in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 22) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“எனக்கு பிரசவத்தை நினைச்சா பயமா இருக்கும்மா” அம்மா என்னை கேட்கும் முன்பே அழுவதற்கான காரணத்தை நானே கூறினேன்.

“அட கிறுக்கு.. பிறந்தநாள் அதுவுமா என்ன அலுவாச்சி”

“என்னால வலி தாங்க முடியுமா தெரில.. எனக்கு ஏதாவது ஆயிடுமோனு தோணுது”

“என்ன பேச்சு இது எல்லாரும் மாசமான வர பயம் தான். அதுக்குன்னு இப்படியா பேசுவ”

“தோணுது மா”

“இந்த சமயத்துல தான் தைரியமா இருக்கணும்”

“யாரை கேட்டாலும் ஆபரேஷன் இல்ல வேறெதாவது பிரச்சனை இருக்குனு சொல்றாங்க”

“உனக்கு நல்லதே நடக்கும். எது நடந்தாலும் ஏத்துக்கோ”

“ஹாஸ்பிடல் போகவே பயமா இருக்கு”

“நிறைய மாறி போச்சு தான் கவி.. அப்போல்லாம் மாசமான டெலிவரிக்கு மட்டும் தான் ஹாஸ்பிடல் போவோம் இப்போ அப்படியா.. “

“எத்தனை ஸ்கேன் செக் அப் இருக்குமா”

“குழந்தை இல்லாம எவ்ளோ பேரு ஹாஸ்பிடல் போறாங்க.. இப்போ எத்தனை கருத்தரித்தில் மையம் வந்துடுச்சி.. அதுக்கு என்ன சொல்லுவ.. கடவுள் உனக்கு இயற்கையா குழந்தைய குடுத்துருக்காருன்னு சந்தோசப்படு”

“ஆமாமா அத நான் நிறைய தடவ நினைச்சிருக்கேன். கடவுளுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லியிருக்கேன்.. எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் அமையனும்”

“கடவுள் கண்டிப்பா குடுப்பாரு.. இல்லன்னா வேற எதாவது காரணம் இருக்கும்”

“காலம் மாறிப்போச்சுனு ஒரு பக்கம் பயம் இருந்தாலும்.. இப்போ இருக்க மாடர்ன் மெடிசின் எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் தருதுன்னு நினைக்கும்போது ஒரு பக்கம் சந்தோசமாவும் தான் இருக்கு”

“ஒரு நல்லதுன்னா ஒரு கெட்டதும் இருக்கும்.. நீ அதையும் இதையும் யோசிக்காம தூங்கு”

“எனக்கு சுகப்பிரசவம் ஆகுமா”

“நல்லா சாப்புடு.. நல்லா வேலை செய்.. ஆகும்”

“ஒருவேளை ஆபரேஷன்னு சொல்லிட்டா நீங்க ஒத்துக்காதீங்க”

“அந்த நேரத்துல பாத்துக்கலாம்.. குழந்தைக்காக சொன்னா என்ன பண்ணுவ.. அப்போ பாத்துக்கலாம்.. நீ நல்லதா நினை.. இப்படி ஆயிடுமோ அப்படி ஆயிடுமோனு நினைக்காத.. உன்னை பத்திரமா பாத்துக்குவோம்.. பயப்படாதா.. அப்படிலாம் விட்ற மாட்டோம்”

“சரிம்மா..” அம்மாவை அணைத்துக் கொண்டு அவர் கதகதப்பில் உறங்கிப் போனேன்.

தண்ணீர் சத்தம்.. பாத்திரம் உருட்டும் சத்தம்.. பேச்சு சத்தம் இவையெல்லாம் மெல்லியதாய் கேட்க எழுந்து பார்த்தேன்.

ஓ! விடிந்து விட்டது. நல்ல உறக்கம்.

“என்ன எல்லாரும் ரெடியா இருக்கீங்க.. என்னையும் எழுப்பிருக்கலாம்ல”

“நைட் தூங்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. நீயும் அசந்து தூங்கிட்டு இருந்த அதான்”

“பொங்கல் வெச்சிட்டீங்களா”

“இல்லை டி.. அதுக்கு தான் எடுத்துட்டு போய்ட்டு இருக்கோம்”

“அடுப்பு பெத்த வைங்க.. நான் பத்து நிமிஷத்துல தயாராகி வந்தட்றேன்”

“வா வா.. நாங்க போய் அடுப்பு பெத்த வெச்சிட்டு இருக்கோம்”

அம்மா, அப்பா, தங்கை மூவரும் மாடிக்குக் கிளம்பினார்கள்.

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதற்காக உறங்கட்டும் பாவம் என்று விட்டார்களா தெரியவில்லை. சிறுவயதில் இருந்தே பண்டிகை நாட்களில் என் தங்கை முதலில் எழுந்து கொள்வாள். தீபாவளி என்றால் முதலில் எழுந்து எண்ணெய் தேய்த்து கொண்டு எனக்கு முன் குளித்து தயாராகி விடுவாள்.

பிறகு தான் என்னை எழுப்புவாள். அப்படி பண்டிகை நாட்களில் முதலில் தயாராகிக் கொள்வதில் அவளுக்கு எப்பொழுதுமே ஒரு ஆர்வம் உண்டு.

அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். மணி ஆறு. ஆதியை நினைத்தேன். அவரை அழைத்து என்ன செய்கிறார் என்று கேட்க நினைத்தேன். பின் வேண்டாம் என்று எண்ணி குளிக்கச் சென்றேன்.

குளித்து முடித்து வந்ததும் ஆதி குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததை பார்த்தேன். உடனே அவரை அலைபேசியில் அழைத்தேன்.

“ஹாப்பி பர்த்டே கவியினியாள்”

“தேங்க் யூ ஆதி”

“பர்த்டே கேர்ள் என்ன பண்றா”

“இப்போதான் குளிச்சிட்டு வந்தேன்.. நீங்க ரெடியா?”

“நானும் குளிச்சிட்டேன். நீ தூங்குறயோன்னு உனக்கு கூப்படல”

“சரி வீட்டுக்கு வாங்க.. பொங்கல் வெக்கலாம்”

“வரேன்டி.. பத்து நிமிஷத்துல வந்தட்றேன்”

நானும் மொட்டை மாடிக்குச் சென்றேன்.

கொதித்துக் கொண்டிருந்த உலையில் அம்மா அரிசியைப் போட்டார். அப்பா அடுப்பை அணைய விடாமல் விறகு குச்சிகளை போட்டுக் கொண்டிருந்தார். தங்கை கரும்பு வைத்து சுற்றியும் அலங்கரித்தாள். நானும் அவர்களுக்கு உதவி செய்தேன்.

பச்சரிசியும் பாசிப்பருப்பும் வெந்து ஒரு கொதி வந்து பொங்கியது. பின் உடைத்த வெல்லத்தை இன்னொரு முறை நுனுக்கி அதோடு சேர்த்தார் அம்மா. நானும் உடன் சேர்ந்து பொங்கலை கிண்டிவிட்டேன். அனல் என் மேல் வீசியது இதமாய் இருந்தது.

ஒரு சின்ன குழிக் கரண்டியில் நெய் ஊற்றி அது உருகியதும் அதில் முந்திரி திராட்சை சேர்த்து நேரடியாக அடுப்பில் காண்பித்தார். விறகுக்கு பக்கத்தில் காட்டியதில் நன்கு பொறிந்து வந்தது. மேலே தவலையில் அதையும் சேர்த்தார். வாசனை உடலெங்கும் பரவியது.

பொங்கல் தயாராவதற்கும் ஆதி வருவதற்கும் சரியாக இருந்தது. பொங்கல், கரும்பு, மஞ்சக்கொம்பு எல்லாம் வைத்து படைத்தோம். சாமி கும்பிட்டோம்.

படைத்து முடித்ததும் சுடச்சுட பொங்கலை இலையில் போட்டுக் கொடுத்தார் அப்பா. இலையே நிறம் மாறும் அளவிற்கு சூடாக இருந்தது. ஒரு வாய் எடுத்து வைத்தேன். நெய்யின் மணம் இலையின் சுவை முதலில் தெரிந்தது. பின் வெல்லத்தின் இனிப்பு விறகின் வாடையோடு பொங்கலை மெல்லும் பொழுது திராட்சையும் முந்திரியும் கடிபட்டது. மொத்தத்தில் வெறும் வயிற்றில் தேவாமிர்தமாய் இறங்கியது பொங்கல்.

பொங்கல் சாப்பிட்டு முடித்ததும் கோவிலுக்குச் சென்று வந்தோம். நாங்கள் வருவதற்குள் காலை உணவு தயாராக இருந்தது.

இட்லி, வெண்பொங்கல், சட்னி, சாம்பார் கொஞ்சம் சக்கரை பொங்கலையும் இலையில் வைத்தார் அம்மா.

“புள்ளத்தாச்சி அடிக்கடி பசிக்கும்.. கொஞ்சம் கொஞ்சமா எப்போ வேணுமோ போட்டு சாப்பிடு”

“சாப்பட்டுறேன் மா”

தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நிகழ்ச்சி ஓடும் சேனலை போட்டேன். ஆதி அதை மாற்றி திரைப்படம் ஓடும் சேனலை போட்டார்.

விளம்பரம் வந்த பொழுது நான் பாடல் ஓடும் சேனலை மாற்றினேன். அவர் நான் கேட்ட பழைய பாடலை மாற்றி புது பாடலை வைத்தார்.

“உனக்கும் எனக்கும் எதாவது ஒத்துப் போகுதா ஆதி.. ஒரு பாட்டுல கூட உனக்கும் எனக்கும் ஒத்துப் போகல.. என்னை எதுக்கு கல்யாணம் பண்ண?” சற்று கோபமாகவும் வம்பிழுக்கும் விதமாகவும் கேட்டேன்.

“எதுவும் ஒத்துப் போகக் கூடாதுன்னு தான் உன்னை கட்டுனேன்” ஆதி இப்படி கூறியது எனக்கு வெட்கத்தை வர வைத்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

“டிவி சேனல் மாத்தவா சண்டை இரண்டு பேரும் போட்றீங்க.. சின்ன புள்ளத்தனமா.. பர்த்டே கிப்ட் எங்கன்னு கேட்டு சண்டை போடு” என்றாள் அமுதினி.

“கிப்ட் கேக்கற வயசா.. அதுதான் இன்னும் குழந்தைதனமா இருக்கும்” என்று கூறினாலும் உள்ளுக்குள் மனம் பரிசுக்காக ஏங்கியது.

ஆதி இதை புரிந்து கொண்டு எனக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பாரா?

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 21) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 23) – ரேவதி பாலாஜி