in ,

வரட்டி மனிதர்களும், வைரப் பசுக்களும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

            “ஒரு நாளு ரெண்டு நாளு இல்லை… சுத்தமா முப்பது வருஷம் அந்தப் பண்ணை வீட்டு மாட்டுக் கொட்டாய்ல மாடுகளோட மாடா… சாணியோட சாணியா… மூத்திர நாத்தத்துல பொரண்டு கெடந்த என்னைய… நான் பார்க்கப் பொறந்து வளர்ந்த பயல் “போய்யா வெளிய” ன்னுட்டான்… நன்னி கெட்ட நாதாறிப்பயல்…”

            திண்ணையில் அமர்ந்து தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்த மாரியை அவன் மனைவி வீராயி ஓரக்கண்ணால் கவனித்தபடியே வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள்.

            “ஏண்டி… இங்க ஒரு மனுஷன் கெடந்து பொலம்பறானே… என்ன?… ஏது?ன்னு ஒரு வார்த்தை கேக்கத் தோணலையாடி உனக்கு?” அவள் வாயைக் கிண்டினான்.

            “ஆஹா… நான் கேட்டுட்டாலும்… நீங்க சொல்லிட்டாலும்” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் வெளியே “என்ன மச்சா… என்ன ஆச்சு,.. எதுக்கு இப்படிப் பொலம்பித் தள்ளுறே?” கேட்டு வைத்தாள்.

            “கொஞ்சம் ஏமாந்துட்டேன்… கன்னுக்குட்டி வயிறு முட்டப் பாலு குடிச்சிடுச்சு… அதனால மாடு கொஞ்சம் கொறைச்சலா பாலு கறந்துடுச்சு… அதைப் போயி பெரிய குத்தமாப் பேசிக்கிட்டு என்னைத் துரத்தி விட்டுட்டான் இந்த சின்னப் பண்ணை… இவனுக்குத் தெரியுமா… அந்தப் பண்ணை வீட்டுக்கு நான் எத்தனை வருஷமா… எவ்வளவு விசுவாசமாப் பாடுபட்டிருக்கேன்னு?.. ஹூம் நாளைக்கு வேற மாட்டுப் பொங்கல்… அந்த மாடுகளைக் குளிப்பாட்டணும்… கொம்புகளுக்குச் சாயம் பூசணும்… கழுத்துக்குப் புது மணி வாங்கிக் கட்டி விடணும்… யாரு பண்ணுவா?.. பாவம் அந்த வாயில்லா ஜீவன்க”

            “அடக் கெரகமே…” என்று வாய் பொத்தி அங்கலாய்த்தவள் “அதெப்படி…பெரிய பண்ணை உங்களை அவ்வளவு சீக்கிரத்துல விட்டுட மாட்டாரே”

            “அந்த மவராசன்தான் ஒடம்பு சரியில்லாத போயி… பட்டணத்துக்கு மருத்துவத்துக்கு போயிருக்காரே”

            அப்போது

            “ஜல்…ஜல்” என சலங்கைச் சத்தம் மெலிசாகக் கேட்க இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு கூர்ந்து கவனித்தனர்.   கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டே வந்த அந்தச் சலங்கைச் சத்தம் மாரியின் உள்ளுணர்வை உசுப்ப முகம் பிரகாசமானது.  “ஆஹா…இது என்னோட மாடுகளோட சலங்கைச் சத்தமாச்சே”

            வேகமாய்ப் பாய்ந்து சென்று தெருவில் இறங்கிப் பார்த்தான்.  கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து மாடுகள் நிதானமாய் ஒன்றன் பின் ஒன்றாக அவன் வீட்டை நோக்கி நடந்து வர,

            “அட… இதுக எல்லாம் நம்ம பண்ணை வீட்டு மாடுகளாச்சே… இதுக எப்படி… இங்க?” யோசனையுடன் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டான்.

            வந்து கொண்டிருந்த மாடுகளனைத்தும் அவன் வீட்டின் முன் வந்ததும் சொல்லி வைத்தாற் போல வரிசையாகப் படுத்து விட, மாரியும் அவன் மனைவியும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

            “ம்ம்ம்ம்மா…”என்று ஒரு மாடு கத்தலைத் துவங்க, தொடர்ந்து எல்லா மாடுகளும் கத்த ஆரம்பித்தன.

            அந்த ஐந்தறிவு ஜீவன்களின் அடிவயிற்றுக் கத்தலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மாரி நெகிழ்ந்து போனான்.  “அடியேய்… அடியேய்… இதுக என்ன சொல்லுதுக..ன்னு புரியதாடி உனக்கு?”

            அவள் இட,வலமாய்த் தலையாட்ட,

            “ஏய்யா… எங்களை விட்டுட்டு வந்தே?… எங்களுக்கு நீதான் வேணும்… வா… வந்து எங்களுக்கு அலங்காரம் பண்ணி விடு… நீ பண்ணி விட்டாத்தான் நாங்க பண்ணிக்குவோம்… வேற யாரு வந்து தொட்டாலும் கொம்பால குத்தித் தள்ளிடுவோம்…”ன்னு கதறுதுகடி… என் கண்மணிக!…பார்த்தியாடி இந்த அஞ்சறிவு பிராணிகளுக்கு இருக்கற நன்னி விசுவாசம் கூட அந்தச் சின்னப் பண்ணைக்கு இல்லையேடி” கண்களில் நீர் மல்க ஓடிச் சென்று ஒவ்வொரு மாட்டையும் ஆசை தீரத் தடவித் தடவி மகிழ்ந்தான் மாரி.

            “அய்யய்யோ… இப்ப என்னங்க பண்றது?… ஏற்கனவே சின்னப் பண்ணை உங்க மேல ரொம்பக் கோவத்துல இருக்காரு… இப்ப மாடுக வேற நம்ப வீட்டுக்கு வந்திடுச்சுக… போச்சு..போச்சு… பெரிய ரகளையாகப் போவுது…” பயந்து நடுங்கினாள் வீராயி.

            அவள் பயத்தை அதிகப்படுத்துவது போல் பண்ணை வீட்டு இரட்டை மாட்டு வண்டி அதிரடியாய் வந்து நின்றது.

            அந்த நிமிடத்தில் மாரியே கொஞ்சம் மிரண்டுதான் போனான்.

            வண்டியிலிருந்து சின்னப் பண்ணை இறங்க,

            வாய் உலர்ந்து போனது மாரிக்கு …

            கூடவே பெரிய பண்ணையும்  இறங்க,

            தாயைக் கண்டு விட்ட குழந்தையைப் போல் “அய்யா..அய்யா.” என்று கத்தியபடி ஓடிச் சென்று அவர் கால்களைக் கட்டிக் கொண்டு கதறினான் மாரி.

            குனிந்து அவன் தோள்களைத் தொட்டுத் தூக்கிய பெரிய பண்ணை “அழாத மாரி… அழாத… எல்லா விஷயமும் கேள்விப் பட்டேன்… சின்னப் பண்ணைக்கு இளம் வயசில்ல… வேகம்… அதான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டாரு… இப்ப நல்லா புரிஞ்சுக்கிட்டாரு… அதான் அவரே உன்னையக் கூட்டிட்டுப் போக நேர்ல வந்திருக்காரு”

            திரும்பி தன்னை மிரட்சியுடன் பார்த்த மாரியிடம் தலையாட்டி தன் சம்மதத்தை சின்னப் பண்ணை தெரிவிக்க,

            பெரிய பண்ணையின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு “அய்யா எனக்குத் தெரியும் அய்யா… உங்களாலதான் அவரு மனசை மாத்த முடியம்ன்னு எனக்குத் தெரியும் அய்யா” என்ற மாரியிடம்,

            “அதான் தப்பு… உண்மையிலேயே அவருக்குப் புரிய வெச்சது… நானல்ல… நீ பாலூட்டிச் சீராட்டி வளர்த்தியே அந்தக் கோமாதாக்கள்… அதுகதான் புரிய வெச்சதுக… நீ பண்ணை வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த நிமிடமே அத்தனை மாடுகளும் கயித்தை அறுத்துக் கொண்டு கௌம்பிடுச்சுகல்ல…”

            கண்களில் குபுக்கென்று கண்ணீர் பொங்க அந்த மாடுகளை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டான் மாரி.

            அதுகளும் தங்கள் கழுத்து மணியை ஆட்டி  தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு எழுந்து பண்ணை வீட்டை நோக்கி நடக்கத் துவங்கின.

                                                                        (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பறை முழக்கம் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    காமராஜர் (கவிதை) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.