in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 5) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4

தூரத்தில் பவானியும், பின்னால் வெகு தொலைவில் சரவணன் வருவதையும், பண்ணையாரும் தினகரன் வாத்தியாரும் திண்ணையில் அமர்ந்தபடி பார்த்தார்கள்.

“அதோ நம்ம பாப்பாவுக்கு பின்னாடி வரானே அவன் தான் சரவணன்: என்றார் தினகரன் வாத்தியார் பண்ணையாரிடம்.

“அப்படியா பயல எங்கயோப் பார்த்த மாதிரி இருக்கே” என்றார் பண்ணையார் யோசனையுடன்.

“பூந்தோட்ட கிராமத்தில் இருக்கிற உங்க வயல்ல வேலை பாக்குற முனுசாமி மவன் தான் அவன். நான் வளர்த்த பையன்” என்று பெருமையாகச் சொன்னார் தினகரன் வாத்தியார்.

“பட்டாளத்துல இருக்குற உங்க மகன் நல்லா இருக்காங்களா?” என்று ஞாபகம் வந்தவராய் கேட்டார் பண்ணையார்.

“அவனுக்கு என்ன?… ரொம்ப நல்லா இருக்கான்….. அவன் என்கிட்ட இல்லாத குறையை இந்த பையன் தான்…. போக்கினான்.”

முதலில் பவானி வேகமாக வந்து தன் அப்பாவிடம், “அப்பா…. நான் இனிமே பஸ்லயே வரேன் நல்லா இருக்கு” என்றபடியே வாசல் படிகளில் குதித்து தாவியபடி உள்ளே ஓடினாள்.

தன் அம்மாவை பார்த்துவிட்டு மாடியில் இருக்கும் தன்னறைக்கு வேகமாக ஓடி தன் புத்தக பையை அங்கே எறிந்து விட்டு மாடிப்படிகளில் மெதுவாக இறங்கி வளைவு படியில் அமர்ந்து கொண்டு சரவணன் தன்னை பற்றி அப்பாவிடம் என்ன சொல்ல போகிறான் என்று படபடக்கும் நெஞ்சுடன் சிறிது பயத்துடன் காதை தீட்டிக் கொண்டு காத்திருந்தாள்.

சரவணன் பண்ணையாருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தான் கொண்டு வந்திருந்த விண்ணப்ப படிவத்தை நீட்டினான். உடனே தன் கையில் இருந்த பேனாவால் படிவத்தில் கையெழுத்திட்டார் பண்ணையார்.

தினகரன் வாத்தியார், “எவ்வளவுதான் பணம் இருந்தாலும் நல்ல மனசுனு ஒன்னு வேணும் அது உங்க கிட்ட நிறைய இருக்கு” என்று பாராட்டினார்.

“ஆராய்ச்சி பண்ணத்தான நிலத்துல இடம் கேக்குறாங்க. நான் படிச்ச காலத்துல இடம் கிடைக்காம கஷ்டப்பட்டேன்…..இப்ப என்கிட்ட இருக்கு….. படிக்கற பிள்ளைகளுக்கு உதவி பண்றேன்” என்றார் பணிவாக.

“சரி…அப்போ….நாங்க கிளம்பறோம்” என்று வணங்கி விட்டு தினகரன் வாத்தியார் சரவணனுடன் புறப்பட்டார்.

பவானி மாடிப்படிகளில் விறுவிறுவென்று கோபத்தோடு ஏறி தன் அறையை தாண்டி இருந்த மொட்டை மாடியில் நின்று கைகளை கட்டிக் கொண்டு  கீழே எதிரே வரும் சரவணனை முறைத்தாள்.

தன்னை யாரோ பார்ப்பதை உணர்ந்த சரவணன் மேலே நிமிர்ந்து பார்த்தான். பவானியின் கோப முகத்தைக் குறும்பாகப் பார்த்து கண்களால் சிரித்தான். தன்னை பயமுறுத்தி விட்டான் என்கிற கோபம் ஒரு புறம் இருந்தாலும், தன் மனதுடன் அவன் உரிமையாக இணைந்ததாக உணர்ந்தாள் பவானி.

அது ஓர் மழைக்காலத்தின் மாலைப் பொழுது. கல்லூரி நூலகத்தின் கீழே வாசலின் அருகே சவிதா பவானிக்காக காத்திருந்தாள்.

தன் கையில் இருந்த மொபைலில் பவானிக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். “மழை வர்ற மாதிரி இருக்கு சீக்கிரம் வா “

“ரெண்டு நிமிஷத்துல வரேன்”. என்று பதில் அனுப்பினாள் பவானி.

“ஒரு வாரமா தேடிட்டு இருந்த புக்கு இன்னிக்கு தான் கிடைச்சது” என்று சிரித்தபடியே சொல்லிக் கொண்டு வந்தாள் பவானி.

“கொஞ்சம் சீக்கிரமா வா….. மழை தூர ஆரம்பிச்சிருச்சு…. ஹாஸ்டல் ரூமுக்கு போறதுக்குள்ள பெரிசா வராம இருக்கணும்”. என்று பவானி கையைப் பிடித்து இழுத்தபடி ஓட்டமும் நடையுமாக சென்றாள் சவிதா.

“ஏய் வந்தா என்ன? ..மழைல நனையுறது உனக்கு பிடிக்காதா?… எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் பவானி கையை விடுவித்துக் கொண்டு

“ஆனா பீவருக்கும் நம்மள பிடிச்சுருமே…..வீட்ல இருந்தா அம்மா கவனிச்சுப்பாங்க… இங்க நாம தனியா கஷ்டப்படணும்:

“நான் நிறைய தடவை மழையில் நனைஞ்சி இருக்கேனே?…. எனக்கு உடம்புக்கு எதுவுமே வந்தது இல்லையே: என்றாள் பவானி.

“மழைனாலே பயம் எனக்கு… கோல்டு புடிச்சிடும்… எங்க வீட்ல மழை வந்தா ஜன்னல் கதவை எல்லாம் சாத்திடுவோம்” என்றாள் சவிதா ஓடிக்கொண்டே

இருவரும் ஹாஸ்டல் கேட்டுக்குள்ளே நுழைவதற்கும் பெரிய மழை வருவதற்கும் சரியாக இருந்தது. “நல்லவேளை…. தப்பிச்சோம் … என்றாள் சவிதா.

ரூமிற்குள் சென்றதும் கட்டிலில் அமர்ந்து கொண்டு தான் நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தாள் பவானி.

உடை மாற்றிக் கொண்டு பாத்ரூமில் இருந்து வெளிவந்த சவிதா, “முதல்ல எங்க அம்மாக்கு போன் போட்டு சூரணம் தயார் பண்ணி வைக்கச் சொல்லணும். அடுத்த வாரம் போய் வாங்கிட்டு வரணும். அப்பதான் இன்னும் மூணு மாசத்துக்கு மழை காலத்தை தாக்க பிடிக்க முடியும்” என்றபடியே போனை எடுத்தாள் சவிதா.

பவானி அதைக் கேட்டுவிட்டு தானும் போனை தேடினாள். “ஐய்யய்யோ….. நான் லைப்ரரிலேயே ஃபோனை வச்சுட்டேன் போல….. இரு நான் போய் எடுத்துட்டு வந்துடறேன்” என்று கிளம்பிய பவானியிடம்

“மழை பெய்யுது, இப்போ போகாதே” என்று தடுத்தாள் சவிதா.

ஜன்னல் வழியாக பார்த்த பவானி, “இல்ல… பெரிய மழை நின்னிடுச்சு… சின்னதா தூறல் தான் போடுது…. நான் போய் வேகமா எடுத்துட்டு வந்துடறேன்” என்று துப்பட்டாவை போட்டுக்கொண்டு கிளம்பினாள்.

“சரி,…குடையாவது எடுத்துட்டுப்போ” என்ற சவிதாவின் குரலை காதில் வாங்காமல் வேகமாகப் படி இறங்கினாள் பவானி.

ஹாஸ்டலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லூரியில் உள்ள நூலகத்தை நெருங்கும் போது வலது புறத்தில் இருந்த பயோகெமிஸ்ட்ரி லேபில் புரொஃபஸரிடம் பேசிக்கொண்டிருந்த சரவணனின் குரலொலி காற்றில் பரவி இவள் காதுகளில் நுழைந்தது. தன்னிச்சையாக அவள் இதழ்கள் புன்னகைத்தது.

சரவணன் உருவத்தை மனக் கண்கள் பார்க்க.. இதயம் தன் துடிப்பை அதிகரித்தது. திடீரென்று மனதில் பொங்கிய உற்சாகத்தால் துள்ளி குதித்தபடி மாடிப்படிகளில் விரைந்தாள். நூலகக் காப்பாளரிடம் தன் மொபைலை அங்கே விட்டு சென்றதாக கூறினாள்.

அவர் “கீழே ஸ்டாஃப் ரூமில் வைத்து விட்டேன். போய் எடுத்துக் கொள்” என்றார்.

அவள் ஒவ்வொரு படியாக இறங்கும் பொழுது…. சரவணனை பார்க்கும் ஆவல் படிப்படியாக அதிகரித்தது. கீழ இறங்கி…..லேப்… பூட்டி இருந்ததை பார்த்ததும் தாயைக் காணாத குழந்தை போல் மனம் ஏக்கமடைந்தது.

மொபைலை எடுத்துக்கொண்டு தாழ்வாரத்தில் நடந்து வந்தாள். இன்று மதியமே வகுப்பு முடிந்து விட்டதால் கல்லூரியே அமைதியாக இருந்தது. கல்லூரி வாசல் அருகே வரும் பொழுது “பவானி” என்று சரவணன் குரல் காதில் பாய்ந்து மனம் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

வேகமாக இவள் அருகில் வந்த சரவணன் தன்னுடைய மொபைலை இவள் கையில் திணித்துவிட்டு, “ஒரு நிமிஷம் வச்சுக்கோ, நான் இப்போ வந்துடறேன்” என்று வேகமாக ஓட்டமாக ஓடினான்.

அவன் விரல்கள் பட்ட அந்த நிமிடம் அவள் மனதில் ஒரு பெரிய அலை வந்து சில்லென்று மோதுவதை போல் உணர்ந்தாள். அவன் மொபைலை பற்றி இருந்த கரம் அவன் கைகளை பற்றிக் கொண்டிருப்பது போல ஆனந்தமாய் இருந்தது.

சரவணன் மொபைலில் கால் வந்தது. பார்த்தாள். ‘அம்மா’ என்று இருந்தது எடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் தயங்கி பின் உரிமையாக எடுத்தாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 2) – முகில் தினகரன்

    லோகன் (குறுநாவல் – பாகம் 2) – சின்னுசாமி சந்திரசேகரன்