in ,

நாடகம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலையில் ஆபீஸ் போகும் சமயம் சுந்தரம் எதையோ தேடிக் கொண்டிருந்தைக் கவனித்து விட்டாள் செல்வி. ‘என்னங்க ஆச்சு… ஏதோ பதட்டமா இருக்கற மாதிரி தெரியுது… என்ன ஆச்சு…. ‘  என்றாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல் மேற்கொண்டு மேஜை டிராயர், அலமாரி என்று எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டே இருந்தான்.

‘நாந்தான் கேட்கறேன்ல… என்ன தேடறீங்க… சொல்லுங்களேன்… நானும் தேடறேன்… ஏற்கனவே ஆபீஸ்க்கு டையமாகிடுச்சுனு புலம்பிக்கிட்டிருந்தீங்க… இப்போ திடீர்னு எதையோ தேடறீங்க..‘ என்றாள்

சலிப்புடன், ‘ஐயாயிரம் ரூபா வச்சிருந்தேன்… அதைக் காணலை… ‘ என்றான்.

‘ஐயய்யோ… அய்யாயிரமா… ‘ என்று வாய் பிளந்தாள் அவள்.

‘ஐயய்யோ… அய்யாயிரமில்ல… ஐயாயிரம்… ‘ என்று திருத்தினான்.

இருவரும் அங்கே இங்கே என்று தேடியபின், அவனோ சலிப்புடன் சொன்னான், ‘சரி, எங்கேயோ போயிடுச்சு விடு… நேரமாகுது… இன்னிக்கு மீட்டிங் வேற… நான் கிளம்பறேன்…‘ பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பியும் விட்டான்.

மத்தியானம் துணிமணிகளை துவைக்கலாமென்றெண்ணி எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய் வாஷிங்மிஷினில் போட்டாள். டைமரை வைத்துவிட்டு சாப்பிடப் போய் விட்டாள். அதுவே தண்ணீர் இழுத்து துவைத்து, மறுபடியும் தண்ணீர் இழுத்து அலசி பிறகு பிழிந்து  கடைசியில் சிக்னல் கொடுக்கும். அப்போது போய் துணிகளை எடுத்து கொண்டு போய் உதறி காயப் போட்டுக்கொள்ளள்ளலாம் என்றெண்ணி சாப்பிட உட்கார்கார்ந்தாள்.

சாப்பிட்டு முடித்து, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு புத்தகத்தை எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தாள். கொஞ்ச நேரம் சாய்ந்தபடியே படித்துக் கொண்டிருந்தவள் சட்டென உறங்கியும் போனாள்.

வாஷிங் மிஷின் சத்தம் கொடுக்க முழிப்புத் தட்டி எழுந்து போனாள். பக்கெட்டை எடுத்து வைத்து துணிகளை எடுத்து பக்கெட்டில் போட்டுகொண்டு மொட்டைமாடிக்குப் போனாள்.

துணிகளை உதறி உதறி காயப் போட்டுக்கொண்டே வந்தாதாள். சுந்தரத்தின் பேண்ட் ஒன்றை எடுத்து உதறும்போது அவளது கையில் ஏதோ பட்டமாதிரி இருந்தது. என்னவென்று தேடினாள். பெல்ட் பாக்கெட்டில் முட்டிக்கொண்டு ஏதோ தெரிந்தது.  திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. பத்து ஐநூறு ரூபாய் நோட்டுகள் மடித்து வைக்கப்பட்டு ஈரமாகி ஊறிப் போயிருந்தன.

‘அடக் கடவுளே… பணத்த பேண்ட் பக்கெட்டுல வச்சது தெரியாம காலையில எங்கெங்கேயோ தேடி அலைஞ்சாரே… அது தெரியாம நாம ஏற துவைச்சுட்டோமே… எல்லாம் ஊறிப் போச்சே… ‘ என்று புலம்பியபடி நோட்டுக்களை தனித்தனியாக எடுத்து லேசாய் உதறி, ஒவ்வொன்றுக்கும் கிளிப் போட்டு தொங்கவிட்டாள்.

சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்த அனிதா, அம்மா கொடுத்த டீயை உறிஞ்சியபடியே மொட்டைமாடிக்கு போனவள் ரூபாய் நோட்டுகள் காய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போய், அங்கிருந்தே அம்மாவைக்கூப்பிட்டு, ‘ அம்மா… எப்போலேர்ந்து நீ நோட்டு அச்சடிக்க ஆரம்பிச்சே… ‘ என்றாள். அதைக்கேட்டு சிரித்துக்கொண்டே மேலே ஏறி வந்தாள் செல்வி.

‘அடியேய்… இது அச்சடிச்சதில்லைடி… உங்கப்பா தெரியாம பேண்ட் பெல்ட் பாக்கெட்டுல மடிச்சு வச்சிருந்தது.  இதுல வச்சிருந்ததை மறந்துட்டு உங்கப்பா காலையில் எங்கெங்கேயோ தேடிபுட்டு, கடைசியில, ‘ எங்கேயோ போயிடுச்சு… போ ’ ன்னுட்டு கிளம்பிட்டார்.  நானும் செக் பண்ணாம துவைக்கப் போட்டுட்டேன். எடுத்து உதறிப் போடும்போது பார்த்தா பணம்  முட்டிக்கிட்டு இருந்தது… ‘ என்றவள், மகளைப் பார்த்து, ‘நான் எப்போ பணம் கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்லுவாரில்ல… இந்த பணம் காணாம போனதாவே இருக்கட்டும்… நீ உங்கப்பாகிட்டே இதுபத்தி எதுவும் சொல்லாதே… சரியா…‘ என்று கண்சிமிட்டிவிட்டு நோட்டுக்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிவிட்டாள்.

                                          XXXXXXXXX

ழுமணி போல வீடு வந்து சேர்ந்தான் சுந்தரம். மனைவியிடம் டீ வாங்கிக் குடித்துவிட்டு டீ.வி. பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அனிதா வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தாள்.

சமயலறையில் வேலையாய் இருந்த செல்வி, ‘ நாம் ஐயாயிரத்தை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டோம்… அப்பாவிடம் சொல்லிவிடாதே என்று மகளிடமும் சொல்லி விட்டோம். ஆனால் ஆபீஸ் விட்டு வந்து அரைமணி நேரமாகிறது. இவர் இதுவரை அந்தப் பணம் பற்றி வாய் திறக்கவே இல்லை… மறந்துவிட்டாரா… இல்லை… போனால் போகிறது என்று விட்டுவிட்டாரா… ‘ என்று குழம்பியபடி… மெல்ல வெளியே வந்தவள், ஒன்றும் தெரியாததுபோல, ‘ என்னங்க… அப்புறம் பணம் ஏன்னாச்சு… ‘ என்றாள்.

அவனோ, சிரித்தபடி, ‘ பணமா… ஓ… காலையில நான் தேடினேனே அதை சொல்றியா… நான் பணம் வச்சிருந்ததானே தொலைய. பணமே வைக்கலை… அப்புறம் எப்படி அது காணாம போகும்… அவசரத்துக்கு நான் ஏ.டி.எம்.ல எடுத்துக்கிட்டேன்… அதை விடு… ‘ என்று அவளைப் பார்க்காமலேயே பதில் சொல்லிகொண்டிருந்தான்.

‘ இவர் என்ன… நான் திட்டுவேன் என்பதற்காக பணமே தொலையவில்லை என்று பொய் சொல்லுகிறாரா… ‘ என்று குழம்பியபடி அறைக்குள் பாடம் எழுதிக்கொண்டிருந்த மகளைப் பார்த்தாள்.

அவளோ, அப்பாவிடம் சொல்லிவிடாதே என்று அம்மா சொல்லியும் அம்மாவுக்குத் தெரியாமல் தான் அப்பாவிடம் முன்னேயே போட்டுகொடுத்துவிட்டு ஒன்றும் அறியாதது போல நமட்டுச் சிரிப்பு  சிரித்துக் கொண்டாள்.

அவனோ, ‘ பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல கேட்கிறாளே இவள் ‘ என்று நினைத்தபடி எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளா டீ.வி.பார்த்துக்கொண்டே இருந்தான்.

ஒரு நாடகமே அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 16) – முகில் தினகரன், கோவை

    பெண் மனது (சிறுகதை) – சுஶ்ரீ