எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ டீ, நீ போட்டியாமா ‘ என்றார் ராமன்.
மருமகள் அணு டீ கொண்டுவந்து கொடுத்ததும் ஒரு வாய் வைத்து சுவைத்தவர்தான் அப்படி கேட்டார்.
‘ ஆமா மாமா, என்னாச்சு …’ என்றாள் அணு கொஞ்சம் பதற்றத்துடன்…
அவளுக்கு கல்யாணமாகி இங்கே வந்து ஒரு வாரமாகிவிட்டது. புது மருமகளிடம் அதிகம் வேலை வாங்க வேண்டாமே என்று தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறாள் அவரது மனைவி கண்ணகி.
சில நிமிடங்களுக்கு முன் அவரது மொபைல் கூப்பிட்டது. அதை எடுத்து காதில் வைக்கும் முன், ‘ தலை வலிக்கிற மாதிரி இருக்கிறது ஒரு டீ போட்டுக் கொடேன் ‘ என்று கண்ணகியிடம் கேட்டுவிட்டு பின்பக்கம் போய்விட்டார் அவர்.
பின்பக்கம் காய்கறிச் செடிகள் போட்டிருக்கிறார்கள். ஒரு துணிதுவைக்கும் கல்லும் போட்டிருக்கிறார்கள். அதில் உட்கார்ந்தபடியே போனில் பேசிக்கொண்டிருந்தவரிடம் டீயை கொண்டுவந்து கொடுத்தாள் அணு. ஒரு வாய் சுவைத்துவிட்டுத்தான் அப்படி கேட்டார் அவர்.
முதலில் மனைவியிடம் டீ கேட்டுவிட்டு அவர் பின்பக்கம் போனதும், தனக்கு கொஞ்சம் அசதியாக இருக்கிறதே என்று ஷோபாவில் உட்கார்ந்திருந்தபடியே, புது மருமகளைக் கூப்பிட்டு, முதல் முதலாய், ‘ டீ போட்டுகுடுமா… எனக்கும் டீ குடிக்கணும் மாதிரிதான் இருக்கு… ’ என்று கண்ணகி சொன்னதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
‘ ஆமா மாமா, என்னாச்சு …’ என்றாள் அணு கொஞ்சம் பதற்றத்துடன்..
‘ இல்லே… டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே… அதான் நீ போட்டியிருப்பியோனு கேட்டேன்… ரொம்ப நல்லா போட்டிருக்கிறேமா, இப்படியே எப்போவும் போடு… சரியாம்மா… ‘ என்றார். அவளும் புன்னகைத்தபடி திரும்பிவிட்டாள்.
கண்ணகிக்கு ‘ சொரேல் ‘ என்றது.
‘ இதென்ன புது கதையாக இருக்கிறது. இதுவரை நானல்லவா டீ போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இருபத்தைந்து வருடங்களாக பாராட்டாமல், இன்றைக்கு மருமகள் முதல்முதலாய் டீ போட்டுக் கொண்டு வந்தவுடன் ‘ ரொம்ப நல்லா போட்டிருக்கிறேமா, இப்படியே எப்போவும் போடு…’ என்கிறாரே. அப்படியென்றால் நான் போடும் டீ நன்றாக இல்லை என்று அர்த்தமா?.
கணவன் பக்கத்தில் இருந்திருந்தால் தொடையைப் பிடித்து கிள்ளிவிட்டிருப்பாள், அவ்வளவு கோபம்.
அதற்குள் கிச்சனுக்குள் மறுபடியும் போய் இரண்டு கப்புகளை எடுத்துக்கொண்டு வந்த அணு, ஒன்றை மாமியாரிடம் நீட்டினாள். மருமகளிடம் முறைத்துக்கொண்டு நடக்கப் போவதொன்றுமில்லை என்று நினைத்தவள், புன்னகையுடன் டீயை வாங்கிக் கொண்டாள்.
மாமியாருக்கு டீயை கொடுத்துவிட்டு பக்கத்து சோபாவில் உட்காரப் போனவள் சட்டென சுதாரித்துக் கொண்டு தங்களது அறையை நோக்கிப் போய்விட்டாள். பெரும்பாலும் மாமனார் மாமியார் இருக்கும்போது அவள் உட்கார மாட்டாள். அவரது அப்பா சொல்லி கொடுத்த பாடம் அது.
கண்ணகிக்கோ தாளமுடியவில்லை. ‘இன்னிக்கு டீ நல்லாருக்கும்பார், நாளைக்கு சாம்பார் நல்லாருக்கும்பார், இப்படியே விட்டா, உன் மாமியாரை விட, நீ ரொம்ப ருசியா சமைக்கிறேம்மா… என்று மருமகளை தூக்கிவைத்துப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, நம்மையல்லவா மட்டம் தட்டுவார். நாம் இதற்கு இடம் கொடுக்கலாமா…நோ.. நோ..’ தனக்குள்ளேயே முனகிக் கொண்டாள் கண்ணகி.
xxxxxxxxx
ஷோபாவில் உட்கார்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு அப்படியே தூங்கியும் போனாள் கண்ணகி. திடீரென்று காலிங் பெல் அடிக்கவே எழுந்து கொண்டாள். அப்படியே கடிகாரத்தை பார்த்தாள். மணி பன்னிரண்டு என்றது அது.
சரி, இப்போது சமைக்க ஆரம்பித்தால்தான் ஒன்றரை மணிக்கு முடியும், குளித்துவிட்டு இரண்டு மணிக்கு சாப்பிட ஏதுவாக இருக்கும் என்று நினைத்தபடி, சமையற்கட்டுக்குள் போனாள்.
அரிசியை எடுத்து ஊறவைத்துவிட்டு இன்னொரு டீ குடித்தால் தேவலை என்று தோன்ற அணு டீ ஏதும் மிச்சம் வைத்திருக்கிறாளா என்று தேடிவிட்டு, ஒன்றுமில்லை என்று அறிந்ததும், புதிதாய் டீயை கொதிக்க விட்டு டீயைக் கலந்துகொண்டிருந்தாள்.
அதேநேரம் அங்கே வந்தபடி, ‘என்ன பண்றீங்க அத்தை… ‘ என்று கேட்டாள் அணு. அவளிடம் ஒரு கப்பைக் கொடுத்து, ‘ மாமாகிட்டே ஒரு கப்பை கொடும்மா… அவர்தான் திரும்பத் திரும்ப டீ கேட்பார்… ‘ என்றாள்.
ஒரு தட்டில் டீ கப்பை எடுத்து வைத்துக் கொண்டு ஹாலுக்கு போனாள் அணு. பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த அவர், கப்பை வாங்கி டீப்பாய் மேல் வைத்துவிட்டு, ‘நல்லதுமா, நீ போம்மா‘ என்றார். அவள் நகர்ந்ததும், பேப்பரை மடித்து வைத்துவிட்டு டீயைக் குடிக்கலானார். சமயலறையிலிருந்தபடியே ஒன்றும் அறியாததுபோல கவனித்துக் கொண்டிருந்தாள் கண்ணகி.
திரும்பி வந்த மருமகளுக்கு பீன்ஸ் வெட்டும் வேலைக் கொடுத்துவிட்டு, டீ கப்புடன் ஹாலுக்குப் போனாள். டீயை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த கணவனிடம், ‘ டீ ரொம்ப நல்லா இருக்கா… ’ என்றாள் தணிவான குரலில், தனது கோபத்தை காட்டிக்கொள்ளாமல்.
‘பின்னே… புது மருமகள் போடற டீ புதுசாத்தானே இருக்கும்… நல்லாவே இருக்கு…’ என்றார்.
‘அது நான் போட்ட டீ…’ என்றாள் குரலைத் தாழ்த்திக் கொண்டு..
இதை எதிர்பாராதவர், புன்னகையுடன் ‘ அதனாலென்ன…டீ நல்லாருக்கு… நல்லாருக்குனு சொன்னா தப்பா… ’ என்றார்.
‘இந்த இருபத்தஞ்சு வருசத்துலே எப்போதாவது என்கிட்டே இப்படி பாராட்டி சொல்லியிருக்கீங்களா‘ என்றாள் சன்னமான குரலில், மருமகளுக்கும் கேட்டுவிடக் கூடாதென்ற கவனத்துடன்.
சிரித்தார் அவர்… ’மண்டு… மண்டு…மருமக புதுசா வீட்டுக்கு வந்திருக்கு. இதுவரை நீதான் இங்கே சமைச்சுக்கிட்டிருந்தே… அந்த பொண்ணு அத்தை சமைக்கும்போது நமக்கென்னன்னு ஒதுங்கி உட்கார்ந்துக்க கூடாதில்லையா.. அதான் அப்பைக்கப்போ சூப்பர்மா, நல்லாருக்குமானு நாம சொல்லிக்கிட்டேயிருந்தா அந்த பொண்ணுக்கும் திரும்பத் திரும்ப நம்மளோட பாராட்டை வாங்கனும்னு தோனுமில்லையா… கவனமா, கருத்தா வேலை செய்யுமில்லையா…’ என்றார்.
அவருடைய சூட்சுமத்தை புரிந்து கொண்ட கண்ணகி, ‘ சரிதான்… ‘ என்றாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings