in ,

ஒரு ரூபா… ! (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘தம்பி, ஒரு ரூபா…’ என்று கையை நீட்டினார் அந்தப் பெரியவர். மடியில் ஒரு இலைக் கட்டு வைத்திருந்தார்.  

சற்றே கோபமான கண்டக்டர், ’ ஐயா… மிச்ச காசு எங்கே ஓடிடப் போவுது… வாங்கிக்கலாம்… சும்மா திரும்பத் திரும்ப நை நைனுக்கிட்டு…‘ என்று விட்டு நகர்ந்து போனார்.

பெரியவர் கையை நீட்டுவதையும், கண்டக்டர் எரிந்து விழுவதையும் பார்த்து சிலர் ரசித்துக் கொண்டிருந்தனர்.

மலைக்கோவில் வழியாக போகும் டவுன் பஸ் அது.  வெள்ளிக்கிழமை. கிருத்திகை. கூட்டத்திற்கு கேட்கவா வேண்டும். கூட்ட நெரிசலில் வளைந்து நெளிந்து டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர். சில்லறைப் பிரச்சினையில் எண்ணெயில் போட்ட கடுக்காய் வெடித்துக்கொண்டுமிருந்தார் அவர். 

கொஞ்ச நேரம் விட்டு அவர் திரும்பி வரும்போது, கையை மறுபடியும் நீட்டினார் பெரியவர்.  ‘தம்பி… என் ஸ்டாப் வரப் போவுது…இறங்கப் போறேன்… ’

இப்போது இன்னும் எரிச்சலானார் கண்டக்டர்.  ‘ பெருசு…எனக்குத் தெரியாதா, மிச்ச காசு தரணும்னு… எல்லாரும் சரியான காசைக் கொடுத்தா சில்லறை பிரச்சினை எதுக்கு வருது… உங்க காசையெல்லாம் கொண்டு போய் நான் என்ன மாடமாளிகையா கட்டப் போறேன்… வாங்கிக்கலாம் வாங்கிக்கலாம் …சும்மா தொணத் தொணன்னு… ’ என்றுவிட்டு ஜன்னல் வழியாக குனிந்து பஸ் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை பார்த்துவிட்டு, சட்டென விசிலடித்தார் கண்டக்டர். 

‘ அம்மன் கோவில்லாம் இறங்குங்க…’ என்றார்.

‘தம்பி… ஒரு ரூபா…’ என்றபடி கையில் இலைக் கட்டுடன் எழுந்த பெரியவர், தனது கையை நீட்டினார்.

இப்போது ரொம்பவும் எரிச்சலானார் கண்டக்டர்… ’வயசான காலத்துல பஸ்ல ஏறி, ஏன் பெருசு எங்க உயிரையெல்லாம்  வாங்கறே… இந்தா உன் பிச்சைக் காசு ஒரு ரூபா… ‘  என்றபடி ஒரு ரூபாய் காசை எடுத்து நீட்டினார்.

சிரித்தார் பெரியவர்.    ‘ தம்பி…அம்மன் கோவிலுக்கு வழக்கம் போல பத்து ரூபா குடுப்பேன். டிக்கட்டை பதினோரு ரூபாயா ஏத்தியாச்சு. இன்னும் ஒரு ரூபா கொடுன்னு சொல்லிட்டு டிக்கட் கொடுத்துட்டு நகர்ந்துட்டீங்க… அந்த ஒரு ரூபாயை நீட்டிக்கிட்டே இருக்கேன்… மிச்ச காசு எங்கே ஓடிடப் போவுது…வாங்கிக்கலாம்னு நகர்ந்து போய்க்கிட்டே இருந்தீங்க… இப்போ பாருங்க என் ஸ்டாப்பே வந்துச்சு…’ என்றபடி இறங்கப் போனார்.

கண்டக்டரின் முகத்தில் ஈயாடவில்லை. சுற்றிலும் இருந்தவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முற்றும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விதிக்குள் விதி (சிறுகதை) – முகில் தினகரன்

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 8) – சுஶ்ரீ