in ,

உள்ளொன்று (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலிங்பெல் அடித்தது.  யார் வந்திருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே போய் கதவைத் திறந்த மல்லிகாவுக்கு  லேசாய் அதிர்சசி..  காரணம், அங்கே ராமநாதன் நின்று கொண்டிருந்தார்.

‘இவர் எதற்காக இப்போது இங்கே வந்திருக்கிறார்… ‘ என்று ஒருநொடி யோசித்தவள், சட்டென முகத்தில் மலர்ச்சியைக் கொண்டுவந்து நிறுத்தி, ‘ வாங்க… ‘ என்றாள்.

அவள் தடுமாறியதைக் கவனித்த ராமநாதன், ‘ சார் இல்லையோ… ‘ என்றார்.  அவள் உடனே பதில் சொல்லாததைக் கண்டு, ‘ ஸாரி… நான் சார் வீட்டுல இல்லாதபோது வந்துட்டேன் போல, நான் சாயங்காலமா வர்றேனே… ‘ என்றுவிட்டு, அப்படியே திரும்பப் பார்த்தார்.

உடனே சுதாரித்துக் கொண்ட மல்லிகா, ‘ இல்லே இல்லே… அவர் வீட்டிலே தான் இருக்கார். மொட்டை மாடியில வாக்கிங் போய்க்கிட்டிருக்கார். நீங்க வந்து உட்காருங்க, நான் அவரை வரச்சொல்றேன்… ‘ என்றுவிட்டு கதவுக்கு வெளியே தலையை நீட்டி, படிகள் வழியாக மேலே பார்த்து, குரல் கொடுத்தாள். ‘ ஏங்க, உங்களைத்தானே, சுமதியப்பா வந்திருக்கார், வாக்கிங் போனது போதும், கீழே வாங்க… ‘ என்றாள்.

உள்ளே வந்த ராமநாதனை ஷோபாவில் உட்கார வைத்துவிட்டு டி.வி.யை ஆன் செய்து ரிமோட்டை அவரருகில் வைத்துவிட்டு, ‘ ஸாரி… கிச்சன்ல கொஞ்சம் வேலையா இருந்தேன், அதைப் போய் பார்க்கறேன். நீங்க டீ.வி. பார்த்திட்டிருங்க… இதோ வந்திருவார்… ‘ என்றுவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள்.

கிச்சனுக்குள் போன அவளுக்கோ உள்ளுக்குள் கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வந்தது. ‘ ஒரு மாதத்தில் தருகிறேன் என்று ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டு போனவர், இதுவரை கொடுக்கவேயில்லையே. சொன்ன தேதியில் பணத்தை கொடுக்காவிட்டால், பணம் கொடுத்தவர் நம்மை தப்பாய் நினைத்துவிடுவார்களே என்று மனசாட்சி  உறுத்த வேண்டாமோ…. ‘  உள்ளுக்குள் பொருமிக்கொண்டாள் மல்லிகா.

நான்கு மாதங்களுக்கு முன்பு… புதியதாய் கல்யாணம் செய்து கொடுத்த அவரது மகள், தனது கணவனுக்கு ஒரு மொபெட் வாங்கிக் கொடுக்கச் சொல்லி நச்சரித்திருக்கிறாள். அதற்கு பணம் போதவில்லை என்று இங்கே வந்துவிட்டார். நமது முகத்தில்தான் ‘ இழிச்சவாயர்கள் ‘ என்று எழுதி ஒட்டியிருக்கிறதே. அடுத்த மாதமே கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி ஐயாயிரம் வாங்கிக் கொண்டு போனவர்தான். நான்கு மாதங்கள் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறார்.

நம்மவரும் கடன் கொடுக்கும்போது கறாராக சொல்லி கொடுக்கவில்லை. கடன் வாங்கிக்கொண்டு போனவருக்கும் பொறுப்பில்லை. இன்றுவரை ஒரு போன் இல்லை. வந்து சொல்லவுமில்லை. ‘ பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் ‘ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். இவர்தான் ரொம்பவும் இளகிய மனதுடையவராயிற்றே. அதை எல்லோரும் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பொருமிக்கொண்டாள் அவள்.

ஹாலில் பேச்சு சத்தம் கேட்டது. அவர் மாடியில் இருந்து இறங்கி வந்துவிட்டார் போல என்று நினைத்துக்கொண்டாள்.

சில நொடிகளில் உள்ளே வந்த அவளது கணவன் குரலை தாழ்த்திக்கொண்டு, ‘ சாருக்கு டீ ஏதும் கொடுத்தியா… ‘ என்றார்.

‘ உக்கும் அது ஒன்னுதான் குறைச்சல்… ’ என்று சொல்ல நினைத்தவள் உடனே, ‘இல்லேங்க, அவர் வந்தவுடனே உங்களுக்கு குரல் கொடுத்துட்டு சமையல் வேலைகளை கவனிக்க வந்துட்டேன், போய் பேசிட்டிருங்க, இதோ, கொண்டு வந்துடுறேன்… ‘ என்று சொல்லி விட்டு, டீயை கொதிக்க வைத்தாள்.. அவளுக்கும் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டுதானிருந்தது.

‘ வந்தாரே… வந்தவுடனே, ‘ ஸாரிங்க…சொன்னபடி பணத்தைக் கொடுக்க முடியலை, தப்பா எடுத்துக்காதீங்க… ‘ னு ஒரு வார்த்தை சொல்லலையே… என்ன மனுஷன் இவர்… ‘ என்று மறுபடியும் உள்ளுக்குள் பொறுமிக் கொண்டே டீயை கலக்கினாள்.

கொஞ்ச நேரத்தில் உள்ளே மறுபடியும் வந்த கணவனிடம், ‘ ஏங்க, பணம் கொண்டுவந்திருக்காரா, எதற்காக வந்தாராம், நீங்க பணம் என்னாச்சுனு ஒரு வார்த்தை கேட்கலையா… ஒரு மாசத்துல தர்றேன்னவர்… இன்னுமா… ‘  என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுப்பது போல கையை உயர்த்திய அவர், குரலை தாழ்த்திக்கொண்டு, ‘ ஸாரி, உன்கிட்டே சொல்ல மறந்திட்டேன்… காலையிலேயே ஜீபே பண்ணிட்டார். ஸாரி, நான்தான் உட்கிட்டே சொல்ல மறந்துட்டேன்…’ என்று வருத்தப் பட்டுக்கொண்டே மொபைலில் தேடி கணக்கில் வரவு வந்ததற்கான எஸ்.எம்.எஸ்.சை காட்டினார்.

அவள் திகைப்புடன் அவரை எறிட்டாள். அதைப் புரிந்து கொண்ட அவர், ‘இப்போ அவர் வந்தது வேற விஷயம்… அவருக்கு சொத்து வரி கேட்டு நோட்டீஸ் வந்திருக்காம்… வரியை பயங்கரமா ஏத்தியிருக்காங்களாம்… நான் கார்ப்பரேஷன்ல வேலை பண்ணினதால உள்ளே யாரையாவது பார்த்து கொஞ்சம் குறைக்க முடியுமான்னு கேட்கத்தான் இப்போ வந்தார். நான் ரிடையர் ஆகி வந்ததுக்கப்புறம் நிறையபேர் மாறிட்டாங்க இல்லையா, ரொம்பக் கஷ்டம்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்…. ‘ என்றார்.

‘ அனுப்பிட்டீங்களா… ‘ என்று திகைத்தாள் அவள்.

அவரும் கூலாக, ‘ விஷயத்தை கேட்டார். நான் ரொம்பக் கஷ்டம்னு சொன்னதும் கிளம்பிட்டார்… ஏன்… என்னாச்சு…  ‘ என்றார்.

‘ ச்சே… நல்ல மனுஷரை தப்பா நினைச்சு, சரியா முகம் கொடுத்துக்கூட பேசாம விட்டுட்டோமே… ‘ என்று உள்ளுக்குள் வருந்தியவள், உடனே முகத்தை மாற்றிக்கொண்டு, ‘ இல்லே… டீ கலந்துட்டு வர்றதுக்குள்ள போயிட்டாரேனு …  ‘ என்று இழுத்தாள்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அது ஒரு வரம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஞாபகமறதி (சிறுகதை) – சுஶ்ரீ