இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ராகவ் மார்பிள்ஸ்’ அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. வண்ணத் தோரணங்கள் முகப்பிலிருந்தே வரவேற்றன…
பலவண்ண பலூன்கள் வாசலை அலங்கரித்தன . முகப்பில் மாவிலை தோரணமும் குலை தள்ளிய வாழையும் மங்கலத்தை கூட்டின…அதற்கு மெருகூட்டுவது போல மிகப்பெரிய வண்ணக் கோலம் ராகவ் மார்பிள்ஸ்ஸின் வாசலை அலங்கரித்தது.
கம்பெனி எம்.டி ராகவேந்தர் தனது படகு காரில் வந்திறங்க, ஊழியர்கள் எல்லோரும் குழந்தையாய் குதுகலித்தனர். பூத்தூவி வரவேற்றனர்.அவர்கள் சந்தோஷம் ராகவேந்தர் முகத்திலும் தொற்றிக்கொண்டது.இருக்காதா பின்னே… கம்பெனி ஆரம்பித்து 50 ஆவது ஆண்டு நிறைவு விழா ….அதை அறிவிக்கும் இரண்டு பெரிய பேனர்கள் நுழைவு வாசலின் இரு பக்கத்திலும் பளபளத்தது.
ஒரு சின்ன ஷெட்டில் சிறிய அளவில் மார்பிள்ஸ் வாங்கி விற்று .. சிறுகடையாக ஆரம்பித்தார் . இன்று மாபெரும் ஆலமரமாக தனது கிளைகளை…உள்நாடு மட்டுமின்றி பலவெளி நாடுகளிலும் பரப்பி வளர்ந்து நிற்கிறது.
கம்பெனி இவ்வளவு பெரிய உயர்வைக் கண்டதற்கு நேர்மையாக, தனித்தன்மையோடு, விளங்கிய எம்.டி. ராகவேந்தரே முழுமையான காரணகர்த்தா. ராகவேந்தர் பணக்காரர் பட்டியலில் இந்தியாவில் முதல் 10 இடத்தில் இருந்தாலும், மனதளவில் ஆரம்ப காலகட்டத்தில் உழைத்த உழைப்பாளி ராகவேந்தராகவே இருந்தார்.
தொழிலாளர்களை மிகவும் மதித்தார்,நேசித்தார்.அவர்கள் உழைப்புதான் இந்த அளவு கம்பெனி உயரக் காரணம் என்பதில் அவருக்கு சிறிதளவுகூட ஐயம் கிடையாது. பல ஆண்டுகளாக தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் பெயர்கள் கூட அவருக்கு அத்துப்படி …தன் ஊழியர்களின் குடும்பங்களையும் தன் குடும்பமாகத்தான் பாவித்தார் .
தன்னிடம் வேலை பார்ப்பவர்களின் குடும்பத்தின் ஒவ்வொரு தேவையும் பார்த்து பார்த்து செய்ய ஏற்பாடு பண்ணி இருந்தார். அவர்களின் பிள்ளைகளை படிக்க வைத்தார்.. அவர்களின் மருத்துவ செலவுகளை கவனித்து செய்தார் .. மொத்தத்தில் ஊழியர்களின் மனம் கவர்ந்த முதலாளியாக விளங்கினார்.
அவர் கம்பெனியில் என்றுமே லேபர் பிரச்சனை வந்ததில்லை. தொழிலாளிகளின் தேவையை பார்த்து பார்த்து செய்யும் முதலாளி இருக்கும் போது தொழிலாளிகளுக்கு போராட்டம் மனப்பான்மை எங்கிருந்து வரும்? எனவே மனதார வேலை பார்த்த ஊழியர்களால் கம்பெனியில் லாபம் பல மடங்கு பெருக்கியது.
அவருக்கு நேர்மாறாக தான் அவருடைய மகன்கள் .வருண் குமார்… தருண் குமார் இருவரும் இருந்தனர் ..பிறக்கும் போதே கோடீஸ்வரர் வீட்டு பிள்ளையாக பிறந்ததால் தானோ என்னவோ தொழிலாளர்களைக் கண்டாலே அவர்களுக்கு பிடிப்பதில்லை. கூலிக்கு வேலை செய்யும் மிஷின்களாகத்தான் அவர்களை பாவித்தனர் .
அதுவும் தன் அப்பா அவர்களுடன் நெருங்கி பழகுவதை அறவே வெறுத்தனர்.இதை நன்கு அறிந்த ராகவேந்தர் அவர்களை நேரடியாக தொழிலாளர்களுடன் தொடர்பில் உள்ள வேலைகளுக்கு அனுப்ப மாட்டார்.
” எங்க முதலாளி தங்க முதலாளி…
நல்ல மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி…”
தொழிலாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் சந்தோஷமாக பாடிக்கொண்டிருந்ததை ராகவேந்தர் கேட்டு ரசித்தபடி ஃபேக்டரியை சுற்றிவந்தார்.
முதலாளியைப் பார்த்ததும் எல்லோரும் அமைதியாக கைகட்டி நிற்க …முத்துவை பார்த்து .. “முத்து.. உன் பையன ஆஸ்பத்திரில சேர்த்திருந்தியே இப்ப உடம்பு சரியாயிடுச்சா” என்றார்.
“நல்லா இருக்கான்ய்யா வீட்டுக்கு வந்து பழையபடி சேட்டையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டான்”
“அதுதான்ப்பா குழந்தை… நல்ல படிக்கிறானா? உன் பொண்ணுக்கு என்ன வயசாச்சு..”
“இசக்கி உன் பிள்ளை காலேஜ் போக ஆரம்பிச்சிட்டானா? ..ஒழுங்கா பாடத்தை மட்டும் படிக்கச் சொல்லு காதல் கீதல்ன்னு போயிடாம ..”
“அம்மா ராசாத்தி.. உன் புருஷன் இப்ப குடிக்காம இருக்கானா? உன் பொண்ணு மாசமா இருந்தாளே குழந்தை பிறந்துடுச்சா…”
“ஐயா எங்களுக்கெல்லாம் என்ன குறை? நீங்க மகராசனா இருந்து எங்களை கவனிச்சுக்கிறீங்க …புள்ளைக அத்தனை பேருக்கும் ஃபீஸ் கட்டுறீங்க… வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்ட இடமும் கொடுத்து வட்டி இல்லாம கடனும் கொடுக்கறீங்க ..எல்லாத்துக்கும் மத்தியானம் வயிறார சாப்பாடு போடுறீங்க… நீங்க மகராசனா இருக்கனும் ..இன்னும் நூறு ஆண்டு காலத்துக்கு நல்லா இருக்கனும்” என்று வாழ்த்த..எல்லோரும் ஆமோதித்து தலையசைத்தனர்.
சிரித்தபடி அவர்கள் வாழ்த்த ஏற்றுக்கொண்ட ராகவேந்தர், மனம் நிறைந்த சந்தோஷத்துடன் ரூமுக்கு வந்தார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவருக்கு கொஞ்ச நாளாக உடம்பில் ஒரு அசதி இருப்பது போல தோன்றியது …அடிவயிற்றில் ஒரு வலியும் அசௌகரியமும் ஏற்பட ..மேனேஜரை அழைத்தார் …
“ஐயா முகமெல்லாம் வாடியிருக்கு.. உடம்பு ஏதும் பண்ணுதா ..”
உண்மையான ஒரு வாஞ்சையோடு மேனேஜர் மூர்த்தி கேட்க .. ‘ஆமாம் மூர்த்தி… கொஞ்சம் சரியில்ல… நான் வீட்டுக்கு கிளம்பறேன். இன்னைக்கு அனுப்பவேண்டிய எக்ஸ்போர்ட் ஐட்டமெல்லாம் செக் பண்ணி அனுப்பிடுங்க.. ஆஸ்திரேலியாக்கு அனுப்ப வேண்டிய பார்சல் இன்னைக்கு போகனும். குவாலிட்டி கரெக்டா செக் பண்ணி பாத்து அனுப்புங்க …”
“வருண் எதையெடுத்தாலும் படபடப்பா செய்கிறான்.அவன் போக்கு எனக்கு கொஞ்சம் கவலையாத்தான் இருக்கு. அதனால அவன் விஷயத்தை நீங்க கூட இருந்து பாத்துக்கங்க”
முதல் நாள் நிகழ்வை பெரியவரிடம் சொல்லலாமா என்று யோசித்த மேனேஜர், ‘வேண்டாம் ஏற்கனவே பெரியவருக்கு உடல் நலமில்லை .மேலும் இது வருண் குமாருக்கு தெரிந்தால் இன்னும் அவன் கோபம் அதிகமாகும் ‘என்று பேசாமல் இருந்துவிட்டார் .
“ஐயா நீங்க வீட்டுக்கு போங்க… நான் பாத்துக்குறேன். எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து உங்க கிட்ட சொல்லிட்டுப் போறேன் ..”
“அப்புறம் மூர்த்தி..’ பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் பணம் வேணும்னு’ கேட்டீங்களே… இன்னைக்கு கையெழுத்து போட்டு அனுப்பிட்டேன் . அக்கவுண்ட் செக்சன்லே எவ்ளோ அமௌன்ட் வேணுமோ வாங்கிக்கங்க ..”
“சரிங்கய்யா.. நான் வீடு வரைக்கும் உங்ககூட வரட்டுமாய்யா”
“வேணாம்… அதான் டிரைவர் இருக்கானே… அவன் பார்த்துப்பான்…நான் கெளம்புறேன்.. ” என்றவாறு சோர்வாக வீட்டிற்கு கிளம்பினார் ..நாலடி எடுத்து வைத்தவர் அப்படியே தாங்க முடியாத வலியில் சுருண்டு விழுந்தார் ..
மேனேஜர் பதறியபடி எல்லோரையும் கூப்பிட, அவசரமாக அவரை கைத்தாங்கலாக காரில் வீட்டிற்குக் கூட்டி கொண்டு சென்றனர்.. வலி அதிகமாக, மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தருண் குமார் வெளிநாடு போயிருக்க… வருண்குமார் அவசரஅவசரமாக ஏற்பாடுகளை பண்ணினான்..அவன் அம்மாவும் தங்கைகளும் செய்வதறியாது திகைத்து நிற்க, வருண் குமார் தன் குடும்ப மருத்துவரை ஆலோசித்து நகரின் மிகப் பெரிய மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு பண்ணினான்.
அத்தனை பேருடைய வாழ்த்துக்கள் பெற்றிருந்தும், அந்த மனிதர் ..வலியில் துடித்தபடி இருந்தார் …ஆம்புலன்ஸ் வர காத்திருந்தனர் எல்லோரும் …
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்,
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings