in ,

சாயம் போன பட்டாம்பூச்சிகள் (சிறுகதை) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

உள்ளே நுழைந்த என் மாமியாரைப் பார்த்து நளினி அப்படி கேட்டது எனக்கு பெரும் தர்மசங்கடமாய் இருந்தது. வீடு தேடி வந்த விருந்தாளியை யாராவது, “எங்க வந்தீங்க?”ன்னு கேட்பார்களா?… அதுவும் பெத்த தாயைப் பார்த்து.

சூழ்நிலையின் இறுக்கத்தைச் சமாளிக்கும் விதமாய், “வாங்க அத்தை!.. நல்லா இருக்கீங்களா?” என்று நான் கேட்டு வைத்தேன்.

“ம்… நல்லாருக்கேன் மாப்ள!” அத்தை தளர்வாக பதில் சொல்ல,

“க்கும்… நல்லாயில்லாம என்ன கேடு?…. இந்தக் காலத்துல இளசுகதான்  அந்தப் புடுங்கல்…. இந்தப் புடுங்கல்னு அல்லாடிட்டுக் கிடக்குதுக!…” முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்தபடி சொன்ன நளினியை முறைத்துப் பார்த்தேன்.

“ஏய்… உனக்கு என்ன ஆச்சு?… வந்திருக்கிறது உன்னோட அம்மா” பற்களைக் கடித்தபடி சொன்னேன்.

“யார் இல்லைன்னா?… அதுக்காக தலையில் தூக்கி வெச்சு ஆடச் சொல்றீங்களா?”

“ச்சீய்… என்ன பேச்சுடி பேசுற?” நான் கோபமாகச் சொல்ல,

இடையில் புகுந்த என் மாமியார், “விடுங்க மாப்ள!.. அவ என்ன வேத்து ஆளா?… என் மகதானே?… பேசிட்டுப் போறா விடுங்க!” பெருந்தன்மையாய்ச் சொல்ல,

“அடா… அடா.. என்ன ஒரு பாசம் மகள் மேலே?” மீண்டும் நளினி அதே பாணியில் பேச,

நான் அத்தை பக்கம் திரும்பி, “அத்தை நானும் கவனிச்சிட்டே இருக்கேன்… ஒவ்வொரு தடவை நீங்க வரும் போதும் இவ இப்படித்தான்… குத்தலாகவும்… குதர்க்கமாகவும் பேசிட்டிருக்கா!… இவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் அத்தை.. தயவு செய்து இவ பேச்சையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க” கிட்டத்தட்ட கெஞ்சினேன்.

“அட… என்ன மாப்ள நீங்க?… இதுக்குப் போய் மன்னிப்பு அதுஇதுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு… நான்தான் சொல்லிட்டேனே, அவ என்ன வேணாலும் பேசிட்டுப் போறாள்னு”.

எங்கள் உரையாடல் பிடிக்காததாலோ என்னவோ சட்டென்று வேகமாக திரும்பி சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள் நளினி.

அத்தையும் அவள் பின்னாடியே தயங்கித் தயங்கி சமையலறைக்குள் செல்வதைப் பார்க்க எனக்கு பரிதாபமாய் இருந்தது.  “பாவம்… இந்த வயசான பெண்மணியோட மனசு எவ்வளவு வேதனைப்படும்… எத்தனை பாடுபடும்ன்னு.. ஏன்  புரிஞ்சிக்க முடியல நளினியாலே?… அப்படி என்ன தப்பு இவங்க செஞ்சுட்டாங்க?… இதே எங்கம்மா வரும் போதெல்லாம், “அத்தை… அத்தை”ன்னு அவங்க கிட்ட அன்பொழுகப் பேசுறா!… விழுந்து விழுந்து கவனிக்கிறா!… ஆனால் சொந்த அம்மா வந்தா மட்டும் தேனீயாட்டம் கொட்டுறா!… ஏன்?… என்ன காரணமாயிருக்கும்?” மூளையைக் கசக்கிப் பிழிந்தும் எதுவும் பிடிபடவில்லை.

சமையலறைக்குள் நளினியின் குரல் மறுபடியும் உச்சத்தில் ஒலிக்க, கூர்ந்து கேட்டேன்.

“உன்னைய யாரு எட்டுக்கு ஏழு தரம் இங்க வரச் சொன்னது?…கட்டிக் குடுத்த பொண்ணு வீட்டுக்கு ஆறு மாசத்துக்கு ஒரு தரம்… அல்லது வருஷத்துக்கு ஒரு தரம்… வந்தாப் போதாதா?… சும்மா மாசத்துக்கு ரெண்டு தடவை வந்து வந்து நிக்கிறியே… உனக்கு வெட்கமாவே இல்லையா?”

“இல்லம்மா… உன்னையையும் மாப்பிள்ளையையும் பார்க்கணும்னு தோணும் போதுதான் வர்றேன்”

“ஓஹோ… மாசத்துக்கு ரெண்டு தரம் எங்களை பார்க்கணும்னு உனக்கு தோணுதோ?” நளினியின் குரலில் உலக மகா கிண்டல் தெரிந்தது.

“நான் அப்படியெல்லாம் கணக்கு வெச்சுக்கறதில்லைடி”

நொந்து போனேன் நான்.  “ச்சீ… இவளெல்லாம் ஒரு பொம்பளையா?”

மறுநாள் ஆபீசில் இதே நினைப்புத்தான். “இந்நேரம் அங்கே என்ன களேபரம் நடந்திட்டிருக்கோ?… பாவி… அந்த வயசான பெண்மணி மேலே என்னென்ன வார்த்தை ஈட்டிகளை வீசிக்கிட்டு இருக்காளோ?”

”என்ன ராஜன் சார்?… ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?.. உடம்பு கிடம்பு சரியில்லையா?” பக்கத்து சீட் மோகன் கேட்க,

“அது வந்து… ஆமாம் கொஞ்சம் ஃபீவரிஸா இருக்கு” பொய்யைச் சொன்னேன்.

“அப்ப செகண்ட் ஆஃப் லீவு போட்டுட்டு போக வேண்டியதுதானே?”

“ஆமாம் இவர் சொல்வதும் சரிதான்… நமக்குத் தான் லீவு நிறைய இருக்கே?” என மனசுக்குள் சொல்லிக் கொண்டு, “ஆமாம் மோகன் அதைத்தான் நானும் நினைச்சிட்டிருந்தேன்” சொல்லியபடியே எழுந்தேன்.

மதியம் இரண்டு மணி வாக்கில் வீட்டை அடைந்த நான், வாசலில் ஒரு ஆட்டோ நிற்க ஆச்சரியமானேன்.  “என்னது நம்ம வீட்டு முன்னாடி ஆட்டோ நிக்குது… அத்தைக்கு உடம்புக்கு முடியாமப் போச்சோ?”… யோசித்தபடியே ஆட்டோவை நெருங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன்.

ஒரு பெரிய வயர் கூடையில் சிறியதும் பெரியதுமாய் பல பொட்டலங்கள் இருக்க, டிரைவரிடம் கேட்டேன். ”ஏம்பா… இதெல்லாம் என்ன?”

“மளிகை சாமான்கள் சார்… அரிசி… பருப்பு… உப்பு… புளி… மிளகாய்…” என்றான் காதிலிருந்த பீடியை எடுத்துப் பற்ற வைத்தவாறே.

எனக்கு குழப்பமாய் இருந்தது. மெல்ல அடியெடுத்து வைத்து வீட்டிற்குள் சென்றேன். உள் அறையில் அத்தையும் நளினியும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“வேண்டாம் நளினி… இந்தப் பழக்கத்தை இன்னியோடு நிறுத்திக்கலாம்!… நீ என்னை உண்மையாகவே திட்டறதா நினைச்சுட்டு மாப்ள உனக்காக என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கிறார்டி” அத்தை சொல்ல,

“அட… நீ சும்மா இரும்மா!… நான் உன்னை அந்த வாங்கு வாங்குறது எதுக்குனு நினைக்கிறே?… அப்பத்தான் அவர் மனசுல சந்தேகமே வராது. … நாம் ரெண்டு பேரும் ரொம்ப அன்பா… பாசமா… இருந்தா…. அம்மா மேலே இத்தனை பாசமா இருக்காளே?… ஒருவேளை நாம் இல்லாத நேரத்தில் பணம்… காசு… வீட்டில் இருக்கிற அரிசி… பருப்பு… அதுஇதுன்னு எல்லாத்தையும் தூக்கி அம்மாக்காரிக்கு குடுத்தனுப்பிட்டு இருக்காளோ?… அப்படிங்கற சந்தேகம் வந்துடும்!… அதான் இந்த நடிப்பு. இப்ப யாராச்சும் போய், உங்க பொண்டாட்டி நீ இல்லாத நேரத்துல அவங்க அம்மாவுக்கு பணம் குடுக்கறா… மளிகை சாமானெல்லாம் பொட்டலம் போட்டுக் குடுத்தனுப்புறானு சத்தியம் பண்ணிச் சொன்னாலும் கூட நம்ப மாட்டார். சரி… சரி… பேசிட்டு நிக்காதே…. உடனே கிளம்பிடு… இந்தா இதுல ஐநூறு ரூபாய் இருக்கு…. செலவுக்கு வெச்சுக்கோ”

நான் வந்த சுவடு தெரியாமல் மௌனமாய் திரும்பி வெளியேறினேன்.

“நல்லவனாய் இருக்கிறது புத்திசாலித்தனமா?… இல்லை முட்டாள்தனமா?” எனக்குள் பட்டிமன்றம்  துவங்கியது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குடியாட்சி (சிறுகதை) – மலர் மைந்தன்

    பஞ்சாயத்து (பகுதி 1) – நாமக்கல் வேலு