in ,

சமூக அக்கறை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

‘ அண்ணே, ஒரு டீ… ‘ என்று மாஸ்டரிடம் சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிய சீனி, ‘ அக்கா ஒரு வில்ஸ் கொடுக்கா… ‘ என்று கேட்டான்.  சிகரெட்டை வாங்கி துண்டு சீட்டை எடுத்து சீமெண்ணெய் விளக்கில் பற்ற வைத்து, தம் கட்டி ஒரு இழு இழுத்து குபுகுபுவென்று புகையை விட்டான் சீனி.

‘ தம்பி டீ… ‘ என்று சொன்னபடி லோட்டென டீ டம்ப்ளரை வைத்தார் மாஸ்டர்.  டீயை ஒரு உறிஞ்சும் தம் ஒரு இழுப்புமாக அனுபவித்தான் சீனி.

பேப்பரில் செய்தி படித்துக் கொண்டிருந்த ஒருவர், ‘ ஹூம்… கட்சி மாநாட்டுக்கு போன ஒருத்தன் தலையில பேனர் விழுந்து சாகக் கிடக்கிறானாம்… அவன் பொழைச்சுக்குவானா… மாட்டானானு கேள்வியோட முடிச்சிருக்கானுங்க… ‘ என்று பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார்.

‘ என்ன பண்ண… ஐநூறு ரூபா காசுக்கும் ஒரு பிரியாணி பொட்டலத்துக்கும் ஆசைப் பட்டு கூட்டத்தோட கூட்டமா போயிருப்பான்… இப்போ அவன் பொண்டாட்டி புள்ளை குட்டிகளை யார் பார்ப்பா… ‘ அங்கலாய்த்தார் பக்கத்திலிருந்தவர்.

சிகரெட் நுனியில் இருந்த சாம்பலை தட்டிவிட்டு, டீயை உறிஞ்சியபடியே  திரும்பினான் சீனி. அவரது கையில் இருந்த பேப்பரை உற்று பார்த்தான். போட்டோவில் பெரிய கட்டுடன் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார் ஒருவர்.

‘ நாடு எங்கே ஸார் போயிட்டிருக்கு… வேலைக்கு போனோமா… கூலிய வாங்குனோமா… பொண்டாட்டி புள்ளைக் குட்டிகளுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு போயி கொடுத்தோமான்னு இல்லாம இப்படி நாசமா போயிக்கிட்டிருக்கோமே ஸார்… ‘ என்றான் சீனி அவரது முகத்தைப் பார்த்து.

‘ ஐயோ… இந்த நியூஸைப் பாருங்க… ஈ.ஸி.ஆர். ரோடுல ரெண்டு பேரு ரேஸ் போயி போலீஸ்ல மாட்டிக்கிட்டானுங்கலாம்… ‘ என்றார் முன்னவர்.

‘ ச்சொச்… ச்சொச்… ரொம்ப ஸ்பீடா போனானுன்களோ… ‘ என்று நோச்சுக் கொட்டினார் இரண்டாமவர்.

‘ நாசமா போச்சு… ரேஸ்னாலே ஸ்பீடாத்தானேயா போகணும்… ‘ என்று பற்களைக் கடித்தார் முதலாமவர்.

சிகரெட் சாம்பலைத் தட்டிவிட்டு மறுபடியும் குனிந்து அந்த நியூஸ் வந்த பக்கத்தைப் பார்த்தான் சீனி.

‘ நாசமாப் போரவனுங்க… அவங்க அப்பன் கஷ்டப்பட்டு பணம் சேர்த்திருப்பான். இவனுங்க அடம்பிடிச்சு புல்லட் வாங்கி இப்படி ரேஸ் ஒட்டி நாசமாப் போறானுங்குங்க… அந்த நேரத்துல புத்தகத்தை படிச்சாலும் பாஸாகி வேலைக்குப் போயி… அப்பா அம்மாவைக் காப்பாத்தலாம்… இப்படித்தான் ஸார் நாம நாசமா போயிக்கிட்டிருக்கோம்… ’ என்று சொல்லிவிட்டு சிகரெட்டை இழுக்க ஆரம்பித்தான் சீனி.

பேப்பரை திருப்பி அடுத்த பக்கத்தை பார்த்த முதலாமவர், ‘ கன்றாவி… ‘ என்றார்.  இரண்டாமவர்… ‘ என்னாச்சு… ‘ என்றார்.

‘ ஒருத்தி  பணத்துக்காக பதினைஞ்சு பேரை கலியாணம் பண்ணிக்கிட்டாளாம்… கடைசியா கைவிட்டவன் போலீஸ்ல பிராது குடுக்கப் போக அவ மாட்டிக்கிட்டாளாம்… ‘  என்றார் முதலாமவர்.

‘ கடவுளே… கடவுளே… பணத்தாசை யாரை விட்டது… ஒருத்தன் ஒருத்தனா மடக்கி பணம் நகைன்னு வாங்கிட்டே இருந்திருக்கா பாருங்க… ‘ என்றார் இரண்டாமவர்.

புகையை நன்றாக இழுத்துவிட்டு டீயையும் உறிஞ்சியபடி, பேப்பரில் அந்தப் பக்கத்தை பார்த்த சீனி, ‘ கலி காலம் ஸார்… ஆம்பிள்ளைகள்தான் இப்படி பண்ணி நியூஸ் கேட்டிருக்கோம்… இது அப்படியே உல்டாவா அல்ல இருக்கு… அவங்கவங்க பெத்த மகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கவே சிரமப் படறாங்க… இவ என்னடான்னா இத்தனை கல்யாணம் பண்ணியிருக்கா… மக்கள் எப்படி நாசமா போயிட்டிருக்காங்க பாருங்க ஸார்… நாடு எப்படி ஸார் முன்னேறும்… ‘ என்றான் சீனி கொஞ்சம் கோபமாய்.

இரண்டாமவர் சற்றே நிமிர்ந்தார். புன்னகையுடன், ‘ நாங்க இதை வெறும் நியூஸா மட்டும்தான் தம்பி பார்த்துக்கிட்டிருக்கோம்… நீங்க ஒரு சமூக அக்கறையோட இதையெல்லாம் பார்க்கறீங்களே தம்பி… உங்களை மாதிரி நிறைய பேரு வரணும் தம்பி…. ஆமா நீங்க யாரு… ‘ என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போது சிலர் திடு திடுவென ஓட ஆரம்பித்தனர்.

டீ போடுபவர் ஒருத்தனை கூப்பிட்டார். ‘ ராசேந்திரா… என்ன விஷயம்… ஏன் எல்லாரும் இப்படி ஓடறீங்க… ‘

‘ உனக்குத் தெரியாதாண்ணே… தெருக்கோடில ஒரு ரெடிமேடு கடை திறக்கறாங்கள்ல… அதைத் திறக்க நடிகை சிங்காரி வந்திருக்காங்களாம்… அதான் நானும் ஓடறேன்… ‘ என்றபடியே ஓடினான் அவன்.

அதைக் கேட்டவுடனேயே சிகரெட்டை வீசிவிட்டு சீனியும் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான்.

‘ நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்னு அறுபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாலேயே பி.எஸ்.வீரப்பா வசனம் பேசினார்… அவ்ளோ பேசிட்டு இவனும் ஓடறான்… ‘ என்று முதலாமவர் சொன்னதெல்லாம் சீனியின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லைதான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆமென இணங்கி (முடிவு) – ராஷி ராய் (தமிழில் பாண்டியன் இராமையா)

    பணமா பாசமா…? (சிறுகதை – முற்பகுதி) – பவானி உமாசங்கர்