எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அப்போ , உங்க பையன் செஞ்சது தப்பில்லைன்னு சொல்றீங்க! அப்படித்தானே!” பள்ளியின் முதல்வர் சியாமளா கேட்டார்.
“ஆமாம்! ஏதோ விளையாட்டு புத்தி, வயசுக் கோளாறு .தெரியாம செஞ்சுட்டான். விட்டுடுங்க”. மாயாவின் அழுத்தமான அந்த பதிலில் அங்கிருந்த எல்லோருமே அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளியின் அந்தப் பெரிய ஹாலில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளும் அவர்களுடைய பெற்றோரும் கூடியிருந்தனர்.
மாணவிகளின் முகத்தில் ஒரு பதட்டமும் மாணவர்கள் முகத்தில் எங்களை என்ன செய்ய முடியும் என்ற நிமிர்வும் தெரிந்தது.
சுற்றியிருந்த அனைவரையும் பார்வையிட்ட சியாமளா, “இது இரண்டாவது தடவை. போனதரம் முதல்முறை உங்களிடம் சொன்னதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கண்டிப்புடன் கேட்டார்.
“அதுதான் சொன்னேனே! விட்டுடுங்கன்னு.”
“அப்போ நீங்க ஒண்ணுமே கண்டிக்கலை. எதுவும் பண்ணலை. விளையாட்டு புத்தின்னா கூடப் படிக்கிற பொண்ணுங்ககிட்ட தப்பா நடக்கத் தோணுமா! கண்டபடி மிரட்டவும் பயமுறுத்தவும் தோணுமா?”
குரலை உயர்த்தின சியாமளா இத்தனை பிரச்சனைக்கும் காரணமான அந்தப் பையன் ரஞ்சனைக் கூப்பிட்டார்.
“உனக்கு டிஸி கொடுக்கப் போறேன். வாங்கிகிட்டு வெளியே போ”.
“என்ன மேடம் ! ஒரு பையனோட வாழ்க்கையோட விளையாடறீங்க!” அவள் கோபமாக எதிர்க்க மற்ற மாணவர்களும் தலையாட்டினர்.
“அப்ப, உங்க ஒரு பையனால இந்தப் பொண்ணுங்க வாழ்க்கை எதிர்காலம் எல்லாம் பாழாகலாமா!”
“நீங்க கண்டிச்சு விட்டுடுங்க! இதை ஒரு பெரிய விஷயமாக கொண்டு வராதீங்க!”
தலைமை ஆசிரியைக்கே பாடம் எடுத்த மாயா மறந்தும் தன் மகன் செய்தது தப்பு என்று ஒத்துக் கொள்ளவில்லை. அவனுடைய சிநேகிதர்களின் ஆதரவு இருப்பதால் இந்த சியாமளாவால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் இருந்தாள்.
“சரி ! அப்ப ஒண்ணு செய்யுங்க ! எல்லா மாணவிகளும் நாளையிலிருந்து கொஞ்சம் மிளகாய்ப் பொடியும், சின்னப் பேனாக் கத்தியும் வச்சுக்குங்க. யாராவது வம்பு பண்ணினால் கண்ணிலே கூட போடுங்க, இல்லை கத்தியால கோடு போட்டு விடுங்க. பயப்படாதீங்க ! அப்படி எதுவும் பிரச்சினை வந்தால் நான் உங்க பக்கம் தான் பேசுவேன்”.
“என்ன மேடம் இது, வன்முறையை தூண்டி விடறீங்க! இந்தப் பொண்ணுங்க என்ன செய்யுமோ என்று பசங்க பயத்தோட இருக்க முடியுமா? “
“அப்படின்னா பொண்ணுங்க மட்டும் பயப்பட்டா போதும்ங்கிறீங்களா” கிண்டலாக கேட்டார் சியாமளா.
“ரஞ்சன், இங்கே வாடா,” என்று அழைத்தவர் பளீரென்று ஒரு அறை விட்டார்.
“என்னடா , ஒரு வார்த்தை கூட சொல்லாம நிற்கிறே! ஏன் அப்படி நடந்தே! உன் கூட படிக்கிற பசங்ககிட்டயே உன் வக்கிர புத்தியை காட்டியிருக்கே! உன் ஃப்ரெண்ட்ஸ் சப்போர்ட் இருக்குங்கற தைரியத்தில தானே நீ ஆட்டம் போடுற! படிச்சு வெளியே போய் வேலை கிடைச்சு வாழ்க்கையில் செட்டில் ஆகறதுக்குள்ளே என்ன பாடு படணும்னு தெரியுமா! இதுதான் உங்களோட பொன்னான நேரம். கவலை பொறுப்பு எதுவும் இல்லாமல் படிப்பு ஒன்றே தவம் என்று இருக்க வேண்டியவர்கள். நேரத்தை எல்லாம் வீணாக்கிக்கிட்டு இருக்கே!”
அவருடைய கோபமோ வருத்தமோ அவனை எதுவும் செய்யவில்லை.
“நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள் அது என்னை பாதிக்காது” என்பது மாதிரி நின்றான் அவன்.
“ஆம்பிளை என்கிற திமிர். ஏண்டா ! எந்த ஃபாக்டரியிலே உருவாகி வந்தது நீ திமிரா நினைக்கிற உடம்பு . ஒரு பொண்ணு வயத்திலே பிறந்து அந்த அம்மா பாலூட்டி சீராட்டி வளர்த்த உடம்பு தானே. பனியிலும் குளிரிலும் பாடுபட்டு நாட்டைக் காப்பாத்தறாங்க பாரு அவங்க பெருமைப் பட்டுக்கலாம் ஆண் என்று. பசியிலும் வறுமையிலும் கஷ்டப்படறவங்களை பார்த்து இரக்கப்பட்டு உதவி செய்றாங்களே அவங்க பெருமைப் படலாம். நோயிலும் வேதனையிலும் திணறுபவர்களைக் காப்பாற்ற தங்களோட உழைப்பையும் நேரத்தையும் கொடுக்கிறார்களே அவங்க பெருமைப்படலாம். உனக்கு என்ன பெருமை இருக்கு?
உன்னை ஒரு பொறுக்கி, போக்கிரி அப்படின்னு தான் சமுதாயம் சொல்லும். போலீஸ் ஸ்டேஷனில் போய் பார்த்தால் நிறைய தலைவர்கள் படத்தை மாட்டியிருப்பாங்க. இன்னொரு பக்கத்தில் இவர்களிடம் ஜாக்கிரதையா இருங்கள் என்ற அறிவிப்புடன் சிலரோட படங்கள் இருக்கும். உச்சத்துக்கு போக நிறைய உழைக்கணும் இரண்டாவது தரத்துக்கு போக ஒண்ணுமே செய்ய வேண்டாம். உன்னை மாதிரி இருந்தால் போதும்”.
படபடவென்று அவர் பொரிய அங்கிருந்த அத்தனை பேரின் நடுவில் மாயா ஒன்றும் பேச முடியாமல் நின்றாள். மற்ற பெற்றவர்களின் பார்வை அவளை கூறு போட்டது. அவமானத்தில் முகம் சுருங்கி நின்றாள் அவள். அவளையும் விடவில்லை சியாமளா.
“ஏம்மா ! உன் பையன் செஞச தப்பை மறைக்கத் தான் பார்க்கிறியே தவிர கொஞ்சமாவது வருத்தப் படறியா? கல்வியில்லாப் பெண் களர் நிலம் அங்கே புல் விளைவதுண்டு நல்ல புதல்வர் விளைவதில்லைஅப்படின்னு பாரதிதாசன் சொன்னார். இன்னிக்கு பெண் கல்வி விகிதம், வேலை பார்ப்பது எல்லாமே எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டது. எதிர்பார்த்த மாற்றம் தான் வரவில்லை. ஏன் அப்படின்னா…”
ஒரு இடைவெளி விட்டு அவர் சுற்றிலும் அமர்ந்திருந்த எல்லோரையும் பார்த்தார். மாணவ மாணவிகள் , பெற்றோர் , மற்ற ஆசிரியர்கள் எல்லோருமே அவரையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
“ஏன்னா ஒரு விவசாயி தன்னோட நிலத்திலே பயிர் விளைஞ்சு வர வரைக்கும் கண்ணும் கருத்துமா பார்த்துப்பான். களை எடுக்கிற நேரம் உரம் வைக்கிற நேரம் தண்ணி பாய்ச்சுற நேரம் எல்லாம் சரியா கவனிச்சுப்பான். ஆனா நீங்க களையை எடுக்கவே நினைக்கிற தில்லை. பயிரை விட களைதான் பெரிசா வளருது.
ஒரு பொண்ணு நடுராத்திரியிலே கூட நகைகள் அணிந்து கொண்டு வெளியே வரமுடியும் என்பது தான் உண்மையான சுதந்திரம்னு சொன்னாங்க. ஆனா இன்னிக்கு பட்டப் பகலிலே கூட நாலுபேர் மத்தியில் கூட சின்னப் பிள்ளைகளை கூட அசிங்கப்படுத்துவது நடந்து கொண்டுதானிருக்கிறது. அந்த காலத்திலே தும்பியை நூலில் கட்டி பறக்க விடாமல் விளையாடுவது சில பேரது பழக்கம். இன்னிக்கு அதை விட மோசமா நடந்துக்கறாங்க
ஈன்ற பொழுதில் பெரிது வைக்கும் தன் மகனைசான்றோன் எனக் கேட்ட தாய் அப்படின்னு திருக்குறள் சொல்லுது. ஆனா இன்னிக்கு மகன் வல்லவனாக இருக்கணும்னு மட்டும் நினைக்கிறாங்க.நல்லவனா இருக்கணும்னு யோசிக்கிறதில்லை” அவருடைய உணர்வுபூர்வமான பேச்சில் பெற்றவர்கள் எல்லோருமே தலை கவிழ்ந்து நின்றார்கள். அதிலிருந்த உண்மை அவர்களை சுட்டது.
“இதோ பாருங்க , என் பசங்க படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதாது. ஒழுக்கம் , மனிதாபிமானம் , பரிவு ,பாசம் எல்லாம் நிறைந்திருக்க வேண்டும்.எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எங்கே எனக்கு உறுதி மொழி கொடுங்கள்!” என்று சியாமளா கைகளை நீட்ட ரஞ்சன் உட்பட அத்தனை மாணவ மாணவியரும் அவரை நோக்கி நகர்ந்தனர்.
பார்த்துக் கொண்டிருந்த பெற்றவர்களும் மனதுக்குள் தங்கள் தவறுகளை நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டார்கள். தண்டிக்கிறதை விட கண்டித்துத் திருத்துவது தான் முக்கியம் என்ற பாடத்தை அன்று அவர்களும் கற்றுக் கொண்டார்கள். நன்றாக பட்டை தீட்டப் பட்ட வைரங்களாக மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளிவந்தால் அது எல்லோருக்கும் பெருமை தானே!
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings