in ,

சொல்லிடுவீர் பொறாமையோரே (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

செல்வம்தான்  கொழிக்கிறது  அவளுக்  கென்ன

          செழிப்போடு  வாழ்கின்றாள்  அவளுக்  கென்ன

நல்லநல்ல  துணிமணிகள்  விலையு  யர்வில்

          நறுந்தங்க  அணிகலன்கள்  கழுத்து  காதில் !

எல்லோரின்  இருகண்கள்  அவளின்  மீதே

          ஏக்கத்தில்  மற்றவர்கள்  அவளைப்  பார்த்தே

சொல்லாமல்  தமக்குள்ளே  உரையா  டல்கள்

          சொக்குகின்றார்  வரம்பெற்று  வந்தாள்  என்றே !

 

வெந்துவெந்து  புலம்புகின்றார்  பார்ப்ப  வர்கள்

          வேகின்ற  அவள்நிலையை  அறிந்த  வர்யார்

வெந்துவெந்து  ஒவ்வொருநாள்  மனத்திற்  குள்ளே

          வெறுமையுடன்  கழிப்பதினை  அறிந்த  வர்யார் !

பந்தமாக்கித்  தாலியினைக்  கட்டி  விட்டுப்

          பணமீட்ட  அயல்நாடு  சென்ற வன்தான்

சிந்துகின்றாள்  கண்ணீரைத்  தனிமை  தன்னில்

          சிற்பமெனும்  அழகிளமை  கரைந்த  வாறே !

 

தங்கநகை  தகிக்கின்ற  மேனி  சூட்டைத்

          தணித்திடுமோ  சொல்லிடுவீர்  அயல்வீட்  டாரே

அங்கங்கள்  துடிப்பதினை  உயர்ந்த  ஆடை

          ஆற்றிடுமோ  கூறிடுவீர்  எதிர்வீட்  டாரே !

மங்கலநாண்  பெற்றிட்ட  கார  ணத்தால்

          மணவாளன்  நினைப்பினிலே  நாளும்  நாளும்

பொங்குகின்ற  உணர்வுடனே  வாழு  கின்ற

          போலிவாழ்க்கை  வரமாமோ  பொறாமை  யோரே !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கறை நல்லதா…?! (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை