in , ,

உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 9) – தி.வள்ளி, திருநெல்வேலி.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மேனேஜர் மூர்த்தி, வருண் சொன்னதை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்டார்.

“இந்த ஒரு சில நாட்களில் தான் எவ்வளவு மாற்றம்.. பெரியவர் கம்பெனிக்கு வந்து போயிருக்கும் வரை நிம்மதியாக இருந்தது ..எந்த பிரச்சினையும் இல்லை. அவர் படுத்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த வருண் நேரத்திற்கு ஒன்று சொல்கிறான். இவனோடு பழகுவது நல்ல பாம்புடன் பழகுவதைப் போல எந்த நேரம் படம் எடுக்கும், எந்த நேரம் பாம்பாய் கொத்தும் என்று புரியவில்லை. பெரியவன் தருண் இருந்தால் கூட பரவாயில்லை ஓரளவாவது அவனிடம் பேச முடியும். ஆனால் வருண் முரடன் ..அவனிடம் எதுவும் வாயை திறக்க முடியாது”

வேறு வழியில்லாமல் மனதிற்குள் புலம்பியபடியே வருண் சொன்னபடி அவன் நண்பன் ஜெகனைப் போய் பார்த்தார் மேனேஜர் மூர்த்தி ..

பகலிலேயே பாட்டிலும் கையுமாக இருந்தான் ஜெகன். வருண் நண்பன் எப்படி இருப்பான்? இதைவிட பெரிதாக இவனிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? என்று மனதிற்குள் கறுவிக் கொண்டார் மூர்த்தி …

“நீங்கதான் மூர்த்தியா.. வருண் சொன்னான் .அவன் சொன்னது பெரிய விஷயமே இல்ல… சப்ப மேட்டர்…. ஆளவைச்சு நிறைய தடவ, நிறைய பேருக்கு , செஞ்சு கொடுத்திருக்கேன், வருணுக்கு செய்ய மாட்டேனா. ஃப்ரீயா இருந்தா அவனே முடிச்சிடுவான். இப்ப அவங்கப்பா பக்கத்துல இருக்கறதால, என்ன செய்ய சொல்லி இருக்கான் போல…”

“ஆமாம் உங்க பெரியய்யா… வருணோட அப்பா எப்படி இருக்காரு நாம காரியத்தை முடிச்சிட்டு தேவையானதை எடுக்கிற வரைக்கும் தாக்கு பிடிப்பாரா?” என்று நக்கலாக சிரித்தான்.

“பெரியய்யா நல்லாத்தான் இருக்காங்க டாக்டர்கள் நல்ல கவனிச்சுக்கிடுதாங்க …கடவுள் அருளால பெரியவர் பிழைச்சு இன்னும் பல வருஷ காலம் நல்லா இருப்பாரு” என்றார் உணர்ச்சி மிகுதியோடு.

“ஹூம் இருக்கட்டும்.. இருக்கட்டும்…. யாரு வேணாம்னு சொல்றா…அதுக்குத்தானே இவ்வளவு பாடுபடுறோம் …சரி சரி அந்த ஆளு முத்துவோட போட்டோவும் …அவன் எந்த வண்டில எங்க போறான், எப்ப வர்றான், அப்படிங்கிற விஷயமும் அவனைப் பத்தின முழு விபரமும் எனக்கு வேணும் …”

“நீங்க எப்படின்னு சொன்னா எங்க ஆள வச்சு செஞ்சுடறேன்..”

“அதெல்லாம் வேலைக்கு ஆவாது. உங்க ஆளெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்…அந்தப் பய உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கனும்னா அவனை தட்டணுமே ஒழிய, வெட்டக் கூடாது. எங்கிட்ட ஒரு ஸ்பெஷலான ஆள் ஒருத்தன் இருக்கான் அவன் கச்சிதமா செய்வான். உடல் உறுப்பு வேணும்னா அவன்கிட்டத்தான் சொல்லுவோம் …மேட்சாகற டோனரை கைய காமிச்சா கிளீனா கொண்டு வந்து சேர்த்திடுவான். விபத்து மாதிரி செட்டப் பண்ணிடுவான். என்ன்ன கொஞ்சம் செலவு தான் ஜாஸ்தி.. காசு நிறைய எதிர்பார்ப்பான். வேலை கிளீனா இருக்கும் யாரும் சந்தேகப்பட மாட்டாங்க…” அவன் பேச பேச மூர்த்தி அதிர்ந்து போனார்.

மறுநாள் காலை முத்து, நகருக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும் அவன் வீட்டிலிருந்து சைக்கிளில் கிளம்பி, கம்பெனிக்கு வரும் வழியில், அவனை தட்டுவது என்று முடிவானது. கனத்த மனத்துடன் முத்துவின் புகைப்படத்தையும், அவனுடைய வீட்டு விலாசத்தையும், மற்ற விபரங்களையும் ஜெகனிடம் கொடுத்தார் மூர்த்தி.

மேனேஜர் மூர்த்தி வீட்டுக்கு போகும் வழியில் முத்து எதிரே வந்தான். முத்துவை பார்த்ததும் மூர்த்தியின் மனம் குற்றஉணர்ச்சியில் தவித்தது. இவனுக்கு நான் செய்யப்போகும் பாவத்திற்கு எந்த கங்கையில் போய் குளிப்பது. அவன் பெண்டாட்டி, பிள்ளைகள், படப்போகும் வேதனைகள் கண் முன்னே தோன்றியது. எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் முத்துவின் உயிரைத் திரும்ப கொடுக்க முடியாது.மனம் நொந்தது. முத்து அவர் காரை நிப்பாட்ட கை காட்டினான்.

“என்ன முத்து..” என்று மூர்த்தி படபடப்பாக கேட்க …

“ஐயா நீங்க நேத்து என்கிட்ட கேட்ட விஷயத்தை, வேற யார் கிட்டயும் சொல்லாதேன்னு சொன்னதனால ஒருத்தர்கிட்டயும் சொல்லலை.”

“யோசிச்சு பார்த்ததில.. நம்ம பெரிய ஐயா உயிரை காப்பாத்துறதுக்கு என்னால முடியும்ன்னா அதை நான் செய்ய ரெடியா இருக்கேன். என் குடும்பத்தை பத்தி யோசிச்சதனால தான் கொஞ்சம் தயங்கினேன். குழந்தைங்க முகம் என் கண் முன்னால வந்துச்சு.  அப்புறம் யோசிச்சு பார்த்ததுல… ஐயா என் குடும்பத்தையும், பிள்ளைகளையும் ஆயுசுக்கும் பாத்துக்குவாங்க. ஒரு நல்ல மனுஷனுக்கு நான் செய்யக்கூடிய சின்ன கைமாறு…. நீங்க சின்னவருகிட்ட கேட்டுட்டு சொல்லுங்க நான் ரெடியா ஆஸ்பத்திரிக்கு வந்துடறேன். என் குடும்பத்துகாரங்க யாருக்கும் தெரிய வேண்டாம்.நான் நெஞ்சு வலில்ல செத்துட்டதா என் பொண்டாட்டிகிட்ட சொல்லிடுங்க. நீங்க ஐயாகிட்ட பேசிட்டு என்கிட்ட சொல்லுங்க. நான் வர்றேன் ஐயா ” என்றான்.

மூர்த்தி பதில் பேச முடியாமல் திகைத்தார். முத்துவின் பேச்சு அவரை ஸ்தம்பிக்கச் செய்தது. முதலாளிக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்ய முன்வரும் முத்து அவர் மனத்தில் இமயத்தை விட உயர்ந்து நின்றான்.  

வருணைக் பார்த்து முத்து கூறியதை சொல்ல… வருண் கோபத்தில் குதித்தான்.

“இவன் பெரிய தியாகி ஆயிடலாம்னு நினைக்கானா. ஆஸ்பத்திரிக்கு வந்து சொன்னா டாக்டர்கள் ஒத்துக்க மாட்டாங்க… மேலும் அவன் குடும்பத்துக்கு தெரியும்போது அவங்களும் கண்டிப்பா இவன கிட்னி தர அனுமதிக்க மாட்டாங்க.வேண்டாத டிராமா. எப்படியோ சாகறேன்னு சொல்றான்… நம்மளுடைய பிளான் படிதான் சாகட்டுமே. ஜெகன் கெட்டிக்காரன் ஆளை வச்சு கச்சிதமா வேலையை முடிச்சிடுவான்…”

மேனேஜர் மனம் கொதித்தது. கிராதகன்… இரக்கம் இல்லாதவன்… இவன் செய்யும் பாவத்திற்கெல்லாம் துணைபோக வேண்டியிருக்கிறதே…. என்ற வருத்தம் அவர் மனத்தை வருத்தியது.  

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 8) – தி.வள்ளி, திருநெல்வேலி.

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 10) – தி.வள்ளி, திருநெல்வேலி.