in ,

மயக்கமென்ன உந்தன் மௌனமென்ன (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

டீ போட்ட பாத்திரத்தை எல்லாம் கழுவி கவுத்திவிட்டு, அடுப்பு மேடையை துடைத்து விட்டு ,மரகதம் ஹாலுக்கு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.

“என்னங்க பேப்பர் படிக்க ஆரம்பிச்சாச்சா? அந்த பேப்பர்ல அப்படி என்னதான் இருக்குமோ? காலையில் வந்த பேப்பரை இன்னும் படிச்சு முடிக்கல?” என்றாள் எரிச்சலுடன் ..

“உனக்கு எரிச்சல் என் பேர்லையா இல்ல பேப்பர் பேர்லையா? ” என்றார் ரத்தினம் கிண்டலாக.

 “வீட்ல வயசுக்கு வந்த மகளை வச்சுகிட்டு இன்னும் கல்யாணம் கூடி வரமாட்டேங்குதேன்னு, கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன் உங்களுக்கு அந்த கவலை இருந்தாத் தானே? “

“நானும் உன்னோடு சேர்ந்து வேணா கவலைப்படுகிறேன். கல்யாணம் சீக்கிரம் நடந்திடும் “

“இந்தக் கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. கல்லிடைகுறிச்சிப் பையன் வீட்ல வந்து பாத்துட்டுப் போயி பத்து நாளாச்சு.. நல்ல குடும்பம், பையனும் கண்ணுக்கு லட்சணமா நல்லவேலைல இருக்காரு…இதவிட என்ன வேணும் உங்க பொண்ணுக்கு? டக்குனு பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேங்குறா..”

” மரகதம் நீ ஒன்னு புரிஞ்சுக்கனும். அந்த காலம் வேற, இந்த காலம் வேற …எங்கப்பா அம்மா உன்ன பொண்ணு பாத்துட்டு வந்து “தை மாசம் கல்யாணம் வச்சுக்கலாம்னு பொண்ணு வீட்ல சொல்லிட்டேன்னு” என்கிட்ட சொன்னாங்க. நான் அப்ப வேலைக்குப் போய் முழுசா ஒரு மாசம் கூட ஆகல.. ஆறு மாசம் ஆகட்டும்னு சொல்ல நினைச்சாலும், எதிர்த்து பேசுற தைரியம் இல்லை. ரெண்டு பேரும் கல்யாணத்தன்னைக்கு தான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம்.

 அப்ப நமக்குன்னு தனிப்பட்ட கருத்து இருந்ததில்லை. இப்ப காலம் அப்படியில்ல மரகதம்..வித்யா நல்ல படிச்சிருக்கா.. வேலைக்குப் போறா.. அவளுக்கு எது வேணுமோ அதை தேர்ந்தெடுக்கிற உரிமை தனக்கு இருக்குன்னு நினைக்கிறா.. அதை தப்புன்னு சொல்ல முடியாது.”

” எது எப்படியோ போங்க..இந்த மாப்பிள்ளை வீடு நல்லவங்க.. அதனாலதான் பதில் கேட்டு நம்மளை நெருக்கல. ஏன் இந்த இடத்தை சொன்னதே உங்க நண்பர் நடராஜன் தான்.அவர் வந்து கேட்டா என்ன சொல்லப் போறீங்க? அத முடிவு பண்ணிக்கோங்க “

” வித்யா கிட்ட பேசிட்டேன் மரகதம் ..ஒரு வாரத்தில தன் முடிவை சொல்றதா சொல்லியிருக்கா. ஒன்னு மட்டும் தெளிவா இருக்கேன். என் மகளுக்கும், அந்தப் பையனுக்கும் பூரண சம்மதம் இருந்தால் மட்டுமே இந்த கல்யாணம்.அதை நடராஜன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன்.”

காலிங் பெல் ஒலிக்க.. மரகதம் எழுத்தாள். ‘வித்யா வந்துவிட்டாள் போல’ என நினைத்தபடி கதவை திறக்க, வெளியே நடராஜன் நின்றிருந்தார். ஒரு நிமிடம் திக்கென்றது. வித்யா பதில் சொல்லாத நிலையில், இவரிடம் என்ன சொல்வது? என்று நினைப்பு ஓடியது. சமாளித்துக் கொண்டு ..

‘வாங்கண்ணே” என்று வரவேற்றாள்..

“என்னப்பா ரத்தினம் எப்படி இருக்க” என்றவர் பொதுவான விஷயங்களை பேச ஆரம்பித்தார்.

” நீங்க பேசிகிட்டிருங்க காப்பி எடுத்துட்டு வரேன் “என்று எழுந்தாள் மரகதம்.

” முதல்ல உக்காரும்மா..காப்பி எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் ஒரு முக்கிய விஷயம் .அன்னைக்கு பாத்துட்டு போனார்களே கல்லிடைகுறிச்சி குடும்பம்….” என்று அவர் இழுக்க…

மரகதத்திற்கு உள்ளுக்குள்ளே பதறியது. ஒருவேளை வித்யாவை பிடிக்கலையோ.. ரத்தினமும் பொறுக்க முடியாமல் …

“சொல்லுப்பா.. என்ன விஷயம்னாலும் பரவாயில்ல சொல்லு. ஒருவேளை வித்யாவை அவர்களுக்குப் பிடிக்கலையா “

” அதெல்லாம் இல்லப்பா…அவங்க சைடுல ஓகே தான்.. எல்லோருக்குமே வித்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க பதிலத் தான் எதிர்பாத்துகிட்டு இருக்காங்க. நான் சொல்ல வந்தது வேற.. பையனோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்.. ஐ.சி.யூவில் அட்மிட் பண்ணி மூணு நாள் ஆச்சு ..”

“அய்யோ இப்ப எப்படி இருக்கிறாங்க? “என்று பதறினார்கள் மரகதமும், ரத்தினமும்,

“பயப்படாதீங்க இப்ப பரவாயில்ல…ஐ சி.யு.வில் இருந்து இன்னைக்கு ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாங்க”

சற்று யோசித்த ரத்தினம்…”மரகதம் கிளம்பு.. நாம போய் பாத்துட்டு வந்துருவோம். கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்பதெல்லாம் வேற விஷயம். நம்ம குடும்பத்துக்கு அறிமுகம் ஆயிட்டாங்க.அந்த மனுஷன் நல்லவர். கண்டிப்பா போய் பாத்துட்டு வரனும் .”

அதே நேரத்தில் வித்யா உள்ளே வர, ரத்தினம் விஷயத்தை அவளிடம் கூறிய போது அவளும் அதிர்ந்து போனாள்.

” அப்பா நானும் உங்களுடன் வருகிறேன்” என்றாள். கல்யாண விஷயத்தில் குழம்பிக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு உணர்வு அந்த பெரியவரை போய் பார்க்கத் தூண்டியது.

நால்வரும் ஆஸ்பத்திரியை அடைந்தார்கள். நர்ஸின் அனுமதி பெற்று உள்ளே போக, அந்தப் பையன் விவேக், அப்பாவை தோளில் சாத்தி, கிண்ணத்தில் இருந்த கஞ்சியை ஸ்பூனால் ஊட்டிக் கொண்டிருந்தான். அவர்களைக் கண்டதும்…

“அங்கிள் ..ஆன்ட்டி… வாங்க உட்காருங்க. அம்மா இப்ப வந்திடுவாங்க. நர்ஸ் கிட்ட ஏதோ கேட்கப் போனாங்க ” என்றான். வித்யாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் வீட்டிற்கு அழகாக, நீட்டாக, டிரஸ் பண்ணி வந்த மாப்பிள்ளையாக இல்லை விவேக்.. கவலை, கண்களில் தூக்கமின்மை, சோர்வாகத் தெரிந்தான். அவன் அம்மா வந்துவிட, எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.பேச்சின் நடுவே விவேக் அம்மா ..

” பாவம் விவேக் அவன் தான் கண்விழிச்சு அப்பாவை பாத்துக்கிறான். பகல்ல நான் பார்த்துக்கிறேன். வீட்டுக்குப் போய் நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கிட்டு வான்னா கேட்க மாட்டேங்கிறான்” என்றார்.

“நீங்க பேசிக்கிட்டு இருங்க” என்றவன்… கீழே போய் கேண்டினில் காபி வாங்கிட்டு வந்தான். வித்யா அவனுக்கு உதவி செய்ய, எல்லோருக்கும் தம்ளரில் காபியை ஊற்றிக் கொடுத்தாள்.

” தேங்க்ஸ்” என்ற விவேக்கைப் பார்த்து புன்னகையோடு தலையாட்டினாள். அந்த அரை மணி நேரமும் அப்பாவை விட்டு அகலவில்லை. அருகில் அமர்ந்து கவனித்துக் கொண்டான். எல்லோரும் விடை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

மரகதம் இரவு டிபன் வேலையில் மூழ்கியிருக்க, ரத்தினம் வாக்கிங் போய்விட்டார். மரகதம் ‘நீட்டாக டிரஸ் பண்ணிக் கொண்டு வந்த போதே வித்யா சம்மதம் சொல்ல தயங்கினாள். இன்று சோர்ந்து போய் சாதாரணமாக தெரிந்த பையனை பார்த்த போது எங்க ஒத்துக்கப் போறாள் என்று நினைத்தாள். இரவு டின்னர் ரெடியாக, மகளையும் கணவனையும் சாப்பிட அழைத்தாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவைப் பார்த்து “அப்பா ..ஒரு விஷயம் உங்க கிட்ட பேசனும்”

“சொல்லும்மா.. நானும் அம்மாவும் தானே இருக்கோம் சொல்லு…”

“விவேக்கையே பேசி முடிச்சிடுங்கப் பா..ஆனா ஒன்னு கல்யாணத்தை மட்டும் அவசரப்படுத்தாதீங்க. அங்கிள் முழுசா நல்ல குணமாகட்டும்” என்றாள் தெளிவாக.

புறத்தோற்றத்தை விட மகள் எதிர்பார்த்த ஏதோ ஒன்று அந்தப் பையனிடம் கண்டு கொண்டதே அவள் சம்மதிக்க காரணம் என்று புரிந்து கொண்டார். அது எதுவென்று அவருக்கும் புரிந்தது. அது புரியாமல், இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்  நின்றாள் மரகதம்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 5) – முகில் தினகரன், கோவை

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 10) – ரேவதி பாலாஜி