in ,

தீயவை தீயினும் அஞ்சப்படும் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஸ்ரீ மதியைத் தவிர வீட்டில் எல்லோரும் உறங்கி விட்டனர்.  அது ஒரு கூட்டுக் குடும்பம், அவள் தான் அந்த வீட்டின் மூத்த மருமகள். மாமனார் சுப்பிரமணியத்திற்கு எண்பது வயது, மாமியார் பைரவிக்கு எழுபத்தி ஐந்து வயது. இருவரும் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இருவரும் பென்ஷன் வாங்குபவர்கள்.

மூன்று ஆண் பிள்ளைகளின் பெற்றோர்.  ஒரே ஒரு பெண், மைதிலி என்று பெயர். ராம்குமார், லட்சுமண்குமார், பரத்குமார் மூவரும் நல்லவர்கள்தான்.

ஸ்ரீமதி அந்த வீட்டில் மருமகளாக வரும்போது, அவளுடைய மைத்துனர்கள் இருவரும் கல்லூரியில் முதல், இரண்டு ஆண்டுகள் மாணவர்கள். அதனால் ஸ்ரீமதிக்கு அவர்கள் மேல் பாசம் அதிகம். அவளுடைய தம்பிகளாகத்தான் அவர்களை நினைப்பாள்.

நாத்தனார்  கடைக்குட்டி.  மாமியார், மாமனார் இருவரும் வேலைக்குப் போய் விடுவதால் ஸ்ரீமதிதான் அவர்கள் இருவரையும் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வாள். மைதிலியோ ரொம்ப செல்லம், எப்போதும் குழந்தை போலத்தான் நடத்துவார்.

இவர்கள் எல்லோரையுமே குழந்தைகளாகப் பார்த்ததால், கடவுள் ஸ்ரீமதிக்கென்று தனியாக ஒரு குழந்தை வேண்டாம் என்று நினைத்து விட்டார் போலும். ராம்குமாரோ ஸ்ரீமதியோ அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படவில்லை.

”இத்தனை குழந்தைகள் இந்த வீட்டில் இருக்கும் போது நமக்கு வேறு தனியாகக் குழந்தைகளா? இந்த வீடும் தாங்காது ! இந்த நாடும் தாங்காது” என்பான் ராம்குமார் சிரித்துக் கொண்டே. ஸ்ரீமதியும் அப்படியே ஜால்ரா அடிப்பாள். ஆனால் அவனுடைய அப்பா சுப்ரமணியும், அம்மா பைரவியும் மட்டும் பேரக்குழந்தை இல்லையே என்று ஏங்கினார்கள்.

காலம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. ஸ்ரீமதிக்கு அவள் மைத்துனர்கள் பற்றி ஒரே பெருமை . அவள் கிழித்த கோட்டை அவர்கள் தாண்ட மாட்டார்கள். மைத்துனர்கள் மட்டும் அல்ல, அவள் கணவன் ராம்குமாரும் அப்படித்தான். ஸ்ரீமதி ஒன்று சொல்லி விட்டால் அது இலக்ஷ்மணன் கிழித்த கோடு தான்.

ஆனால் கடைக்குட்டி மைதிலி அப்படிக் கிடையாது. அவளேதான் அவளுக்கு கோடு கிழித்துக் கொள்வாள். எல்லோருக்கும் ஒரு சட்டம் என்றால் அவளுக்கு ஒரு தனி சட்டம். ஸ்ரீமதியும் அவள் அந்த வீட்டின் ஒரே பெண் குழந்தை, அந்த வீட்டின் மகாலட்சுமி என்று எல்லாவற்றுக்கும் விட்டுக்கொடுத்து கொண்டு போனாள்.

மைத்துனர்கள் இருவரும்  ஸ்ரீமதியும், அவர்கள் பெற்றோரும் தேர்வு செய்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். மைதிலி மட்டும் அவளுடன் படிக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பையனைத் தேர்ந்தெடுத்து, திருமணமும் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நின்றாள்.

வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ந்து நின்றனர். அப்போதும் வேறு வழியில்லாமல் ஸ்ரீமதி தான் அவள் மேலுள்ள அளவு கடந்த பாசத்தால் ‘நம் கையே நம் கண்ணைக் குத்தி விட்டது. அதனால் விரலை வெட்டியா விட முடியும்?’ என்று அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ள வைத்தாள்.

மைதிலியின் தலை தீபாவளி வந்தது. அதற்கு மாப்பிள்ளை நிஷாந்த்திற்கு வைர மோதிரமும், ஐந்து பவுனில் சங்கிலியும், மூன்று பவுனில் ஒரு பிரேஸ்லெட்டும் அளவெடுக்கச் செய்து ஆர்டர் செய்தாள். பட்டு வேட்டியும், விலை உயர்ந்த ஷர்ட்டும் வாங்கி வைத்தாள்.

மைதிலிக்கும்  ஒரு பதக்கம் வைத்த அட்டிகை மூன்று பவுனில், லாங் செயின் பதக்கம் வைத்தது ஒரு ஐந்து பவுனில் வாங்கினாள். கூடவே நான்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் எல்லாம் வாங்கி வைத்தாள். அவள் அப்படி செலவு செய்ததில் வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லை.

“ஓடிப் போனவளுக்கு இத்தனை உபசாரங்கள் தேவையா?” என்று மாமனார் முகத்தை சுளுக்கிக் கொண்டு கேட்டார்.

“அவன்( நிஷாந்த்) இதற்கெல்லாம் தகுதியானவன் இல்லை” என்று முணுமுணுத்தனர் மூன்று சகோதரர்களும்.

 ‘இவர்கள் ஏன் இப்படி விஷயம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்!‘ என்று நினைத்தாள் ஸ்ரீமதி. ‘நம் வீட்டுப் பெண்ணுக்கு சீர் செய்வதால், நம் பெண்ணின் மதிப்பு உயர்வதோடு நம் குடும்பப் பெருமையும் தானே உயரும்‘ என்று சொன்னாள்.

 “பாத்திரம் அறிந்து பிச்சை போடவேண்டும் அண்ணி“ என்றனர் லட்சுமண் குமாரும், பரத் குமாரும்.

நிஷாந்த் தீபாவளிக்கு வந்து இவர்கள் வீட்டில் தங்கியிருந்த போது தான் அவன் லட்சணம் தெரிந்தது. எப்போதும் பாட்டிலும் கையுமாகவே சுற்றிக்கொண்டு இருந்தான்.  யாரையும் மதிப்பதில்லை, பெண்டாட்டி கூட அவனுக்கு ‘ஏய்‘ தான்.

ஸ்ரீமதி தான் மைதிலியிடம்,  “என்ன மைதிலி உன் கணவர் இப்படி இருக்கிறாரே!  அவருக்கு புத்தி சொல்லமாட்டாயா?“ என்று கேட்டாள்.

 “அண்ணி, பெரிய பணக்காரர்கள் எல்லாம் அப்படித்தான். எனக்கு எந்த குறையும் வைப்பது இல்லை. இப்போதெல்லாம் குடிக்காத குடிமகன்களே கிடையாது. எனக்கு வேண்டிய பணம், பொருள் எல்லாம் வந்து விடுகிறது. வீண் பிரச்சினை வேண்டாம் என்று நானும் ஒன்றும் கேட்பதில்லை”

“ஒரு குறள் படித்திருக்கிறாயா நீ, ‘தீயவை தீயபயத்தலான் தீயவை தீயினும் அஞ்சப்படும்’” என்று மைதிலியை ஏறிட்டுப் பார்த்தாள் ஸ்ரீமதி.

“இந்தத் தமிழ் மீடியத்தில் படித்தாலே இதுதான் தொல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு குறள் சொல்வீர்கள். இல்லை பாரதியார் பாடல் பாடுவீர்கள். அண்ணி, தெரிந்து கொள்ளுங்கள்; வாழ்க்கை வாழ்வதற்கே” என்று கேலியாக சிரித்துக் கொண்டு போய்விட்டாள்.

வருடங்கள் கடந்து செல்ல மைதிலியும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாள். இப்போதெல்லாம் மைதிலி அடிக்கடி ஸ்ரீமதியிடம் விரும்பி பேச வந்தாள். இப்போது அவளிடம் பணக்காரத் திமிர் இல்லை. எதற்கோ ஏங்கும் ஏக்கம் தான் இருந்தது.

ஒரு நாள் ஸ்ரீமதி அவள் அறையில் ஓய்வாகப் படுத்துக் கொண்டு எழுத்தாளர் அனுத்தமா அம்மா அவர்கள் எழுதிய  ‘நைந்த உள்ளம்‘ என்ற அந்த நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள். எத்தனை முறை படித்தாலும் புதிதாக படிப்பதுபோல் அந்தப் புத்தகத்தைப் படிப்பாள் அவள்.

அப்போது கதவை லேசாகத் தட்டி விட்டு மைதிலி அவள் அருகில் வந்து கட்டிலில் உட்கார்ந்தாள். முகம் ஒன்றும் சரியாக இல்லை. மனதை அடக்கினாலும் அடக்க முடியாமல், ஸ்ரீமதி அவளிடம் கேட்டே விட்டாள்.

“மைதிலி, உன் முகம் இப்போதெல்லாம் சந்தோஷமாக இல்லையே, ஏன்?” என்றாள்.

உடனே அவள் மடியில் தலை கவிழ்ந்து படுத்து அழுதாள் மைதிலி. பதறி விட்டாள் ஸ்ரீமதி. அவளையே சிறிது நேரம் வெறிக்கப் பார்த்தவள், முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்து, தலையை ஆதரவாகத் தடவி மெதுவாக எழுப்பி உட்கார வைத்தாள். அருகில் இருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடிக்க வைத்தாள்.

“மைதிலி, என்ன கஷ்டம் உனக்கு? சில நாட்களாக நீ சந்தோஷமாக இல்லையே, ஏன்?” என்று கேட்டாள்.

 “அண்ணி அவர் இப்போதெல்லாம் அதிகமாகக் குடிக்கிறார். எப்போதும் போதையிலேயே இருக்கிறார்? எனக்கு பயமாக இருக்கிறது” என்றாள்.

லேசாக சிரித்தாள் ஸ்ரீமதி. “பணக்காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றாயே, இப்போது என்ன?”

 “கேலி செய்யாதீர்கள் அண்ணி. இப்போது வேறு ஏதோ பெண்கள் பழக்கமும் இருப்பது போல் போதையில் உளறுகிறார், எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது அண்ணி” என்றாள்.

அப்போது கூட அவளுக்கு, அவன் குடிப்பழக்கம் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. அவன் வேறு பெண்களிடம் அவள் வாழ்க்கையை பங்கு போடுவது தான் பெரியதாகத் தெரிந்தது.

ஸ்ரீமதியின் முகம் இறுகியது. “முட்டாளாடி நீ? ஒரு கெட்ட பழக்கம், இன்னொரு  கெட்டப் பழக்கத்திற்கு அடிகோலும் என்பதைக் கூட புரிந்து கொள்ளாத இடியட்டா நீ? இப்படி இடைவிடாமல் குடித்தால், லிவர் கெட்டுப் போகும், ஹார்ட் அட்டாக் வரும் என்பதைக் கூட உணராத படித்த முட்டாள்கள். எல்லாம் பணத் திமிர். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்” என்று உறுமினாள்.

மைதிலி மேலும் விம்மிவிம்மி அழுதாள். “அண்ணி, என் அண்ணாக்கள் அவருக்கு அட்வைஸ் பண்ணுவார்களா?” என்றாள் பரிதாபமாக.

 “மைதிலி, அதெல்லாம் சரியாக வரும் என்று தோன்றவில்லை. ஒரு மனைவி கணவனுக்கு அட்வைஸ் செய்யலாம். மற்றவர்கள் மூன்றாவது மனிதர்களே. பெருமாளிடம் வேண்டிக் கொள், நல்லதே நடக்கும்“ என்றாள் ஸ்ரீமதி.

நிஷாந்திற்கு அவன் அம்மா என்றால் உயிர். ஒரு நாள் தூக்கத்தில் அந்த அம்மா கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். அருகில் இருந்த வலை பீரோவின் நுனியில் அவர் தலை பட்டு இரத்தம் வழிய மயக்கம் அடைந்தார்.

அவன் அப்பாவும் தூக்க மாத்திரை போட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மைதிலி தான் தூக்கத்தின் இடையே எழுந்து அவ்வப்போது வயதானவர்களை கவனித்து போவது வழக்கம்.

அதே போல் அன்று இரவு வந்து பார்த்த மைதிலிக்கு மாமியார் இரத்த வெள்ளத்தில் இருந்தது பார்த்து திடுக்கிட்டாள். அவளால் தனியாக அவர்களைத் தூக்கி கட்டிலில் படுக்க வைக்கக் கூட முடியவில்லை.

மாமனாரை எழுப்பினாள் .அவரோ தூக்க கலக்கத்தில் இருந்தார். அவள் கணவனை அழைத்து வர மாடிக்கு ஓடினாள். ஆனால் அவனோ, அவனையே தூக்க வேண்டிய நிலையில் தான் இருந்தான். அந்த நேரத்தில் அண்ணி சொன்ன திருக்குறள் நினைவிற்கு வந்தது.

‘தீயவை தீயினும் அஞ்சப்படும்’ எந்த காலத்திற்கும் பொருந்தும் குறள்.

ஸ்ரீமதியை அழைத்து விஷயத்தைச் சொல்லி, மூன்று அண்ணன்களும் ஓடிவந்து  நிஷாந்த்தின் அம்மாவைக் காரில் அழைத்து சென்றனர். இவர்கள் சென்ற சில மணி நேரத்தில் நிஷாந்த் அவன் தந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

அவன் அம்மாவிற்கு நிறைய இரத்தப் போக்கு ஏற்பட்டு இருந்ததால் உடனே எல்லா பிளட் பேங்க் மூலம் தேடிக்கொண்டிருந்தார்கள் .நிஷாந்த் அவனுக்கும், அவன் அம்மாவிற்கும் ஒரே குரூப் என்று இரத்த தானம் செய்யமுன் வந்தான். ஆனால் அவன் முதல் நாள் இரவு குடித்திருந்ததால் டாக்டர்கள் அவன் இரத்தம் உபயோகப் படாது என்றார்கள். அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ராம்குமார் தான் இரத்தம் கொடுத்து அந்த மூதாட்டியைக் காப்பாற்றினான். மைதிலி அவள் அண்ணியின் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

நிஷாந்த்தும், “எனக்கு புத்தி வரவே கடவுள் இப்படி ஒரு தண்டனையை என் அம்மாவிற்குக் கொடுத்தார்“ என்று கண்கலங்க நின்றதோடு, “இனிமேல் மதுபாட்டிலை என் கைகளாலும் தொட மாட்டேன்” என்றான் உறுதியாக.

‘குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு‘ என்று இருப்பானா, இல்லை வாழ்க்கையைப் புரிந்து கொண்டு ஒழுங்காக நடப்பானா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அன்பின் வழியது (சிறுகதை) – பவானி உமாசங்கர்

    வைகை ஆற்றின் காதல் நினைவுகள்! (சிறுகதை) – இரஜகை நிலவன்