2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
கிழக்கு வெளுப்பதற்கு முன்னே எழுந்து வேப்பங்குச்சியில் பல்லைத் தேய்த்துக் கொண்டு தோட்டத்துக்குப் போகும் ‘சின்னசாமி’… இன்னிக்கு காலையிலேயே வெள்ளையும் சொள்ளையும்… தோளுல பச்சைத் துண்டோடு இருப்பதைப் பார்த்த ‘வெள்ளையம்மா’… “என்னங்க…காலையிலேயே கிளம்பி நிக்கிறீங்க ….?இன்னும் கூழுக்கு கூட உலை வைக்கில…?!”
“வெள்ளையம்மா ….சொட்டு நீர் பாசனத்துக்கு மானியம் தராங்கலாம் …அதான் வேளாண்மை ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வரலாமுன்னு…?”
“அப்படியே …இந்த மொந்தன் வாழை மூணு குலை முத்திக் கெடக்கு….மண்டியில கொடுத்துட்டு…வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வாங்க”
“அட போமா …மண்டியில ஒரு காய் 3 ரூபாய்க்கு கேக்குறாங்க …கடையில 10 முதல் 15 ரூபாய்க்கு விக்கிறாங்க …இதை எடுத்து போகுற பெட்ரோல் செலவுக்குகூடக் கட்டுப்படி ஆகாது …?”
“சாப்பிடற ரகமா இருந்தா பரவாயில்ல ….பஜ்ஜிக்கு தான் இது உதவும் …எல்லாம் ஒரே நேரத்துல பழுத்துட்டா என்ன பண்றது ..?”
“முடிஞ்சா அளவுக்கு இதுவும் சாப்பிடலாம் …இல்லேன்னா நம்ம கறுப்பிச் சிகப்பிக் கருப்பி, சிகப்பி (மாடுகள்) கொடுப்போம் அதுங்களாவது சாப்பிடட்டும்”
“எப்படியோ செய்யுங்க”
“ம்..வெள்ளயம்மா …வெயில் ஏறத்துக்கு முன்னால கருப்பி, சிகப்பி இரண்டுக்கும் தண்ணி காட்டி …புங்க மரத்துல கட்டி வச்சிடு …நீளமா கட்டிடாத ….பக்கத்துல வளர்ந்துட்டு வர ‘அகத்தி செடியை’ தின்னுடும் …நான் சாயுங்காலம் மேய்கிறதுக்குள்ள வந்துடுறேன்”
வேளாண்மை அலுவலகம்.
“தம்பி…இந்த சொட்டு நீர் மானியம் கொடுக்கிற அதிகாரி எங்க இருக்கார்?”
“அதோ மூணாவது டேபிள் உக்காந்து இருக்காரே அவருதான் போய்ப் பாருங்க”
அதிகாரியிடம், “சார் …சொட்டு நீர் மானியம் விண்ணப்பம் கொடுக்கணும்…”
“கொடுக்கலாம் ஐயா ….பட்டா,சிட்டா,அடங்கல் எல்லாம் இருக்கா …?”
“எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கேன்…”
“ஆதார் கார்டு …ரேஷன் கார்டு …மூணு போட்டோ வேணும்…”
“எல்லாம் இருக்கு”
“சிறு குறு விவசாயி சான்றிதழ் இருக்கா…?”
“அது இல்லையே!”
“அதுதான் மானியம் பெற முக்கியம் ஐயா …நீங்க ஒண்ணு பண்ணுங்க ….எதுத்தாப்புல இருக்கிற அரசு இ-சேவை மையத்துல சிறு குறு விவசாயி சான்றிதழுக்கு விண்ணப்பிச்சு…அதை எடுத்துட்டு வாங்க …அப்புறம் பார்க்கலாம்”
அரசு இ -சேவை மையம்.
“தம்பி …சிறு குறு விவசாயி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கணும் …?”
“உக்காருங்க ஐயா …ஆதார் கார்டு,ரேஷன் கார்டு,மின்கட்டண ரசீது , போன் நெம்பர் எல்லாம் வேணும் ….”
“எல்லாம் இருக்கு தம்பி…இந்தாங்க”
“ஐயா … ராஜாகண்ணு யாரு ..?”
“எங்க அப்பா …தம்பி”
“மின் கட்டண ரசீதில் அவர் பெயர் இருக்கு…பட்டா,சிட்டா உங்க பேர்ல இருக்கு …எல்லாம் ஒரே பேர்ல இருக்கணும் …நீங்க ஒண்ணு பண்ணுங்க …ஈபி ஆபீஸ் போய்ப் பேர் மாத்திட்டு அப்புறமா வாங்க ..அப்பதான் விண்ணப்பிக்க முடியும்.”
மின்வாரிய அலுவலகம்
“ஐயா உங்க அப்பா பேர்ல வாங்குன இலவச மின் இணைப்பு…இப்போ நிலம் எல்லாம் உங்க பேர்ல இருக்கு…மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யாம பயன்படுத்துறது சட்டப்படி குற்றம் …இருந்தாலும் வாரிசு சான்றிதழ் கொண்டு வந்தீங்கன்னா மாற்றிடலாம்”
“அது எங்க வாங்கணும்…?!”
“உங்க ஊர் கிராம நிர்வாக அதிகாரி (VAO ) இருப்பர் அவரைப் போய்ப் பாருங்க”
“அடப்போங்கப்பா …..இந்த பருவநிலை மாற்றம் வராம ஒழுங்கா மழை பேஞ்சியிருந்த நான் ஏன் சொட்டு நீருக்கு அலைய வேண்டியதா இருக்கும்” …என்று புலம்பிக் கொண்டே VAO வைபார்க்க கிளம்பினர்.
கிராம நிர்வாக அலுவலகம்
“வாங்க சின்னசாமி ஐயா …என்ன இந்தப்பக்கம்…?”
“தம்பி …எங்க அப்பா இறந்த போனதால …இறப்பு சான்றிதழும் வாரிசு சான்றிதழும் வேணும்”
“அதுக்கு நீங்க ஒண்ணு செய்யணுமே…சில கவனிப்புகள் இருக்கு …அது உங்களுக்கே தெரியும்… வாரிசு சான்றிதழ் இறப்புச் சான்றிதழ் நான் கொடுத்தாலும் …நீங்க எடுத்துட்டுப் போற அலுவகத்தில் இருந்து கூப்பிடுவாங்க …ஒவ்வொரு சான்றிதழுக்கு நாங்க கவனிக்கணும்…”
“ஓ…புரியுது தம்பி…”
“எனக்கு எதுவும் நீங்க செய்ய வேணாம்…அதிகாரிங்க கேப்பாங்க …அப்புறம் …உங்க கூடப் பொறந்தவங்க அண்ணன், தம்பி,அக்கா ,தங்கை இப்படி யாரவது இருந்தா ….அவுங்க எல்லோர்கிட்டையும் எழுதி வாங்கிட்டு வந்துடுங்க …அப்புறம் பின்னாடி நானும் வாரிசுன்னு கோர்ட் கேஸ்னு போகப் போறாங்க …! நிலத்தை எல்லாம் சரியாபாகப் பிரிவினை செஞ்சியிருக்கா என்று ஒருமுறை பத்திர பதிவு ஆபீஸ்க்குப் போய்ப் பார்த்துட்டு வந்துடுங்க.”
“சரி நான் எல்லாம் முடிச்சிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு தளர்ந்து நடந்தார்.”
சரவணன் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துக்கடை
கடை உரிமையாளர் சரவணன், “என்ன மாமா ….இப்படி களைச்சிப் போய் வரீங்க?”
“அட போ மாப்பிள …சொட்டு நீர் குழாய் அமைக்க மானியம் அரசு தராங்கன்னு சொன்னாங்க …அதான் ஒரு விண்ணப்பம் கொடுக்கலாம்ன்னு போனா ….அது இல்ல இது இல்ல ..அங்கப் போங்க ..இங்கப் போங்க…அத மாத்தணும் இத மாத்தணும் …அப்படின்னு அலைக்கழிக்க வச்சிட்டாங்க…”
“அரசாங்க என்னவோ விவசாயதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா சொல்றாங்க …ஆனா நடைமுறையில விடியலைத் தேடும் விவசாயி வாழ்வுதான் ஒவ்வொரு விவசாயிக்கும்.”
“உண்மைதான் மாப்பிள…என்னிக்கு விடியுமோ?…சரி ஒரு பாக்கெட் எலி மருந்து கொடுய்யா”
“எலி மருந்து இல்லியே மாமா! எதுக்கு மாமா எலி மருந்து?!”
“வீட்டில ஒரே எலி தொல்லையா இருக்கு…சரி மாப்பிள வரேன்”
சின்னசாமி கிளம்பியதும், வெள்ளையம்மாவை அழைத்தார் சரவணன்.
“அத்த நான் உரக்கடை சரவணன் பேசுறேன்…”
“சொல்லு கண்ணு”
“நம்ம வூட்டுல எலி தொல்லை இருக்கு ..?!”
“இல்லையே கண்ணு… ஏன் கேக்குற?”
“இல்ல …மாமா எலி மருந்து கேட்டாரு …இல்லேன்னு சொல்லிட்டேன் …அவரு மொகமும் சரியில்ல மனசும் சரியில்ல …பாத்ததுங்க.”
“சரி கண்ணு நான் பாத்துக்கிறேன்”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings