in ,

சைக்காலஜிகல் அப்ரோச் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

      காலை நேரம்.

      திவாகர் அவசர அவசரமாய் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

      வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்க, “ஜோதி… வாசல்ல யாரோ கூப்பிடறாங்க… போய் பாரும்மா” தன் அறையிலிருந்து கத்தலாய்ச் சொன்னான்.

      “அய்யோ… நான் அடுப்புல காய் வெச்சிருக்கேன் கொஞ்சம் நகர்ந்தாலும் கருகிடும்… நீங்களே போய்ப் பாருங்க” அவளும் பதிலுக்கு சமையலறையிலிருந்து கத்தலாய்ச் சொன்னாள்.

      சலித்துக் கொண்டே வாசலுக்குச் சென்றான் திவாகர்.  பக்கத்து வீட்டு ராஜகோபாலன் நின்றிருந்தார்.

“குட்மார்னிங் சார்… என்ன அதிகாலையிலேயே வந்திருக்கீங்க… என்ன விஷயம்?” திவாகர் கேட்க,

 “வந்து… இன்னிக்கு நம்ம ரெண்டு வீட்டுக்கும் மத்தில… காம்பௌண்ட் சுவர் வேலை ஆரம்பிக்க ஆட்கள் வர்றாங்க!… அதனால் நீங்க இன்னிக்கு லீவு போட்டுட்டு வீட்டிலேயே இருங்க சார்!… ஏன்னா… ரெண்டு வீட்டுக்கு நடுவுல காம்பௌண்ட் சுவர் எழுப்பும் போது ரெண்டு வீட்டு ஓனர்களும் இருந்து… கரெக்டா அளந்து… பிரிச்சு… சுவர் வெச்சாத்தான் சரியாயிருக்கும்!… இல்லேன்னா… ப்யூச்சர்ல தேவையில்லாத பிரச்சினைகள் வரும் சார்!” என்று பக்கத்து வீட்டு ராஜகோபாலன் சொல்ல,

       “என்ன சார்?.. நீங்க இருக்கும் போது நான் எதுக்கு சார்?… உங்களுக்குத் தெரியாததா எனக்குத் தெரிஞ்சுடப் போவுது?… இல்ல நீங்கதான் ஏமாத்தற ஆளா?.. போங்க சார், நீங்க இப்படிக் கேட்டதே எனக்கு சங்கடமாயிருக்கு சார்!… நான் ஒண்ணும் உங்களை நம்பாதவனில்லை… கடலளவு நம்பறவன்!…” என்றான் திவாகர் நிதானமாய்.

       “ஹி… ஹி… அது… வந்து.. இருந்தாலும் நீங்களும் உடனிருந்து பார்க்கறதுதான் நியாயம்!”  திவாகரின் வார்த்தைகள் அவர் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

       “தேவையில்லை சார்!… நீங்க அளந்து வைக்கறதை அப்படியே ஏத்துக்கறேன் சார்!… நீங்க என்னை எப்படி நினைக்கறீங்களோ தெரியலை!… நான் உங்களை என் கூடப் பிறக்காத அண்ணனாய்த்தான் நினைக்கறேன் சார்” ஆணித்தரமாய் திவாகர் சொல்லி விட, பக்கத்து வீட்டு ராஜகோபாலன் முகத்தில் புன்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார்.

      அவர் சென்றதும், திவாகரின் மனைவி ஜோதி அவனை “பிலு…பிலு”வென்று பிடித்துக் கொண்டாள். “என்னங்க நீங்க?… அந்த ஆளு ஒரு சரியான அயோக்கியன்… அகராதி பிடிச்சவன்!னு உங்களுக்குத் தெரியாதா?… அக்கம்பக்கத்துல இருக்கறவங்க கிட்ட தொட்டது தொண்ணூறுக்கும் தகராறு பண்ற ஆளுங்க!.. “காசு…காசு”ன்னு அலையற மனுஷன்!… ஹூம்… அவனை நம்பி அளக்க விட்டிருக்கீங்களே… போச்சு!… போச்சு!… நிச்சயமா நம்ம இடத்துல ஒரு அடி… ஒன்றரை அடியை ஆட்டையப் போடப் போறான்!”

      அதற்கு பதிலேதும் சொல்லாமல், ஜோதியை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு, அமைதியாய் நடந்தான் திவாகர்.

      அதே நேரம், ராஜகோபாலன் வீட்டில்,

       “என்னது அந்த திவாகர்… நம்மையே அளந்து… பிரிச்சு… சுவர் வைக்கச் சொல்லிட்டானா?… ஏங்க… ஏங்க… இதுதான் சான்ஸ்… ஒரு அடியோ… ஒன்றரை அடியோ நமக்குச் சேர்த்து வர்ற மாதிரி பிரிச்சு, சுவரை வெச்சிடுங்க!” ராஜகோபாலனின் மனைவி தூபம் போட,

       “ஏய்… என்னடி… என்னடி பேசறே?… ஹூம்… என்னைப் பத்தி இந்த ஏரியாவுல எல்லோருமே கேவலமாத்தான் பேசறாங்க!… ஆனா அந்த திவாகர் என்னை மனசுக்குள்ளார ரொம்ப மரியாதையா… மதிப்பாத்தான் வெச்சிருக்கான் தெரியுமா?!… பேசும் போது கூட என்னைய ரொம்பப் பெரிய மனுஷனா நெனச்சுத்தான் பேசினான்!… என்னைத் தன்னோட அண்ணனா நெனச்சு… நான் என்ன அளந்து தர்றேனோ அதை அப்படியே மறு பேச்சில்லாம ஏத்துக்கறேன்னு நம்பிக்கையோட அவன் சொன்னதைக் கேட்ட பிறகும் எப்படி அப்படியொரு அநியாயம் செய்ய முடியும்?… வேண்டாம்டி… நியாயமா என்ன செய்யணுமோ அதையே செய்திருவோம்டி!” ராஜகோபாலன் என்ற எதிர்மறை மனிதர் கூட நிறம் மாற ஆரம்பித்தார்.

      மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த திவாகர் அளக்கப்பட்டு, குழி தோண்டப்பட்டிருந்த இடத்தை தன் என்ஜினியர் பார்வையாலே அளந்தான். கனகச்சிதமாக, துளியும் பிசகின்றி அளக்கப்பட்டு, பிரிக்கப் பட்டிருந்ததைப் புரிந்து கொண்டான்.

      வீட்டிற்கு நுழைந்ததும், ஜோதியை அழைத்து, “பார்த்தியா… என்னமோ ஏமாத்திடுவான் அந்த ஆளுன்னு சொன்னே?… நான் கூட இந்த அளவுக்குத் துல்லியமா அளந்திருக்க மாட்டேன்!.. மனுஷன் அவ்வளவு துல்லியமா அளந்து தோண்டியிருக்கார்!… எப்படி என் சைக்காலஜிகல் அப்ரோச்?” காலரைத் தூக்கிக் காட்டினான்.

      தன் கணவரின் சாமார்த்தியத்தை எண்ணி உள்ளுக்குள் வியந்த ஜோதி, அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “அப்புறம்… இத்தனை வருஷம் என் கூடக் குடும்பம் நடத்தியிருக்கீங்க… இந்த சாமார்த்தியத்தைக் கூட  என் கிட்டேயிருந்து கத்துக்கலேன்னா எப்படி?” என்றாள்.

      திவாகருக்கு தலை “கிறு… கிறு”வென்று சுழன்றது..

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 14) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    ஆன்மீகத் தேடல் (சிறுகதை) – சுஸ்ரீ