இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மறுநாள் “தினமுரசு சினிமா பக்கத்தில் பரபரப்பு செய்தி,நடிகை தேவிஶ்ரீ ஜெய்பூரில் காதலனுடன் உல்லாசம். அந்த இளம் காதலர் யார், நமது ராஜஸ்தான் நிருபரின் விரிவான செய்தி உள்ளே” என தமிழ் நாட்டின் பொட்டிக் கடைகளில் தலைப்பு செய்தி போஸ்டர்கள் கயிற்றில் தொங்கின.
இந்த செய்தி நாயுடுகாரின் காதுக்கும் எட்டியது, அவருக்கு இந்த செய்தி பெரிதாக பாதிக்கவில்லை, தன் படம் ஒழுங்காக முடிந்தால் போதும் என்ற நினைப்புதான் தலை தூக்கியது. அதற்கு காரணமும் இருந்தது, தேவிஶ்ரீன் தாயாரின் டிமாண்ட் நாளுக்கு நாள் எகிறுவது அவருக்கு பிடிக்கவில்லை.
அது மட்டுமில்லை பம்பாயிலிருந்து புதிதாக இளம் நடிகை சல்மாவை க்ரூம் பண்ணி நடிக்க வைப்பதாக அவளுடைய குடிகார தகப்பனுடன் பேரம் பேசி பெருந்தொகை அட்வான்சாக கொடுத்து விட்டார். தேவிஶ்ரீயை கட் பண்ணிவிட ஏற்கனவே முடிவு எடுத்ததுதான். உண்மையை சொன்னா இந்த தேவிஶ்ரீன் காதல் செய்தி அவருக்கு அனுகூலம்தான்.
இந்த செய்தி அறிந்து உண்மையில் பதறிப் போனது தேவிஶ்ரீன் தாயார்தான். இது உண்மையா இருந்தா இண்டஸ்ட்ரியில் கால் ஊன்ற தொடங்கியிருக்கும் இந்த வேளையில் மகளின் மார்க்கெட் போயிடுமேனு. மாந்தோப்பு பத்திரப் பதிவுக்கு நாயுடுகாரு உதவவில்லை ஏதோ கேஸ்னு காரணம் சொல்லி பின் வாங்கிட்டார்.
தனியே ராஜஸ்தான் போகவும் பயம் பெண்ணுக்கு போன் செய்தால் வேறு யார் யாரோ அடெண்ட் பண்ணுகிறார்கள், அவள் பேசவில்லை. பயம் மெதுவே மெதுவே பற்றிக் கொண்டது.
விழுப்புரம் அந்த பெண்கள் கல்லூரியின் கல்சுரல் விழாவுக்கு இன்னும் 10 நாள்தான் இருக்கு.அந்த விழாக் குழுவில் ஏழு காமர்ஸ் பைனல் இயர் பெண்கள், ஜூனியர் லெக்சரர். மரியம் மேரி அன்று இந்த 8 பேரும் ஒரு காலியாயிருந்த கிளாஸ் ரூமில் கல்லூரி நேரத்துக்கு பிறகு கூடினார்கள்.ஏறக்குறைய எல்லா நிகழ்ச்சிகளும் முடிவாகி ரிகர்சல் நடக்கிறது. தலைமை வகிக்க ஒரு பட்டி மன்ற பேச்சாளரை அழைக்கலாமா, பெயர் பெற்ற எழுத்தாளரை அழைக்கலாமா என விவாதம்.
அந்தக் குழுவின் அமலா, ஒரு நடிகரையோ நடிகையையோ அழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். தமிழரசியோ எழுத்தாளர்தான் வேண்டும் என அடம் பிடித்தாள், பட்டிமன்ற பேச்சாளர்களில் யாரை கூப்பிடுவது என்றும் விவாதம் நடந்தது.
அமலா,” இந்த ஞாயிற்றுக்கிழமை நம்ம பழைய முனிசிபல் ஆபீஸ் பக்கத்துல இருக்கற ராசி கல்யாண மண்டபத்துல நடிகர் வினீத் குமார், நடிகை வனிதா, டைரக்டர் ராஜமாணிக்கம் எல்லாரும் வராங்க. தீபாவளி ரிலீஸ் ‘ சினம்’ பட புரோமோஷனுக்காக. என் அண்ணன்தான் மண்டபத்துல மேனேஜர். டிரை பண்ணினா வினீத்குமாரை மீட் பண்ணி சிறப்பு விருந்தினரா கூப்பிடலாம்.
“பட்டிமன்ற பேச்சாளர் ஶ்ரீரங்கன் விழுப்புரத்து காரர்தான், அவர் வர முடியுமானு கேட்டு ஃபிக்ஸ் பண்ண நீ லீட் எடுத்துக்கோ தமிழ்செல்வி”, இது அவர்களை கைட் செய்யும் உதவி லெக்சரர் மரியம் மேரி. எழுத்தாளர் யார் கிடைக்கறாங்க பாக்கணும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.
அந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரா கிராம மக்கள் அனைவரும் ராசி கல்யாண மண்டபத்தை மதியம் 3 மணியிலிருந்தே முற்றுகை இட்டனர்.4 மணிக்கு இலவச டோக்கன் வழங்கப் படும். 6 மணிக்கு ‘சினம்’ பட புரொமோஷன் புரொக்ராம். அந்த படத்தில் வேலை செய்த அனைவரும் வருகிறார்கள்.
பட டீசர் கூட யுட்யூப்ல வெளியிடப்படலாம் என ரூமர் இருந்தது.
நம் அமலாவும் அவளோட காலேஜ் கல்சுரல் கமிட்டி பெண்கள் ஆறு பேரும், குழு கைட் மரியம் மேரியும் அமலாவின் அண்ணன் உதவியால் 5 மணிக்கே மண்டபத்துக்கு உள்ளே வந்தார்கள். சுமார் 5.45 திரைப்பட குழுவினர் மண்டபத்தின் பின் வழியே உள்ளே வந்தனர்.
அமலாவின் அண்ணன் கல்பேஷ், தங்கையையும், அவள் கூட வந்தவர்களையும் வினீத்குமாரை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
அமலா, “வணக்கம் சார், நாங்க இங்க அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள். எங்க கல்லூரி கல்சுரல் விழாவுக்கு நீங்க சிறப்பு விருந்தினரா வரணும்.”
வினீத்,” அச்சோ நான் எந்த விழாவிலும் பேசினதே இல்லைம்மா. எத்தனையோ அறிஞர்கள், தலைவர்கள் இருக்கறப்ப அவங்களை கூப்பிடுங்க அதான் நல்லது”
அமலா, “இல்லை சார் நாங்க எல்லாரும் உங்க ரசிகைகள் நீங்க கட்டாயம் வந்து கலந்துக்கணும் ஓரிரு வார்த்தை பேசினா போறும், அரை மணி நேரத்துல உங்களை திருப்பி அனுப்பிடறோம்”
அமலாவை இப்பதான் சரியா பாத்தான் வினீத். அவளுடைய ஏதோ ஒன்று அவனை கவர்ந்தது, “ உன் பேர் என்ன சொன்னே”
“நான் அமலா சார், இவ தமிழ் செல்வி, இது லல்லி, வினிதா, சாரா, எஸ்தர், புஷ்பா. இது எங்க கைட் லெக்சரர் மிஸ் மரியம் மேரி”
எல்லாருக்கும் வணக்கம் சொன்னான் வினீத் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தான். விழா மேடையில் உள்ள ஆசனத்துக்கு போய் விட்டான்.
அனைவருக்கும் அவன் பதில் சொல்லாமல் போனதில் மிகுந்த வருத்தம். அமலா அண்ணனிடம் ”ஏண்ணா அவங்களுக்கு கூல் டிரிங்க் ஏற்பாடு பண்ணலையா?”
ஏன் இல்லை ஃபேண்டா கொடுக்க எடுத்துட்டு வரான் பாரு.அமலா ஓடிப் போய் ஒரு ஃபேண்டா பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டாள்.நிதானமாய் நடந்து வினீத் அருகில் போய் “சார் டிரிங்க்”
திரும்பி அமலாவை பாத்து புன்முறுவல் செய்த வினீத்,” கொடுங்க”
அவள் தயங்கி நிற்பதை பாத்த வினீத், “உனக்காகவே வரேன் அமலா” என்றான். ஷர்ட் பாக்கெட்டில் இருந்து தன் கார்டை எடுத்து கொடுத்தான் “தேதி, விவரங்களை அனுப்பு உன்னை பாக்க திரும்பி வரேன் தனியா”
“என்னை பாக்கவா”
கவர்ச்சியா கண் சிமிட்டி தலை அசைத்தான், வினீத்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings