2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்தப் பத்திரிக்கையில் கவிதைப் போட்டியின் முடிவு வெளியாகியிருந்தது. மிகுந்த நம்பிக்கையோடு பக்கத்துப் பெட்டிக்கடைக்குச் சென்று பத்திரிக்கையை வாங்கி அங்கேயே பிரித்துப் பார்த்தான் கிருஷ்ண பிரசாத். அடுத்த நிமிடத்தில் அவன் நம்பிக்கைக் கோட்டை ‘சட..சட”வெனச் சரிய, அவன் முகம் சோக முலாம் பூசிக் கொண்டது.
‘என்ன தம்பி… திடீர்னு மூஞ்சி பேஸ்தடிச்சாப்புல ஆயிடுச்சு?… என்ன சமாச்சாரம்?” கடைக்காரர் பேப்பரை எட்டிப் பார்த்துக் கேட்க, ‘ம்… அது…. ஒண்ணுமில்லை!”வழியும் அசடைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். வீடு வந்ததும் முதல் வேலையாய் அந்த முதல் பரிசுக் கவிதையை நிதானமாய் வாசித்தான் கிருஷ்ண பிரசாத்.
“மனைவி!
வாலிப வயதில்
உன் மேனியில் முளைக்கும்
இன்னுமொரு வெளியுறுப்பு!
வெளியுறுப்புத்தான் ஆனாலும்
உள்ளுறுப்புக்கள் மொத்தத்தையும்
உற்சாகமாய் இயக்கும்
புடவை கட்டிய ரிமோட்!…மனைவி!
உன் சோகங்களைச் சுட வந்த
வெல்வெட் தோட்டா!
உன் துயரங்களைத் துடைக்க வந்த
அனிச்சமலர்த் தூரிகை!
கவலைகளைக் களைய வந்த
கந்தர் சஷ்டிக் கவசம்!
தாம்பத்ய சுகத்தை
உனக்குத் தந்து விட்டு
பிரசவ வேதனையைத்
தான் மட்டும் ஏற்கும்
அருள்மிகு மனைவியேஸ்வரியம்மன்!”
தொடர்ந்து படிக்கப் படிக்க அவன் விழிகள் விரிந்தன. உதடுகள் அவனையுமறியாமல் ‘அருமை… அருமை” எனக் கூவின. அதிலும் அந்த முத்தாய்ப்பு வரிகள் கிருஷ்ண பிரசாத்தின் மனதை நெகிழச் செய்து, கண்களின் ஓரத்தில் ஈரக்கசிவையே ஏற்படுத்தி விட்டன.
விவாகரத்து வீச்சரிவாளால்
‘வெடுக்‘கென்று மண(ன)ம் அறுக்கும்
வெத்து வேட்டுக் கணவர்களே!
புரிந்து கொள்ளுங்கள்
விவாகரத்துத் தீர்ப்பு வெற்றி மாலையல்ல..
சட்டப்பூர்வ தற்கொலை அனுமதி!
‘ச்சே!… இதை எழுதியவன் நிச்சயம் தன் மனைவி மேல் அபரிமிதமான அன்பும்… பாசமும்… அளப்பரிய காதலும்…. மோகமும்… ஏன்?… பக்தியும் கொண்டவனாகத்தான் இருப்பான்!… ஆஹா… என்னமா எழுதியிருக்கான்… ‘அருள்மிகு மனைவியேஸ்வரியம்மன்”னு மனைவியை ஒரு தெய்வமாகப் போற்றி… கடைசியில் ‘விவாகரத்து‘ என்பது ‘ஆண்களுக்கான சட்டப்பூர்வ தற்கொலை அனுமதி”ன்னு… வாவ்… கிரேட்… கிரேட்;;!”
அந்தக் கவிஞரை நிச்சயம் நேரில் சந்தித்துப் பாராட்டியே தீர வேண்டும் என்கிற ஆவலில் பரிசு பெற்ற கவிஞரின் பெயரையும் முகவரியையும் புத்தகத்தில் தேடினான்.
கவிஞர்.துரை ஜீவானந்தம். கோவை.
‘ப்ச்!… போன் நெம்பர் குடுத்திருந்தா… ஒரு கால் போட்டுப் பாராட்டியிருக்கலாம்!… அட.. முகவரியாவது முழுசாக் குடுத்திருந்தா ஒரு கடிதம் போட்டுப் பாராட்டியிருக்கலாம் இப்படி மொட்டையா ‘கோவை’ன்னு மட்டும் போட்டா எப்படி?” அந்தப் பத்திரிக்கையையும், அதன் எடிட்டரையும் மானாவாரியாய்த் திட்டித் தீர்த்து விட்டு, அதன் அலுவலகத் தொலை பேசி எண்ணுக்கு அழைத்தான் கிருஷ்ண பிரசாத்.
‘ஹலோ… ஆதித்யா மாத இதழ் ஆபீஸ்தானே?”
‘யெஸ்… நீங்க யாரு?”ஒரு பெண் குரல் இயந்திரத்தனமாய்க் கேட்டது.
‘ம்ம்… நான்… கிருஷ்ண பிரசாத்… உங்க பத்திரிக்கையோட நெடுநாள் வாசகன்!… ம்ம்… எனக்கு இந்த வார இஷ்யூல வெளியாகியிருந்த கவிதைப் போட்டி முடிவுகள்ல முதல் பரிசு பெற்ற கவிஞர்.துரை ஜீவானந்தத்தின் போன் நெம்பர்… அட்ரஸ் வேணும்!… கிடைக்குமா?”
‘கொஞ்சம் லைன்ல இருங்க… சப்-எடிட்டருக்கு கனெக்ஷன் குடுக்கறேன்!… அவர்கிட்டக் கேளுங்க!”
காத்திருந்தான். ‘யெஸ்… சப்-எடிட்டர் ஹரிதாஸ் ஹியர்”
கிருஷ்ண பிரசாத் அவரிடம் தன் தேவையை மீண்டுமொரு முறை சொன்னான்.
‘நீங்க எதுக்குக் கேட்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” சப்-எடிட்டர் துருவினார்.
‘ம்.. வாழ்த்துக் கூறத்தான்!…. பாராட்டுக் கடிதம் போடத்தான்!… வேறெதுக்குக் கேட்பாங்க?”
‘அப்ப உங்க பாராட்டுக் கடிதத்தை எங்க ஆபீஸ் அட்ரஸூக்கே அனுப்பிச்சிடுங்க!… நாங்க அவருக்கு ஃபார்வேர்ட் பண்ணிடறோம்!”
‘ப்ச்… இதென்ன வம்பாயிருக்கு… நானே நேர்ல அவரைச் சந்திச்சுப் பாராட்டணும்னு ஆசைப்படறேன்… நீங்க ஏன் குறுக்க பூந்து என்னைத் தடுக்கறீங்க?” கோபமாய்க் கேட்டான் கிருஷ்ண பிரசாத்.
‘சார்… அதெல்லாம் முடியாது… வேணுமின்னா எங்க பத்திரிக்கை ஆபீஸூக்கு அனுப்புங்க…அவ்வளவுதான்!”
கடுப்பான கிருஷ்ண பிரசாத், ‘ஹல்லோ… ஏன் சார் இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க?.. .நான் உங்க பத்திரிக்கையோட ஆரம்ப கால வாசகன்… இதுதான் நீங்க வாசகர்களுக்குக் குடுக்கற மரியாதையா சார்?”
பிரசாத்தின் அந்த வார்த்தைகள் சப்-எடிட்டரை லேசாய்க் கரைத்து விட, ‘நீங்க… இவ்வளவு தூரம் கேட்கறதினால சொல்றேன்…முதல் பரிசு பெற்ற அந்தக் கவிஞர்.துரை ஜீவானந்தம் ஒரு தூக்கு தண்டனைக் கைதிங்க!… கோவை மத்திய சிறைல இருக்கார்!… அவரோட சிறை முகவரியை நாங்க தரக் கூடாது”
ஆடிப் போனான் கிருஷ்ண பிரசாத். ‘என்ன… கொடுமை இது!… மயிலிறகு வார்த்தைகளை வெல்வெட் நூலில் கோர்த்து மனதின் கழுத்துக்கு மென்மையாய் அணிவித்த கவிஞன் ஒரு தூக்கு தண்டனைக் கைதியா?… என்ன.. என்ன குற்றம் இழைத்து விட்டது அவனின் பொற் கரங்கள்?”
‘கொலை!”
‘என்னது?… கொலையா?… அவனா?… அந்தக் கவிஞனா?…. யாரை?… யாரைக் கொலை செய்து விட்டான் அவன்?”
மெலிதாய்ச் சிரித்த சப்-எடிட்டர் தணிவான குரலில் சொன்னார் ‘மனைவியை!”
மறுமுனையில் கிருஷ்ண பிரசாத் வாயடைத்துப் போய் மௌனம் காக்க.
‘என்ன சார்… அமைதியாயிட்டீங்க?… அவர் கொன்னது தன்னோட மனைவியை… அதுக்கு அவனுக்கு கெடைச்சிருக்கறது தூக்கு!… கூடிய விரைவில் அது நிறைவேற்றப்படவும் உள்ளது!”
‘ஓ.கே.சார்… ரொம்ப நன்றி வெச்சிடறேன்!” சுரத்தேயில்லாமல் சொல்லி விட்டு, நிதானமாய் போனை வைத்து விட்டு, கண்களை மூடி அமர்ந்தான் கிருஷ்ண பிரசாத்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings