in ,

நீலம் பிரிந்த வானம் (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ஏன் இப்பல்லாம் நீ ட்ராயிங் போடறதில்லை சந்தியா?” ஒரு மாலை வேளையில் கேட்டான் கார்த்திக்.

“வீட்டு வேலையே சரியா இருக்குங்க” என்றாள் சந்தியா.

“நல்லா இருக்கு, அதுக்காகக் கத்துண்ட கலையை நிறுத்திடறதா? எத்தனை பழமையான ஓவியக்கலைகள் கத்துண்ட நீ – தஞ்சாவூர், மதுபனி, பட்டசித்ரா, கேரளா முரல்னு? மறுபடி போட ஆரம்பி” என்று கண்டிப்பாகச் சொன்னான் கார்த்திக்.

பாவம், அவன் சொன்ன வார்த்தைக்காக வீட்டு வேலை முடிந்ததும் சற்றுநேரம் கூட ஓய்வெடுக்காமல் வரைய உட்காருவாள் சந்தியா.

அமெரிக்கா மகன் வீட்டுக்குக் காடாறு மாதம் வந்திருந்த அவள் மாமியார்கூட “அவன் சொல்றான்னு எல்லாம் கேட்காதேடி! பழங்கலை ஓவியங்களை வித்தா ஏகப்பட்ட டாலர் கிடைக்குமாம்! அதான் உன்னை வரையச் சொல்றான்! இந்த வீட்டுக்குச் சம்பாதிச்சுப் போடத்தான் அவன் இருக்கானே, நீ ஏன் கஷ்டப்படணும்? பேசாம குழந்தைகளைப் பார்த்துக்கோ, போதும்” என்று சொல்லி விட்டாள்.

என்றாலும்… கார்த்திக்கின் அன்பான வார்த்தைகளின் காரணத்தால் அவளால் வரைவதை நிறுத்த முடியவில்லை. அக்கம்பக்க அமெரிக்க, இந்திய நண்பர்களின் பாராட்டும் அவளுக்கு ஊக்கமாக அமைந்தது.

குழந்தைகளையும் கார்த்திக்  விடவில்லை. கர்நாடக சங்கீத க்ளாஸ், பரதம், சம்ஸ்கிருதம், திருப்பாவை, திருவெம்பாவை என்று வகுப்புகளில் சேர்த்திருந்தான். மூன்றும் அவனிடம் எதிர்த்துப் பேசப் பயந்துகொண்டு இவளிடம் வந்து கத்தும்.

“ஸ்கூல் வொர்க்கே ரொம்ப டயரிங்கா இருக்கு, இதில் இந்த க்ளாஸெல்லாம் என்னத்துக்கு? வேஸ்ட் ஆஃப் டைம்” என்று உறுமும்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் சந்தியா. அந்த வீக்கெண்ட் அவர்களை அவுட்டிங் அழைத்துப் போவதாகச் சொல்லிவிட்டுச் சனிக்கிழமையன்று “சந்தியா டார்லிங்! நம்ம காலனி இண்டியன்ஸ் எல்லோரும் சேர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம க்ரூப் ஃபார்ம் பண்ணியிருக்கோம். இன்னிக்குச் சாயந்திரம் முதல் மீட் – நம்ம வீட்டுல! ஏதாவது பிரசாதம் – கேசரி, சுண்டல்னு – ரெடி பண்ணிடுடா கண்ணா!” என்றபோது வெடித்துவிட்டாள்.

“ஆமா! இதான் வேலையா எனக்கு? நீங்கதான் அமெரிக்காவிலேயே இந்தியக் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கறவர்னு பேர் வாங்கணும், அதுக்கு எங்களையெல்லாம் டார்ச்சர் பண்றீங்க, அப்படித்தானே கார்த்திக்?  இந்தியக் கலாச்சாரத்தை வித்துப் பணமும் புகழும் வேலையில் சவுகரியங்களும் சம்பாதிக்க நினைக்கறீங்க! அதுக்கு நாங்க பலிகடா! இதோ பாருங்க, என்ன வேணுமோ அதை நீங்களே பண்ணிக்குங்க! இனிமே உங்க ட்யூனுக்கு நானோ குழந்தைகளோ டான்ஸ் ஆடறதா இல்லை” பொறுமித் தீர்த்தாள் சந்தியா.

கார்த்திக் அறை வாங்கியவன் போலத் திக்பிரமித்தான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான்.

“சந்தியா! வானத்தை வானமா ஆக்கறதே நீலநிறந்தான். அது இல்லேன்னா வானம் வெறும் வெளிதான். அதுக்குன்னு நிறமோ, வடிவமோ கிடையாது. நாம நம்முடைய பூமியை விட்டுட்டு இங்கே வந்திருக்கோம். நமக்கு வாழ்வும் வளமும் தந்த இந்தத் தேசத்திற்கு உண்மையா உழைக்க வேண்டியது நம் கடமை. அதற்காக நம் அடையாளங்களை இழக்க வேண்டிய அவசியம் இல்லைம்மா. நம் உயர்ந்த கலாச்சாரந்தான் நம் அடையாளம். நம் பழங்கலைகளும், புராண இதிஹாஸங்களும், பக்தியும், தர்மமும்தான் நம்ம அடையாளம். அதையெல்லாம் நாம ஏம்மா இழக்கணும்? அப்படி இழந்துட்டா நாம யாரு? சின்னப் பாத்திரத்தில் இருந்தாலும் பெரிய அண்டாவில் இருந்தாலும் வெளிக்கு மதிப்பு இல்லைம்மா! உயர்ந்த வானத்திற்குத்தான் மதிப்பு. எத்தனைப் பணம் சேகரிச்சாலும் நம் பண்பாட்டை விட்டுட்டா நாம் வானமல்ல, அண்டாவுக்குள் இருக்கும் வெறும் வெளிதான். இன்னிக்கு மீட் நடக்கட்டும், நாளை கட்டாயம் அவுட்டிங் அழைச்சுப் போறேன். குழந்தைகளைக் கூப்பிடு, அவங்களுக்கும் விவரமா சொல்றேன்.”

குழந்தைகள் நிமிஷமாய்ப் புரிந்து கொண்டு விட்டனர்.

“நீங்க சொல்றது கரெக்ட்ப்பா!” என்றாள் மூத்தவள்.

“ஐ லவ் கல்ச்சர் க்ளாஸஸ்” என்றாள் இரண்டாமவள், அம்மாவிடம் சொன்னதை முற்றும் மாற்றி.

“நாளைக்கு RRR அழைச்சுப் போறியாப்பா?” என்றது சிறிசு, அதுதான் சாக்கென்று.

“அதுக்கென்ன, கட்டாயம். ஆனா இன்றைக்கு சமர்த்தா சஹஸ்ரநாமம் சொல்லணும்”

“சொல்வேனே! சுக்லாம்பயதயம்…” என்று அந்தக் குடும்பத்தின் கோபநிலையை முற்றுமாய்க் கலைத்து மழலையாய் ஆனந்தத்தின் சுக்லாம்பரதரம் செய்தது அது.

மீட்டின்போது கார்த்திக், சந்தியா குழந்தைகள் எல்லோருமே பாராயணத்திற்கு அமர்ந்தார்கள். பிரசாதம் – புளியோதரை, சுண்டல், கப்பில் பாயஸம்.

“விச்வமாய் வியாபித்தவனே! எங்கெங்கும் விஷ்ணுவாய்ப் படர்ந்தவனே!” – பாராயணம் ஆரம்பிக்க, “விச்வம் விஷ்ணு” என்ற நாமங்களின் அர்த்தம் இப்போது புரிந்தது சந்தியாவிற்கு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நேர்மார் (சிறுகதை) – மலர்மைந்தன், கல்பாக்கம்

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 11) – முகில் தினகரன்