in ,

காதலிக்க நேரமில்லை (சிறுகதை) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“யாழன்.. இன்னிக்கு என் பழைய போன்ல நம்ம போட்டோஸ் சேட்லாம் பாத்தேன்”

“அதையேண்டி பாத்துட்டு இருக்க.. கொஞ்ச நேரம் பாப்பா தூங்குனா நீயும் படுத்து தூங்கலாம்ல.. என்ன பண்றதுனு தெரியாம அதெல்லாம் பாத்துட்டு இருக்க”

“என்னடா இப்படி பேசுற.. நான் எவ்ளோ ஆசையா சொல்ல ஆரம்பிச்சேன்”

“சரி சொல்லு பார்வதி”

“அந்த சேட் முழுக்க பாரு, கண்மணி, கண்ணம்மா இப்படி தான் நீ என்னை கூப்புட்ருக்க.. இப்போல்லாம் அப்படியா கூப்பட்டற”

“அப்படி கூப்ட்டா தான் லவ் இருக்குனு அர்த்தமா”

“எப்படி தான் அப்போ தெரிஞ்சிக்கிறது. அப்போல்லாம் டெய்லி லவ் யூ சொல்லுவ.. இப்போ எப்போவது.. இன்னொரு சேட்ல என்ன சொல்லிருக்க தெரியுமா” ஏழு வருடத்திற்கு முன் இருவரும் குறுஞ்செய்தியில் பேசிக்கொண்டதைக் காட்டினாள் பார்வதி.

அதில்..

‘கண்மணி.. உன்னை எப்பவும் பாத்துட்டே இருக்கணும்.. உன் கண்ணு அதுல இருக்க மை..நீ பேசும்போது ஆடுற உன் ஜிம்மிக்கி.. நீ சொல்லாத வார்த்தையெல்லாம் என்கிட்ட சொல்லணும்னு துடிக்கிற உன் முக பாவனை.. அப்புறம் உன் கைல இருந்த பிரேஸ்லட்ல ஒரு சலங்கை தொங்கும் அது நீ தண்ணி குடிக்கும் போது ஹோட்டல்ல இருந்த கண்ணாடி டம்ளர்ல பட்டதும் ஒரு சத்தம் கேட்டது. அதனால நீ அடுத்த முறை கண்ணாடி டம்ளர் எடுக்கும் போது கவனமா எடுத்த.. அந்த டம்ளர் உன் சலங்கையோட ஸ்பரிசம் படமா ஏமாந்துடுச்சு என்னை மாதிரியே’

இதைப் படிக்கப் படிக்க யாழனுக்குள் சந்தோசம் ஒரு புறம் இப்படியெல்லாமா பேசியிருக்கிறோம் என்ற சிறுபிள்ளைதனம் ஒரு புறம்.

“படிச்சீங்களா.. இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கு.. நீ என் லைப்ல கிடைச்ச பெரிய கிப்ட். எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் நீ.. அப்படி ஏகப்பட்ட ஸ்டேட்டஸ்.. எதாவது நியாபகம் இருக்கா”

“நியாபகம் இருக்கு…எப்படி மறக்க முடியும்.. ஒவ்வொரு வாக்குறுதியும் மனசுல பதிஞ்சிருக்கு”

“இதுகூட முதல்வன் பட டயலாக் தான.. ரகுவரன் மாதிரி சொல்லி நக்கல் பண்றிங்க”

“என்னதான்டி உன் பிரச்சனை”

“என்கிட்ட நீ எப்படி பேசுவ.. நம்ம எப்படி இருந்தோம் எதாவது நியாபகம் வெச்சிர்கியா.. நான் அதெல்லாம் வேணும்னு பழைய போன் ரிப்பேர் பண்ணி பாக்கறேன்.. நிறைய மெசேஜ் காணோம்னு தேடிட்டு இருக்கேன்”

“ஏன் பீல் பண்ற.. என்ன காணோம்னு சொல்லு.. திரும்ப மெசேஜ் அனுப்பறேன்.. ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெச்சிக்கோ”

“நான் சொல்றது உனக்கு காமெடியா இருக்கா.. எப்போ உங்களுக்கு என் மேல லவ் குறைஞ்சது.. எப்போ உங்க ரசனைலாம் போச்சு.. எப்போ இந்த நக்கல் வந்துச்சு.. கல்யாணம் பண்ணப்பவா.. இல்லை மாசமானதுக்கு அப்புறமா.. டெலிவரி அப்புறமா.. இல்ல என்னை கூட இருந்து கிளீன் பண்ணி பாத்துக்கிட்டிங்களே அப்போவா… “

குரலில் அழுகையுடன் கேட்டுவிட்டு உள்ளே சென்றாள் பார்வதி. எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தான் யாழன்.

நான்கு ஆண்டுகளாகக் காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இப்பொழுது ஒரு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள்.

மகள் பிறந்ததில் இருந்து வீட்டிலேயே இருக்கும் பார்வதிக்கு காதலிக்கும் பொழுது இருவரும் வெளியில் சென்றது பேசிக்கொண்டது இதையெல்லாம் எண்ணி இப்பொழுது அப்படி இல்லையே என்ற ஏக்கம் வரும். அந்த ஏக்கத்தில் அடிக்கடி யாழனிடம் சண்டையிடுவாள்.

உண்மையில் யாழனுக்கும் பார்வதி மேல் பெருங்காதல் உண்டு. வருடங்கள் கடந்ததில் அவனுக்கு அதை வெளிகாட்ட நேரம் கிடைக்கவில்லை. முதிர்ச்சி ஏற்பட்டத்தில் வெளிகாட்டுவதும் குறைந்துவிட்டது. ஆனால் பார்வதி இன்றும் யாழனிடம் இருந்து காதல் வார்த்தைகளை எதிர்பார்ப்பாள்.

அலைபேசியில் இருவரும் பேசிக்கொண்ட பழைய குறுஞ்செய்திகளை யாழன் படிக்க ஆரம்பித்தான்.

‘இதுவரை எனக்கில்லை முகவரிகள்

அதை நான் கண்டேன் உன் புன்னகையில்

வாழ்கிறேன்….. நான் உன் மூச்சிலே…’

இப்படிப்பட்ட பல பாடல் வரிகளை இருவரும் பகிர்ந்து உள்ளனர்.

‘தேன் அலை சூழல் தேவதை நிழல் ‘

‘இந்த உப்பு காத்து இனிக்குது

உன்னையும் என்னையும் இழுக்குதே’

‘இந்த மீன் உடம்பு வாசன

என்னை நீ தொட்டதும் மணக்குதே

இந்த இரவெல்லாம் நீ பேசு

தலையாட்டி நான் ரசிப்பேன்’

பெரும்பாலான காதல் வரிகளை யாழன் தான் அனுப்பியிருந்தான்.

பல திரைப்படங்களைப் பற்றி பேசியிருந்தார்கள்.

அன்றாடும் நடந்தவைகள் சென்ற இடங்கள் சந்தித்த மனிதர்கள் உண்ட உணவுகள் பேசிய வார்த்தைகள் என எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்துள்ளனர்.

இப்பொழுது சூழல் மாறிவிட்டது. யாழனுக்கும் பார்வதி மேல் அலாதி பிரியம் உண்டு. தன்னையும் பிள்ளையையும் எப்படி பார்த்துக்கொள்கிறாள் என்று மெச்சுவான்.

விடிய விடிய மகள் விழித்திருந்தாலும் தொட்டில் ஆட்டித் தூங்க வைப்பாள். சலிக்காமல் பார்த்துக்கொள்வாள். குழந்தைக்கென உணவைத் தேர்ந்தெடுத்து பார்த்துப் பார்த்து சமைப்பாள். சமைத்த உணவை ஊட்ட தெருவில் நின்று வேடிக்கை காண்பித்து அக்கம் பக்கம் சுற்றி வருவாள். இப்பொழுதே அலைபேசியை காண்பித்து பழகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். அதற்காக அவள் போடும் உழைப்பு அசாத்தியமானது.

இவள் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் தான்.

ஆனால் இதை ஒவ்வொரு நாளும் எப்படி அவளிடம் சொல்ல முடியும். அப்படி சொல்வதும் நன்றாக இராதே என்பது யாழனின் எண்ணம். இதுதானே மெச்சுரிட்டி என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

பார்வதியும் இதை புரிந்துகொள்வாள். ஆனால் அடிக்கடி இப்படி சண்டையிட்டு தன் காதலை வெளிப்படுத்துவாள். இப்பொழுது ஏதாவது செய்து அவளை சமாதானம் செய்ய வேண்டுமே. யாழன் சிந்தித்தான்.

அவளிடம் சென்றான்.

“பாரு.. ஜூஸ் குடிக்கப் போலாமா”

காதலிக்கும் சமயத்தில் பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் சரி எதாவது பிரச்சனை என்றாலும் சரி இருவரும் உணவகத்திற்கு அல்லது பழச்சாறு அருந்த செல்வார்கள். அதே காதலோடு கூப்பிட்டான்.

“பாப்பா எழுந்துட்டா.. அவளுக்கு சாப்பாடு ஊட்டணும்.. அப்புறம் போய்க்கலாம்.. நீங்க போய் ஒர்க் பாருங்க” பார்வதியின் பதிலில் விழித்தான் யாழன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 20) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 6) – ஸ்ரீவித்யா பசுபதி