2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அப்பாடி…. 11th பரிட்சை இன்னியோட முடிஞ்சது, இந்த கடைசி சோஷியல் ஸ்டடீஸ் ஒண்ணுதான் கொஞ்சம் சொதப்பிடுச்சு மத்த பரிட்சை எல்லாம் சூப்பரா எழுதிட்டேன். பரிட்சை ஹாலை விட்டு குஷியா வரப்ப பிடிச்சது தூரல்தான். ஆனா அந்த ராமர் கோவிலை தாண்டறதுக்குள்ளே பிடிச்சது பாருங்க மழை… உங்க வீட்டு மழை …எங்க வீட்டு மழை இல்லை பேய் மழை.
சோஷியல் ஸ்டடீஸ் நோட்ஸ் தலை மட்டும் நனையாம வச்சா, பத்தே நிமிஷத்துல முகம், யூனிஃபார்ம் வெள்ளை சட்டை எல்லாம் நீலம் (எனக்கு பிடிச்ச பிரில் ராயல் ப்ளூ இங்க்).
கோவிலை ஒட்டின அந்த கம்பி தடுப்பு போட்ட வீடு, அந்த கம்பிகளை பிடித்துக் கொண்டு மழையை வேடிக்கை பாக்கற மாதிரி என்னை கேலிப் புன்னகையோடு பார்க்கும் அந்தப் பெண். நான் பார்த்தால் சட்டென முகத்தை திருப்பிக் கொள்வாள்.
“ஏய் சுமி என்ன பண்றே?” கேட்டுட்டே அந்த கம்பி போட்ட திண்ணைக்கு வந்தது ஒரு வயதான பெண்மணி.
“இல்லை பாட்டி மழையை வேடிக்கை பாக்கறேன்”
இப்ப அந்த பாட்டியும் என்னை பாத்துட்டா. இரண்டு கைகளையும் கண்களின் இருபுறம் வைத்து கூர்ந்து பாத்த அந்த பாட்டி, ”டேய் அம்பி இங்கே வா” சொல்லிட்டே கதவை திறந்தாள்.
“ஏய் சுமி, கொடில இருந்து ஒரு காசித் துண்டை உருவிண்டு வா”
அந்தப் பெண் முகத்தை சுழித்துக் கொண்டு உள்ளே ஓடினது. ரெண்டே நிமிஷம் அந்த மெலிய துவாலையுடன் அதே வேகத்தில் வந்தாள். என் கையில் டவல் திணிக்கப்பட்டது.
பாட்டி, “தலையை நன்னா துவட்டிக்கோடா அம்பி, காச்சல் வந்துடும் ஈரத் தலையோட இருந்தா”
அந்த பொண்ணு, “பாட்டி அவன் முகமெல்லாம் இங்க், துண்டு பூரா நீலமாயிடும்”
பாட்டி அவள் சொன்னதை காதில் போட்டுக்கலை. “துடைச்சிண்டு இந்த திண்ணைல செத்த உக்காந்துட்டு மழை கொஞ்சம் விட்டவுடனே போடாப்பா”
பாட்டி உள்ளே போயிட்டா. நான் அந்த பெண்ணிடம் டவலை நீட்டினேன். இரண்டு விரலால் முகத்தை சுளித்த வண்ணம் அதை வாங்கி மாடிப் படி சுவரில் போட்டாள்.
நான், “ஏய் பாப்பா நீ ஸ்கூல் போறதில்லையா”
“நான் பாப்பா இல்லை சுமலதா, 10 வது செயின்ட் மேரீஸ்ல.”
அவளை ஏற இறங்க பாத்தேன், அவள் சட்டென தன் தாவணி, பாவாடையை திருத்திக் கொண்டு தலைமுடியை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டதை பாத்து சிரிப்பு வந்தது.
“என்ன சிரிக்கற, லூசா நீ?”
“இல்லை ஒண்ணு சொல்லவா?”
“என்னவாம்?”
“நீ ரொம்ப அழகா இருக்கே”
“போடா ஏதாவது பேத்திண்டு” சொல்லிட்டு உள்ளே ஓடியே போயிட்டா. என் மனதில் முதல் முதலாக கள்ளம் நுழைந்தது.
மழை சற்று வீரியம் இழந்தது, கதவை திறந்து கொண்டு தெருவில் இறங்கி நடந்தேன். ஏதேச்சையா திரும்பி பாத்தேன். கதவுக் கம்பியை பிடித்தபடி புன்னகையுடன் அந்த சுமி. நான் கையை தூக்கி அசைத்தேன். அவள் புன்னகை மாறாமல் கையை கீழேயே வைத்துக் கொண்டு லேசாக கை அசைத்தாள்.
இப்ப வெளில மழை நின்னு போச்சு, ஆனா மனசுக்குள்ள பெய்யும் அந்த மழை வேகமெடுத்தது.
ஸ்கூல் லீவு அந்த பக்கம் போற வேலை இல்லை, என்ன பண்றது? பையன்களை செட்டு சேத்தேன், தினம் ஸ்கூல் கிரவுண்ட்ல பேட்மிட்டன் ஆடப் போனோம். போறப்ப வறப்ப அந்த கூண்டு வீடுதான் தரிசனம் தந்தது.
அந்தப் பெண் கண்ல படலை, ஒரு நாள் திரும்பி வரப்ப திண்ணைல அந்த பாட்டி குட்டி உரல்ல வெத்தலை இடித்துக் கொண்டிருந்தாள். தைரியமா போய் நின்னு, ”பாட்டி கொஞ்சம் தண்ணி வேணும்”னேன்.
கைகளை ஊன்றி கஷ்டப்பட்டு எழுந்தா பாட்டி. நான், “ஏன் உங்க பேத்திகிட்ட சொன்னா கொண்டு வரப் போறா, நீங்க ஏன் கஷ்டப்படறீங்க?”
“அவ இல்லைடா கண்ணா, அவ மாமா வீடு போயிருக்கா, நாளைக்கு வந்துடுவா”
ஓ அதானா கண்ல படலை, நாளைக்கு பாப்போம், படபடத்த மனசை அடக்கி தண்ணி குடிச்சிட்டு கிளம்பினேன். மறுநாள் சாயந்தரம் எப்ப வரும்னு பொறுமையின்றி காத்திருந்தேன்.
சாயந்தரம் 4 மணி வாக்குல என் பேட்டை தூக்கிட்டு புறப்பட்டேன். என் மனசு குப்னு அடைச்சது பச்சைப் பாவாடை வெள்ளைத் தாவணியில் அவளை மீண்டும் பாத்த போது. வீட்டருகில் போனப்ப கொஞ்சம் நின்று, “எங்கே போயிட்டே இத்தனை நாளா?” என்று கேட்டேன்.
கிளி கொஞ்சியது, “மாமா வீட்டுக்கு”
அன்னிக்கு பேட்மிடன்ல என்னை அடிச்சுக்க ஆளில்லை.
“மாமா வீட்டுக்கு” இந்த ஒற்றைச் சொல் உலகை வீழ்த்தும் சக்தி கொடுத்தது.
ஒரு ஆறு மாசம் இருக்குமா? அதுவரை ஒரு சிறு பார்வை பரிவர்த்தனை, சின்ன சின்ன சம்பாஷனைகள். கஸ்டம்ஸ் பிரிவில் வேலை பாத்த அந்த சுமலதாவின் அப்பாவுக்கு வடக்கே எங்கோ டிரான்ஸ்ஃபர் வந்து என் வான்நிலா விண்ணில் மறைந்தது. மேகம் கருத்தது, ஜோன்னு ஒரு பெருமழை என்னை நனைத்தது துவாலையை கையில் திணிக்க சுமி இல்லை. கண் நனைந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings