குட்டி இல்லை.

அன்னாடம் பொழப்பு எப்படியோ ஓடுது.. ரேஷன் கடை அரிசி கைகுடுக்குது. மத்த செலவுக்கு உப்பளத்து‌க்‌ கூலி.

சனியன் பிடிச்ச மழை.. நின்னு தொலைக்க மாட்டேன்குது.. என மாரியம்மா புலம்பிக் கொண்டிருக்கும் போது லேசாக வெறிக்க ஆரம்பித்தது.

ஆனா இப்போ பிரச்னை வேற ரூபத்தில வந்தது. அவளோட குடிசை மண் சுவர் விழுந்து, எங்கிருந்தோ வந்த வெள்ளம் இவளை அடித்துக் கொண்டு போக ஆரம்பித்தது.

நிச்சயம் பக்கத்து ஊரு பெரிய கண்மாய் உடைஞ்சிருக்கணும்.. இல்லைனா இவ்வளவு தண்ணிக்கு வாய்ப்பு இல்ல..

இவ்வளவு தண்ணியும் அடுத்து விரகனூர் ஏரிக்குத் தான் போகும்.. அதுவாவது தாங்குமா..?

மாரியம்மாவுக்கு கொஞ்சம் நீச்சல் தெரியும் என்பதால், தண்ணீர் போகிற வழியிலே மிதந்து கொண்டு போனாள்.. எதிர்த்து போராட துணிவில்லை.. போகிற வழியில் எங்காவது காரைக் கட்டிடம் கிடைத்தால் ஒதுங்க வேண்டியது தான்..

ம்ஹூம்.. போகிற பாதை முழுதும் ஒதுங்க ஒரு துளி இடமில்லை. இன்னும், இன்னும் பண்ட பாத்திரங்களும், மரம், மட்டைகளும் அவளோடு மிதந்து வந்தன.

வந்தாச்சு.. வெள்ளத்தோடு ஏரி வரை வந்தாச்சு.. இங்கேயாவது மடையை திறந்து ஏரியை காப்பாத்தி இருப்பாங்களா.. என்று மாரியம்மாவின் சிந்தனை ஓட, அவளது இன்னொரு மனம் நம்ம உசிரே ஊசலாடிக்கிட்டு இருக்கு, இதுல ஏரியைப் பத்தி நமக்கென்ன கவலை என குறுக்கு சால் ஓட்டியது..

நல்ல மனம் மீண்டும் வந்து.. ச்சே.. நான் ஏன் இப்படி நினைக்கிறேன்.. ஏரி உடைஞ்சா அடுத்து சுத்து பத்து ஊரெல்லாம் அழிஞ்சுடுமே..என ஓலமிட்டது.

நல்லவேளை.. கிழக்குப்புறம் மடையை யாரோ திறந்து விட்டிருக்கிறார்கள்.. ஆனால்? .. இது என்ன?.. நம்மை அடித்து வந்த வெள்ளம் நம்மை வடக்குப் புறமாக தள்ளுகிறதே..? அந்த கரையில அரச மரம் பக்கத்தில ஒரு பெரிய பொந்து இருந்ததே..? இவ்வளவு பெரிய வெள்ளம் அங்கே போனால் அந்தப் பக்கம் கரை உடைய வாய்ப்பிருக்கிறதே..? எப்படியாவது ஏரியை காப்பாத்தனும்.. என நினைத்த மாரியம்மா அரச மரம் நோக்கி வேகமாக நீச்சல் அடித்தாள்.

நல்ல வேளை.. இன்னும் அந்த பொந்து உயரத்திற்கு தண்ணீர் வரவில்லை.. ஆனாலும் எந்நேரம் வரலாம்..

அரச மர வேரை வாகாக பிடித்துக்கொண்டு கரை ஒதுங்கினாள். தண்ணீர் வருமுன்னால் ஓட்டையை எப்படியாவது அடைக்க வேண்டும்.. எதை வைத்து அடைப்பது..? என்று யோசித்த மாரியம்மா உடனே ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் சேலை முந்தானையை உருவி,  அந்த ஓட்டையை அடைத்து, அது விலகி விடாமல் இருக்க தன் உடலையே அணைப்பாக வைத்துக் கொண்டு அரச மரத்தை இறுகப் பற்றிக் கொண்டு கரை மீது படுத்துக் கொண்டாள்.

தண்ணீர் அளவு மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.. இருட்டும் மெல்ல மெல்ல வரத் தொடங்கியதால் யாரும் இந்தப் பக்கமாக வரவில்லை..

காலையில் ஆட்கள் வந்து பார்த்த போது, மாரியம்மாவின் தலைக்கு மேல் தண்ணீர் அளவு உயர்ந்து, சேலையின்றி சடலமாக கிடந்தாள்.. அவள் உடலை அகற்றிய போது அவளது சேலை ஏரியை காப்பாற்ற பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிந்தது.

அன்றிலிருந்து அவள் இறந்த ஏரிக்கரையில், ஒரு நடுகல் வைத்து அவளை ஏரி காத்த மாரியம்மா என மக்கள் வணங்க ஆரம்பித்தனர்.

***

நட்ட கல்லும் பேசும்; ஓ(ம்)

நாதன், உள்ளிருக்கையில்..

***

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காமராஜர் (கவிதை) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 3) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை