in ,

ஏட்டுச் சுரைக்காய் (சிறுகதை) – விடியல் மா. சக்தி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

         வெளிநாட்டிலிருந்து தருவித்த அந்த இயந்திரம் திடீரென பழுதாகி,  உற்பத்தியும் நின்று விட்டது. கந்தன் பத்தாம் வகுப்பு படித்திருந்தாலும், அந்த நிறுவனத்தின் பதினைந்து வருட பட்டறிவு இயந்திரவியலர். அவரது பட்டறிவினால், அந்த இயந்திரத்தை சரிபண்ண முயன்ற போதுதான், நிர்வாக இயக்குநர் இளங்கோ உள்ளே வந்தார். 

“ஏங்க. என்ன பண்றீங்க?” என்று கந்தனைப் பார்த்து கேட்டார். 

“சார், இதை சரிபண்ணலான்னு…. ” என்று கந்தன் முடிக்கும் முன்னரே இளங்கோ அவரை நோக்கி சொற்களை அறைந்தாற்போல வீசினார். 

“அறிவு இருக்கா உங்களுக்கு. இந்த இயந்திரத்தோட மதிப்பு என்னனு தெரியமா? இதோட புதிய தொழில் நுட்பத்தைப் பத்தியாவது தெரியமா?” 

“இல்ல…. சார் இது… “

“பேசாதீங்க. உங்கள யாருங்க இதை தொடச்சொன்னது. இந்த இயந்திரம் இந்தியாவிலேயே முதன்முதலா நாமதான் இறக்குமதி செஞ்சிருக்கோம். முழுவதும் ஜப்பானோட தொழில் நுட்பத்தில வடிவமைக்கப்பட்டது. உங்களுக்கு இதப்பத்தி ஒரு மண்ணும் தெரியாது. இதற்கான படிச்ச பொறியாளர்களை வரச்சொல்லியிருக்கேன், அவங்கனால மட்டும்தான் இதை சரிபண்ண முடியும். அதுக்குள்ள ஏதாவது பிரச்சனையப் பண்ணி வச்சுராதீங்க. அப்புறம் அந்த நிறவனத்துக்காரங்க ஒத்துக்க மாட்டாங்க. போங்க, போய் வேற வேலை இருந்தா பாருங்க” என்று விரட்டாகுறையாகச் சொன்னார். 

      கந்தனும் அவரின் வசைச்சொல்லை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்தார். அவர் சென்றவுடன் இளங்கோ தனது உதவியாளரிடம் கந்தனைப் பற்றிப் பேசினார். 

“சிவா நீயே சொல்லு, இவருக்கு என்ன படிப்பு இருக்குன்னு இந்த இயந்திரத்தை சரிபண்றேன்னு சொல்றாரு?” 

“இல்ல சார், அவருக்கு நல்ல பட்டறிவு இருக்கு அதனாலதான் முயற்சி பண்ணிருப்பாரு” 

“என்ன சிவா நீயும் ஒளர்ற, இதெல்லாம் படிச்சுட்டு பட்டம் வாங்குனவனே தெனறுவான், இவருனால எப்படி முடியுமுன்னு நெனைக்கிற. சரி அவரை மறுபடியும் இந்த இயந்திரத்தின் பக்கம் வராம பார்த்துக்குங்க” என்று கராறாகச் சொல்லிவிட்டு அவருடைய தனியறைக்குச் சென்றுவிட்டார். 

      இரண்டு நாட்கள் கழித்து பொறியியல் படித்த இரண்டு பேர் வந்து அந்த வெளிநாட்டு இயந்திரத்தைப் பழுதை சரிபார்க்கத் தொடங்கினார்கள். மூன்று நாட்கள் கழிந்து, நான்கு, ஐந்து நாட்கள் என்று நாட்கள் மட்டுமே நகர்ந்தது, ஆனால் இயந்திரம் தயாரான பாடில்லை. 

      இளங்கோ உதவியாளர் சிவாவை அழைத்து விசாரித்தார். 

“சிவா, என்ன ஆச்சு. இத்தனை நாளாகியும் இயந்திரம் தயாரான பாடில்லையே?” 

“சார் சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க, அந்த பொறியாளர்கள் ரெண்டு பேத்துக்கும் இந்த அஞ்சு நாள்ல, கிட்டத்தட்ட சம்பளம் மட்டும் ஒன்னரை இலட்சம் கொடுத்தாச்சு. அதில்லாம அவங்க தங்குறது, திங்குறதுன்னு சேர்த்து இதுவரை முப்பதாயிரத்துக்கு மேல ஆயிருச்சு. ஆனா இயந்திரத்தோட நிலமை மட்டும் அப்படியேதான் இருக்கு. “

” நீங்க என்ன சொல்ல வர்றீங்க சிவா? “

” சார் அவங்க என்னதான் படிச்சிருந்தாலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது சார். நீங்க மட்டும் சம்மதிச்சா, நம்ம கந்தன் இயந்திரவியலர விட்டு பார்க்கலாம் சார். அவரு முயற்சி பண்ணிப் பார்க்கட்டும்”

“என்ன சிவா சொல்றீங்க… சரி எப்படியோ பண்ணுங்க எனக்கு இயந்திரம் தயாராகி, உற்பத்தி ஆரம்பிச்சா போதும்” என்று அரைமனதுடன் சம்மதித்தார். 

      அடுத்த நாள் இரவுக்குள் இயந்திரவியலர் கந்தன், அவருடைய பட்டறிவினால் அந்த இயந்திரத்தின் பழுதை நீக்கி தயாராக்கினார். நின்று போயிருந்த உற்பத்தியும் தொடங்கப்பட்டது. 

      அதற்கடுத்த நாள் இளங்கோ அங்கே வந்தவர் கந்தனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். 

“கந்தன், நான் உங்களை குறைவா மதிச்சுட்டேன், படிச்சவங்கதான் பெரிசுன்னு தவறாப் புரிஞ்சுக்கிட்டேன். ஆனா அதைவிட பட்டறிவுங்கிறது எவ்வளவு பெரியதுங்கிறத உங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். என்னை பொறுத்தருளனும்” என்று மனமாரக் கேட்டுக் கொண்டார். 

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நினைக்கத் தெரிந்த மனமே! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 15) – தி.வள்ளி, திருநெல்வேலி