in ,

உணர்ச்சிப் போராட்டம் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி. 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

டெல்லி மாறுதலுக்கான உத்தரவு வந்ததிலிருந்து வீட்டில் நிம்மதியே போய் விட்டதாகத் தோன்றியது அனுவுக்கு.

வசந்த் தீர்மானமாக,” டெல்லி கிளைமேட் அப்பாவுக்கு ஒத்துக்காது. நாம மட்டும் தான் போறோம் .அப்பாவுக்கு நல்ல முதியோர் இல்லம் பார்த்து ஏற்பாடு பண்ணிட்டேன்.உமாவும் பெங்களூர்ல ஹாஸ்டல்ல தான் இருக்கப் போறா.. அதனால அவள பத்தி பிரச்சனை இல்லை” என்றான்.

“மாமா பாவங்க… முதியோர் இல்லத்தில எப்படி இருப்பார்? அத்தை இறந்து ஆறு மாசம் கூட ஆகல …அவரே மனசு வருத்தத்தில் இருக்காரு… அவரை தனியா விட முடியுமா?”

“அனு உனக்கு சில விஷயம் புரியாது நான் தீர்மானம் பண்ணினா பண்ணினது தான். அப்பாவுக்கு சென்னைதான் வசதி. நீ இதுல எதுவும் வாதம் பண்ணாதே “

“நம்ம கூட வேணாம்னா உமாவுக்கு பெங்களூர்ல ஒரு தனி வீடு பார்த்து கொடுத்துருவோம். தாத்தாவும், பேத்தியும் ஒன்னா இருக்கட்டுமே”

“அந்தப் பேச்சை விடப் போறியா.. இல்லையா? அப்பாவுக்கு கொஞ்ச நாள் ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் பழகிடும். பழக்கப்படுத்திக்க வேண்டியது தான். அவரோட சுமையை என் தோளில சுமக்க முடியாது” கத்திவிட்டு அறைக்குள் போய் கதவடைத்துக் கொண்டான் வசந்த் .

வெளியே உட்கார்ந்திருந்த அருணாச்சலம் காதில் இவ்வளவும் விழுந்தது. தனக்கு கேட்கட்டும் என்று தான் மகன் இப்படி கத்திப் பேசுகிறான் என்று தோன்றியது. மனது வருத்தமாக இருந்தது.

மனைவி விசாலத்தின் படம் கண்ணில் பட, அழுத்தம் அதிகமானது. ‘அவள் இருந்த போது எப்படி வசதியாக இருந்தேன்.என்னோட ஒவ்வொரு தேவையும் பார்த்து பார்த்து செஞ்சா. எல்லாத்துக்கும் மேல வாழ்க்கை மரியாதையாய் இருந்தது. வீடே என் பேச்சுக்கு அடங்கியிருந்தது நல்லா இருந்தவ பொசுக்குன்னு போயிட்டா. போன மகராசி கூடவே என்னோட மகிழ்ச்சி ,மானம் ,மரியாதை, எல்லாத்தையும் எடுத்துகிட்டு போயிட்டா ‘என மனதுக்குள் கூறிக் கொண்டார்.

‘உறவுகளை விட்டுட்டு தனியா முதியோர் இல்லத்தில் என்னால இருக்க முடியுமா? புது மனுஷங்களை என்னால அனுசரித்துப் போக முடியாது. மகனிடம் பேசிப் பார்ப்போம்’ என்று நினைத்தார். அவனுக்கு தான் என்ன வந்தது? அம்மா இருக்கிற வரை ஒழுங்காகத் தானே இருந்தான் . ஒரு இனம் புரியாத பய உணர்வு அவரை ஆட்டி வைத்தது.

“தம்பி நானும் உங்களோடேயே டெல்லிக்கு வந்திடுறேனே. எனக்கு முதியோர் இல்லம் எல்லாம் சரிப்பட்டு வராது” என்று ஆரம்பித்தார்.

“அப்பா டெல்லி குளிர் உங்களுக்கு ஒத்து வராது . இங்க இந்த இல்லம் உங்களுக்கு வசதியாகத்தான் இருக்கும். உங்க வயசை ஒத்தவங்களோட நல்ல பொழுது போகும். முதல்ல வித்தியாசமா தெரிஞ்சாலும், போகப்போக பழகிடும். நாங்க இந்த வாரக் கடைசியில டெல்லி கிளம்புறோம். நீங்க நாளைக்கு ரெடியா இருங்க.” அப்பாவின் முகத்தைக் கூட பார்க்காமல் சொல்லிவிட்டு போய்விட்டான். அனுவுக்கு மாமனாரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

ஒரு வாரத்தில் கடகடவென வேலை நடக்க, சொன்னபடி அப்பாவை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்தான். பின் பெங்களூர் போய் உமாவையும் பார்த்துவிட்டு வந்தார்கள். வாரக்கடைசியில் டெல்லி கிளம்பி போனார்கள். மறுநாள் வசந்த் வேலையில் சேர்ந்துவிட, அனுவுக்கு சாமான்களை பிரித்து அந்தந்த இடத்தில் வைப்பதற்கு நேரம் சரியாக இருந்தது.

இடையிடையே மாமனார் நினைப்பும் வராமல் இல்லை. ‘பாவம் பெரியவர் என்ன பண்ணுகிறாரோ.. மாத்திரை எல்லாம் ஒழுங்காக போட்டு கொள்கிறாரோ இல்லையோ… புதிய மனிதர்கள் புதிய இடம்’

உள்ளே வந்த வசந்த்” என்ன அனும்மா யோசனை பலமா இருக்கு?”

மாமாவை பத்திதான் யோசிச்சுகிட்டு இருந்தேங்க.. நீங்க பண்ணுனது சரியில்லைங்க. மாமா விஷயத்தில உங்க மனசு கல்லா போயிடுச்சு “என்றாள் ஆதங்கத்துடன்.

 சட்டென முகம் மாறியது வசந்த்துக்கு “உனக்கு என் மனசு புரியணும்னா. 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததைச் சொன்னாத்தான் தெரியும்.. கேளு” என்று ஆரம்பித்தான்.

“நாங்க அப்ப கிராமத்தில் இருந்தோம். எனக்கு 15 – 16 வயசு இருக்கும். அப்பா அங்க வேலை பார்த்துட்டு இருந்தாரு. பெரிய சம்பளம் எல்லாம் கிடையாது. தாத்தா சொந்த விவசாயத்தில் கொடிகட்டி பறந்தாரு. இப்ப இருக்கிற சொத்துபத்து எல்லாம் அவர் சுய சம்பாத்தியத்தில் கடுமையா உழைச்சு வாங்குனது. பாட்டி ரொம்ப நல்லவங்க .அம்மாவும் அப்படித்தான். ஒரே பிள்ளைங்றனால எங்க அப்பாவை தாத்தா ஒண்ணுமே சொல்ல மாட்டாரு. எங்க அப்பாவும் பொறுப்பில்லாமல் இருந்தாரு .மனம் போனபடி பேசுவது… எல்லாரையும் பேச்சாலேயே புண்படுத்துவது.. யாரையும் எடுத்தெறிந்து தான் பேசுவார்”

தாத்தாவும், பாட்டியும் தான் என்ன நல்லபடியா வளர்த்தாங்க. எனக்கும் தாத்தா பாட்டின்னா உயிர். ஒரு நாள் வயலுக்கு அறுவடையை மேற்பார்வை பார்க்க போன தாத்தா பிணமாத் தான் திரும்பி வந்தார். நெஞ்சுவலி… அதுக்கப்புறம் வீட்டு சூழ்நிலையை மாறிப்போச்சு. தாத்தாவுடன் சந்தோஷமும் போச்சு. பாட்டி தான் என் ஒரே ஆறுதல். அவங்க என் பேரில் உயிரையே வச்சிருந்தாங்க.”

“அப்பாவுக்கு பாட்டியே ஒரு பெரிய சுமையா தெரிஞ்சாங்க. வடக்கே வேணும்னே இடம் மாறுதல் கேட்டு வாங்கினாரு.. பாட்டிக்கு இந்த ஊரு ஒத்துக்காதுன்னு சொல்லி, முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டார். அந்த காலத்துல அது ஏத்துக்க முடியாத ஒரு செயலாக இருந்தது. நானும் அப்பாகிட்ட எவ்வளவோ போராடிப் பார்த்தேன். நானும் பாட்டியும் அந்த வீட்டிலேயே இருக்கிறோம்ன்னு சொல்லி அழுது கூட பார்த்தேன். அப்பா மனசு கல்லா இருந்தது. பாவம் பாட்டி வாடி போய்ட்டாங்க.மகனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லல.. அந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டாங்க. அப்புறம் ரொம்ப நாள் வாழவும் இல்லை. தாத்தா போன அடுத்த வருஷமே அவங்களுக்கு இறந்துட்டாங்க”

அவருடைய இழப்பு என்னை ரொம்பவே பாதிச்சது. அப்பா மேல ஒரு வெறித்தனமான கோபம் இருந்தது. வீட்டில் இருக்க பிடிக்காமல் ஹாஸ்டலுக்கு போயிட்டேன். எனக்குள்ள ஒரு நெருப்பு எரிந்துகிட்டே இருந்தது. பாட்டி அனுபவித்த அந்த வலியை அவருக்கு புரிய வைக்கணும். அவர் அம்மாவுக்குத் தான் செஞ்சது தப்புன்னு உணரனும். அதனால்தான் அவர் செஞ்சத அவருக்குத் திரும்பச் செய்யிறேன். இப்ப புரியுதா…” என்று கேட்க அனு அதிர்ச்சியில் உறைந்தாள்.

தன் கணவனின் மனதில் இப்படி ஒரு வலி…உணர்ச்சிப் போராட்டம் இருக்கும் என்று அனு கனவிலும் நினைக்கவில்லை. அடுத்த சில மணித்துளிகள் இறுக்கமான மௌனத்தில் கரைந்தது.

” உங்க வலி எனக்கு புரியுது. பாட்டியை நினைச்சு மனசு வருத்தமா இருந்தாலும் மாமா அவங்க அப்பா நடந்துக்கிட்ட மாதிரி நீங்களும் நடந்துகணுமா?”

“இல்ல அனு அவர மாதிரி மனசாட்சி இல்லாம நான் நடந்துக்க மாட்டேன். அவர் ஒரு காலகட்டத்தில் அவர் மனசார தப்பை உணர்ந்து திருந்தனும். அதான் இப்படி செஞ்சேன். மற்றபடி சீக்கிரமே தமிழ்நாட்டுக்கு பணி மாற்றம் வேண்டும்னு கேட்டுகிட்டிருக்கேன். அடுத்த பணியிட மாற்றம் வரும்போது அவங்க தருவதாய் சொல்லியிருக்காங்க.”

 அனு மனம் நிம்மதியானது மகிழ்ச்சியில் தன் கணவனின் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டாள். மனதில் இருந்த நெருடல் மறைந்து ஒரு நிம்மதி மலர்ந்தது .

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 10) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது (சிறுகதை) – ரேவதி பாலாஜி