in ,

அறிவியலால் ஆக்கம் செய்வோம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

அறிவியலின்  வளர்ச்சியாலே  பெற்ற  தென்ன

          ஆராய்ந்து  பார்த்தாலோ  நன்மை  யோடு

பறித்துகுழி  நமக்குநாமே  விழுதல்  போன்று

          பலவகையாய்த்  தீமைகளும்  வந்த  திங்கே !

தறிகையால்  நெய்ததுணி  எந்தி  ரத்தால்

          தரம்மாறக்  கைத்தறியோ  வீழ்ந்த  தின்று

பறித்துண்ட  கனிதன்னைச்  சாறாய்  மாற்றிப்

          பதப்படுத்திப்  பருகியதால்  கண்டோம்  நோய்கள் !

 

மாட்டுவண்டிப்  பயணமெல்லாம்  பேருந்  தாக

          மாசாகிப்  போனதுவே  தூய  காற்று

நாட்டிடையே  நான்குவழிச்  சாலை  போட்டு

          நட்டமரம்  சாய்த்திட்டார்  மழையோ  போச்சு !

தீட்டிதிட்டம்  கட்டுவித்த  தொழிற்சா  லையால்

          தீக்கழிவு  கலந்தாறு  பாழ்ய்ப்  போச்சு

ஊட்டமாக  பயிர்வளர  மருந்த  டித்தே

          ஊனமாகிப்  போனார்கள்  மனித  ரெல்லாம் !

 

செயற்கைக்கோள்  வானத்தில்  பறக்க  விட்டுச்

          செத்தொழிய  அணுக்குண்டை  வெடிக்க  வைத்தார்

இயற்கையாக  வீசிவந்த  காற்ற  டைத்தே

          இயந்திரத்தால்  அறைகளினைச்  குளிரச்  செய்தார் !

இயங்குதற்கு  விட்டமூச்சை  மீண்டும்  மீண்டும்

          இழுக்கவைத்து  உடலில்நோய்  பெருக  வைத்தார்

வியக்கவைக்கும்  அறிவியலை  ஆக்கத்  திற்கு

          வினையாற்றி  வளங்களினை  வளர்ப்போம்  வாரீர் !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இரவு (திகில்)பயணம் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    வானமே எல்லை (அந்தாதி கவிதை) – இரஜகை நிலவன்