in ,

நிறம் மாறிய நிஜங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

      பழனி கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானை தரிசிக்க வேண்டி, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தான் திவாகர்.

       “அய்யா… சாமி… ரெண்டு கண்ணில்லாத குருடன் சாமி!… பிச்சை போடுங்க சாமி!” அருகில் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தான் திவாகர்.  குச்சியைப் பிடித்தபடி, ஒரு குருட்டுக் கிழவன் பின்னால் நடந்து வர, அவனுக்கு முன்னால் ஒரு சிறுமி, அந்தக் குச்சியின் முன் பகுதியைப் பிடித்துக் கொண்டு அவனை வழி நடத்தி வந்தாள்.

      பார்த்த உடனேயே ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது திவாகருக்கு. சில்லரையை எடுக்க பாக்கெட்டினுள் கையை நுழைத்த போதுதான் அந்த யோசனை வந்தது.  “பழனி முருகன் உண்டியலில் போடுவதற்காக ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து வந்திருக்கோமே… அதில் ஒரு நூறு ரூபாயை மட்டும் இந்தக் குருட்டுப் பிச்சைக்காரனுக்கு போட்டால்… பாவம் இவனும்…இந்தச் சிறுமியும்… இன்னிக்கு ஒரு நாள் வயிறாற சாப்பிடுவாங்களே!”  மறு யோசனையின்றி ஒரு நூறு ரூபாயை எடுத்து அந்தக் கிழவனின் கையில் திணிக்க, கிழவன் அதை வாங்கி சிறுமியிடம் தந்தான்.

       “தாத்தா… நூறு ரூபா தாத்தா!” என்றாள் சிறுமி மிரட்சியுடன்,

       “என்னது?… நூறு ரூபாயா?… அய்யா… தர்ம பிரபு!… நீங்க நல்லா இருக்கணும் சாமி!  மவராசனா இருக்கணும் சாமி!” என்று வாயார வாழ்த்திவிட்டு அவர்கள் நகர,

      திருப்தியாயிருந்தது திவாகருக்கு.

      ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தன்னைச் சுற்றி கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் கும்பலாய்ச் சூழ்ந்து கொண்டு,

       “அய்யா… சாமி” “அய்யா… தர்மப்பிரபு” என்று கோரஸாய்க் கெஞ்ச ஆரம்பிக்க, அப்போதுதான் புரிந்தது திவாகருக்கு, அந்தக் குருட்டுப் பிச்சைக்காரனுக்கு தான் நூறு ரூபாய் போட்ட விஷயம் இவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதென்று.

      யோசித்தான், “என்ன பண்ணலாம் இப்ப?”

       “ஓ.கே!… சாமிக்குன்னு வெச்சிருக்கற மொத்தப் பணத்தையும் இந்த முறை ஏழைப் பிச்சைக்காரங்களுக்கு பிரிச்சுக் கொடுத்துடுவோம்!… இவங்க எல்லோரும்… குடும்பத்தோட இன்னிக்கு ஒருநாள்… வயிறாற உண்டு மகிழட்டும்!”

      யோசனையைச் செயல்படுத்தினான். எல்லோரும் அவனையும், அவனைப் பெற்றவர்களையும், வாழ்த்தோ வாழ்த்தென்று வாழ்த்தி விட்டு நகர்ந்தனர். போகும் போது அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷச் சிரிப்பு திவாகரின் நெஞ்சை நிறைத்தது.

      அப்போது பழனி போகும் பஸ் ஒன்று, பேருந்து நிலையத்திற்குள் நுழைய, “திமு… திமு”வென்று கூட்டம் பஸ்ஸை நோக்கி ஓடியது. திவாகரும் ஓடினான்.

      ஏகப்பட்ட தள்ளுமுள்ளுக்குப் பிறகு, பஸ்ஸினுள் நுழைந்து ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்தான்.  “ஸ்ஸ்… அப்பாடா!” என்றபடி சட்டையின் மேல் பட்டனைக் கழற்றி, நெஞ்சுப் பகுதிக்குள் காற்றை ஊதினான்.  பஸ் கிளம்பியதும், புழுக்கம் சற்றுக் குறைந்தாற் போலிருந்தது.

      பழனி கோயிலில் அவ்வளவாக கூட்டமில்லாததால், மொட்டையடிக்கும் இடம் கூட வழக்கத்திற்கு மாறாக காற்று வாங்கியது. சீக்கிரத்திலேயெ மொட்டையடித்துக் கொண்டு தரிசனத்திற்குக் கிளம்பினான்.  அங்கும் கூட்டம் குறைவாகவே இருக்க, விரைவிலேயே தரிசனத்தை முடித்துக் கொண்டு, மலையை விட்டுக் கீழிறங்கினான்.

      எவ்வளவோ முறை பழனிக்கு வந்து முருகனை தரிசித்துச் சென்றிருக்கின்றான், அப்போதெல்லாம் கிடைத்திராத ஒரு ஆத்ம திருப்தியை இந்த முறை அவன் மனம் அனுபவித்தது. “இதைத்தான் ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்பது” என்பார்களோ?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

      அடிவாரத்தை அடைந்ததும் வீட்டிற்குத் தேவையான விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவைகளை வாங்கிக் கொண்டு, பஸ் ஏறியவன் சரியாக ஒன்றரை மணி நேரத்தில் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இறங்கினான் திவாகர். அங்கே, தன் ஊருக்குச் செல்லும் பஸ்ஸிற்காக காத்திருந்த போது, காலையில் அவனிடம் பிச்சை பெற்றுக் கொண்டு அவனை வாயார… மனமார… வாழ்த்திய அந்த பிச்சைக்காரக் கும்பல் அதே இடத்தில் அப்படியே அமர்ந்து கத்தலாய்ப் பேசிக் கொண்டிருந்தது.

       “எலே ரங்கா… இன்னிக்குக் காத்தால ஒரு தர்மபிரபு… எங்க எல்லாருக்கும் தலைக்கு நூறு ரூவா போட்டான்லே!.. ஹூம்… தெனத்திக்கும் இந்த மாதிரி ஒரு ஆளு வந்தா போதும்..நமக்கு அலைச்சலே இல்லை!” சற்று வயதான அந்தப் பிச்சைக்காரன் உரத்த குரலில் சொல்ல,

       “ஹே…ஹே…ஹே…”என்று சிரித்த அந்த ரங்கன், “அட பெருசு உன் புத்திக்கு இது கூடப் புரியலையா? அவன் தர்மப்பிரபு இல்லே… லஞ்சப்பிரபு”

       “விருட்”டென்று திரும்பினான் திவாகர்.  கோபத்தில் விழிகள் சிவக்க அவர்களை முறைத்தான். ஆனால், அவன் மொட்டையடித்திருந்த காரணத்தினால் அவனை அவர்களுக்கு சுத்தமாகவே அடையாளம் தெரியவில்லை.

      அந்த கிழட்டுப் பிச்சைக்காரன் திருப்பிக் கேட்டான், “என்னலே சொன்னே?… லஞ்சப் பிரபுவா?”

       “ஆமாம் பெருசு!.. நேர்மையா சம்பாதிச்சிருந்தான்னா இப்படித் தூக்கிக் குடுப்பானா?… ஏதாவது கவருமெண்டு உத்தியோகத்துல எக்கச்சக்கமா லஞ்சம் வாங்க ஆசாமியா இருப்பான்!.. இல்லேன்னா… கள்ளக் கடத்தல் பண்றவனாகவோ… போதை மருந்து கடத்தறவனாகவோ இருப்பான்!.. அதான் அந்தப் பாவத்தையெல்லாம் கழுவறதுக்காக நமக்கு தர்மம் பண்ணிட்டுப் போறான்!”

      நெஞ்சே வெடித்து விடும் போலானது திவாகருக்கு. “அடப்பாவிகளா!”

       “ஓ… அப்ப அவன் பிச்சை போட்ட பணம் பாவப்பணம்னு சொல்றியா?”

       “சந்தேகமென்ன?… அள்ளி வீசும் போதே தெரிய வேண்டாம்?”

      நொந்து போன திவாகர் அங்கிருந்து நகர்ந்து சற்றுத் தள்ளிப் போய் நின்று கொண்டான். “ஹூம்… கலிகாலத்துல நல்லவைகள் கூட நிறம் மாறி தீயவைகளாப் போகும் போது,  நல்லதுக்குக் காலமில்லைன்னு யாரோ சொன்னதுல என்ன தப்பு?”

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 9) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நவராத்திரி கொலு கதைகள் (பகுதி 2) – சுஶ்ரீ