in ,

வட்டியும் முதலும் (குறுநாவல் – பகுதி 1) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ரங்கா! ரங்கா!” என வெளியிலிருந்து கூப்பிட்டுக் கொண்டே பார்த்தா பட்டு வேட்டி சரசரக்க வீட்டினுள் வந்தான்.

எதிர்ப்பட்ட அம்மா ஸ்ரீதேவியிடம் “அம்மா! ரங்கா எங்கேம்மா? எல்லாம் எடுத்து வெச்சாச்சா? நாழியாய்டுத்து பார்”

“கொஞ்சம் பொறுமையா இரு பார்த்தா! அப்பா சாளகிரமத்துக்கு திருவாராதனம் பண்ணிட்டுருக்கார். ரங்கா அதுக்கு பின்கட்டு குமுட்டில திருக்கண்ணமுது பண்ணிட்டுருக்கா. இப்போ வந்துடுவாடா” என்றார்.

“நாழியாய்டுத்துமா அவ்ளோ தூரம் போக வேண்டாமா? அதுவும் காட்டுக்குள்ள” என்று படபடவென பொரிந்த பார்த்தாவை இடைமறித்த அம்மா, “எல்லாம் ஆச்சுடா. பத்தே நிமிஷத்துல கிளம்பிடலாம்” என்றார்.

அதற்குள் நெய், பரிமள திரவியம் மணக்க திருக்கண்ணமுதத்தை கொண்டு வந்தாள் ரங்கா என்கிற ரங்கநாயகி. பார்த்தாவின் காதல் மனைவி. உறவினர் வீட்டு திருமணத்தில் முதன் முதலில் பார்த்ததும் ரங்காவை பிடித்து விட்டது பார்த்தசாரதிக்கு.

பெங்களுரில் பணிபுரிந்து கொண்டிருந்த அவன் அப்போதுதான் விடுமுறைக்கு வந்திருந்தான்.  உறவினர் வீட்டு திருமணத்தில் தான் ரங்காவை பார்த்தான். திருமண மேடையில் ஏற்பாடுகளை கவனிப்பது, ஆச்சாரியருக்கு தேவைப்படும் பொருட்களை தருவது என பொறுப்பாக அமைதியான முகத்துடன் இருந்த ரங்காவை யாருக்கும் பிடிக்காமல் போகாது. அப்போதே தன் அம்மாவிடம் சொல்லி அடுத்த கட்டத்திற்கு பார்த்தா சென்றான்.

திருமணப் பேச்சை எடுத்தாலே முரண்டு பிடிப்பவனே ஒரு பெண்ணை பிடித்திருக்கிறதென்றால் எந்த தாய்  சும்மா இருப்பாள்? அதன் பின், பெரியவர்கள் பேச ஆரம்பித்து ஜாதகமும் பொருந்தி வந்தவுடன் அடுத்த நான்கு மாதங்களில் பார்த்தா – ரங்காவிற்கு திருமணம் முடிந்தது.

முதல் குழந்தை ஸ்ரீநிதிக்கு 3 வயதாகிறது. அடுத்து ஆண் குழந்தை அனிருத் 11 மாதங்கள். அவனுக்கு முடியிறக்கி காது குத்துவதற்குதான் எல்லாரும் குடும்பத்துடன் கிளம்புகின்றனர்.

வேண்டிய உணவுப் பொருட்கள், நீர் மற்றும்  பூஜை பொருட்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என மீண்டும் ஒரு முறை ஸ்ரீவத்ஸன் சரிபார்த்து விட்டு, சக்கரங்களுக்கு எலுமிச்சை வைத்து, தேங்காய் உடைத்து கடைசியாக வண்டி ஏறினான்.

பார்த்தாவின் தங்கை சௌஜன்யாவின் கணவன் தான் ஸ்ரீவத்ஸன். கண்ட்லாவில் இருவரும் ஒரு கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்க்கின்றனர். திருமணமாகி ஆறு மாதம் தான் ஆகிறது. ராமானுஜம்-ஸ்ரீ தேவி தம்பதிக்கு இரண்டாவது மகன் என்றே சொல்லலாம்.

பார்த்தா கொஞ்சம் வேகம் அவசர குடுக்கை. ஆனால் வயதில் இளையவனாகிலும் ஸ்ரீவத்ஸன் நிதானம் மற்றும் விவேகமானவன். எனவே தான் இந்த பயணத்துக்கான ஏற்பாட்டை செய்யுமாறு ராமானுஜம், ஸ்ரீவத்சனிடம் விட்டுள்ளார்.

டிரைவர்க்கு பக்கத்து சீட்டில் ஸ்ரீவத்சன் அமர்ந்து கொண்டான். வண்டி மொண்டிபாளையம் வெங்கட ரமணர் கோவில் நோக்கி புறப்பட்டது.

ஸ்ரீதேவி “மாப்பிள்ளை உங்களுக்கு வழி தெரியுமில்லை? காது குத்தும் ஆசாரிக்கு சொல்லியாச்சுல்ல” என்றார்.

“அதெல்லாம் சொல்லிட்டேன் அத்தை. அன்னூர் – சத்தி ரோட்ல போனா ஒன்றரை மணி நேரத்துல போய்டலாம்” என்றான்  ஸ்ரீவத்சன். மேலும்  டிரைவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான்.

அதிகாலை நேரமென்பதால் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பொழுது கொஞ்ச கொஞ்சமாக புலர்ந்து கொண்டு வந்தது. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் ரங்கா.

ராமானுஜம் ஸ்ரீதேவியிடம் “அதுக்குள்ள பாரேன் அஞ்சு வருஷம் ஓடிப்போனதே தெரில. கடைசியா நாம மொண்டிபாளையம் கோவிலுக்கு போய் ஒரு அஞ்சாறு வருஷம் இருக்குமா?” என்றார்.

“இருக்கும் இருக்கும். சீமா கல்யாணத்துக்கு போனது. சீமா குழந்தைக்கே இப்ப அஞ்சு வயசாறது” என்றதைக் கேட்டதும் ரங்காவிற்கு தூக்கி வாரி போட்டது.

சீமா என்ற பேரைக் கேட்டதும் ரங்காவின் கண்கள் தன்னையறியாமல் குளமானது.

யாரும் ஏன் அழற என்று கேட்டு விட போகிறார்களே என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் சிலையாக உட்கார்ந்திருந்தாள். கண்கள் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் அவளை அவளுடைய பால்யத்திற்கு அழைத்து சென்றது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முதல் காதல் (சிறுகதை) – சுஶ்ரீ

    ஒரு அமானுஷ்ய அனுபவம் (சிறுகதை) – ஹரிஹரன்