in ,

கட்சியும் பதவியும் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தங்கமணி, “இன்னைக்கு ஆபீஸ் முடிந்ததும் அப்படியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போய் ராத்திரி 8.30 மணி பஸ்ல நான் திருச்சி போறேன். அங்க எங்க தலைவர் தேர்தல் மீட்டிங் இருக்கு. மீட்டிங் முடிந்து திரும்பி வர பஸ் கிடைக்குமான்னு தெரியல. அதனால என்னை எதிர்பார்க்காதே.. காலைல கிளம்பினா சென்னை வருவதற்கு சாயங்காலம் ஆகிடும். பசங்களை நீயே காலைல ஸ்கூலுக்கு அழைச்சினு போய் விட்டுட்டு, திரும்ப மாலையில அழைச்சிட்டு வந்துடு என்ன சரியா?” என்று தாமோதரன் தன் மனைவியிடம் கூறினார்.

“ஏங்க மாச கடைசியில தேவையில்லாத செலவு?, இந்த மீட்டிங்குக்கு போக வர குறைந்தது ஒரு ஆயிரம் ரூபாய் ஆகும், இது தேவையா?, ஆமாம் உங்ககிட்ட ஏது பணம் ” என்று அவன் மனைவி தங்கமணி கேட்டாள்.

“ஆபீஸ்ல கூட வேலை செய்ற நண்பர்கிட்ட ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். தங்கமணி.., நான் எங்க கட்சியின் நகர செயலாளர். நான் மீட்டிங்க்கு போவது தெரிஞ்சாதான் என் கீழ இருக்கிறவங்க மீட்டிங்கில் வந்து கலந்துப்பாங்க, தவிர எல்லாரும் குடும்பத்தோட கண்டிப்பாக வந்து கலந்துக்க வேணும்னு தலைவர் வேற சொல்லியிருக்காரு, அதனால் நம்ம குடும்பத்திலயிருந்து நான் மட்டுமாவது போகணும் இல்லையா?” என்று கேட்டார் தாமோதரன்.

“ஏங்க கடன் வாங்கியாவது குடும்பத்தோட கலந்துக்க இது என்ன சொந்தகாரங்க வீட்டு விசேஷமா..? கூட்டம் சேர வேண்டி உங்க தலைவர் சொல்லியிருக்காரு..!, நீங்க போனாலும் போகாட்டாலும் மீட்டிங் நடக்க தான் போகுது” என்று கூறினாள் தங்கமணி.

“அதில்லை தங்கமணி, நான் கட்டாயம் வரதா எங்க ஆளுங்கிட்ட சொல்லி அனுப்பியிருக்கேன், என்னை எதிர்பார்ப்பாங்க, அதான்..” என்று கூறினார் தாமோதரன்.

“நமக்கு வர வருமானத்துக்கு, இந்த கட்சி, மீட்டிங், பதவி இதெல்லாம் தேவையா? உங்களுக்கு ஏதாவது நடக்க கூடாத ஒன்னு நடந்தா, உங்க கட்சியா எங்க மூணு பேரையும் காப்பாத்தும்..? போன மாதம் உங்க கட்சியில இருந்த முக்கிய பிரமுகர் ஒருவர் உங்க கட்சி மாநாட்டுக்கு வேலைக்காக இரண்டு நாட்கள் முன்னதாக போய், மாநாடு முடிந்து வீட்டுக்கு வர வழியில மாரடைப்பால இறந்து போனதா பேப்பர்ல கூட வந்ததே, அவர் இறந்த போன அன்னைக்கு மாலை போட கூட வரல உங்க தலைவரு, வெறும் இரங்கல் அறிக்கை மட்டும் விட்டாரு. இப்ப உதவி பண்ண யாரும் இல்லாம அவங்க குடும்பம் சாப்பாட்டுக்கு கூட கஷ்டபடறாங்களாம், போன வாரம் மார்க்கெட்ல அவரு மனைவி என்னைப் பார்த்து உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுக்க சொல்லும்மானு சொன்னாங்க. இப்பல்லாம் உங்க கட்சிக்காரர்கள் யாரும் அவங்க வீட்டு பக்கமே வரதில்லையாம்..! அவங்கள பார்க்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு” என்று தங்கமணி கூற,

“அப்படியா..? கட்சி தலைமை ஏதோ நிதி உதவி பண்ணதா கேள்விபட்டேனே?” என்று தாமோதரன் கூற,

“அட நீங்க வேறங்க..?, நானும் இதை தான் அவங்ககிட்ட கேட்டேன். கட்சி தலைமை பத்தாயிரம் தருவதாக சொல்லியிருக்காங்க.., போயிட்டு வர செலவுக்கு ஒரு இரண்டாயிரம் கொடுத்தா தலைமையிடம் போய் கேட்டு வாங்கி வருவேன்னு உங்க கட்சிக்காரன் ஒருத்தரு அவங்ககிட்ட இரண்டாயிரம் ரூபாய் வாங்கின்னு போய், திரும்பி வந்து ஐந்தாயிரம் தான் தலைமை கொடுத்தாக சொல்லி கொடுத்துட்டு, அதில ஒரு ஐநூறு ருபாய் கேட்டு வாங்கின்னு போயிட்டாராம்” என்று தங்கமணி கூறினாள்.

” அடப்பாவமே..!” என்று தாமோதரன் கூற,

“பணம் ,சொத்து, சுகம், இருக்கிறவங்களுக்கும், வேற, வேற வழியிலே வருமானம் வரவங்களுக்கும் தாங்க கட்சி, பதவி எல்லாம் சரிபட்டு வரும். நம்மை போல மாத சம்பளத்தை எதிர்பார்த்து குடும்பம் நடத்துபவர்களுக்கு ஒத்துவராதுங்க”.. என்று ஒரு அறிவுரை கூறினாள் தங்கமணி.

“நீ சொல்றதை பார்த்தா எனக்கு கூட கட்சி, பதவி எல்லாம் தேவையானு தான் தோணுது..! ஆனா தீடீர்ன்னு கட்சி, பதவி வேண்டாம்னு சொன்னா.. கட்சியில தப்பா நினைப்பாங்க, நம்பவும் மாட்டாங்க. இங்க இருக்கிறவங்க நான் வேற கட்சிக்கு மாற போவதாக புரளி கிளப்பிடுவாங்க, என்ன செய்யலாம்?” என்று தாமோதரன் கேட்க

“நீங்களா கட்சி, பதவி எதுவும் வேண்டாம்னு சொன்னா தானே நம்ப மாட்டாங்க.. தப்பா பேசுவாங்க.. இரண்டு மாசத்துக்கு கட்சி வேலை எதிலேயும் ஈடுபாடு காட்டாம இருங்க, கேட்டால் உடம்பு சரியில்லை, கம்பெனியில வேலை பளு அதிகம்னு சொல்லுங்க.. தலைமையிடம் வேற ஆளை உடனே போட்டுறுவாங்க,  அப்படி இல்ல, உங்க எதிர் கோஷ்டியில இருக்கிறவங்க தலைமைகிட்ட போய் உங்கள பத்தி சொல்லி, உங்க பதவியை கேட்டு வாங்கிப்பாங்க , ‘அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலி ஆகும்னு’ நினைக்கிறவங்க தான் இப்ப பல கட்சியில் இருக்கிறாங்க, பயப்படாதீங்க..” என்று பலமாக யோசனை கூறினாள் தங்கமணி.

“தங்கமணி இத்தனை நாளா உன்னை ஏதோ ஒன்னும் தெரியாத ஆளுன்னு தான் நினைச்சிகிட்டிருந்தேன், ஆனா அரசியலலைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கியே..!” என்று ஆச்சரியத்துடன் கூறினார் தாமோதரன் .

தங்கமணி கூறியபடியே இரண்டு மாசம் கட்சி பணி எதுவும் பார்க்காமல் , கட்சி அலுவலகத்திற்கு போகாமல் இருந்தார் தாமோதரன். இதை பயன்படுத்திக் கொண்டு தாமோதரன் சார்ந்துள்ள கட்சியின் எதிர் கோஷ்டியை சேர்ந்த ஒருவர், கட்சியின் தலைமையிடம் சென்று  தாமோதரனைப் பற்றி கூறி நகர செயலாளர் பதவியை பெற்று கொண்டார்.

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாலாவின் கல்யாணம் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    அன்பு தலைவர் திரைப்படம் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்