in ,

மிஸ்.சாரதா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“எத்தனையோ அலுவல்களுக்கு நடுவே… நமக்காக நேரம் ஒதுக்கி… இன்றைய நமது கவியரங்கத்திற்கு… திறனாய்வாளராக கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் மாதர் சங்கத் தலைவி திருமதி ராஜாமணி அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்” விழாத் தலைவர் அழைப்பு விடுக்க, அந்த அழைப்பிற்காகவே காத்திருந்த ராஜாமணி வாயெல்லாம் பல்லாக மேடை ஏறினார்.

“அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மகளிர் கவிதை ஊர்வலம் தொடங்குகிறது!…. இன்றைய கவிதை ஊர்வலத்தில்  ‘வரதட்சனை கொடுமையும் வதைபடும் வனிதையரும்’ என்கிற தலைப்பிலான கவிதைகளை வாசிக்க பெண் குயில்களை மேடைக்கு அழைக்கின்றோம்… முதல் கவிதையை தர மிஸ்.சாரதா அவர்கள்… இதோ மேடையை நோக்கி” நிகழ்ச்சித் தொகுப்பாளினி சொல்லியதும் அந்த இளம் பெண் மேடை ஏறி மைக் முன் நின்றாள்.

“வரதட்சணை வாகனமேறி

புகுந்த வீட்டில் நுழையும் புதுப்பெண்ணே!

திருஷ்டிக்காய் உன் வாகனத்தின்

சக்கரங்கள் அரைத்து நசுக்கியது

எலுமிச்சம்பழத்தை அல்ல

உன்னை பெற்றவனின் தலையை”

என்று தொடங்கி வரதட்சணையின் வக்கிரத்தையும், மாமியார்களின் மதம் பிடித்த போக்கினையும், கவிதை சாட்டையால் விளாசி விட்டுச் சென்றாள் சாரதா என்னும் கவிதாயினி.

அடுத்து வந்த பெண் கவிஞர்கள் தங்கள் கவிதை ஆயுதம் கொண்டு சமுதாயத்தையும் ஆண் வர்க்கத்தினரையும் கிழித்துத் தள்ளினர்.  ஒவ்வொரு கவிதையையும்  “ஆஹா”…  “அற்புதம்”… என்று வாய் விட்டுச் சொல்லி  ரசித்தார் திறனாய்வாளரான ராஜாமணி.

கவிதை ஊர்வலம் முடிவுற்றதும்,  “அடுத்து திறனாய்வாளர் திரு ராஜாமணி அவர்கள் தனது திறனாய்வு முடிவை அறிவிப்பார்… பரிசு பெற்ற கவிக்குயில்களுக்கு தன் பொற்கரத்தால் பரிசுகளை வழங்குவார்” நிகழ்ச்சி தொகுப்பாளினி அறிவிக்க,

      ராஜாமணி எழுந்து வந்து மைக்கின் முன் நின்ற போது அரங்கமே நிசப்தமானது. பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள் யார் யார் என்பதை அறிந்து கொள்ள கூட்டம் ஆவலுடன் காத்திருந்தது.  ராஜாமணி  தன் கணீர்க் குரலில் ஆரம்பித்தார்.

      “இங்கு உதிர்ந்த கவிதை மலர்கள் எல்லாம் கானல் மலர்கள் அல்ல!… கனல் மலர்கள்!… புலம்பல்கள் அல்ல!… பூகம்ப நாற்றுக்கள்!… இவற்றில் இது சிறந்தது அது சிறந்தது என பாகுபடுத்துவது பெரும் சிரமமான காரியம்தான்… இருந்தும் விழாத் தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மூன்று கவிதைகளை பரிசுக்காக தேர்ந்தெடுத்துள்ளேன். முதல் பரிசு…” என்று கூறி விட்டு,  கூட்டத்தை பார்த்து முறுவலித்த ராஜாமணி,

     “மிஸ் சாரதா” என்று உரக்கச் சொல்ல கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது.  தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுக்குரியவர்கள் பெயரையும் அறிவித்து விட்டு தன் சிற்றுரையை துவக்கினார் ராஜாமணி.

      “பெண் புலிகளே!… இந்த நாகரீக சமூகத்தில் வரதட்சணை நோய் மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. நமது புரட்சி எண்ணங்களால் அதை ஒழிப்போம்… வரதட்சணைப் பேய்களான ஆண்களைச் சிதைக்கு அனுப்பி நாங்கள் பேதைகள் அல்ல என்பதை நிரூபிப்போம்! வரதட்சணை கொடுக்க மாட்டோம் என செங்குருதியில் சூளுரைப்போம்!.. குனிந்து கொண்டே இருந்தது… போதும்!…  நிமிர்ந்தெழுங்கள் பெண் புயல்களே!… நன்றி வணக்கம்”

       கூட்டத்தின் கரவொலியோடு சென்று அமர்ந்தார் ராஜாமணி.

      “முதல் பரிசினை பெற மிஸ்.சாரதா அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்… அவருக்கு பெண்ணினத்தின் காவல் தெய்வமான ராஜாமணி அம்மா பரிசு வழங்குவார்!” விழா தலைவர் பரிசு பொருளை ராஜாமணி கையில் தர,  புன்முறுவலுடன் அதை வாங்கி சாரதாவிடம் நீட்டினார் ராஜாமணி.

     அலட்சியமாக பார்த்த சாரதா, விழா தலைவர் பக்கம் திரும்பி,  “சார் என் கவிதைக்கான பரிசை நான் ஒரு தகுதியான நபரின் கையாலே வாங்கணும்னு ஆசைப்படறேன்” என்றாள்.

     அதிர்ந்தார் ராஜாமணி. தர்ம சங்கடத்திற்குள்ளான விழாத் தலைவர், “என்னம்மா… என்ன சொல்றே?” கேட்க,

     “இந்தப் பெண்மணிக்கு பரிசு கொடுப்பதற்கான தகுதி இல்லை” என்கிறேன்.

      பொங்கியெழுந்த ராஜாமணி   “எதை வெச்சு நீ இப்படிச் சொல்ற?… எனக்கு என்ன குறை?” அவமானம் தாளாமல் கத்தினார் ராஜாமணி.

     அடுத்த நிமிடம் வேக வேகமாக. சென்று மைக்கை பிடித்தாள் சாரதா.  “போன வருஷம் இந்த ராஜாமணி அம்மாள்…  என் வீட்டுக்கு என்னைப் பெண் பார்க்க வந்தாங்க!… இவங்களோட மகனுக்காக!… இவங்க பையனுக்கும் என்னை பிடிச்சிருந்தது… எங்க குடும்பத்தாருக்கும் திருப்தியா இருந்துச்சு!.. ஆனாலும் கல்யாணம் நடக்கல!… ஏன் தெரியுமா?”

     கூட்டம் நெற்றி சுருக்கியது.

     “இந்தம்மா கேட்ட இருபது லட்ச ரூபாய் வரதட்சணையை என்னுடைய அப்பாவால் தர முடியவில்லை!… வயதான மனிதர்.. இவங்க காலில் விழாத குறையாய் கெஞ்சினார்!… ம்ஹும்.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் “பணம் இல்லேன்னா… உங்க சம்மந்தமே வேண்டாம்”னுட்டுப் போயிட்டாங்க!.. இன்னிக்கு மேடையில்  “வரதட்சணை கேட்கிற ஆண்களை சிதைக்கு அனுப்பணும்!னு சொல்றாங்க!… அப்ப முதல்ல இவங்களைத்தான் அனுப்பணும்!”

       ராஜாமணிக்கு அப்போதுதான் லேசாக ஞாபகம் வந்தது.  “தரகர் கண்ணுசாமி கூட ஒரு தடவை பெரியார் நகர்ல போய்ப் பார்த்துட்டு வந்த பெண் அல்லவா இவள்?”

      “ஆகவே!… விழாத் தலைவரை நான் கேட்டுக் கொள்வது  என்னவென்றால்…. இனிமேல் பரிசுகளை வழங்குவதற்கு தகுதியான நபர்களை மட்டும் அனுமதியுங்க!… அப்படி யாராவது தகுதி வாய்ந்த நபர் வந்தால் சொல்லி அனுப்புங்க!… அப்ப வந்து பரிசை வாங்கிக்கிறேன்!” சொல்லி விட்டு கோபத்துடன் மேடையில் இருந்து கீழே இறங்கிய சாரதா, வரும் போது ராஜாமணியைப் பார்த்து “வரட்டுங்களா?…பெண்ணின காவல் தெய்வமே!” என்று நக்கலாகக் கூற,

      முகத்திரை கிழிக்கப்பட்டு விட்ட ஆத்திரத்தில் விழா தலைவரை எரிப்பது போல் பார்த்து விட்டு, அவசர அவசரமாய் மேடையில் இருந்து இறங்கி காரை நோக்கி ஓடினார் ராஜாமணி.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாம்… நமது! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    விதையொண்ணு போட்டா! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை