எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அம்மாவை அந்த கோலத்தில் பார்த்தபோது அருண் ஷாக் ஆகிப் போனான். அவன் பிறந்ததில் இருந்து, கடந்த மாதம்வரை பார்த்த கோலம்தான்.
“என்னடா அருண்.. அப்படி பாக்கிறே..?” மைதிலி நேரடியாகவே கேட்டாள்.
“இல்லம்மா.. சும்மா..” வார்த்தைகள் வாய்க்கு வர போராடின.
“உங்கப்பா இறந்த ஒரு மாதத்திலேயே.. பழையபடி டிசைன் உள்ள கலர் புடவை எல்லாம் உடுத்த ஆரம்பிச்சிட்டேன்னு ஆச்சரியமா இருக்கா..?”
“இல்லம்மா.. இது சரி தாம்மா.. ஆனா.. இந்த ஒரு மாசம் ஏன் அப்படி..?”
“அப்பா காரியங்கள் முடிகிற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருப்போம்னுதான் காத்திருந்தேன்.. அதுதான் நேத்து முடிஞ்சிருச்சே.. இனி எந்த சடங்குகளும் பாக்கி இல்ல..”
“……”
“ஆமா அருண்.. இனி தினமும் ஆஃபிஸிலிருந்து வரும்போது எனக்கு ஒரு முழம் மல்லிப்பூவும் வாங்கிட்டு வந்திடு..”
“சரி..ம்மா.. ஆனா.. பாட்டி வேற மாதிரி இருந்தாங்களே..?” என அருண் கேட்க..
“அவங்க அடுத்தவங்க என்ன சொல்லுவாங்களோனு பயந்துகிட்டு இருந்தாங்க.. அது தவறு அருண்.. நாம எப்படி வாழனும்னு நாமதான் முடிவு பண்ணணும்..” என்றவள் தொடர்ந்து..
“இனி உங்கப்பா சொன்னபடி வாழ்ந்து காட்டப் போறேன்..” என்றாள் மைதிலி.
“அப்பா சொன்னபடியா..?” ஆச்சரியமாக கேட்டான் அருண்.
“ஆமாம்.. நீ கவனிச்சிருப்பியே.. அப்பா தினமும் வேலை முடிச்சு வரும்போது மல்லிப்பூ வாங்கிட்டு வருவார்.. நான் எப்பவும் அதே கோலத்தில தான் இருக்கணும்னு என்கிட்ட கோரிக்கையும் வைச்சார்..”
“ஓ..”
“கணவர் இறந்தபிறகு பெண்களுக்கு தனி கோலம்னு முன்னாடி வைச்சதெல்லாம்.. அவங்க துணையில்லாதவர்கள்.. சமுதாயம் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்னு உணர்த்த தான்.. ஆனா இப்போ பெண்கள் பலவீனமானவர்கள் இல்ல.. அத்தோட..”
“அத்தோட..?”
“இப்போலாம் பலவீனமானவர்களை குறி வைச்சு சில கழிசடை நாய்ங்க நாக்கை தொங்க போட்டுட்டு அலையறாங்க.. அவங்க பார்வையில இருந்தும் தப்ப வேண்டியிருக்கு..” என்று மைதிலி முடிக்கவும், ‘சிறந்த பெற்றோர்களுக்கு மகனாக பிறந்திருக்கிறோம்’ என்ற நினைப்போடு அருண் கிளம்ப..
மனதெல்லாம் பூவாக பூக்க, கணவர் நினைப்பில் மூழ்கினாள் மைதிலி.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings