எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திகைத்து நின்றாள் மாதவி. பன்னிரண்டு வருட திருமண வாழ்க்கையில், அவள் அடைந்தது என்ன? கையில் இரண்டு வருட பெண் குழந்தை பூஜா மட்டும் தான்.
மாதவி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியை. அவள் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். எழுபது வயதான மாமனார், அறுபத்தைந்து வயது மாமியார். ஒரு மைத்துனர், இப்போது தான் திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது.
ஒரே ஒரு நாத்தனார், கணவர் வீட்டில் மனஸ்தாபம். கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு வந்து ஆறுமாதம் ஆகிறது. பேர் தான் சாந்தி, குணம் பிரம்ம ராட்சசி. இவளுக்கும் மாமியார் வீட்டிற்கு போகும் எண்ணம் இல்லை, அவர்களும் இவளை அழைத்துப் போக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாதவிக்குத் திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆனபோதும் குழந்தைப்பேறு இல்லை. அவள் கணவன் ராகவன் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இடைநிலை அதிகாரி. குழந்தை இல்லை என்பதைச் சொல்லிக் காட்டியே வீட்டில் உள்ள எல்லோரும் அவளிடம் எல்லா வேலைகளையும் வாங்கிக் கொண்டனர்.
“உனக்கென்ன, குழந்தையா, குட்டியா? கல்யாணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இனிமேல் எங்கே குழந்தை பிறக்கப் போகிறது?” என்று சொல்லியே இவள் சம்பளப் பணத்திற்கு வேட்டு வைப்பார்கள். அவர்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
இவள் முதுகிற்குப் பின்னால் கோபம் வந்தால் மலடியென்றும் குத்திக் காட்டி சொல்வார்கள். அதுவும் ராகவனுக்கும் தெரியும். மாதவிக்கும் தெரியும்.
ராகவனிடம் ஒரு முறை சொல்லி மாதவி குறைபட்டுக் கொண்டாள். அவன் ஆறுதல் சொல்வானென்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் சிரித்துக் கொண்டே சொன்ன சொல் அவள் நெஞ்சைக் கூர்வாளாய் அறுத்தது.
“இல்லாததை ஒன்றும் சொல்லவில்லையே, உள்ளதைக் தானே சொன்னார்கள்” என்று சொல்லிக் கொண்டே வெளியே போய் விட்டான்.
அவள் மைத்துனருக்கு திருமணம் முடிந்தது. அவள் பணகாகார வீட்டுப் பெண், மாதவியை சிறிதும் மதித்துப் பேச மாட்டாள்.
இந்த நிலையில்தான், மாதவி செய்த பூஜைகளின் பலனாக தெய்வாம்ஸமாக பூஜா வந்து பிறந்தாள். முதலில் வீட்டில் உள்ள எல்லோரும் குழந்தையிடம் ஆசையாகத்தான் இருந்தார்கள். வேலைக்குப் போய் வரும் போது அவர்களே பார்த்துக் கொள்வதாகச் சொன்னார்கள். பிறகு ஏனோ குழந்தையிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி நின்றார்கள்.
ஒரு நாள் பள்ளியில் இருந்து திரும்பி வந்தால் குழந்தை ஒரேயடியாக கத்தி அழுது கொண்டிருந்தாள். அவளுடைய டயபர் முழுவதும் ஈரமாக இருந்தது. நாத்தனாரும், புதிதாக வந்த பணக்கார ஓர்ப்படியும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். குழந்தையை யாரும் கண்டு கொள்ளவில்லை.
“குழந்தை இப்படி அழுகின்றதே! அதைக் கூட கவனிக்காமல் இப்படி ரம்மி விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே?” என்றாள் கோபமாக.
“நாங்கள் என்ன உன் குழந்தைக்கு ஆயாவா? உன் குழந்தையை நீ பார்த்துக் கொள். இல்லை, யாராவது ஒரு ஆய்வு வேலைக்கு வைத்துக்கொள்” என்றனர் இருவரும் ஒரே குரலில்.
மாதவி ஓடிப்போய் குழந்தையை அள்ளி அணைத்து, டயபரை கழற்றி விட்டு, உடம்பை மிதமான வென்னீரில் டவலால் துடைத்து புதிய டயபர் மாற்றி, பாலும் கொடுத்த பின் அமைதியாகத் தூங்கினாள் குழந்தை.
முதலில் மாதவிக்கு இந்த விலகலின் காரணம் புரியவில்லை. குழந்தைக்கு நிறைய பணம் செலவு செய்வதால் அவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் பணம் கிடைக்காததுதான் காரணம் என்று புரிந்தது.
அடுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு குழந்தையை நல்ல டே கேர் சென்டரில் சேர்த்து விட்டாள் மாதவி. பள்ளிக்கு வேலைக்குப் போகும் போது ஒரு ஆட்டோவில் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அதற்கு வேண்டிய உணவு, மற்றும் இரண்டு செட் உடை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு டே கேரில் ஒப்படைத்து விட்டு பிறகு பள்ளிக்கு செவ்வாள்.
வீட்டில் ஒரே எதிர்ப்பு. “ஒரு சின்னக் குழந்தைக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?” என்று விவாதம் நடந்தது.
அப்போது அவள் நாத்தனார், “இத்தனை வருஷமாக இல்லாமல் இப்போது எப்படி குழந்தை உண்டாயிற்று? இது என் தம்பி ராகவன் குழந்தை தானா என்று சந்தேகமாக இருக்கிறது” என்றாள். ராகவனும் அங்கு தான் நின்று கொண்டு இருந்தான். மாதவிக்கு அவள் பேச்சு நெஞ்சை அடைத்தது.
கணவன் சரியான பதிலடி கொடுப்பான் என்று அவனை ஏறிட்டுப் பார்த்தாள் மாதவி. அவனோ, “என்னை ஏன் பார்க்கிறாய்? எனக்கும் அதே சந்தேகம்தான். இந்தக் குழந்தையின் தந்தை யார்?” என்றான்.
மாதவிக்கோ வானமே இடிந்து தலையில் விழுந்தாற்போல் இருந்தது. எவ்வளவோ விவாதங்கள். கடைசியில் அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு, துணைக்கு அவள் அம்மாவையும் அழைத்துக் கொண்டு தனியே வந்து விட்டாள். விவாகரத்தும் ஆகிவிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு ஸிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட்டும் பார்த்துக் கொண்டாள்.
மனதில் ஒரு திருப்தி. அவளைப் பெற்ற தாயோடும், அவள் பெற்ற குழந்தையோடும் வசிக்கத் தொடங்கி விட்டாள். ஆனந்தமான குடும்ப வாழ்க்கை இல்லையென்றாலும், குழந்தையைப் பற்றிய பயம் இல்லாத நிம்மதியான வாழ்க்கை. அவள் சம்பாதிக்கும் பணம், அவள் குழந்தைக்கும், அவள் குடும்பத்திற்கு மட்டுமே செலவானதால், கையில் கொஞ்சம் சேமிப்பும் நின்றது.
மனம் என்னவோ அடிக்கடி ராகவனை நினைத்தது. ஆனால் எட்டையப்பனைப் போன்ற அவன் பேச்சும், மனைவியையே நம்பாத எடுப்பார் கைப்பிள்ளையான அவன் நடத்தையும் அவளுக்கு வெறுப்பைத் தான் தந்தது. ஏட்டுச் சுரைக்காய் கரிக்குதவாது என்பது போல் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
இதற்கிடையில் ராகவனுக்கு இரண்டாவது திருமணம் நடந்தது என்றும் கேள்விப்பட்டாள். அவளுடைய வாழ்க்கையில் அவன் இல்லாத போது, அந்தத் திருமணம் அவளை எவ்வித்த்திலும் பாதிக்கவில்லை. மாதவியின் எண்ணம் முழுவதும் இப்போது பூஜா மட்டும்தான்.
சில ஆண்டுகள் கழிந்தன. பூஜாவும் ஐந்தாம் வகுப்பிற்கு வந்து விட்டாள். இயற்கையான அழகும், அம்மா, பாட்டி இருவரின் கவனிப்பாலும் பேரழகியாகத் திகழ்ந்தாள்.
மாதவியை வெறுப்பேற்றுவதற்காக, ராகவன் அடிக்கடி அவனது இளம் மனைவியுடன் சில நாட்கள் அவள் பள்ளிக்கு அருகில் அல்லது அவள் அபார்ட்மென்ட்டிற்கு அருகில் நடந்து போவான். மாதவி பார்க்கும் போது காலரைத் தூக்கி விட்டுக் கொள்வான். ஆனால் இப்போது சில நாட்களாக ஏனோ அவர்களைப் பார்க்க முடிவதில்லை.
ஒரு நாள் மாலை ஆறு மணி. பூஜா உட்கார்ந்து ஏதோ எழுதுவதும், படிப்பதும் இருந்தாள். மாதவி அவள் அம்மாவிற்கு உதவியாக இரவு டின்னருக்கு சப்பாத்தி செய்து கொண்டிருந்தாள். அவள் அம்மா அதற்குத் தொட்டுக் கொள்ள, பூஜாவிற்குப் பிடித்த உருளைக்கிழங்கு கறியும், இவர்கள் இருவருக்கும் பருப்புக் கூட்டும் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் காலிங் பெல் அடிக்கும் ஓசை கேட்டது. படிக்கும் குழந்தையைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று மாதவி தான்போய் கதவைத் திறந்தவளா திடுக்கிட்டாள்.
அங்கே ராகவன், அவன் அம்மாவோடு நின்றிருந்தான். அவர்களை “வாங்க” என்று அழைக்கவும் தோன்றாமல் திகைத்து நின்றாள் மாதவி.
“உள்ளே வரலாமா மாதவி?” என்று கேட்டான் ராகவன்.
“வாருங்கள்” என்று நகர்ந்து அவர்கள் உள்ளே வர வழி விட்டாள். ராகவன், பூஜாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.
சிறிது நேரத்துப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, “மாதவி! நான் சுற்றி வளைத்துப் பேச விரும்பவில்லை. நீயில்லாமல் என் வாழ்க்கை நன்றாக இல்லை. வீம்பிற்காக நான் செய்த இரண்டாவது திருமணமும் நிலைக்கவில்லை. என்னை மன்னித்து நீ என்னை ஏற்றுக் கொண்டு என்னுடன் வாழ முடியுமா?”
மாதவி அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். பூஜா எழுந்து வந்து அம்மாவின் அருகில் நின்று கொண்டாள்.
“மாதவி நான் கேட்டதற்கு நீ பதில் சொல்லவில்லையே?” என்றான் ராகவன்.
“என்னிடம் என்ன பதில் எதிர்பார்க்கிறீர்கள்? ஒரு சொல் கொல்லும் என்று சொல்வார்கள் தெரியுமா? இந்தக் குழந்தையின் தந்தை யார் என்று அன்று ஒரு நாள் கேட்டீர்கள் இல்லையா? அந்த ஒரு சொல் என்னை அன்றே கொன்று விட்டது. உங்கள் மனைவி அப்போதே இறந்து விட்டாள். இப்போது நான் பூஜாவின் அம்மா மட்டும் தான்” என்றவள் வேகமாக உள்ளே போய் விட்டாள். பூஜா போய் படிக்க உட்கார்ந்து விட்டாள்.
ராகவன் தலைகுனிந்து அவன் அம்மாவுடன் வெளியேறினான்.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings