வாழ்க்கையை சுவையற்ற பண்டமாக ஆக்கிவிடும் பல மூடக் குணங்களில் முக்கியமான ஒன்று “பயம்”.
ஒரு திரைப்படத்தில் கமலஹாசன் சொல்வது போல் சிலர், “நின்றால் பயம்!… உட்கார்ந்தால் பயம்!… நடந்தால் பயம்!… படுத்தால் பயம்!” என்று எந்தவித காரணமும் இல்லாமல், எல்லாவற்றுக்கும் பயந்து பயந்தே வாழ்க்கையை ஓட்டுவார்கள். உண்மையைச் சொல்வதென்றால், இது போன்ற அர்த்தமற்ற பயத்திற்கும், பீதிக்கும் ஆளாகி தங்கள் வாழ்க்கையைத் தாங்களே நாசமாக்கிக் கொண்டோர் பல்லாயிரம் பேர் உண்டு.
இன்னும் சிலர் தங்கள் சொந்த வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலை காரணமாக, ஒரு நிரந்தர பயத்தை உள்ளுக்குள் சேமித்து வைத்துக் கொண்டே வாழ்வர். உதாரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர், தன் வேலை குறித்த பாதுகாப்பின்மைக்காக ஒரு கெட்டியான பயத்தை மனதிற்குள் நிரந்தரமாக்கிக் கொண்டு வாழ்வார். அரசாங்கப் பணியாளர்கள் கூட சில சமயங்களில் அரசியல் காரணங்களால் ஏற்படும் நிச்சயமற்ற நிலைக்காக பயந்திருப்பர். இந்த மாதிரியான வாழ்க்கைத் தொடர்புள்ள அச்சத்திற்கு தனி மனித பலவீனமே முக்கியக் காரணம். தனியார் நிறுவன ஊழியர் தன் திறமையைக் காட்டி அதன் மூலம் உயர்வை அடைவதை யாரால் தடுக்க முடியும்?. திறமைசாலிகளை எந்த நிறுவனம் இழக்கத் துணியும்?
அதே போல், எத்தனை அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அந்த மாற்றம் தெளிவாக… நேர்மையாக பணியாற்றும் அலுவலர்களை என்ன செய்து விடும்?… தன்னிடத்தில் தவறில்லை என்கிற போது தனியார் நிறுவன ஆளாக இருந்தாலும் சரி, அரசாங்க அதிகாரியாக இருந்தாலும் சரி, அச்சப்பட வேண்டிய அவசியமேயில்லையே.
அச்சம் அல்லது பயமானது மனிதனுள் ஏற்படும் ஒரு மன உணர்வு. இது மனிதனுள் சாதகமான விளைவுகளை மட்டுமல்லாமல் பல பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக, பயம் ஏற்படும் போது கவனமும் மூளையின் கூர்மை, துல்லியமும் ஒருமித்து, வேலை செய்து நல்ல ஆற்றலோடு, அந்த பயத்தை சந்திக்கக்கூடிய எல்லா வலிமையும் மனப்பக்குவத்தையும் ஏற்படுகிறது.
அதே சமயம் பலருக்கு பதற்றம், மன அழுத்தம், படபடப்பு மற்றும் நல்ல பல முயற்சிகளுக்கு தடையான தயக்கமும் ஏற்படுகிறது.
அடுத்து, மனவியல் அச்ச உணர்வு. இந்த மனவியல் அடிப்படையிலான அச்ச உணர்வு ஏழை… பணக்காரன் என்கிற வித்தியாசமின்றி எல்லோரிடமும் விரவிக் கிடப்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம். இந்த மனவியல் அச்சத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று உடற்பிணி பற்றிய அச்சம். சிலர் தங்களுக்கு இல்லாத பிணியை இருப்பதாக தாங்களே கற்பனை செய்து கொண்டு கவலையில் கிடப்பர். அந்தக் கவலையே அவர்களது உடல் நிலையைப் பாதிப்பது கூட அவர்களுக்குப் புரியாது. எங்காவது புற்று நோய் பற்றிப் படித்து விட்டு, தங்களுக்கும் உள்ளே புற்று நோய் இருக்குமோ? என்று எண்ணி எண்ணிக் கவலைப் படுவர்.
திருமணம் பற்றிய அச்ச உணர்வால் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறவர்களும் இருக்கிறார்கள். அதேபோல், கல்லூரி பற்றிய அச்ச உணர்வால் கல்லூரிப் படிப்பையே துறந்தவர்களும் உண்டு.
பயம் ஒரு விதமான கற்பனையினால் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் நடக்கப் போகிறவற்றை நினைத்தோ அல்லது ஏதோ ஒரு ஆபத்தை நினைத்தோ அல்லது வலி ஏற்படும் போதோ, மற்றும் சிலரது அறியாமையினாலும், சிலருக்கு குழப்பம் மற்றும் சந்தேகங்கத்திலும், பலவீனத்தினாலும், தைரியமின்மையினாலும் அச்சம் ஏற்படுகின்றது.
வாழ்க்கை எண்ணற்ற சவால்களால் நிறைந்தது. நாம் துணிச்சலுடன் அவற்றை எதிர் கொண்டால்தான் நமது பின்னடைவுகள் பின்னோக்கிச் சாயும்.
அச்சத்தால் ஏற்படும் தீமைகள்
அச்சம் அல்லது பயம் உருவாகும் அந்த நொடி… பயம் என்ற அந்த ஒற்றை உணர்வைத் தலைதூக்க வைக்க, நம் உடல் என்ன செய்கிறது? அது உருவாகும்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன?
ஓடி ஒளிதல் (hiding), செயல் முடக்கம் (freezing), நடுக்கம் (shivering), அழுகை (crying) எனப் பயம் பல வகைகளில் வெளிப்பட்டாலும், செயல் முடக்கம் என்பது மட்டுமே பெரும்பாலும் நடக்கும்.
ஒரு மனிதனின் மனதிற்குள் பயம் ஏற்படுத்தும் ஒரு காட்சியோ, கற்பனையோ, தோன்றி விட்டால், செயல் முடக்கம் இயல்பாக வந்து விடுகிறது. செயல் முடக்கம் வருகின்ற பொழுது வாழ்க்கையானது தோல்வியில் மட்டுமே முடிகிறது.
இதற்குக் காரணம், நம் பெருமூளை புறணி (Cerebral Cortex). சிந்தனை மற்றும் செயலுக்குக் காரணமான மூளையின் இந்தப் பாகம், எப்போதும் நம் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.
எதற்கெடுத்தாலும் அச்சப்படும் மனிதர்கள் வாழ்வில் தான் நினைத்த காரியத்தை முடிக்காமல் பாதியில் விட்டு விடுவதால் அவர்களது வாழ்க்கையானது இருட்டில் இருப்பது போல அமைந்து விடுகிறது ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்று அவர்கள் சராசரி ஆகவே வாழ்ந்து மறைந்து விடுகிறார்கள்.
அச்சப்படும் மனிதர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. அதுவே அச்சத்தை விடுத்து உச்சத்தைத் தொட்ட மனிதனின் வாழ்க்கையானது இந்த உலகமே கண்டு வியக்கும் அளவிற்கு ஆச்சரியக் குறியாக மாறி விடுகிறது என்பது நடைமுறை உண்மையாகும்.
அச்சப்படும் மனிதனின் வாழ்வில் தோல்வி, வேதனை, விரக்தி, கஷ்டம், மனக் கஷ்டம் என அனைத்துமே தோன்றுவதால் அவர்களின் வாழ்க்கையும் வளர்ச்சியும் வீழ்ச்சியை நோக்கி மட்டுமே செல்கிறது.
அதுவே அச்சப்படாமல் வாழும் மனிதர்கள் பதவி, பணம், பட்டம், புகழ், செல்வாக்கு என அனைத்து விதமான தளங்களிலும் வெற்றி வாகை சூடுகிறார்கள். அதனால், அவர்களது வாழ்க்கையானது வரலாற்றில் பாடமாக ஒரு படிப்பினையாக இந்த உலகத்திற்கு அமைகிறது.
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழும் சராசரி மனிதர்கள் அனைவருக்குமே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால், அவர்கள் அனைவருமே அச்சப்படுவதை தனது தொழிலாக கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு இருப்பதால் அவர்கள் வாழ்க்கை இந்த சமூகத்திற்கு கடுகளவும் கூட பயன் இல்லாமல் போய் விடுகிறது.
ஆடு மாடு போல உண்டு உறங்கி, ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம், என்று பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு வேடிக்கை மனிதனாகவே தனது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையை வரலாறு புறக்கணிக்கிறது.
சராசரி மனிதனாக வாழாமல் சாதனை மனிதராக இருக்கும் மனிதர்கள் அச்சத்தை உடைத்து, அச்சத்தை விடுத்து உச்சத்தைத் தொடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாறு எடுத்துக் கொள்ளப்படுகிறது, இந்த சமூகமானது சாதனை மனிதர்களின் வாழ்க்கையை போற்றிப் புகழ்கிறது..
அச்ச உணர்வினை அகற்றுவது எப்படி?
புதிய சவால்களை சந்திக்கத் துணிய வேண்டும். தோல்விகளையும், பலவீனங்களையும், யதார்த்தமாய் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்புக்களை வலியச் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். பயந்து நடுங்கும் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள சிறு சிறு குறைகளைக் கண்டு பிடித்து நாமே அவற்றைப் போக்கிக் கொள்ள வேண்டும். விமர்சனங்களுக்கும், எதிர்மறைக் கருத்துக்களுக்கும் செவி சாய்க்கக் கூடாது. அவசர முடிவுகளைத் தவிர்த்தல் வேண்டும். எந்தச் செயலையும் முக மலர்ச்சியுடன், அக விருப்பத்துடன் செய்தல் வேண்டும். நம்மைச் சுற்றி ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வாழ்வில் சாதித்த சரித்திரம் படைத்த, வரலாற்றில் நிலைத்த அனைத்து வெற்றியாளர்களும் அச்சத்தை தவிர்த்து, அச்சத்தை விடுத்து, அச்சத்தை மனதில் இருந்து துடைத்து, தான் நினைத்த செயலை நினைத்தவாறு முடித்தவர்களாக இருப்பார்கள். அதுவே வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள் அச்சத்தை தனது வாழ்நாள் முழுவதும் துணையாக கொண்டு வாழ்ந்தவர்களாக இருப்பார்கள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings