தொட்டு விடத்தான்
துடிக்கிற மனதில்
தொடுவானமேயில்லை…
தொட்டுப்பார்க்க
இலையசைக்கும்
காற்றைப் போல..
நம்ப மறுக்கும்
இதய நாளங்கள்
நடுக்கம் மிகுப்பினும்
வேகம் குறையாத
கால்கள்..
கடல் மணலின்
புதைவில்
புதையலைத் தேடுகிறதா?…
புத்தனைத் தேடுகிறதா?
புரியாத அலைச்சலில்
சரணடையப்
பார்க்கிறதே…சுருண்டு வரும்
நுரை தொப்பை
அலைகளின்
ஆரவாரத்திடம்…
இதோ…அதோ..வென
போக்குக் காட்டும்
கானல் நீரின் கயமைகளுடன்
உரசிப்பார்க்கிறதோ?
வராத கனவுகளின்
இமைப்பறவைகளின் சேமிப்பில்
என்று வந்த பால் நிலா
என தேடிப்பார்க்கிறதோ?
மனமோ அல்லாட
மதிமயங்கிய
மங்கையின் சோகத்தோடு
ஊதக்காற்றின்
பனிச்சரிவாய்
மேக முகடுகளில்
விரியும் வெண்பனியாய்
தெளிவாகிப்போன சப்தங்களோடு
சங்கீதமிழைக்க
புதிய அழைப்பிதழோ?
தேடித் தேடி
தீனி கிடைக்காத
ஆட்டுக் குட்டியாய்….
இன்னும் பறக்க
நினைக்கும்
சிறகில்லாத தீக்கோழியின்
மகோன்னத ஆசைகளின்
எச்சங்களின் அம்சங்களா…?
வேண்டாமென்று
உதிர்ந்த இறகொன்று
காற்றில் சுழன்றே
கைகளில் விழுந்தே
தரையிறங்க
தவிப்பின் நடுவில் திரும்ப
ஒட்டிக் கொள்ள முயலும்
நியாயங்களோ?
இருப்பினைத்
தக்க வைத்துக் கொள்ள
இன்னும் தேடுதோ
இதயக் கொள்ளை நோய்…
இல்லாத
தொடுவானத்தையே?…
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings