இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மருத்துவரை சந்திக்கக்கூடிய நேரம் காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை. 12 மணி ஆனதால் தன் வேலையை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து டாக்டர். கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்.
கார்த்திக் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் எம். பி. பி. எஸ் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, செங்கல்பட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அப்பால் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணிபுரிகிறார்.
கார்த்திக் தன் வீட்டிற்க்கு வரும் போது சாலை ஓரத்தில் ஒரு பெண் மயங்கி கிடப்பதை பார்க்கிறான். உடனே தான் ஓட்டி வந்த பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, அந்தப் பெண் அருகே சென்றான். கார்த்திக் அந்த பெண்ணை தட்டி எழுப்புகிறான், அந்தப் பெண் எழுந்திருக்கவில்லை. தன் பைக்குள் இருக்கும் வாட்டர் பாட்டில் எடுக்கிறான், ஆனால் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் இல்லை.
ஒருவர் மயக்க நிலையில் இருக்கும்பொழுது அவர்களை சம தரையில் நேராக படுக்க வைக்க வேண்டும். அவர்களின் இரண்டு கால்களையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். கால்களை உயர்த்திப் பிடித்தும் எழுந்திருக்கவில்லை என்றால், மயக்கம் அடைந்தவரின் இரண்டு நாசித்துளைகளுக்கு நடுவில் விரலைக் கொண்டு அழுத்துவது அல்லது காதினை பிடித்து திருகுவது அப்போதும் எழுந்திருக்கவில்லை என்றால், உள்ளம் பாதத்தில் கூர்மையான (பேனா) பொருள் கொண்டு குத்த வேண்டும். இவ்வாறு செய்தாலே மயக்க நிலையில் இருந்து தெளிந்து விடுவார்கள்.
கார்த்திக் ஒரு மருத்துவர் என்பதால் அந்த பெண்ணை மயக்க நிலையில் இருந்து சுயநினைவுக்கு கொண்டு வந்தார்.
என்னாச்சு உங்களுக்கு? உடம்புக்கு ஏதாவது முடியலையா ? நீங்க மட்டும் தனியாவா வந்தீங்க. உடம்புக்கு முடியலன்னா கூட யாராவது அழைச்சிட்டு வர வேண்டியது தானே. இந்த நேரத்துல நானே வரலைன்னா உங்க நிலைமை என்ன ஆயிருக்கும்.
“ரொம்ப நன்றி சார்”
நன்றி எல்லாம் எதுக்கு? நான் இங்கதான் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் டாக்டரா வேலை செய்றேன். என் பேரு கார்த்திக் உங்க பேரு என்ன?
“என் பேரு செண்பகம் சார் “
செண்பகம்.. நல்ல பேரு. உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்காக மயக்கம் ஆனிங்க.
எனக்கு தெரிஞ்சவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, உடனே ரத்தம் கொடுக்க சொன்னாங்க. நான் அவங்களுக்கு இரத்தம் கொடுத்துட்டு வரும்போது, இந்த வெயில்ல நடக்க முடியல, காலையில கூட சாப்பிடல. உடம்பு களைப்பாய் இருந்துச்சு அப்படியே தலை சுத்திச்சு, அப்புறம் என்னதான் நடந்ததுன்னு தெரியல சார்.
நீங்க காலையிலிருந்து சாப்பிடலையா? என்று கேட்ட கார்த்திக் சுற்றும் முற்றும் பார்த்தான். சிறிது தூரத்தில் சாலையின் ஓரமாக உணவகம் ஒன்று இருந்தது.
வாங்க செண்பகம், அந்த ஹோட்டலில் சாப்பிட்டு அப்புறமா வீட்டுக்கு போங்க.
“இல்ல சார், நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன். ரொம்ப நன்றி! நான் போயிட்டு வரேன்”
பசியோட வீட்டுக்கு போவீங்களா? நீங்க இரத்தம் வேற கொடுத்திருக்கீங்க, உங்களுக்கு ரொம்ப களைப்பா இருக்கும் சாப்பிட்டு போங்க. போகும்போது மறுபடியும் மயக்கம் போட்டு தான் விழுவீங்க.
“வேண்டாம் சார், எனக்கு இப்ப பசிக்கல. “
என்னை நீங்க அந்நிய நபரா நினைக்க வேண்டாம், உங்க தோழனா நினைங்க. இந்த நிலையில் நீங்க சாப்பிடாமல் போவது நல்லது இல்ல, சாப்பிட்டு போங்க செண்பகம்.
அவள் வாய் சாப்பாடு வேண்டாம் என்று சொன்னாலும், அவள் வயிறு வேண்டும் என்று சொல்லுது. இவரு சொல்வது போல நம்ம சாப்பிடாம நடந்து போன மறுபடியும் மயங்கி தான் விழனும் என்று நினைத்தாள்.
“நீங்க யாருன்னு தெரியாது எனக்கு இருந்தாலும், என் மீது அக்கறை வச்சி இவ்வளவு நேரம் கூப்பிட்டதால நான் வரேன் சார் ” என்றாள் செண்பகம்.
செண்பகமும், கார்த்திக்கும் ஹோட்டலுக்குள் சென்று சாப்பிடுகிறார்கள். இவர்கள் சாப்பிட்டு முடித்ததும், “சார் சாப்பாட்டுக்கு நான் காசு கொடுத்துடுறேன்” என்றாள்.
செண்பகத்திடம் ஒரு ரூபாய் காசு கூட கையில் இல்லை, இருந்தாலும் தன்னை அவர் தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதற்காக ஒரு வார்த்தைக்காக சொல்கிறாள்.
உங்களுக்கு ஏன் அந்த சிரமம், சாப்பாட்டுக்கு நானே காசு கொடுக்கிறேன் என்று சொல்லி கார்த்திக் தன் பர்ஸில் இருந்து காசு கொடுத்தான்.
கார்த்திக்கும் செண்பகமும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர். அப்போது கார் ஒன்று ஹோட்டலுக்கு முன் வந்து நின்றது. அந்த காருக்குள் செண்பகம் வேலை செய்யும் நிறுவனத்தின் மேனேஜர் இருந்தார். இன்று தன் தம்பிக்கு உடல்நிலை சரியில்லை என்று கேட்டபோது லீவு தந்தாரே அதே மேனேஜர் தான் காருக்குள் இருந்து கீழே இறங்கினார்.
“என்கிட்ட பொய் சொல்லிட்டு, இவள் பாய் பிரண்டு கூட வெளியே சுத்துறாளா, நாளைக்கு இவள வேலையை விட்டு தூக்குறேன்” என்று கோபத்துடன் மனதிற்குள் நினைத்தான்.
ஆனால் செண்பகம் மேனேஜரை பார்க்கவில்லை.
“சரிங்க சார். நான் வீட்டுக்கு போறேன் என்றாள் செண்பகம்”
“உங்க வீடு எங்க இருக்கு என்றான் கார்த்திக்”
“இப்படியே நேரா போன பெரிய விநாயகர் கோவில் வரும். அது பக்கத்துல தான் எங்க வீடு”
இப்போ வீட்டுக்கு எப்படி போவீங்க?
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தான் சார் இருக்கும் அதனால நான் நடந்தே போயிடுவேன்.
என்ன ஒரு கிலோமீட்டர் நடந்தே போவீங்களா? அந்த பிள்ளையார் கோவில் தாண்டி தான் நானும் போவேன். போகும் போது உங்களையும் விட்டுறேன் வாங்க. என்றான் கார்த்திக்.
இல்ல சார் நான் தினமும் வீட்டிலிருந்து ரெண்டு கிலோ மீட்டர் நடந்து தான் வேலைக்கு போவேன். அதனால எனக்கு இது பழகி போச்சு நான் நடந்தே போறேன் சார்.
நானும் அதே வழியா தானே போறேன். அப்படியே உங்களையும் விட்டுட்டு போக போறேன், இதுல என்ன இருக்கு வாங்க செண்பகம், என்றான் கார்த்திக்.
செண்பகம் அவன் வண்டியில் ஏறி அமர்ந்தாள். செண்பகமும் கார்த்திக்கும் புறப்பட்டனர்.
இவர்கள் இருவரும் போற வரைக்கும் காத்திருந்த மேனேஜர் இப்போது ஹோட்டலுக்குள் சென்றார். செண்பகத்தை பற்றி அவர் மனதில் தவறான அபிப்ராயம் உருவானது.
என்னையே ஏமாத்திட்டாளே ! இருக்கட்டும், நாளைக்கு அவளுக்கு இருக்குது, என்று மனசுக்குள்ளேயே செண்பகத்தை திட்டிக் கொண்டிருந்தார் மேனேஜர்.
இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings