in ,

வேதாளம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நீ ரொம்பப் பேசறே…’ என்று கத்தினான் செல்வன். 

‘நான் அப்படித்தான் பேசுவேன் ‘ என்று பதிலுக்குக் கத்தினாள் சுமதி. 

‘அறைஞ்சேனா பார்… ‘ என்றபடி கையை ஓங்கிக் கொண்டு ஓடிவந்தான் அவன்.

‘ஏன், அதுவரை என் கை பூப்பறிச்சுக்கிட்டு இருக்குமா… ’ என்று முறைத்தபடி எகிறினாள் அவள். சட்டென கையை பின்வாங்கிக் கொண்டவன் மவுனமாய் நகர்ந்துவிட்டான் அவன்.

செல்வன் வேலைக்குப் போகிறான். மாத சம்பளம் முப்பதினாயிரம். மாத செலவுக்கு பத்தாயிரம் அவளிடம் கொடுத்து விடுவான். அந்த பத்தாயிரத்திலேயே அவள் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இருபதாம் தேதி இருபத்தைந்தாம் தேதிகளில் வந்து பணம் கேட்டு நிற்பாள்.

வருகிற சம்பளத்தில் வாடகை பெட்ரோல் பள்ளிக்கூட செலவு, லோன் தவணை போன்ற வழக்கமான செலவுகள் எல்லாம் போக  மிஞ்சுவது சொற்பமே. அதிலும் ஒவ்வொரு தடவை ஐயாயிரம் கொடுங்க, ஆறாயிரம் கொடுங்க என்று அதிகப்படி பணம் கேட்டு சுமதி வந்து நிற்கும் போது தான் மண்டைக்குள் சுர்ரென்று ஏறும் அவனுக்கு.

xxxxxxxxxxxxx

கொஞ்ச நேரம் முன்பு…

‘செலவுக்கு பணம் வேணும், அஞ்சாயிரம் கொடுங்க ‘ என்று சொல்லிவிட்டு துணிகளை காயப்போட மாடிக்குப் போனாள். அவள் போனதும், மேஜை மேல் இருந்த மொபைல் ‘களுக்‘ என்றது. மெல்ல எட்டிப் பார்த்தான். அது சுமதியின் போன். அவளது அம்மாவிடமிருந்து வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது. அதை அழுத்தினான்.

‘சுமி… பணம் எடுக்கப் போனேன். பின்னை தப்பா போட்டுட்டேன் போல, பணம் வரலை… பின் நம்பர் என்ன சொன்னே… ‘ 

இவனுக்கு அதிர்ச்சி. சுமதி எதற்கு இவர்களுக்கு பின் நம்பர் சொல்லவேண்டும். அப்படியென்றால் இவளது கார்டு அவர்களிடம் இருக்கிறதா… அவர்களிடம் எப்படி போனது. அதேநேரம் மாடிப்படிகளில் சுமதி இறங்கிவருவது தெரிந்தது. நல்லவேளை வாய்ஸ் மெசேஜ் ஓடி முடிந்திருந்தது. ஒன்றும் அறியாதவன் போல மெல்ல நகர்ந்துவிட்டான்.

அவனையும் போனையும் மாறி மாறிப் பார்த்தபடி இறங்கிவந்தவள் முறைத்தபடி, ‘என் போனை எடுத்தீங்களா… ‘ என்றாள்.  

‘நான் எதுக்கு உன் போனை எடுக்கணும்… எனக்கு வேற வேலை இல்லை பாரு… ?‘ என்றான்.   போனை எடுத்துக்கொண்டு முனகியபடி பின்கட்டுக்குப் போய்விட்டாள் அவள்.

செல்வனுக்கு மண்டைக்குள் குடைந்தது. தன்னுடைய ஏ.டி.எம்.கார்டை எதற்காக தன் அம்மாவிடம் கொடுத்திருக்கிறாள் இவள். அவர்களுக்கு பணச்செலவு என்றால் அவர்களது மகனிடம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே. மகன்தான் சம்பாதிக்கிறானே. அப்புறமும் மருமகனின் பணத்தில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்.

மண்டைக் காயந்துபோய் உட்கார்ந்திருந்தான். ஒவ்வொரு தடவையும் பாதியிலேயே பணம் தீர்ந்துவிட்டது என்று அவள் கேட்டதற்கு காரணம் புரிந்தது.

கொஞ்ச நேரத்தில் ரூமிற்குள் திரும்பி வந்தாள். இவன், ‘சூடா ஒரு டீ கொடேன்… தலைவலிக்குது… ‘ என்றான்.  

‘உங்களுக்கு டீ போடத் தெரியாதா.  போய் போட்டுக்கவேண்டியதுதானே… ’ என்றபடி உள்ளே போய்விட்டாள் அவள்.

ஏற்கனவே கடுப்பில் இருந்த அவன்.  ‘அப்புறம் உனக்கு வீட்டுல என்னத்தான் வேலை ‘ என்றான்.

பதில் வரவிலை. ‘பைக்குக்கு பெட்ரோல் போடனும். என் கார்டு வேலை பண்ணலை உன் கார்டை குடு… ‘ என்றான். போட்டு வாங்கலாமே என்று நினைத்துதான் அப்படி கேட்டான்.

கொஞ்சம் தடுமாறி,  ‘உங்க ஏ.டி.எம். கார்டு வேலை பண்ணலேனா உங்க கிரிடிட் கார்டுல போடுங்களேன்… என் கார்டை எதுக்கு கேட்கறீங்க…  பணம் கேட்டேனே என்னாச்சு… ‘ என்றாள்.

‘என்கிட்டே இருந்தா பெட்ரோலுக்கு ஏன்டி உன்கிட்ட கேட்கறேன்… ‘ என்றான். அதே நேரம், தூங்கியெழுந்து கண்களைக் கசக்கிக்கொண்டே வந்த  சுஜி, ‘பாட்டி உன் கார்டை இன்னும் திருப்பித் தரலியாமா‘ என்றாள்.  

அதிர்ந்து போன சுமதி. அவசரமாய் அவளது வாயைப்பொத்தி புருஷனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே, ‘தூக்கக்கலக்கத்துல ஏதாவது உளறாதேடி எருமை… ‘ என்று மகளை அதட்டிக்கொனே இழுத்துக்கொண்டு போனாள்.

இப்போது தைரியத்துடன், ‘உன் கார்டு உங்க அம்மாகிட்டே எதுக்கு போச்சு…’ என்றான்.  

‘சிமிக்கு காலேஜ் பீஸ் கட்டனும்னாங்க… போனதடவை போயிருந்தப்பவே கொடுத்தேன். இப்போ அது ரொம்ப அவசியமா… நான் பணம் கேட்டேனே என்ன ஆச்சு… ‘ என்றாள் விடாப்பிடியாக.

அவன் பேசாமல், மகளது முகத்தை துடைத்துவிட்டு தூக்கிக் கொண்டு, ‘நாம பங்க்ல போய் பெட்ரோல் போட்டுக்கிட்டு வரலாமா‘ என்றபடியே அவளை முன்புறம் உட்காரவைத்துக் கொண்டு போய்விட்டான்.

அவன் திரும்பி வந்தவுடன் டென்ஷனில் இருந்தவள், ‘என்கிட்டே ஏ.டி.எம்.கார்டு கேட்டீங்க.. இப்போ எப்படி பெட்ரோல் போட்டீங்க. அப்போ காசு வெச்சுக்கிட்டே என்கிட்டே டிராமா போடறீங்களா?’ என்றாள். பெட்ரோல் பில்லைக் காட்டினான். நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருந்தான்.

‘இருநூறு ரூபா இருந்தது, நூறு ரூபாய்க்கு போட்டேன்… டி கேட்டான், நீ போட்டு தரலை. டீ பத்து ரூபா ஆச்சு. சுஜிக்கு ஒரு ஐஸ்க்ரீம். மிச்சம் அறுபது  ரூபா… போதுமா… இப்போ நீ ஐயாயிரம் இல்ல… ஐநூறு கேட்டாக்கூட என்கிட்டே காசு இல்லை…’  என்றபடி பாக்கட்டிலிருந்த மீதப் பணத்தை எடுத்துக் காட்டினான்.

மறுபடியும் பேண்ட் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான். ‘நான் பணம் கேட்டேனே… ‘ என்றாள்.

‘இதோ பார்… உனக்கு மாசம் பத்தாயிரம் கொடுக்கறேன், அதுக்குள்ளே செலவு பண்ண உனக்கு திறமையில்லேனா நான் என்ன பண்ண. பணம் என்ன மரத்துலேயா காய்க்குது… இனிமே சம்பளம் வந்தாதான் உண்டு… ’ என்று அழுத்திச் சொன்னபடி நகர்ந்தான்.

‘பணம் இல்லைனா எப்படி… ‘  என்றாள்.

‘நீ வீட்டு செலவுக்கு என்கிட்டே பணம் கேட்கறமாதிரி தெரியலை. வம்பிழுக்கறதுக்காகவே கேட்கறமாதிரி இருக்கு. சுஜி இருக்காளேன்னு பாக்கறேன்… இல்லே நடக்கறதே வேற…’ என்று முறைத்தான்.

‘செலவுக்கு பணம் குடுக்கலைனா உங்களுக்கு பெண்டாட்டி எதுக்கு…’ என்றபடி கையை கையை ஆட்டி பேசினாள்.

அப்போதுதான்,  ‘நீ ரொம்பப் பேசறே… ’ என்று கோபமாய் கத்தினான். அவன் ஒன்று சொல்ல, அவள் ஒன்று சொல்ல  சண்டை முற்றியது.

‘ச்சே.. உன்கிட்டேஎல்லாம் மனுஷன் பேசுவானா‘ என்று கத்தி கொண்டே பைக்கில் ஏறி போயே விட்டான்.

xxxxxx

நெடுநேரம் கழித்து வீடு திரும்பினான். வீடு பூட்டியிருந்தது. தன்னிடமிருக்கும் சாவியைப் போட்டு வீட்டைத் திறந்தான். எங்கே போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டே மொபைலில் அவளது நம்பரை போட்டான்.

ஸ்விச்டு ஆஃப் என்றது. கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கூப்பிட்டான்.  மகள் பேசினாள். குரலைத் தாழ்த்தி ‘ எங்கேமா இருக்கீங்க?‘ என்றான்.            

‘பாட்டி வீட்டுல‘ என்றாள். தஞ்சாவூர் போயிருக்கிறாள் என்று தெரிந்து போனது.

தொடர்ந்து  ‘அம்மா குளிக்கப் போயிருக்கா, உங்க போன் வந்தா அம்மாச்சி வீட்டுக்கு வந்துட்டோம்னு சொல்ல வேண்டாம்னா அம்மா…’ என்றாள்.  

‘சரி நீ என்கிட்டே சொன்னதை அம்மாகிட்டே சொல்லாதே.. போனை வச்சிடு ‘ என்று விட்டு போனை வைத்தான்.

மூன்றாவது நாள் இரவு திடீரென்று ஏழு மணி போல ஆட்டோவில் வந்து இறங்கினாள். ஓடிவந்து அப்பாவைக் கட்டிக் கொண்டாள் சுஜிதா. சுமதி ஒன்றும் பேசவில்லை.

எட்டரை மணிபோல, ‘சுஜி.. உங்கப்பாவை சாப்பிடக் கூப்பிடு‘ என்று குரல் கொடுத்தாள். உடனே உதட்டில் விரல் வைத்து ‘பேசாதே‘ என்று மகளுக்கு ஜாடைக் காட்டினான் இவன்.  

கொஞ்சநேரத்தில் ‘ ஏண்டி உன்கிட்டே என்ன சொன்னேன்‘ என்று அதட்டினாள் மகளை.

‘ஏன் நீயேன் கூப்பிடேன்… அப்பாவுக்கிட்டே பேசமாட்டியா…‘ என்றுவிட்டு ஓடிவிட்டாள். செல்வன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ஒன்பது மணி ஆனது… அருகில் வந்து, ’ தோசை போட்டு ஆறிட்டிருக்கு ‘ என்றாள்.

கர்வம் பார்த்துக் கொண்டிருந்தால் வயிறு காளியாக கிடக்கும் என்று நினைத்தபடி   எழுந்து போனான்.  

அருகில் மெல்ல வந்தவள் தாழ்வான குரலில், ‘நாளைக்கு சம்பளம் வந்திடுமில்ல‘ என்றாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மறுமணம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    வைசாக் விஜயம் (பகுதி 2) – சுஶ்ரீ