in ,

வாழு வாழவிடு (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வாணலியில் எண்ணையை ஊற்றிக் கொண்டே சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் கௌரி. சித்தார்த் டே-கேரில் இருந்து வீடு திரும்பும் நேரம். அவர்களே வேனில் கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டுப் போவார்கள்.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் எல்லாம் காச்மூச்சென்று கத்திக் கொண்டும், பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் தங்களைத் தாங்களே சந்தோஷமாக வைத்துக் கொண்டு வருவதைப் பார்க்க நமக்குமே அந்த சந்தோஷம் ஒட்டிக் கொள்ளும். 

சித்தார்த் மிகவும் அறிவான, அன்பான குழந்தை. நான்கு வயதுதான் ஆகிறது. பத்து வயது குழந்தை போல் தெளிவு. டே-கேரில் இருந்து வந்தவுடன் ஷூவை கழற்றி ஷூரேக்கில் வைத்துவிட்டு, கைகால்களை சுத்தம் செய்து கொண்டு, பிறகு நேரே கௌரியின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, அவள் கன்னத்தில் ஒரு முத்தம் தருவான்.

அப்போது அவன் கண்களில் பளிச்சென்று ஒரு அன்பு வழியும். கௌரிக்கு அந்த ஒரு முத்தத்திற்கே உலகையே கொடுத்து விடலாம் போல் இருக்கும். அவனுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து விட்டால், கொஞ்ச நேரம் டி.வி.யில் ஏதாவது கார்ட்டூன் பார்த்து விட்டு உடனே ஹோம் வொர்க்கும் முடித்து விடுவான்.

பிறகு சிறிது நேரம் அபார்ட்மென்ட்டில் இருக்கும் மற்ற குழந்தைகளோடு விளையாடிவிட்டு, தினகரன் ஆபீசில் இருந்து வரும் வரை கௌரியின் மடியில் உட்கார்ந்து, கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் டே-கேரில் நடந்த எல்லா விஷயங்களையும் மூச்சு விடாமல் கதைபோல் சொல்வான்.

கௌரி இப்போது கூட வெண்ணையாக அரைத்த உளுந்தில் சின்ன போண்டாக்களாக உருட்டி எண்ணெயில் போட்டு நன்றாக சிவந்தபின் லேசான சூட்டில் இருக்கும் வெல்லப் பாகில் போட்டு ஊறவைப்பாள். அந்த ஸ்வீட் சித்தார்த்திற்கு மிகவும் பிடிக்கும்.

அதே உளுத்தமாவில், கொஞ்சம் மிளகு சீரகம் சேர்த்து போண்டாவாகப் போட்டு எடுத்து விடுவாள். அது தினகரனுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்வீட்டும், காரமும் அதற்குத் தகுந்த சட்னியும் செய்து மூடி வைத்தாள்.

குழந்தை சித்தார்த் வரும் நேரம்தான். அவளையும் கொஞ்சம் முகம் கழுவி, லேசாக பௌடர் பூசி, ஸ்டிக்கர் பொட்டையும் சரி செய்து கொண்டு, கண்ணாடியில் பார்த்து திருப்தி அடைந்தாள்.  அப்போது அழைப்பு மணி அடித்தது.

சித்தார்த்திற்கு காலிங் பெல் எட்டாது. அதனால் வந்தது தினகரனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்ப்பார்ப்போடு போய் கதவைத் திறந்தவள் திகைத்து நின்றாள். கௌரி அவள் யாரென்று தெரிந்து கொண்டாள், ஆனால் தெரிந்தாற்போல் காட்டிக் கொள்ளவில்லை. 

சட்டென்று, கொஞ்ச நேரம் வந்தவளைப் பார்த்து திகைத்து நின்றாள். ஆனால் அந்த பெண், கௌரியைத் தள்ளி விட்டு உள்ளே நுழைந்தவள் அங்கேயிருந்த ஒரு சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். 

 “நீங்கள் யார்? என்னைத் தள்ளி விட்டு உள்ளே நுழைந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்? என் கணவரின் உறவினரா?” என கௌரி கேட்க 

 “ஒரு பழமொழி சொல்வார்கள் தெரியுமா? ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்று அது சரியாகத்தான் இருக்கிறது” என்றாள் அந்தப் பெண்.

 “முதலில் வெளியே போங்கள். நீங்கள் யார் என்றே தெரியவில்லை, அதற்குள் தப்புத் தப்பாகப் பேசுகிறீர்கள்” என்றாள் கௌரி கோபமாக. 

அப்போது சித்தார்த் “மம்மி” என்று கத்திக் கொண்டு, டே-கேர் பஸ்ஸில் இருந்து இறங்கி உள்ள ஓடிவந்தான். வந்தவன் அந்தப் பெண்ணை யார் என்று உறுத்துப் பார்த்தான்.

 அவனைப் பார்த்ததும், “கண்ணா, நான் தான் உன் அம்மா. இவள் உன் சித்தி, நீ என்னுடன் வந்து விடு” என்றவள் அவனை இறுக அணைத்துத் தூக்க முற்பட்டாள்.

குழந்தையோ கால் முட்டியால் அவளை நம்பிக்கை தள்ளிவிட்டு கௌரியின் பின்னால் ஓடி வந்து ஒளிந்து கொண்டான்.  நல்ல வேளையாக அப்போது தினகரன் உள்ளே வந்தான். வந்தவன் அவளை வெறித்துப் பார்த்தான். 

 “யாரை வேண்டுமானாலும்  உள்ளே விடுவாயா?” என்று கௌரியைப் பார்த்து கத்தினான்.  

வந்தவளைப் பார்த்து, “போ, வெளியே! என்னையும், என் ஒரு வயதுக் குழந்தையையும் பிடிக்கவில்லை என்று தானே விவாகரத்து வாங்கிக் கொண்டு போனாய்! இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தாய்?“ என்றவன், கௌரியைப் பார்த்து “குழந்தையை எடுத்துக் கொண்டு உள்ளே போ” என்று ஆணையிட்டான். 

கௌரி குழந்தையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். தினகரன் கொஞ்சம் கோபக்காரன், அதனால் வந்த பெண்ணிடம் கையை ஓங்கி விட்டால் என்ன செய்வது என்று பயந்தாள்.

வந்தவள் சீதா, தினகரனின் முதல் மனைவி.

 “ஏய்! வெளியே போ என்று என் பெண்டாட்டி சொன்னது காதில் கேட்கவில்லையா? போ வெளியே“ என்று தினகரன் கடுமையான குரலில் கத்தினான். 

“தினா, நேற்று வந்த அவளை உன் பெண்டாட்டி என்கிறாயே ! சில வருடங்கள் உன்னோடு வாழ்ந்து உன்னைப் போலவே ஒரு பிள்ளையையும் பெற்றுக் கொடுத்திருக்கும் நான் யார்?“ என்றாள் சீதா. 

 “ஏன் நீ யார் என்பது உனக்கே மறந்து விட்டதா? நீ என் எக்ஸ் வொய்ப், அதாவது மாஜி மனைவி. அரசாங்கத்தில் எனக்குக் கொடுத்த காரையும், வீட்டையும் பார்த்து மிக ஆடம்பரமாக வாழலாம் என்று நினைத்து, என் பின்னாலேயே சுற்றி என்னைத் திருமணம் செய்து கொண்டாய். நான் ஒரு காலி பெருங்காய டப்பா என்று தெரிந்ததும், ஒரு குழந்தை பிறந்த பிறகு பெரிய பணக்காரனைத் தேடி அவனுடைய முதல் மனைவியையும் துரத்தி விட்டு, ‘அரச மரத்து குரங்கு மரத்தை விட்டு இறங்கு’ என்பது போல் அங்கு போய் உட்கார்ந்து கொண்டாய். இப்போது இங்கு ஏன் வந்தாய்?“ என்று கேலியும் கேட்டான். 

 “நான் வீட்டை விட்டுத் துறத்திய என் கணவரின் முதல் மனைவி அவள் உறவினர்கள் சிலரை வைத்து பஞ்சாயத்து பண்ணி மீண்டும் வீட்டிற்குள் வந்து விட்டாள். யாரை நம்பிப் போனேனோ அவன், ‘அவள் தான் இந்த வீட்டு தலைவி, நீ அவளுக்கு அடங்கிதான் இருக்க வேண்டும்” என்று கூறி விட்டான்.

இப்போதெல்லாம் எல்லா இடங்களுக்கும் அவர்கள் இருவர் மட்டுமே போகின்றனர். நான் அந்த வீட்டிற்குப் போன புதிதில் வேலைக்காரர்கள் என்னைப் பார்த்து பயப்படுவார்கள், ஆனால் இப்போது நான் அவர்களைப் பார்த்து பயப்படும் நிலை இருக்கிறது. என்னால் அங்கே ஒரு வேலைக்காரியைப் போல் இருக்க முடியாது , அதனால் தான் நான் உங்கள் வீட்டிற்கு தேடி வந்தேன்” என்றவள் மூச்சை விட்டு மேலும் தொடர்ந்தாள்.

 “நான் செய்தது தப்பு என்று தெரிந்தது. நான் ஒரு தவறான முடிவெடுத்து தவறான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேன். எல்லோர் வாழ்க்கையிலும் நல்லதும் உண்டு தீயதும் உண்டு என்று புரிந்து கொண்டேன். நான் இனிமேல் அங்கே போகமாட்டேன், இங்கேயே ஓர் ஓரமாக இருந்து விடுகிறேன். என் பிள்ளையோடு இருக்க அனுமதி கொடு தினா.” என்றாள்.

 “நீ ஒரு முட்டாள். நீ தான் விரும்பி விவாகரத்து வாங்கிக்கொண்டு போய், உன் தற்போதைய கணவரின் முதல் மனைவியை வீட்டை விட்டு துரத்தினாய். குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதைப் போல் நீ பணத்தைத் தேடி ஒவ்வொரு கணவனாக மாற்றிக் கொண்டிருந்தால் உன்னை யார் மதிப்பார்கள்? உனக்கு வாழ்க்கையை வாழத் தெரியவில்லை. நீ இந்த வீட்டில் வந்து இருக்க முடியாது. என் கௌரியைப் பார்.  நீ தவிக்க விட்டுப் போன பச்சைக் குழந்தை சித்தார்த்தை அறிவுள்ள குழந்தையாக வளர்த்திருக்கிறாள்.

பெண் என்றால் பொறுமை வேண்டும். மற்றவர்களோடு அன்பாக பழகத் தெரிய வேண்டும்.  நீ போய் உன் வீட்டில் தான் வாழ வேண்டும். எப்போதும், எல்லா இடங்களிலும் தலைவியாகவே இருக்க முடியாது. தகுதிக்கேற்ற மரியாதை தான் கிடைக்கும்.  கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக் குரலன்றி வேறு எதுவும் ஏறாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நீ போ, உன் வாழ்க்கயை வாழு. எங்களை நிம்மதியாக வாழவிடு” என்றான். 

வழக்கமாக பொறுமையில்லாமல் பேசும் அவன், ஒருநல்ல மனிதனாக உபதேசம் செய்தான்.  

கௌரி இரண்டு தட்டுகளில் ஸ்வீட்டும் , காரமும் கொண்டு வந்து ஒன்றை தினகரனிடமும்  மற்றொன்றை சீதாவிடமும் கொடுத்தாள். சீதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“நான் உன்னை எவ்வளவு அவமரியாதையாகப் பேசினேன். நீ எனக்குப் பலகாரம் தருகிறாய்” என்றாள். 

 “மனிதர்களையும், வாழ்க்கையையும் புரிந்து கொண்டால் எல்லாம் நல்லதாகிவிடும்“ என்றாள் கௌரி புன்னகையுடன்.

அப்போது பொறுமையில்லாமல் வெளியே வந்த சித்தார்த், “இந்த ஆன்டி ஏன் இன்னும் போகவில்லை?” என்றவன், அவன் அப்பா மடியில் உட்கார்ந்து கொண்டான்.

 “கண்ணா, நீ இந்த அம்மாவுடன் வருகிறாயா?” என்றாள் சீதா ஆவலுடன் மகனை நோக்கி.

 “நான் என் அம்மாவுடன்தான் இருக்கிறேன்” என்றான் கௌரியை நோக்கி கையை நீட்டி.

சீதா அங்கிருந்து யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றாள்.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஜித்தனுக்கு ஜித்தன் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை