in ,

ராகிங் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…mu

விடிய  விடியத்   தூங்காமலேயே  கிடந்தான் குமார்.

ஏதோவொரு மூலையிலிருந்து பல்லி வித்தியாசமான ஓசையில் கௌலி கூறியது.  தெருவில் நாயொன்று ஊளையிட்டது. ”கடவுளே.,.. இதெல்லாம் என்ன சகுனங்கள்?”

நாளை முதன் முதலாய் அந்தக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கப் போகிறான். புதிதாய் உள்ளே வரும் முதலாமாண்டு மாணவர்கள் மூத்த மாணவர்களால் “ராகிங்” என்னும் பெயரில் மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தப்படுவது அக்கல்லூரியின் பிரசித்தி பெற்ற மோசமான வழக்கம்.

கல்லூரி நிர்வாகத்தாலும் சரி, சட்டத்தாலும் சரி, அவ்வழக்கத்தை போக்கவே முடியவில்லை. அதன் காரணமாகவே அக்கல்லூரியில் யாருமே சேர்வதில்லை. குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த குமாருக்கு அந்தக் கல்லூரியைத் தவிர வேறு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் சிங்க குகைக்குள் குடியேறினான்.

“என்ன நடக்குமோ?… எப்படியெல்லாம் கேலி  பண்ணுவாங்களோ?…”  என்கிற பயம் அவனை  இரவு முழுவதும் வாட்டி வதைத்தது.   “படிப்பே வேண்டாம்”ன்னு தூக்கி வீசிட்டுப் போயிடலாமா?”

அவனையேயறியாமல் அவன் உறக்கத்தில் விழ, கனவுலகம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.

                கனவில் ஒரு உருவம் கடலை நோக்கி தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு ஓடியது.  தண்ணீரில் குதித்த பின் அலைகள் அவ்வுருவத்தைப் புரட்டிப் போட, அது குமார்.

      திடுக்கிட்டுக் கண் விழித்தான். மொத்த உடம்பும் நடுங்கியது.  நா வறண்டு தொண்டை தண்ணீருக்காய் தவித்தது.  பக்கத்திலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரே விநாடியில் மொத்த பாட்டிலையும் காலி செய்தான்.  “இந்த மாதிரியான ஒரு இறுக்க சூழ்நிலையிலேயே தெனமும் இருந்தால் எப்படிப் படிப்பது?… எப்படி எக்ஜாமெல்லாம் எழுதறது?… மூணு வருஷத்தை எப்படி ஓட்டறது?”

      அன்றைய இரவு விடியாமலேயே இருந்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்த்தான். ஒரு புறம் சிரிப்பும் இன்னொரு புறம் கவலையும் வந்தது.

                மறுநாள்,

                ஆர்வமேயில்லாமல் கிளம்பி,  அரைகுறையாய்ச்  சாப்பிட்டு விட்டுக் கிளம்பினான்.

போருக்குப் போகும் சிப்பாய் போல்,  போகும் போது தாயையே உற்று உற்றுப்  பார்த்து விட்டு வெளியேறினான்.  “நல்லபடியா திரும்பி வருவேனா?”

அவன் வாசலைத் தாண்டியதும், “எதுக்கு இவன் என்னை இப்படி முறைச்சிட்டுப் போறான்?… முதல் நாள் காலேஜுக்குப் போறான்… ஆனா மூஞ்சில ஒரு சந்தோஷத்தையே காணோம்!… பயம்தான் நிறைய இருக்கு” தாய் மனம் குழம்பியது.

டவுன் பஸ்ஸில் ஜன்னலோரம் அமர்ந்து பயணித்தவன் பார்வையில், வெளி உலகில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் இருப்பதாய்ப் பட, ஒரு சுய பச்சாதாபம் மேலோங்கியது.  “ஹும்… உலகத்துல என்னைத் தவிர எல்லோருமே சந்தோஷமா இருக்காங்க”

அந்தப் பேருந்து கல்லூரியை நெருங்க நெருங்க இருதயம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.

கல்லூரி வாசலிலேயே அந்தப் பேருந்து நிற்க, எல்லோரும் இறங்கிய பின் கடைசியாய் இறங்கினான்.

கல்லூரிக்கு எதிரே இருந்த டீக்கடையில், “சோதனை மேல் சோதனை!… போதுமடா சாமி” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, நிதானமாய் நடந்தான்.

                கல்லூரி வாயிலுக்குள் நுழைகையில் கால்கள் நடுங்கின.  வியர்வை ஆறாய்ப் பெருகியது. அவனது அச்சத்தை அதிகப்படுத்தும் விதமாய், தூரத்தில் நின்றிருந்த மூத்த மாணவர் கூட்டம் இவனைக் கை காட்டி ஏதோ சொல்லிக் கொண்டே அருகில் வர,  “இப்படியே  திரும்பி  ஓடி விடலாமா?” என்று கூட யோசித்தான்.

                அதற்குள் அவர்கள் நெருங்கி வந்து விட,

“முதலாம் ஆண்டா?” சற்று முரட்டுத்தனமாய் இருந்த ஒரு மாணவன் கேட்க,

வாய் திறந்து பதில் பேசக் கூட முடியாமல், மேலும் கீழுமாய்த் தலையாட்டினான் குமார். எங்கே தான் மயக்கம் போட்டு விழுந்து விடுவோமோ? என்கிற அச்சம் வேறு உள்ளுக்குள் தோன்றியது.

                அந்த மூத்த மாணவர் கூட்டத்தின்  தலைவன் போலிருந்தவன், இன்னொரு மாணவனிப் பார்த்து,  “டேய்…. போய் அதை எடுத்திட்டு வாடா!” என்று கட்டளையாய்ச் சொல்ல,

அந்த மாணவன் வேகமாய் ஓடினான்.

சில விநாடிகளிலேயே திரும்பி வந்தவன் கையில் ஒரு தட்டு.

அதனுள்ளிருப்பது என்னவென்று வெளியே தெரியாத வகையில் துணி போட்டு மூடப்பட்டிருந்தது.

                 “உள்ளார என்ன இருக்கும்?…. செருப்பு…. உள்ளாடை… ஆட்டுத்தலை… மனிதத்தலை?” கற்பனை கன்னா பின்னாவென்று ஓடியது குமாருக்கு.  “டேய் குமார்… இன்னிக்கு உனக்கு சங்குதாண்டா” மன்சாட்சி கூவியது.

                 “ம்… திற”  கரகரப்பான குரலில் அந்த மாணவக் கூட்டத்தின் தலைவன் சொல்ல,

தயங்கினான் குமார்.

“ம்.. திறப்பா” நான்கு குரல்கள் ஒரு சேர ஒலிக்க,

நடுங்கும் கைகளால்…

அத்துணியை…

மெல்ல….

விலக்கினான் குமார்.

                உள்ளே?

                ஜிலேபி… லட்டு… மைசூர்பாக்…. மக்கன் பேடா… முந்திரி கேக்… என  எச்சில் ஊற வைக்கும் இனிப்பு வகைகள்.

                “ம்… எடுத்துக்க”

      “இதெல்லாம் நெஜமாவே ஸ்வீட்டுகள்தானா?… இல்லை பிளாஸ்டிக் பொம்மைகளா?” குமார் தயங்க,

                 “என்ன நண்பா… நம்ப முடியலையா?… நாங்க திருந்திட்டோம்!… எங்க  கேலிக்  கொள்கையைத்  தூக்கி வீசிட்டோம்… இனிமே புதுசா  வர்ற முதலாமாண்டு மாணவர்களை இப்படித்தான்  வரவேற்கப் போறோம்!… ராகிங் என்ற பேச்சே இனிமேல் இந்தக் கல்லூரியில் இருக்காது!… இதுநாள் வரைக்கும் ராகிங்ல முதலிடம்ன்னு பேர் வாங்கின நம்ம காலேஜை இனிமேல் ரிசல்ட்ல முதலிடம்ன்னு ஆக்கப் போறோம்” என்றபடி அந்தத்  தலைவன் இனிப்பை எடுத்து குமாருக்கு ஊட்டி விட,

                கண்ணீருடன் விழுங்கினான் குமார்.

      அன்று இரவு, மீண்டும் அதே கனவு வர,

      கனவில் அந்தக் கடற்கரை உருவம் அலைகளிலிருந்து மீண்டு புன்னகையோடு கரையேறி கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கொண்டே நடந்தது.

      அசரீரி ஒலித்தது.  “நீ நல்ல கல்லூரியில்தாண்டா சேர்ந்திருக்கே”

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருவிழா (சிறுகதை) – சத்யா பானு

    இனி இல்லை இந்தக் கொலை (குறுநாவல் – பகுதி 6) – சுஸ்ரீ