in ,

கோப படமாட்டேன் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஞாயிறு காலை எட்டு மணிக்கு மேல், மனைவி வள்ளியின் குரலுடன், மகள் சரண்யா குரலும் கேட்டது. நல்ல உறக்கத்தில் இருந்தான் சுந்தரம். நேற்று இரவு போட்ட சரக்கு வாடை லேசாக அடித்தது.

“என்னங்க , இன்னைக்கு ஞாயித்துகிழமை, உங்க மக மீன் கேக்குறா. மீன் சாப்பிடனும்னு ஆசையா இருக்கா. போங்க போய் வாங்கிட்டு வாங்க” என்று எழுப்பினாள் வள்ளி.

மாத கடைசி என்பதால் கையில் பணம் இல்லை. அதனால் வெறுப்பாக பேசினான் சுந்தரம். “அடுத்த வாரம் பாப்போம் போ. இன்னைக்கு என்ன வீட்ல இருக்கோ, அத வச்சி சமச்சி போடு “ என்று மனைவியை அதட்டினான்.

“வீட்லையும் ஒன்னும் இல்லை. காசு கொடுங்க, ஏதாவது வாங்கி வாரேன். பிள்ளை ஆசையா கேட்டத கூட வாங்கி தர முடியல?” என்று சலிப்பான குரலில் வள்ளி கூற , சுந்தரத்திற்கு கோவம் உச்சிக்கு சென்றது.

“மக கேட்டான்னு சொல்லி நீ நல்லா கொட்டிக்க போற, அதுக்கு பிள்ளை ஆசை படுதுன்னு வேற சொல்ற. காசு இல்லை. சோறு ஆக்க முடிஞ்சா ஆக்கு, இல்லையா பட்டினி கிடப்போம்” என்று

“நேத்து நைட்டுக்கு மட்டும் தண்ணிய போட காசு எங்க இருந்து வந்தது ? தண்ணி அடிக்க காசு இருக்கு , பிள்ளைக்கு மீன் வாங்கி கொடுக்க காசு இல்லை , என்ன நியாயம் ? “ என்று வள்ளி கோவம் கொண்டாள்.

சுந்தரத்திற்கு கோவம் உச்சிக்கு சென்றது. “என்னடி ரொம்ப பேசுற. நான் மத்த வீட்ல பண்ற மாதிரி தினமும் குடிச்சிட்டா வாரேன்? வாரத்திற்கு ஒரு நாள் தான் குடிக்கிறேன். அது உனக்கு பொறுக்கல. ரொம்ப பேசுற “ என்று கையை ஓங்கினான் சுந்தரம்.

சுந்தரத்தின் கையை தடுத்தாள் வள்ளி. மேலும் கோவம் அதிகமானது சுந்தரத்திற்கு. பளார் என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தான் சுந்தரம். வள்ளிக்கு அடி பலமாக கன்னத்தில் விழ, அப்படியே கீழே சரிந்தாள். அங்கு இருந்த அருவாமனை மீது விழுந்து கழுத்து அறுபட்டது வள்ளிக்கு. துடிதுடித்து மரணத்தை நோக்கினாள் வள்ளி. மகள் சரண்யா நடப்பது அறியாது பயந்து அழ ஆரம்பித்தாள்.

கண்மூடி திறப்பதிக்குள் ஏதோ   ஏதோ ஆகிவிட்டது , வள்ளி இறந்து விட்டாள் , நான் ஒரு கொலைகாரன் ஆகிவிட்டேனே ? என் குடும்பம் சில நொடி கோவத்தில் சின்னா பின்னமாகி விட்டதே , என்று கண் கலங்க துவங்கினான் சுந்தரம்.

சுந்தரம் கை கால் நடுங்க துவங்கியது. அய்யோ சின்ன விசயத்திற்கு தேவை இல்லாமல் கோவபட்டு இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டேனே என்று கூறி கண் கலங்க துவங்கினான்.

சில மணி நேரத்தில் வீட்டில் கூட்டம் கூடியது , போலீஸ் வீட்டை நோக்கி வந்து கொண்டு இருப்பதை கண்டு பயத்தில் கண் கலங்க ஆரம்பித்தான் சுந்தரம்………! மீண்டும் மனைவி வள்ளியின் குரலோடு , மகள் சரண்யாவின் குரல் கேட்டது. கண் திறந்து பார்த்தான் சுந்தரம்.

“அப்பாடா , நான் கண்டது கனவா ! “ என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் சுந்தரம்.

“என்னங்க , இப்படி வேர்த்திருக்கு. என்ன கெட்ட கனவு கண்டீங்களா?.”என்று மனைவி வள்ளி உசுப்பினாள்.

“ஒன்னும் இல்லை” என்று சமாளித்தபடி எழுந்தான் சுந்தரம்.

“என்னங்க , உங்க மக சரண்யாக்கு  மீன் சாப்பிடனும் போல இருக்கா. வாங்கிட்டு வாறிங்களா ? “ என்று மனைவி வள்ளி கூறியதும் , சுந்தரத்திற்கு கனவில் நடந்த மாதிரியே இருக்கே என்று பகீர் என்றது.

பக்கத்தில் இருந்த அருவாமனை கண்ணுக்கு தெளிவாக தெரிந்தது. மேலும் வியர்வை கொட்ட ஆரம்பித்தது சுந்தரத்திற்கு.

“மீன் தானே இப்போ வாங்கிட்டு வாரேன் , காசு இல்லை என்றாலும் , கடன் பட்டு கூட வாங்கி வாரேன் , ஆனா கோவ பட மாட்டேன். கனவுல கண்டது கனவாவே போகட்டும். கொஞ்ச நேரத்தில் மீனோட வாரேன்” என்று சுந்தரம் கிளம்பி ஓடினான்.

சுந்தரத்திற்கு என்ன ஆச்சு என்று மனைவியும் , மகளும் யோசித்த படி நின்று கொண்டு இருந்தனர்.

கோவம், மிக மோசமான ஒன்று , கோவத்தில் எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். கோவம் நம்மை அழித்து விடும். கோவத்தில் வார்த்தைகளையும் விட வேண்டாம் , முடிவுகளையும் எடுக்க வேண்டாம். நிதானம் மிக அவசியம்  வாழ்க்கைக்கு.

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காந்தி நோட்டு (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

    மொட்டு விட்ட செடி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு